வியாழன், 17 மார்ச், 2011

அறுபத்தி ஆறு – தொண்ணூத்தி ஒன்பது [மனச் சுரங்கத்திலிருந்து]




நமது தாய் தந்தையருக்கு நம்மை வளர்ப்பதில் எவ்வளவு ஈடுபாடும் உழைப்பும் இருக்கிறதோ அதே அளவு உழைப்பும் ஈடுபாடும பள்ளி ஆசிரியர்களுக்கும் இருந்தது ஒரு காலத்தில். தங்களால் கற்பிக்கப் படும் பாடங்கள்/விஷயங்கள் மாணவனுக்கு புரிய வேண்டும், அவன் மனதில் ஆழப் பதிய வேண்டும் என்பதில் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். அதனால் தானே தாய் தந்தைக்குப் பிறகு குருவிற்கு இடம் கொடுத்து இருக்கிறோம். அதன் பின்னர் தான் இறைவனே வருகிறார். அப்படிப்பட்ட ஒரு ஆசிரியரைப் பற்றியே இந்த பகிர்வு.

நான் ஒன்பது-பத்தாவது வகுப்புகள் படித்த போது எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் BYS என்று சுருக்கமாய் அழைக்கப்பட்ட திரு B.Y. சுந்தரராஜன் அவர்கள். அவர் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் விதமே அலாதியானது. அதிலும் ஆங்கில இலக்கணம் சொல்லிக்கொடுக்கும்போது அத்தனை பொறுமையாக எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி சொல்லிக் கொடுப்பார். நான் படித்தது தமிழ் வழிக் கல்வி என்பதால் ஆங்கிலத்தில் அது வரை எனக்குத் தகராறு தான். ஏதோ படித்துத் தேறிவிடுவேன். அவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கும் ஆங்கிலத்தில் ஒரு பிடிப்பு வந்தது என்று சொல்வேன்.

ஆங்கில இலக்கணத்தில் படிப்படியாக செய்ய வேண்டியதை அழகாய் சொல்லி எங்களுக்குப் புரிய வைப்பார். அப்படி Direct – Indirect Speech சொல்லிக் கொடுக்கும் போது அதற்கான முதல் படி– ”அறுபத்தி ஆறு – தொண்ணூத்தி ஒன்பதை நீக்குக” என்பது தான். “Inverted Comma” என்று ஆங்கிலத்தில் சொல்லாமல் இப்படித் தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். இது போல விதவிதமான வகைகளில் எங்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுப்பதில் அவர் ஒரு வித்தகர்.

நெற்றி நிறைய விபூதி பூசி தலையில் சிறிய குடுமியுடன் மாணவர்களுக்கு அழகாய் பாடம் எடுத்த அவரிடம் நிறைய திறமைகள் இருந்தது. மிருதங்கம் நன்றாக வாசிப்பார். அதில் வித்வான் ஆக வேண்டும் என்ற ஆசையிருந்தும் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஆசிரியராக வந்தது பற்றி உள்ளுக்குள் வருத்தம் இருப்பினும், ஏற்றுக் கொண்ட பணியினைச் செவ்வனே செய்தவர். தான் ஆசைப்பட்டதை தனது மகன் மூலம் நிறைவேற்றிவிட்டார். ஆம் அவரது மகன் இன்று ஒரு பிரபல மிருதங்க வித்வான். பல பிரபல பாடகர்களுக்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டு இருக்கும் அவர் நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன்.

அப்படிப்பட்டவரிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம் வாய் நிறைய கும்பகோணம் வெற்றிலை போடுவது மட்டுமே! கவுளி-கவுளியாய் வெற்றிலை போட்டு வாய் முழுவதும் அப்படி ஒரு சிவப்பு. அவர் பாடம் எடுக்கும்போது முதல் வரிசையில் அமரவே எல்லோரும் பயப்படுவார்கள். பயம் அவர் மேல் அல்ல – அவர் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் வெற்றிலைச் சாற்றால் போடும் சிவப்பு புள்ளி கோலத்திற்குத் தான்! நான் முதல் வரிசையில் அமராத காரணத்தினால் என் சட்டை தப்பித்தது. ஆனால் அவர் சொல்லிக் கொடுத்த பாடங்கள் இன்றும் மனதில் நிற்கிறது.

பள்ளியில் படிக்கும்போது நாம் எந்த ஒரு ஆசிரியருக்கும் நன்றி சொல்லி இருக்க மாட்டோம்! இந்த பகிர்வு மூலம் அந்த சிறந்த ஆசிரியருக்கு எனது நன்றி கலந்த நமஸ்காரங்கள்.

மனச் சுரங்கத்திலிருந்து என்ற எனது பகிர்வுகளில் வேறு சில ஆசிரியர்கள் பற்றியும் அவ்வப்போது எழுத நினைத்திருக்கிறேன் – உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

மீண்டும் வேறு பதிவில் சந்திப்போம்!

வெங்கட் நாகராஜ்

27 கருத்துகள்:

  1. ஆசிரியர்க்கு நன்றி சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.
    ஆரோக்கியமான சிந்தனை.
    நல்ல ஆசிரியர்கள் என்றும் நம் மனதிலிருந்து நீங்குவதில்லை.

    வெற்றிலைச்சாரிலிருந்து தப்பிய தங்களின் வெற்றியும் நல்லதொரு நகைச்சுவை தான்.

    பதிலளிநீக்கு
  3. மனச் சுரகம் நல்லா இருந்தது...
    நெய்வேலி சந்தான கோபாலன் எனக்கு பிடித்த பாடகர்...

    முதல் பெஞ்சுல இல்லைன்னு சொல்லிட்டீங்க.. லாஸ்ட் பெஞ்சுன்னு சொல்ல வேண்டியது தானே.. இதுல என்ன பயம்.. ;-P
    அந்த வெற்றிலைச்சாறு தீர்த்தம் போல.. பக்கத்தில் இருந்து தலையில் தெளித்தால் ஆங்கிலம் பிச்சுகிட்டு வருமாம்.. மிஸ் பண்ணிட்டீங்க.. ;-)))

    பதிலளிநீக்கு
  4. 66 is inverted commas; Ok WHat is 99 ? That is also referring to inverted commas, Is it so?

    Good that you have shared about your teacher.

    பதிலளிநீக்கு
  5. //இது போல விதவிதமான வகைகளில் எங்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுப்பதில் அவர் ஒரு வித்தகர்.//

    சுவாரசியம்! :-)

    பதிலளிநீக்கு
  6. //பல பிரபல பாடகர்களுக்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டு இருக்கும் அவர் நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன். //

    BSY ஐயா ஒரு நல்ல ஆசிரியர் மட்டுமல்ல; நல்ல தந்தையும் கூட என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு
  7. //அப்படிப்பட்டவரிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம் வாய் நிறைய கும்பகோணம் வெற்றிலை போடுவது மட்டுமே!//

    ஹிஹி! அது பரவாயில்லையே...இப்போதெல்லாம் என்னான்னு சொல்லணுமா என்ன? :-))

    பதிலளிநீக்கு
  8. ஆசிரியருக்கு மரியாதையை அற்புதமாகச் செலுத்தியிருக்கிறீர்கள். நன்று.

    பதிலளிநீக்கு
  9. நல்ல ஆசிரியர் அமைவதற்கும் கொடுத்து வைத்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல ஆசிரியரைப் பற்றி நல்ல மாணவரின் பதிவு :)

    பதிலளிநீக்கு
  11. பள்ளியில் படிக்கும்போது நாம் எந்த ஒரு ஆசிரியருக்கும் நன்றி சொல்லி இருக்க மாட்டோம்!

    வாஸ்தவமான பேச்சு!
    அருமையான ஆசிரியருக்கு நமஸ்காரம்

    பதிலளிநீக்கு
  12. மனச்சுரங்கத்திலிருந்து ஒரு வைரம் வெளிப்பட்டிருக்கு..

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியர் பணி என்பது கடவுளுக்கே செய்யும் சேவை என்ற எண்ணம் அப்போதைய ஆசிரியர்களுக்கு இருந்தது. மக்கு மாணவனை எப்படியாவது ஜெயிக்க வைக்கணுமுன்னு போராடி வீட்டுக்கு வரச்சொல்லி இலவசமா சொல்லிக் கொடுப்பதைக்கூட நான் பார்த்துருக்கேன்.

    நல்ல இடுகை.

    பதிலளிநீக்கு
  14. நாம் படித்த போது இருந்தாற் போல் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட
    ஆசிரியர்கள் இந்நாளில் இருக்கின்றனரா என்பது சந்தேகமே.இந்த விஷயத்தில் நம் குழந்தைகளை விட
    நாமே கொடுத்து வைத்தவர்கள்

    பதிலளிநீக்கு
  15. தாய் தந்தையருக்கு அடுத்து எனச் சொல்லுதலைவிட
    தெய்வத்திற்கு முன்பு ஆசிரியர்களை வைத்து
    போற்றி மகிழ்வது நம் தமிழ்ப் பண்பு
    அதை மீண்டும் நினைவு கூறும் வகையில்
    மிகச் சிறப்பாக இருந்தது உங்கள் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. அழகான நினைவுகூறல் மூலம் சிறப்பாக நன்றியைத் தெரிவித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஆசிரியர் பணியே அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பனி . என்று சொல்வார்கள்.

    அப்படி தன்னை அர்ப்பனித்துக் கொண்ட நல்ல ஆசிரியரைப் பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்.

    நல் ஆசிரியர்களை அறிய ஆவல், எழுதுங்கள். எங்கள் ஆதரவு நிச்சியம் உண்டு.

    பதிலளிநீக்கு
  18. ரிஷபனை டிட்டோ செய்கிறேன் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  19. நல்ல ஆசிரியரை நினைவு கூர்ந்தவிதம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  20. very well- said, sir!

    intha kaalaththula prachchanaiye, no teachers earn our respects... i can count my fingers on teachers who i respect. the rest of them-- no comments!

    பதிலளிநீக்கு
  21. @@ வேடந்தாங்கல் கருண்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

    ## வை. கோபாலகிருஷ்ணன்: வெற்றிலைச்சாறில் இருந்து பெரும்பாலான நாட்களில் தப்பி விட்டேன் :) வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா.

    @@ ஆர்.வி.எஸ்: :) நம்ம உயரத்துக்கு கடைசி பெஞ்சுக்கு அடுத்து எதாவது இருந்தா அதுல உட்கார வெச்சுருப்பாங்க! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மைனரே.

    ## மோகன்குமார்: 66 – 99 are nothing but the “opening and closing inverted commas”. Thanks for reading and making the comment!

    @@ சேட்டைக்காரன்: ஒவ்வொரு பதிவிலிருந்தும் உங்களுக்குப் பிடித்தவற்றை எடுத்துக்காட்டி உங்கள் கருத்துகளைப் பதியும் உங்கள் விதம் எனக்குப் பிடித்தது சேட்டை. உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ## அமுதா கிருஷ்ணா: உண்மைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    @@ எல்.கே: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

    ## ரிஷபன்: உண்மையான வார்த்தைகள். படிக்கும்போது எல்லா ஆசிரியர்களையுமே எதிரிகளாய்த் தான் நினைக்கிறார்கள் மாணவர்கள். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    @@ அமைதிச்சாரல்: வைரம் சொல்லி என்னை மகிழ்வித்தீர்கள். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ## ஆசியா உமர்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    @@ கலாநேசன்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

    ## துளசி கோபால்: உண்மைதான். சில ஆசிரியர்கள் இப்படியும் இருக்கிறார்கள். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி டீச்சர்!

    @@ ராஜி: சில விதங்களில் நாம் கொடுத்து வைத்தவர்கள். வேறு சில விஷயங்களில் நாம் அவ்வளவு கொடுத்து வைக்கவில்லை! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ## ரமணி: எல்லோரும் சொல்வது போல இல்லாமல், தெய்வத்திற்கு முன் வைத்திருக்கிறோம் என்று சொல்லி எங்களுக்கு ஒரு உண்மையை உணர்த்தி இருக்கீங்க சார். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    @@ முத்துலெட்சுமி: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ## கோமதி அரசு: நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய வலைப்பூவில் உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து மேலும் சில ஆசிரியர்களைப் பற்றியும் எனது மனச் சுரங்கத்திலிருந்து தொடரில் எழுதுகிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா.

    @@ சுந்தர்ஜி: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜி!

    ## லக்ஷ்மி: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா.

    @@ Matangi Mayley: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. Nice post. Good to know that the father of Neyveli Skandasubramanian @ Raghu was your teacher. They were tenants in my uncle's house in West Mambalam. Raghu used play Mridangam for our bhajans

    பதிலளிநீக்கு
  23. @ Sunnyside: Thanks friend. I have pleasant memories of his father's classes.... Thanks for your visit and comments.

    பதிலளிநீக்கு
  24. Sunnyside is my blogonym Venkat. But never really got to writing something on my own till now. Hopefully very soon. I'm getting inspired by you & Cheenu...Suryanarayanan

    பதிலளிநீக்கு
  25. @ Sunnyside: Hi Surya, it is great to correspond with you again.... You also should start writing....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....