புதன், 28 அக்டோபர், 2009

குரங்கின் மாத சம்பளம் ஆறாயிரமா...!!


அன்று அரசு அதிகாரிகளின் முக்கியமான கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அலுவலகங்களிருந்தும் வந்திருந்த பெரிய அதிகாரிகள் தங்களது கட்டிடங்களில் குரங்கு தொல்லை அதிகமாக இருப்பதைப்பற்றி பேசினார்கள். குரங்குகள் பல அலுவலர்களுடைய உணவினைப்பிடுங்கி சாப்பிடுவது பற்றியும், கைப்பையினை பறித்து பொருள்களை எல்லாம் கொட்டி சேதப்படுத்தும் தொல்லையிலிருந்து தப்பிக்க எல்லா ஜன்னல்களுக்கும் கம்பி வலை பொருத்தியதையும் தாங்கள் எடுத்த மற்ற முயற்சிகள் பற்றியும் சொன்னார்கள். ஆனாலும் குரங்குகள் தொல்லை நிற்காததால் வேறு என்ன செய்யலாம் என்று முடிவு செய்ய பலரின் கருத்தையும் கேட்டனர்.

ஒருவர் குரங்குகளைப் பிடிக்க ஆட்களை நியமித்து, பிடித்த குரங்குளை அருகில் உள்ள காடுகளில் விடலாம் என்றார். வேறொருவர் குரங்குகளுக்கு விஷம் கொடுத்துவிடலாம் என்று சொல்ல, மற்றவர்கள் அதில் உள்ள பிரச்சனைகளை எடுத்து சொல்ல இந்த யோசனைகள் கைவிடப்பட்டது. பலவித யோசனைகளுக்குப்பிறகு பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்து தங்களுடைய திட்டத்துடன் வரும்படி சொல்வது எனவும், இதற்கு ஒரு நேர்முகத்தேர்வு வைக்கவும் முடிவு செய்தார்கள்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. நிறைய பேர் தங்களது புதிய திட்டங்களுடன் வந்திருந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் சாதரணமான உடை அணிந்து, தன்னுடன் ஒரு லங்கூர் வகை குரங்கினை அழைத்து வந்திருந்தான். மற்ற எல்லோரும் தங்களது யோசனைகளையும் அதற்கு எவ்வளவு பணம் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எல்லாமே பல லட்சங்கள் செலவாகும் திட்டங்கள்.

கடைசியாக லங்கூர் மனிதனிடம் அரசு அதிகாரிகள் "உன்னுடைய திட்டம் என்ன? என்று கேட்க. அவன் குரங்குளை பயமுறுத்தியே தன்னால் துரத்த முடியும்!" என்று கூறினான். ஒரு கட்டிடத்தில் குரங்குகள் வராமல் பார்த்துக்கொள்ள மாதம் ஆறாயிரம் ரூபாய் தந்தால் போதும் எனவும் சொன்னான். அது எப்படி உன்னால் முடியும் எனக் கேட்க, சாதாரண குரங்குகளுக்கு லங்கூர் வகை குரங்கினை கண்டால் பயம், ஆகவே அதை பயமுறுத்தி துரத்தினால் அவைகள் அந்த இடத்தினை விட்டு வேறிடத்திற்கு சென்று விடும் என கூறினான். இந்த ஏற்பாடு நன்றாகவும் செலவு குறைவாக ஆகும் என்பதாலும் அந்த லங்கூர் வகை குரங்கினை தற்காலிக பணியாளராக அமர்த்துவது என முடிவு செய்தனர். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு லங்கூர் இப்போது பணியாளராக அமர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் - ஒவ்வொரு கட்டிடத்திலிருந்தும் ருபாய் ஆறாயிரம். இது கடைநிலை ஊழியராக உள்ள தற்காலிக பணியாளரின் சம்பளத்தை விட அதிகம். அவர்களுக்கு மாதம் நாலாயிரம் தான்!!

இந்த ஏற்பாடு நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் குரங்குகள் தொல்லை இப்போதும் குறைந்தபாடில்லை . குரங்குகள் லங்கூர் மனிதனிடம் ஒப்பந்தம் செய்து விட்டதோ என்னமோ - நீ துரத்துற மாதிரி துரத்து நாங்க ஓடற மாதிரி ஓடறோம். நாங்க மொத்தமா ஓடிட்டா உனக்கும் வேலை போயிடும் அப்புறம் உன் சாப்பாட்டுக்கு எங்கே போவே? .

3 கருத்துகள்:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....