புதன், 10 பிப்ரவரி, 2010

தலை நகரிலிருந்து...

ஒவ்வொரு நகருக்கும் சில தனித்தன்மைகள் இருக்கும். அங்கே இருக்கும் கட்டிடமோ ஓடும் நதியோ, அல்லது அந்த நகரில் நடந்த புராதன நிகழ்ச்சியோ மிகவும் பிரசித்த பெற்றதாக இருக்கும். தில்லி நகருக்கும் அப்படி சில தனித்தன்மைகள் இருக்கின்றன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த செங்கோட்டை, குதுப்மினார் போன்ற இடங்கள் அவைகளில் சில.

தில்லி நகருக்கென்றே இருக்கும் சிலவற்றைப் பற்றி இங்கே ஒரு ஒரு தொடராக எழுத நினைத்துள்ளேன். முதலில்



காது அழுக்கு எடுப்பவர்கள்: தமிழகத்தில் நீங்கள் இதை பார்த்திருக்கமாட்டீர்கள். பழைய தில்லி பகுதிகளில் கக்கத்தில் ஒரு தோல் பையும், தலையில் ஒரு சிகப்பு துணியும் கட்டி, கையில் ஊசி, பஞ்சுடன் சிலர் சுற்றுவார்கள். அவர்களது தொழிலே மனிதர்களின் காது அழுக்கு எடுப்பதுதான். ஊசி முனையில் பஞ்ஜை சுற்றி காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வார்கள். காதை சுத்தம் செய்ய காட்டிக் கொண்டிருக்கும் ஆசாமியோ பயம் கலந்த சுகத்தில் உட்கார்ந்திருப்பார். உங்களுக்கு காது அழுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா? அவர்களிடம் தாரளமாக போங்க. ஆனா அதுக்கப்புறம் காது பஞ்சர் ஆகி செவிடானா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சரியா?



BKKKK சலூன்: தமிழகத்தில் சில கிராமங்களில் நாவிதர்கள் வீட்டுக்கு வந்து முடி வெட்டிவிட்டு போவதை பார்த்திருக்கிறோம். தில்லி போன்ற பெரு நகரங்களில் Modern Saloons நிறைய வந்துவிட்டன. அங்கே விதம் விதமாக கட்டிங், ஷேவிங் செய்யும் வசதிகள் உள்ளன. உங்கள் தலையை மட்டும் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தா போதும், மற்றதை அவர் பார்த்துக்கொள்வார். அவர்களோடு போயிற்றா? இங்கே ரோடு ஓரங்களில் கற்களை அடுக்கி வைத்துக் கொண்டு பக்கத்தில் கத்திரி, கண்ணாடி, சீப்புடன் சில நாவிதர்கள் உட்கார்ந்திருப்பார்கள். இவர்களிடம் முடி வெட்டிக்கொள்ள நீங்கள் சென்றால், உங்களை அந்த கல்லில் உட்கார வைத்து, கையில் கண்ணாடியை கொடுத்து அவர் பாட்டுக்கு தன் வேலையை ஆரம்பித்து விடுவார். ரொம்ப சீப் தான். கட்டிங் - 15 ரூபாய், ஷேவிங் - 5 ரூபாய். BKKKK சலூன் = Buttocks கீழே கல் கையில கண்ணாடி சலூன். என்ன சார் உங்க அடுத்த கட்டிங் அவரிடம்தானா?

பல்/கண் மருத்துவர்கள்: பழைய தில்லியின் சதர் பஜார் பகுதி. நிறைய நடைபாதை கடைகளும், பெரிய பெரிய பலசரக்குக் கடைகளும் நிறைந்த ஒரு வியாபார ஸ்தலம். போலி பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இங்கே நடைபாதையில் கடை விரித்துள்ளார்கள். அப்படியாகப்பட்ட ஒரு சர்தார் பல் மருத்துவரிடம் தன் பல்லைப் பிடுங்க சென்றார் தெரு சுத்தம் செய்யும் ஒரு பெண் தொழிலாளி. பிடுங்கும்போது, அந்த பெண்மணிக்கு வலித்துவிட, அவள் அந்த சர்தாரை ஓங்கி ஒரு அறை விட்டாள். சர்தாருக்கு வந்ததே கோபம். அவரும் அந்த பெண்மணியை ஒரு அறை விட்டார். பிறகு இருவரும் அழுத்திப் பிடித்து, கட்டிப்புரண்டு ஒரு பெரிய யுத்தமே நடத்தினார்கள். கடைசியில் சர்தார்தான் வெற்றி பெற்றார். கையில் பிடுங்கிய பல்லோடு அவர் ஒரு "பாங்க்ரா" நடனமே ஆடி முடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இது எப்படி இருக்கு?

....இன்னும் வரும்.

12 கருத்துகள்:

  1. சார். நல்ல "அனுபவித்து" எழுதி இருக்கீங்க. அடுத்த தடவை BKKKK போகும் போது சொட்டைத் தலைக்கு மொட்டை அடிக்க எத்தனை ரூபாய் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. தில்லியில் இவ்வளவு நடக்கா? அடேங்கப்பா!

    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  3. நிஜமாகவே வித்யாசமான செய்திகள்... மேலும் பல டெல்லி பற்றிய செய்திகளுக்காக காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. வேடிக்கையான பதிவுகள்..சுவாரசியம் கலந்து அழகாகத் தந்திருக்கிறீர்கள்.. மேலும் படிக்க ஆர்வமாய்..

    பதிலளிநீக்கு
  5. ஓ நீங்க சொன்ன தொடர் இது தானா சூப்பர்...சுவாரசியம் .. :)

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப ரொம்ப interesting. உங்க புண்ணியத்தில் டில்லி பத்தி நிறைய தெரிஞ்சிக்கலாம். அவசியம் எல்லாம் எழுதுங்க

    பதிலளிநீக்கு
  7. நம்ம பல்லையே யாரோ பிடுங்கிவிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்! நல்ல எழுத்து!

    பதிலளிநீக்கு
  8. பல் மேட்டர் செம காமெடி... தலைநகரைப் பற்றி இன்னும் அறிய ஆவல். :-)

    பதிலளிநீக்கு
  9. Doctors warn against getting your ear canals cleansed by these wandering cleaners. It is a dangerous exericse. Your readers should be warned.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா!! ஆதி கொடுத்த லின்க் வழியா வந்தேன்.இது இரண்டாவது முறை,எனக்கு சொல்லிய கருத்து ஒன்று,சொன்ன விதமும்,நாளும் வேறு..
    ஹா...ஹா...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....