திங்கள், 21 டிசம்பர், 2009

மஞ்சள் மகிமை




Pedilite நிறுவனம் தனது Fevicol Adhesives - களுக்கு பல நல்ல விளம்பரங்களைத் தருகின்றனர். சில நாட்களாக வந்து கொண்டு இருக்கும் ஒரு விளம்பரம்... நாடகத்தில் ஆண் வேடம் தரித்து நடிக்கும் ஒரு சிறிய பெண் மீசை வைத்துக்கொள்ள Fevicol-ஐ பயன்படுத்தி விடுகிறார். நாடகம் முடிந்த பின்னர் மீசையை எடுக்க முடியாமல் வாழ் நாள் முழுவதும் மீசையுடன் இருப்பது போல காட்டி இருப்பார்கள். இது வரை பார்க்காமல் இருந்தால் மேலே உள்ள சுட்டியை கிளிக்கினால் பார்க்கலாம். இந்த விளம்பரம் பார்த்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

இது ஏதோ விளம்பரத்திற்க்காக எடுத்த படம் என்றாலும் வட இந்தியாவில் நிறைய பெண்கள் அரும்பு மீசையுடன் திரிவதை பார்க்கலாம். திங்கள் கிழமை காலை பார்த்தால் மீசை இருக்காது. வெள்ளிக்கிழமை வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மீண்டும் மீசையுடன் இருக்கிறார்கள். பெரும்பாலான வட இந்திய ஆண்கள் தினமும் தாடியை மழிக்கும்போது மீசையையும் சேர்த்தே எடுத்துவிடுவதால் எப்போதுமே பளிச்சென இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் சில பெண்கள் மஞ்சள் பூசிய முகத்தோடு பளிச்சென இருக்கிறார்கள். மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமைகளை எனது தாய் கூற கேட்டிருக்கிறேன். என்னுடைய சிறிய வயது சகோதரிகளுக்கு சொல்வார்கள், "நீ குளிக்கும் போது மஞ்சள் பூசி குளித்தால் உனக்கு முகத்தில் முடி வளராது, அழகா இருப்பே!" என்று. எனக்கு தெரிந்து பல பெண்கள் மஞ்சள் பூசி குளித்து முகத்தில் முடியில்லாமல் நன்றாக இருந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் மஞ்சள் பூசிக்கொள்கிறார்களா என்பதே தெரியவில்லை.

டெல்லியிலோ அது போன்ற பழக்கமே இல்லை. பெரும்பாலான பெண்கள் மீசையுடன் இருப்பதால், வாரத்தில் ஒரு முறையாவது Beauty Parlour சென்று ப்ளீச்சிங், த்ரடிங் என்று பல விதத்தில் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுகிறார்கள். வீணாக அம்பது, நூறு என்று செலவழித்து மீண்டும் ஒரே வாரத்தில் தாடி, மீசை என வந்து அவர்களைப் பார்த்து பல் இளிக்கிறது. மருத்துவ ரீதியாக இது harmone problem என்று மனதை சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

என்னுடைய நாலு வயது பெண்ணை குளிப்பாட்டும்போது அவளிடம் மஞ்சள் பூசி குளித்தால் முகத்தில் முடி வளராது என்று சொன்னேன். உடனே தாடியுடன் இருந்த என்னை பார்த்து கேட்கிறாள், "ஏம்பா, உங்கம்மா உனக்கு மஞ்சள் தேச்சி குளிப்பாட்டலையா? உன் மூஞ்சி எல்லாம் முடியா இருக்கே!" என்று. என்னத்த சொல்ல?

12 கருத்துகள்:

  1. \\என்னுடைய நாலு வயது பெண்ணை குளிப்பாட்டும்போது அவளிடம் மஞ்சள் பூசி குளித்தால் முகத்தில் முடி வளராது என்று சொன்னேன்.// ஜோக்கை ரசித்தேன். ஆனால், சின்னப் பொண்ணுக்கு மஞ்சள் தேய்த்துக் குளிக்கப் பழக்கப்படுத்தாதீங்க தம்பி! மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தோல் தடிமனாகும்! மிருதுத் தன்மை போய்விடும்!

    பதிலளிநீக்கு
  2. மஞ்சள் தேய்த்து குளிக்காததால் தான் இந்தியாவில் பெண்களுக்கு முகத்தில் முடி வளருகிறது என்றால் மேலைநாட்டுப் பெண்களுக்கு முகத்தில் முடி வளராமல் இருப்பது ஏன்? மஞ்சள் தேய்த்துக்குளிப்பது முடிவளராமல் செய்யும் என்றாலும், முகத்தில் முடி வளர காரணம் உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறு தான். பெண்கள் முறையாக உணவருந்தி முறையாக உடற்பயிற்சி செய்தால் அதை தவிர்க்கலாம். ஆனால் நம் நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தான் அந்த வழக்கமே கிடையாதே.

    பதிலளிநீக்கு
  3. //பெரும்பாலான பெண்கள் மீசையுடன் இருப்பதால், //

    ரொம்பதான் தைரியம் உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  4. மஞ்சள் பூசி குளிப்பதால் தேவையற்ற முடிகள் வளர்வது தடுக்கப்படுவது மட்டுமல்ல. அது ஒரு கிருமி நாசினி. பல வகையான (தோல்)நோய்களும் தடுக்கப்படும்.
    மஞ்சள் பூசி குளித்தால் அவள் பட்டிக்காட்டாள் என்ற எண்ணம் நவ நாகரீக மங்கைகளுக்கு. என்ன செய்ய....???
    நல்ல தகவல். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அலோ எந்த காலத்தில் இருக்கீங்க. இந்த காலத்து பெண்கள் மஞ்சள் தேச்சு குளிப்பதா? யூத்து மாதிரி பேசுங்க நண்பா. உங்க பொண்ணு சரியா தான் சொல்லிருக்கா.

    ஆனா உங்க ஆராய்ச்சி எனக்கு பிடிச்சிருக்கு:))

    பதிலளிநீக்கு
  6. இப்ப வர மஞ்சள்களில் என்ன என்ன கலந்து இருக்குன்னு தெரியல..மஞ்சளை வாங்கி நாமே பொடி செய்து பயன்படுத்தினால் ஒழிய அதும் நல்லது இல்லை. பாத்து ..

    பதிலளிநீக்கு
  7. நல்ல இருக்கிறது .



    என்றும் அன்புடன்
    சங்கரின் பனித்துளி நினைவுகள்
    http://wwwrasigancom.blogspot.com/

    பதிலளிநீக்கு
  8. அண்ணாச்சி! இந்த Fevicol - ஐ தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா! நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா!

    பதிலளிநீக்கு
  9. பச்சை மஞ்சள் பூலாகிழங்கு,பச்சைபயிறு கலந்து பொடி செய்து குளித்து வந்தால்
    நல்லது.

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றிம்மா! நீண்ட நாட்களுக்கு முன் போட்ட பதிவுக்கு இப்போது உங்களிடமிருந்து கருத்து கண்டவுடன் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. மஞ்சள் காரணத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். தவறிப்போய் என் முகத்தில் மஞ்சள் பட்டால் பதறிப்போயும் இருக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா பதறிப்போவது கொஞ்சம் அதிகம் தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....