திங்கள், 30 ஆகஸ்ட், 2010

மழையே மழையே……


தில்லி மக்கள் ஜூன் மாசமெல்லாம்மழை வராதா மழை வராதான்னு ஏக்கத்தோட பாம்பே மழை பத்தி தொலைகாட்சில பார்த்துட்டு இருந்தாங்க! அப்பப்ப தினசரிகள்ல வானிலை அறிக்கை வேறமழை தோ இன்னிக்கு வந்துடும், நாளைக்கு வந்துடும்னு ஜோசியம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

தில்லில எப்பவுமே மொத்தமாகவே பத்து-பதினைந்து நாட்கள்தான் மழைக்காலம். அதுவும் சும்மா கொசுத்தூத்தல் போட்டுட்டுப் போயிடும். நம்ம ஊர் மாதிரி அடர்ந்த மழை எல்லாம் பெய்யாது. அரை மணி நேரம் மழை பெய்தாலே தில்லி வாசிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி. அதுவும் சனி-ஞாயிறுகளில் மழைபெய்தால் குடும்பத்தோட வீட்டை விட்டு வெளியே வந்து மழையில் நனைவது அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று!

வானிலை அறிக்கை வாசிப்பவராக நடிகர் மதன் பாப் வருகிற ஏதோ ஒரு படத்துல விரலை தொடறதை வைத்தே இன்னிக்கு மழை வரும், வராதுன்னு ஜோதிடம் மாதிரி சொல்வார். அது மாதிரி தான் இங்கேயும் இருந்ததுஎன்னிக்கு அவங்க மழை வரும்னு சொல்வாங்களோ அன்னிக்கு நிச்சயமா மழை வராது.

இப்ப ஒரு பதினைஞ்சு இருபது நாளா தில்லில அப்படி ஒரு மழைஎப்பவும் இல்லாத மாதிரி ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து மழை பெய்யுது. ஆனா ஒரு மணி நேரம் பெய்யற மழையோட விளைவுபல மணி நேரத்துக்கு தில்லியோட பிரதான சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல்.

இதில் கொடுமை என்னவென்றால்தில்லி போன்ற பெருநகரங்களில் மனித உயிருக்கு மதிப்பில்லாததுதான். ஆங்காங்கே தோண்டிப் போடப்பட்ட இடங்களில் கிடக்கும் பலவித மின்சாரக் கம்பிகளில் மின்சார கசிவு ஏற்பட்டு இந்த மழை நாட்களில் சில உயிர்களும் போன செய்திகளை நாளிதழ்களில் தினமும் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

போன சனிக்கிழமை அப்படி ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையில் தில்லியின் முக்கிய இடமான குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதம மந்திரி வீடு இருக்கிற சாலை [ரேஸ் கோர்ஸ் சாலை] போன்ற இடங்களிலேயே தண்ணீர் தேங்கி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க!

அதுவும் 30000 கோடி ரூபாய் செலவு பண்ணிகாமன்வெல்த் போட்டி நடத்தப் போறோம்னு சொல்லி தில்லில பல இடங்கள்ல குழி குழியா தோண்டிப் போட்டு, நீச்சல் போட்டிக்கு பயிற்சி எல்லாம் சுலபமா தில்லி சாலைகளிலேயே எடுத்துக்க வசதி செய்து இருக்காங்க!. அதுனால எந்த போட்டில தங்கம் கிடைக்குதோ இல்லையோநீச்சல்" போட்டியில் தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு நிச்சயம்-னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது!

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

டீல் தே… டீல் தேதே!!! [Deel Dhe… Deel Dhedhe]


ஆகஸ்ட் – 15: இந்தியா சுதந்திர நாடாகி 63 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதம மந்திரி செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றி வைத்து ஆற்றுகின்ற உரை முக்கியமானது. பெரும்பாலான சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ”அப்பாடா ஒரு நாள் விடுமுறை கிடைத்தது” என்ற சந்தோஷம் தரக்கூடிய நாள்.


இப்படிக் கொண்டாடப்படும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நாம் எல்லோரும் நேரடியாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ பார்த்திருக்கிறோம். ஆனால் தில்லி மக்களுக்கு சுதந்திர தினம் என்றாலே உடன் நினைவுக்கு வருவது நீலவானில் பறக்கவிடும் பட்டங்கள் தான்.


பலவிதமான வண்ணங்களிலும், அளவுகளிலும் கலை நுணுக்கங்களோடு கூடிய பட்டங்களை சுதந்திர தினம் அன்று பறக்க விடுவது தில்லி மக்களுக்கு வாடிக்கை. ஐந்து ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டங்கள் [ஹிந்தி மொழியில் “பதங்”] கூட இங்கே கிடைக்கும்.


மாஞ்சா போட்ட நூல், அதை சுற்றி வைக்கும் “சக்ரி”, கை நிறைய பட்டங்கள் என தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கோ, பெரிய மைதானத்திற்கோ வந்து நாள் முழுவதும் பட்டம் விட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவார்கள். ”டீல் தே யார், டீல் தேதே…” [இன்னும் நூலை விடு], ”காட் லே” [அறுத்து விடு] போன்ற கூச்சல்களுடன், மற்றவரின் பட்டத்தை அறுத்து விடும்போது ஒரு வாக்கியம் சொல்லி தன்னுடைய சந்தோஷத்தினை தெரியப்படுத்துவார்கள்.


உடனே அது என்ன வாக்கியம்னு கேட்டா, நான் இப்ப சொல்ல மாட்டேன். கடைசில சொல்றேனே ----- ஏன்னா, என்னடா இது அசிங்கமா எழுதி இருக்கான்னு நீங்க நினைச்சுடக்கூடாது பாருங்க!


எப்பவுமே நம்ம மக்கள் கிட்ட ஒரு குணம் – நாம நல்லா இருக்கோமோ இல்லையோ, அடுத்தவனுக்கு ஏதாவது கெட்டது நடந்தா அப்படி ஒரு சந்தோஷம்! – அடுத்தவனோட பட்டம் அறுபட்ட உடனே அப்படி ஒரு சந்தோஷத்தோட குதிச்சு குதிச்சு, கத்திக்கிட்டே ஆடுவான். அடடா நீங்க அதைப் பார்க்கணுமே!


இப்படி இவங்க சந்தோஷமா குதிச்சு அடுத்தவங்க பட்டத்தை அறுக்கிறதுலயும் ஒரு சின்ன லாபம் இருக்கு – அப்படி கீழே வர பட்டங்களை, அது கூட வாங்க முடியாத ஏழைக் குழந்தைகள் எடுத்து வைச்சு, அறுந்த நூலை ஒண்ணா சேர்த்து பட்டம் விட ஏதுவாக இருக்குது இல்லையா!


தில்லி மக்களுக்கு எந்த ஒரு பண்டிகையுமே ஆர்பாட்டம் இல்லாம கொண்டாடத் தெரியாது – எல்லாத்துக்கும் ஒரு டண்டணக்கா பாட்டு வேணும். அதுமாதிரி பாட்டு போட்டு, இப்படி நாள் பூரா பட்டம் விட்டு, முடிவுல சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டுதான் சுதந்திர தினத்தை கொண்டாடுவாங்க.


சரி.. சரி… அடுத்தவங்க பட்டம் அறுந்துச்சுன்னா என்ன வார்த்தை சொல்லுவாங்கன்னு சொல்லலையேன்னுதானே கேட்கறீங்க? அடுத்தவங்க பட்டம் அறுந்த உடனே எல்லோருமா சேர்ந்து “ஆய் போ!” [AI BHO] அப்படின்னு சந்தோஷமா கத்துவாங்க!


டிஸ்கி: சுதந்திர தினம் அன்று போட்டிருக்க வேண்டிய பதிவு! தாமதமாக போடுவதற்கு நீங்கள் கொடுக்காமல் நானாகவே எடுத்துக் கொண்ட சுதந்திரமே காரணம். ஹீ....ஹீ...ஹீ!!!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ஏட்டா [ETAH] பயணங்கள்



சில வருடங்களுக்கு முன் என் சகோதரி தனது குடும்பத்துடன் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏட்டா [Etah] என்ற இடத்தில் வசித்தபோது அவ்வப்போது நான் அங்கு செல்வதுண்டு. ஒவ்வொரு பயணமும் ஒரு பயங்கர அனுபவம்.

கிழக்கு தில்லியில் உத்திரபிரதேச எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் இருந்து ஏட்டா நகருக்கு [!] நேர் பேருந்துகள் கிடைக்கும். தில்லியிலிருந்து, காசியாபாத், புலந்த்ஷெகர், குர்ஜா, அலிகர் வழியாக சென்றால் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஏட்டா நகரை சென்றடையலாம்.

நிலையத்தில் பேருந்து வந்து நின்றவுடன் நம் ஊர் நகர பேருந்துகள் போல கைக்குட்டை, கைப்பை போன்றவைகளை வைத்து இடம் பிடிப்பதெல்லாம் கிடையாது. ஆண்களும் பெண்களும் முண்டியடித்து பேருந்தினுள் செல்ல முயலும்போது சில பெண்கள் வண்டியின் பின் சக்கரத்தின் மேல் ஒரு காலை வைத்து சன்னல் வழியே உள்ளே குதித்து இடம் பிடிப்பார்கள். சன்னல் வழியே குழந்தையை உள்ளே போட்டும் சிலர் இடம் பிடிப்பார்கள். ஒருவழியாக எல்லோரும் அமர்ந்து நமக்கும் வழியை விட்டு ஒரு காலி இடமும் இருந்து விட்டால் நாமும் அமர்ந்து கொள்ளலாம்.

USPSRTC [உத்திர பிரதேச அரசு பேருந்து] அல்லது DTC [தில்லி அரசு பேருந்து] இதில் எந்த பேருந்தில் சென்றாலும், ஏதோ ஒரு குப்பை வண்டியில் குந்திச் செல்வது போன்ற எண்ணமே மனதுக்குள் இருக்கும்.

பேருந்தில் 55-60 பயணிகள் பயணிக்கிறார்கள் என்றால் 5-6 பயணிகளைத்தவிர மற்ற எல்லோரும் புகை பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதிலும் குளிர் காலம் என்றால் நிலைமை இன்னும் மோசம். எல்லா கண்ணாடி சன்னல்களையும் மூடி வைத்துக்கொண்டு ஆண் பெண் பேதமின்றி பீடி பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விடும் புகை எல்லாம் பேருந்தினுள்ளேயே சுற்றி வந்து நீங்கள் இறங்குவதற்குள் உங்களுக்கு தலை சுற்றல் ஆஸ்த்மா வருவது கியாரண்டி.

புலந்த்ஷெகர் தாண்டியதும் இருக்கும் எதாவது ஒரு தனியார் உணவகத்தில் பேருந்து நின்றதும் அங்கு கிடைக்கும் எல்லா உணவுப்பொருள்களையும் சகட்டு மேனிக்கு வாங்கிச் சாப்பிடுவார்கள். அது நல்லதா கெட்டதா என்ற யோசனையெல்லாம் வரவே வராது பயணிகளுக்கு.

இதெல்லாம் முடித்து பேருந்து கிளம்பியவுடன் அங்கு சாப்பிட்ட பொருட்களெல்லாம் அதன் வேலையைக் காண்பிக்க ஆரம்பிக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் வாந்தி எடுத்துவிடுவார்கள். நம் மேலும் யாராவது வாந்தி எடுத்துவிடுவார்களோ என்ற பயத்துடனே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

பேருந்து உணவகத்தில் நின்று கொண்டு இருக்கும் போது பலவித வியாபாரிகளை நீங்கள் சந்திக்க முடியும். ஒருவர் பல்பொடி விற்பவர். பெரிய பெரிய நிறுவனங்களின் பற்பசையால் சரிசெய்ய முடியாத பிரச்னைகளைக்கூட அவரது பல்பொடி தீர்த்துவைக்கும் எனச் சொல்லி பத்து ரூபாய்க்கு அதை விற்பார். யாராவது மஞ்சள் பல்லை காட்டியபடி இருந்துவிட்டால், அவருக்கு பல் தேய்த்துவிடக் கூடத் தயங்க மாட்டார்.

இத்துடன் போச்சா? பல்பொடி விற்றவர் பேருந்திலிருந்து கீழே இறங்கியவுடன் தலைவலி தைலம் விற்பவர் வந்து, நீண்ட பயணத்தில் வரும் தலைவலி, கழுத்துவலி போன்ற எல்லா வலிகளுக்கும் அவரிடம் மருந்து இருப்பதாகச் சொல்லி ஒரு சிறு குப்பி எண்ணையை பத்து ரூபாய்க்கு விற்பார். நீங்கள் கொஞ்சம் அசந்து விட்டால் போதும், நேராக உங்களிடம் வந்து அவர் தைலத்தினை உங்கள் நெற்றியில் தடவி நீவி விட ஆரம்பித்து விடுவார்.

பிரதான சாலைகள் எல்லாம் தார் சாலைகளாக இருந்தாலும் ஒவ்வொரு நகரத்தினுள்ளும் இருக்கிற பேருந்து நிலையங்களில் செங்கல்களை குறுக்கு-நெடுக்காக வைத்திருக்கும் சாலைகளே பெரும்பாலும் இருக்கும். அப்படிப்பட்ட சாலைகளில் குலுங்கிக் குலுங்கிச் செல்லும் பேருந்தில் பயணம் செல்லும் உங்களுக்கு உடல் வலி என்ன எல்லா வலிகளும் வராமல் இருக்காது.

தில்லியில் இருந்து நேரடியாக ரயில்களும் கிடையாது. ஆக்ரா சென்றோ அல்லது ”டுண்ட்லா” என்ற இடம் வரை சென்றோ அங்கிருந்து மேலே சொன்னது போன்ற பேருந்துகளிலோ தான் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இது போன்ற அவஸ்தைகளுடன் செல்ல வேண்டுமா என்ற யோசனை எனக்கு வரும்போது சகோதரியுடன் இரண்டு நாட்களாவது இருந்து விட்டு வரலாமே என்ற எண்ணமும் கூடவே வந்து இந்த அவஸ்தைகளை எல்லாம் மறக்கச் செய்து விடுவதென்னவோ உண்மை.

புதன், 11 ஆகஸ்ட், 2010

“போல் பம், பம் போல்”




தமிழ்நாட்டில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்தசஷ்டி போன்ற முருகனுக்கு உகந்த தினங்களில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்குச் செல்வதை நாம் எல்லோரும் பார்த்திருக்கிறோம். ஆனால் சிவபெருமானுக்காகக் காவடி எடுப்பதை நீங்கள் பார்த்ததுண்டா?

வட இந்தியாவில், அதுவும் ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்தவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் சிவபெருமானுக்காகக் காவடி எடுக்கிறார்கள்.

தன்னுடைய வீட்டிலிருந்து ஹரித்வார் சென்று, கங்கையில் குளித்து, அங்கிருந்து கங்கையின் தண்ணீரை எடுத்து வந்து தன்னுடைய வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

ஹரித்வாரில் இருந்து காவடியைச் சுமந்துகொண்டு இரண்டு பக்கங்களிலும் தண்ணீரை குடங்களிலோ, பிளாஸ்டிக் குப்பிகளிலோ நடைப் பயணமாகவே எடுத்து வருவது இவர்களது வாடிக்கை. ஹரித்வாரிலிருந்து தில்லியைச் சுற்றி இருக்கும் தத்தம் கிராமங்களுக்கும், ராஜஸ்தான் மாநில கிராமங்களுக்கும் நடைப்பயணமாக செல்லும் இவர்கள் பயணம் செய்யும் தொலைவு பெரும்பாலும் 250 கிலோ மீட்டருக்கும் அதிகம்.

ஹரித்வாரிலிருந்து தில்லி வரும் நெடுஞ்சாலை வழி நெடுகிலும் பல விதமான சங்கங்களிலிருந்தும் கொட்டகைகள் கட்டி ”காவரியா” என்று அழைக்கப்படும் காவடி சுமப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.

ஆடி மாத அமாவாசைக்கு முன்னதாகவே அவர்கள் கொண்டு வரும் கங்கை நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்து விடுவது அவர்கள் வழக்கம். ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசைக்கு இரண்டு மூன்று தினங்கள் வரை ஹரித்வார் நெடுஞ்சாலைகளில் எந்த வித வாகனங்களையும் அனுமதிப்பதில்லை. சாலை முழுவதும் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளையும், உதவி அரங்குகளையும் நீங்கள் பார்க்கலாம்.

ஆரஞ்சு நிற அரைக்கால் சட்டையும், சிவபெருமான் உருவம் பொறித்த பனியனும் அணிந்து கொண்டு இவர்கள் சாரி சாரியாக வருவது நெடுஞ்சாலைக்கு ஆரஞ்சு வண்ணமடித்தது போல இருக்கும்.

முருகப் பெருமானுக்குக் காவடி எடுப்பவர்கள் சொல்லும் “அரோகரா” முழக்கங்களைப் போல சிவபெருமானுக்கு இந்த காவடி எடுக்கும் நபர்கள் முழக்கம் இடும் வாசகம் “போல் பம், பம் போல்” [Bhol Bam, Bam Bhol].

லட்சோப லட்சம் பேர்கள் இந்த சமயத்தில் ஹரித்வாரில் குழுமி அங்கிருந்து நடைப்பயணம் செல்வார்கள் என்பதால் தமிழகத்தில் இருந்து ஹரித்வார்-ரிஷிகேஷ் வருவதாக இருந்தால் ஆடி மாத சமயத்தில் வருவதைத் தவிர்ப்பது நல்லது.

சமீப காலங்களில் ரிலே ஓட்டப்பந்தயங்களைப் போல ரிலே காவடிகள் கூட எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்! ஒரு பெரிய லாரியில் 10-15 பேர் சேர்ந்து ஹரித்வார் சென்று, அங்கிருந்து அவரவர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தண்ணீரைச் சுமந்தபடி ரிலே ஓட்டமாக ஓடி வருகிறார்கள். லாரியிலிருந்து பெரும் சத்தத்தில் சிவபெருமானின் புகழ் பரப்பும் பாடல்களை ஒலிபரப்பியபடி செல்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய சினிமா படங்களின் பாடல் மெட்டுகளில் இருப்பது தான் கொடுமை!

புதன், 4 ஆகஸ்ட், 2010

அவதியோ அவதி



நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர தில்லி போன்ற சில நகரங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள பள்ளி ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் என்று பலரையும் தேர்தல் ஆணையம் அவர்களது நிரந்தர பணியைத் தவிர இதையும் கூடுதலாக செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இந்தப் பணிக்கு ஆண், பெண் இருபாலர்களையும் அமர்த்தியுள்ள அரசு அவர்களுக்கு உண்டாகும் அவதிகளைப் பற்றி சற்றும் சிந்திப்பதில்லை.

உதாரணத்துக்கு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வீடாகச் சென்று அந்த வீட்டில் உள்ளவர்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், அவரின் அப்பா பெயர், வீட்டில் உள்ள பொருள்கள், வாகன வசதிகள், தொலைபேசி வசதிகள் போன்ற பல விவரங்களை சேகரிக்க வேண்டும். மொத்தமாக பத்து பதினைந்து பக்கங்கள் கொண்ட அந்த படிவத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக நிரப்பியாக வேண்டும். இதற்கு ஒவ்வொரு வீட்டிற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஆகும்.

ஆனால் பெரும்பாலான வீடுகளுக்குச் செல்லும்போது இப்பணியாளர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதுகூட இல்லை. கதவைத் திறக்காமலே அவர்கள் கேட்கும் விவரங்களை சொல்லி அனுப்பி விடுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டிலுள்ளவர்களை குற்றம் சொல்லமுடியாதெனினும் இந்த அவதிகளைப் படும் பணியாளர்களாக நம்மை வைத்துப் பார்க்கும் போதுதான் அதன் கொடுமை நமக்கு விளங்கும்.

சென்ற மாதத்தில் கூட தில்லியில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஒரு வீட்டுக்குச் சென்ற ஒரு ஆசிரியரை தொந்தரவு செய்கிறார் என்று சொல்லி வீட்டில் உள்ளவர்கள் அவரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது என்பது வருந்தத்தக்க விஷயம். தாக்கப்பட்ட அந்த ஆசிரியர் காவல்துறையில் புகாரளித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தாலும், அவர் அடிவாங்கியது வாங்கியதுதானே.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீடாகச்சென்று தகவல் சேகரிக்க வேண்டிய அவசியமென்ன? எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கணினி மூலம் மக்களாகவே தங்களது விவரங்களை அளிக்க ஏற்பாடு செய்யலாமே! படிக்காத மக்கள், கணினி இயக்கத் தெரியாதவர்கள் அந்தந்த ஊரில் உள்ள அஞ்சல் துறை அலுவலகத்திலோ வேறு அரசாங்க அலுவலகத்திலோ விவரங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்தால் இந்த பணி சீக்கிரமாகவும் தொல்லையின்றியும் முடியுமே.

தில்லியில் இப்போது வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்க்கவும், திருத்தங்களைச் செய்யவும் வீடுவீடாக ஆசிரியர்களும், அரசு அலுவலகர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் சந்திக்கும் அவதிகள் கணக்கிலடங்கா. அதிலும் பெண் பணியாளர்கள் சந்திக்கும் அவதிகள் சொல்லமுடியாது. அவர்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளக் கூட வழி தெரியாமல் நிற்கிறார்கள்.

தில்லி போன்ற பெரிய நகரில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது வாக்காளர் அட்டை கிடைப்பதற்காக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களைக் கொடுத்து அவர்கள் அதை நிரப்பிக்கொடுத்ததும் அடையாள அட்டை தயாரித்து அவர்களது வீடுகளிலேயே சென்று கொடுக்கும் ஏற்பாட்டை அரசு செய்துள்ளது.

அதுவும் குறிப்பிட்ட தினங்களுக்குள் நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகளை ஒவ்வொரு பணியாளர்களும் வீடு வீடாகச் சென்று கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் வேறு. வேண்டியவர்களே வந்து தேர்தல் அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாமே!

உங்கள் வீட்டிற்கும் வேர்த்து விறுவிறுத்து ஒரு பணியாளர், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கோ வாக்காளர் அட்டை சம்பந்தமாகவோ வரலாம் – அவர்களை வீட்டிற்குள் அழைக்கிறீர்களோ இல்லையோ – அவர்களது தாகம் தீர அவர்களுக்கு குறைந்தபட்சம் தண்ணீராவது கொடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.

அதெல்லாம் சரி, திடீரென இவர்கள் மேல் உனக்கெதற்கு இவ்வளவு அக்கறை என கேட்கிறீர்களா? சென்ற மாதம் நானும் இந்த அவதிகளைச் சந்தித்ததால் தான்.

அதெல்லாம் விடுங்க! உங்க வீட்டுக்கு வரும் அந்த முகம் தெரியா நண்பருக்கு டீ கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை பச்சைத் தண்ணீராவது கொடுப்பீங்கதானே!

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

என்ன ஆகும்?




என்னுடைய நண்பர் ஒருவரின் தலை நல்ல வழுக்கை. அவர் வாழும் அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் வீட்டுக்குக் கீழ் வீட்டில் பெரிய நாய் ஒன்று இருக்கிறது.

அவர் ஒரு நாள் கீழிருந்து மேலே வரும் போது கீழ் விட்டுப் பெண் நாயை சங்கிலியால் கட்டி கீழே அழைத்துச் சென்று கொண்டிருந்தார். படிக்கட்டில் நடந்திருக்கிறது இச்சந்திப்பு.

நண்பர் இரண்டு படி கீழே இருக்கும் போது அந்த நாய் மேலே இருந்து பாய்ந்து இவரின் தோளின் மேல் தன் முன்னிரு கால்களையும் வைத்து நாக்கைத் தொங்க போட்டபடி மோப்பம் பிடித்திருக்கிறது. நண்பருக்கோ மனசில் கிலி. அதை ஒரு பெண்ணுக்கு முன் காண்பிக்கவும் மனசில்லை.

அந்த பெண், நண்பரிடம் ”எங்க நாய் கடிக்காது, புதியவர்கள் எனில் சும்மா நக்கிப் பார்க்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெரிய நாய் நண்பரின் வழுக்கைத் தலையில் நக்கி விட்டதாம். பின்னர் நாயை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணும் சென்று விட்டார்.

இப்போது நண்பருக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு சந்தேகம் தான். “ஊர்ல பெருசுங்க சொல்வாங்க, வழுக்கைத் தலையில எருமை நக்கிட்டா முடி முளைக்கும்னு, ஆனா யாருமே நாய் நக்கினா என்ன ஆகும்னு சொல்லலையே?”

பார்க்கறவங்க கிட்டெல்லாம் "நாய் நக்கினா என்ன ஆகும்?" - ன்னு கேட்டுட்டே இருக்கார். ஆனா நான் அவர்கிட்ட என்ன ஆகுதுன்னு பார்த்துட்டு அதை முதல்ல என்கிட்டதான் சொல்லணும்னு சத்தியம் வாங்கியிருக்கேன், அப்பதானே நான் அந்த மகத்தான மருத்துவத்துக்கு காப்புரிமை எல்லாம் வாங்கமுடியும்?.

ஆமா நாய் நக்கினா என்ன ஆகும்னு உங்களில் யாருக்காவது தெரியுமா?