செவ்வாய், 20 அக்டோபர், 2009

தில்லி நகரின் தனியார் பேருந்துகள்

புது தில்லியில் ஓடும் தனியார் பேருந்துகள் தவறான பல காரணங்களுக்காக மிகவும் பிரபலம். Blue Lines/Red Lines/Whilte Lines போன்ற பல பெயர்களில் இயங்கும் இப்பேருந்துகள் நாளிதழ்களால் Killer Lines என்றே அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இப்பேருந்துகளால் மரணம் அடைந்தோர் பலர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைவதில்லை.

ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதமே சரியாக இருப்பதில்லை. சுத்தம் செய்யப்படாத இந்த பேருந்துகளில் நீங்கள் அழுக்காகாமல் பயணம் செய்ய முடியாது.


கல்யாணம் ஆன புதிதில் தில்லி வந்த என் மனைவி இப்பேருந்துகளை பார்த்ததும் சொன்னது - "என்னங்கய்யா பஸ் இது. எங்க ஊருக்கு வந்து பாருங்க, அங்க இருப்பது தான் பஸ், இதெல்லாம் குப்பை லாரி!". இதனால் என் மனைவியுடன் வெளியே செல்ல வேண்டிய அவசியம் வரும்போதெல்லாம் எனக்கு ஆட்டோவில் போக வேண்டிய கட்டாயம்.


அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வளவு குப்பை. இங்குள்ளவர்கள் குளிர் காலம் வந்தால் போதும், கிலோ கிலோவாக வேர்கடலை சாப்பிடுகிறார்கள். பேருந்தில் உள்ளேயே வேர்கடலையின் தோலை உடைத்து அங்கேயே கீழே போடுகிறார்கள். சுத்தம் என்பது சுத்தமாக இல்லாத ஒரு இடம் இது. இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் உள்ள சுத்தமான/அழகான பேருந்துகள், மற்றும் காலையில் குளித்து, சுத்தமாக இருக்கும் பணியாளர்கள் நினைவில் வந்து போகிறார்கள்.


எந்த ஒரு நடத்துனரும் விசில் வைத்து இருப்பதில்லை. பேருந்தில் கையால் ஒரு தட்டு தட்டினால் வண்டி நிற்கும். இரண்டு தட்டு தட்டினால் வண்டி ஓடும். வண்டி Stand-ல் வந்து நின்றவுடன் வண்டி செல்லும் இடங்களுடைய பெயர்களை வரிசையாக கத்துகிறார்கள்.


ஒரு முறை ITO என்கிற இடத்தில் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன். ஒரு வண்டி வந்து நிற்க, அதில் உள்ள நடத்துனர் "நாய்டா, நாய்டா" என்று என்னைப்பார்த்து கத்த நான் பயந்து போய் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் ஒரு நாயையும் [!] காணாமல், குழப்பத்துடன் நின்றேன். பிறகு தான் புரிந்தது, அவன் கூறுவது NOIDA [New Okhla Industrial Development Authority] என்ற இடத்திற்கு அந்த பஸ் செல்கிறது என்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....