புதன், 21 அக்டோபர், 2009

குரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?




குரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். வேறு யாரையாவது கடித்திருந்தால் அவரிடமிருந்து பத்து பதினைந்து அடியாவது தள்ளி இருப்பது உசிதம்.


முதலில் கடிவாயை [கடி பட்ட இடத்தை] தண்ணீர் மற்றும் சோப் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி ஆயின்மென்ட் போன்ற எதையும் போடக்கூடாது. அப்படி போடுவதினால் கிருமிகள் கடிவாயிலேயே சிறை செய்யப்பட்டு உங்களுக்கு தொல்லை தரக்கூடும். ரத்தம் நிறைய வராமல் இருக்கும் பட்சத்தில் கட்டு போடாமல் இருப்பது நலம். இந்த முதலுதவியை செய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் சென்று மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம்.


இந்த பதிவு எழுத காரணம் எனது அலுவலக நண்பர் திரு விஜயராகவன். அவர் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து போவார். ஒரு நாள் காலை எட்டே முக்கால் மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி ஒரு சிகரெட் பிடித்தபடியே நடந்து வந்திருக்கிறார். அருகே உள்ள மரத்தில் ஒரு குரங்கு தன் சுற்றம் சூழ அளவளாவிக்கொண்டு இருந்திருக்கிறது. நண்பரும் சிகரெட்டை அனுபவித்துக்கொண்டே அந்த மரத்தின் பக்கத்தில் நடக்க, நெருப்பைக்கண்ட அந்த தாய்க் குரங்கு தாவி வந்து நண்பரின் தொடைப்பகுதியிலிருந்து அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு ஓட, வலியில் நண்பரும் அலறியபடிசாலையில் ஓட ஒரே களேபரம். விஷயம் தெரிந்து நானும் சக நண்பரும் விஜயராகவனுக்கு முதலுதவி அளித்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஒரு ஊசி போட்டு சில மருந்துகளும் கொடுத்தார்கள். மாதத்திற்கு ஒரு ஊசிவீதம் ஆறு மாதத்திற்கு போட வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நண்பரை பார்க்கும்போதெல்லாம் அவரை கலாய்ப்பதே எங்களுக்கு வேலை. அவருக்குக் "குரங்காட்டி" என்ற நாமகரணமும் செய்து, குரங்கை பற்றியே ஏதாவது கேள்வி கேட்டு அவரை மடக்கிக் கொண்டிருப்போம். அவரும் எங்கே குரங்கினை பார்த்தாலும் " ஆஞ்சநேயா! நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன்? " என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.


இந்த பதிவினை எழுத காரணமாக இருந்த நண்பர் விஜயராகவனுக்கும் அவரைக் கடித்த திருவாளர் குரங்கிற்கும் எனது நன்றி.

2 கருத்துகள்:

  1. // " ஆஞ்சநேயா! நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன்? //
    அதானே! அதெனெதிரில் மரியாதையில்லாமல் சிகரெட் பிடிக்கலாமா?
    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....