செவ்வாய், 20 ஏப்ரல், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 8

”என்னம்மா கண்ணு, ஏதோ 6-7 பகுதிகள் ”தலைநகரிலிருந்து…”ன்னு போட்டுட்டு அதைத் தொடராம அப்படியே தொங்கவிட்டுட்டயே, அவ்வளவுதானா?"ன்னு ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் வந்துடுச்சு! [விளையாட்டு இல்லைங்க, நிஜமாத்தாங்க!!!]. ரசிகர்களோட வேண்டுகோளை மதிச்சு இதோ எட்டாவது பகுதி.



பார்க்க வேண்டிய ஒரு இடம்: ”குதுப்மினார்”: “Delhi Local Sight Seeing” "Panicker Travels" போன்ற எந்த நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்து நீங்க போனாலும் கண்டிப்பாக
“குதுப்மினார்” அழைத்துக்கொண்டு போவார்கள். 234 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை ”தோமர் ராஜ்புத்”களிடமிருந்து தில்லியை கைப்பற்றியதை கொண்டாடுவதற்கு மஹாராஜா ப்ருத்விராஜ் அவர்கள் கட்டுவிக்க ஆரம்பித்து வைத்தார். பிறகு மொகலாய மன்னர் குத்புதின் அவர்களது காலத்தில் இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஏறத்தாழ பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட இந்த கோபுரத்தின் உட்பகுதியில் அமைக்கப்பட்ட படிகள் மூலம் மேல் நிலை வரை சென்று தில்லி முழுவதையும் காண முடிந்தது. சில விபத்துக்களுக்குப் பிறகு, இந்த படிக்கட்டுகள் மூடி வைக்கப்பட்டு விட்டன. சுற்றிலும் பூங்காக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.



மொகலாய மன்னர் அலாவுதின் இந்த குதுப்மினாரைபோல இரு மடங்கு உயரம் கொண்ட ஒரு கோபுரத்தினை கட்ட ஆரம்பித்து முடியாமல் விட்டதையும் இந்த இடத்தில் நீங்கள் காணமுடியும்.




இங்கே உள்ள ஒரு இரும்புத் தூண் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் துருப் பிடிக்காமல் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. நமது கைகளை பின்பக்கமாக கொண்டு சென்று அத்தூணை முழுவதுமாக அணைத்துப்பிடித்தால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை இங்கே நிறைய பேருக்கு உண்டு. கோடானு கோடி மக்கள் “கட்டிப்பிடித்து” தொந்தரவு செய்ததாலோ என்னவோ இப்பொதெல்லாம் இந்த இரும்புத்தூணைத் தொடக்கூட அனுமதிப்பதில்லை!

சாப்பிட வாங்க: குதுப்மினாரிலிருந்து வெளியே வந்தவுடன் வறுத்தெடுக்கும் இக்கோடையில் பருக ஒரு சிறந்த பானம் “ஷிக்கஞ்சி”! ஒரு குவளையில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சிறிது கருப்பு உப்பு அல்லது சக்கரை போட்டு அதன் மேல் குளிர்ந்த கோலி சோடா அல்லது தண்ணீர் விட்டுக் கலக்கி மேலே இரண்டு சொட்டு புதினா சாற்றினைப் பிழிந்து குடித்தால், இப்போதைய நாற்பது டிகிரி வெய்யிலில் அமிர்தமாக இருக்கும். அச்சு அசல் நம் ஊர் எலுமிச்சை ஜூஸ் போலவே தான், அதன் கூடவே புதினா சாறு. வெய்யிலுக்கு இதமாக இருக்கும் இதைக் குடித்துத் தான் பாருங்களேன்.

இந்த வார ஹிந்தி சொல்: வெய்யில் காலம் வந்த உடனே இங்குள்ள பேருந்துகள், சாலை சந்திப்புகள் எல்லாவற்றிலும் ஒரு தட்டில் “கோலா கரி” [Ghola Gari] வைத்து தண்ணீர் தெளித்து விற்பதைக் காண முடியும். “கோலா கரி”ன்னா எதோ ”கறி”ன்னு பயப்படவோ, ஆசைப்படவோ வேண்டாம். தேங்காயைத் தான் இங்கே கோலா, நாரியல் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தேங்காயைத் துண்டு போட்டு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என துண்டின் அளவைப் பொருத்து விலைவைத்து விற்கிறார்கள். அதையும் வாங்கி சாப்பிடுகிறார்கள் இவ்வூர் மக்கள். கஷ்டம்டா சாமி!

இன்னும் வரும்…

15 கருத்துகள்:

  1. ஷிக்கஞ்சி ல்லாம் அழகா விளக்கி இருக்கீங்க..

    அந்த கோலா கரி எல்லாம் வாங்கி சாப்பிடலைன்னாலும்..வீட்டில் தேங்கா உடைச்சதும் சும்மாவானும் கீறி கீறி சாப்பிட்டே பாதி மூடி காலிசெய்துடுவேன் நானெல்லாம்.. கொஞ்சம் சீனி வச்சி கொஞ்சம் பொட்டுக்கடலை கம்பினேசன்னு டிபரண்ட் குடுத்துப்பேன்.. :)

    பதிலளிநீக்கு
  2. நாங்க எல்லாம் ஊருல "சூடா கஞ்சி" குடிச்சிருக்கோம். நல்லா இருக்கும். ஒரு தடவை "ஷிக்கஞ்சி" ஐ டெல்லியில் குடித்துவிட்டு, பின் டூவீலரில் 100 KM வேகத்தில் வீட்டுக்கு வந்தேன் (அவசரம் எனக்குத்தான் தெரியும்). நிற்க.

    குதுப்மினார் பற்றிய தகவல் சரிதானா? "The Qutb Minar a tower in Delhi, India, is at 72.5 meters the world's tallest brick minaret. Construction commenced in 1193 under the orders of India's first Muslim ruler Qutb-ud-din Aibak, and the topmost storey of the minaret was completed in 1386 by Firuz Shah Tughluq" என்று ஒரு ஆய்வு சொல்கிறது. "அல்டமிஷ்" என்ற மன்னருக்கும் தொடர்பு உண்டு என்று படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  3. மெட்ராஸ் ஹோட்டல் பக்கம் பணிக்கர் ட்ரேவல்ஸ் பஸ் புடிச்சு புது தில்லியைச் சுத்தினா மாதிரியே சுவாரசியமா சொல்லியிருக்கீங்க! சபாஷ்!! அச்சா ஹை!!

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி முத்துலெட்சுமி.

    ஈஸ்வரன் அண்ணாச்சி, நீங்க மீட்டர் கணக்கு சொல்றீங்க, நான் அடி கணக்குல எழுதி இருக்கேன். அப்புறம் நான் இப்ப எழுதியது சென்ற 15-ஆம் தேதி குதுப்மினார் சென்று அங்கே உள்ள குறிப்புகளை வைத்து எழுதியது. குத் புதின் அவர்களால் தான் கட்டி முடிக்கப்பட்டது என்பதையும் நான் குறிப்பிட்டு உள்ளேன்.

    வணக்கத்துடன்

    வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
  5. வாங்க சேட்டைக்காரன்,

    ஒரு விஷயம் தெரியுமா, மெட்ராஸ் ஹோட்டல் மூடி சில வருடங்கள் ஆகிவிட்டன. இங்குள்ள மக்களுக்கு அது ஒரு பெரிய இழப்பு. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு
  7. இந்த பகுதி சுவாரசியமாய் இருக்கிறது.. பல தகவல்களுடன்.. தொடருங்கள்.. கேப் விடாமல்

    பதிலளிநீக்கு
  8. வாங்க சங்கர், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் எனது நன்றி.

    நன்றி ரிஷபன் சார், இடைவெளி இல்லாமல் தொடரவே விருப்பம்.

    வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
  9. குத்புதின் (ஐபெக்), மொகலாய மன்னர் அல்லர். மொகலாய வம்சம் பாபரில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

    - ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  10. வெயில் காலத்தில் கோலா கரி சாப்பிடுவதால் என்ன பயன்? வயிற்றுப்போக்கு வந்துவிடாதோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பயன் என்று தெரியவில்லை. ஆனால் நிறைய பேர் சாப்பிடுகிறார்கள். சில மாதங்கள் முன் வட இந்திய நண்பர் ஒருவர் வற்புறுத்தி வாங்கித் தந்தார்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. ஆஹா ஷிக்கஞ்சி வீட்டில் செய்வதுண்டே!! என்ன அருமையான ஜூஸ் இல்லையா?

    கோலா கரி// இப்பத்தான் தெரிந்து கொண்டேன் ஜி. என்னனு. குதுப்மினார் பார்த்திருக்கேன் ஜி. அப்ப எல்லாம் கேமரா கிடையாது எனவே ஃபோட்டோஸ் எதுவும் எடுக்கலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷிக்கஞ்சி - வீட்டில் செய்ததில்லை. வெளியில் சில முறை ருசித்ததுண்டு.

      கோலா கரி! :) மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    தலைநகரை பற்றிய சுவையான செய்திகள். குதுப்மினார் வரலாற்று பாடங்களில் மனதில் ஏற்றியது. இன்னமும் பார்க்கவில்லை. செய்திகளுக்கு நன்றி.

    எலுமிச்சை பானம் கோடைக்கு இதமானதுதான். பெயரும் செய்முறை களில் சிறிது மாற்றமும் ஆங்காங்கே வித்தியாசபடுகிறது.

    கோலா கரி நல்ல பெயர்... இளநீர் தேங்காய் உடல் சூட்டை குறைக்கும். வெயிலுக்கு உகந்தது. தேங்காய் பத்தை (கீற்று போட்டு விற்பது) சென்னையில் நாங்கள் குடி வந்தவுடன் கிடைத்தது. ஒரு பத்தை ஐந்து பைசா. ஐந்து பத்தைகள் வாங்கி சமையலுக்கு உபயோகபடுத்துவோம். மலரும் நினைவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....