செவ்வாய், 24 மே, 2011

மாட்டிக்கிட்டான்… மாட்டிக்கிட்டான்…



மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம். இந்த தினத்தினை உலக மகளிர் தினமாகக் கொண்டாட ஆரம்பித்து 100 வருடம் ஆகிவிட்டதாம்! அன்று தான் என் வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தாள். நான் சிவனே என்று தில்லியில் இருக்க, ”பெண் பார்க்க போக வேண்டும் வா!” என்று அம்மா-அப்பாவின் ஆணை. அவர்கள் திருச்சியிலிருந்து கோவை வந்து விட நான் தில்லியிலிருந்து கோவை வந்தேன்.

பெண் பார்க்கும் படலம் என்பதெல்லாம் பிடிக்காது என்றாலும், அப்பா-அம்மா சொல்லைத் தட்டாமல், எட்டுவித கட்டளைகள் போட்ட கிட்டுமணி போல இல்லாமல் நான் போட்ட ஒரே கட்டளை – ”எந்த பெண்ணை முதன் முதலில் பார்க்கச் செல்கிறேனோ அந்த பெண்ணையே மணப்பேன்” என்பதுதான்! இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. அவரின் புகைப்படத்தைக் கூட நான் அதுவரை பார்க்கவில்லை!

பெண்பார்க்கச் செல்லும் எல்லா இளைஞர்களைப் போலவே நானும் அன்றே பல்பு வாங்கினேன்! 12-13 வருடங்களாக ஸ்வயம்பாகமாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்த காரணத்தால் “உனக்குச் சமைக்கத் தெரியுமா? என நான் கேட்க, ”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்.

போட்ட கட்டளைப்படியே அன்றே முடிவு செய்து மார்ச் 10-ஆம் தேதியே நிச்சயதார்த்தம் – திருச்சியில் எங்கள் வீட்டில். அதுவரை காதலிக்காதது தப்பு என்பதே அப்போது தான் தெரிந்தது! நிச்சயதார்த்தம் முடிந்து நான் தில்லி வந்து விட அவர்களோ கோவையில்! அதனால் தொலைபேசியில்தான் கட்டிக்கொள்ளப்போகும் மனைவியை காதலிக்க முடிந்தது! தொலைபேசித் துறைக்கு எங்களால் நல்ல வருமானம்! வெறும் குரல் மட்டுமே கேட்க முடிந்தது என்பதால் 3ஜி வசதிகள் அப்போதே வரவில்லையே என்ற வருத்தம் இப்போது வருகிறது!

இப்படியாக 73 நாட்கள் தொலைபேசியிலேயே காதல் தொடர்ந்தது! மே 23 அன்று தான், 2611 கிமீ தொலைவில் இருந்த என் தொலைபேசிக் காதலியை தான் திரும்பவும் சந்தித்தேன்! மே 24-ல் கல்யாணம்! இப்படியாக கெட்டிமேளத்துடன் என் காதலியை நான் மணந்து கொண்டேன்! கெட்டிமேளம் என்றவுடன் தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

தில்லியின் ஒரு அரங்கத்தில் பாக்யராஜ் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ஒரு பேச்சாளர் இப்படி பேசினார் – “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்ற ஆணை கிடைத்தவுடனே தவில் வாசிப்பவர் கெட்டி மேளம் கொட்ட அதன் சத்தம் எப்படிக் கேட்கும் தெரியுமா? கல்யாணம் பண்ணிக்கொள்ளும் அந்த ஆணைப் பார்த்து “மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்!” என்று சொல்வது போல இருக்கும்” என்று.

அந்த நிகழ்ச்சியினை மனைவியுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த ஒரு 65 வயது பெரியவர் மிகவும் ரசித்து கை கொட்டி வாய்விட்டுச் சிரித்தார் – பக்கத்தில் மனைவி இருப்பதை மறந்து – விளைவு? அவர் தொடையில் ஒரு அடி, ஒரு நிமிட்டாம்பழம்! அதாங்க ஒரு கிள்ளு! இந்த நிகழ்வினை பார்த்து, ரசித்து, என்னிடமும் பகிர்ந்து கொண்ட பத்மநாபன் அண்ணாச்சிக்கும் நன்றி!

ஆக,என்னுடைய திருமண நாளான இன்று பெண் பார்க்கும் படலத்திலிருந்து கல்யாணம் வரை சொல்லியிருக்கிறேன். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கல்யாணத்திற்காக பெண் பார்த்த அனுபவங்கள் உண்டு. இதையே ஒரு தொடர் பதிவாக ஆக்கினால் என்ன என்ற ஒரு யோசனை! ஆகவே இதைத் தொடர விரும்புவர்கள் தொடரலாமே….

”கல்யாண நாள்னு சொல்றீங்க, விருந்தெல்லாம் கிடையாதா?” என்று கேட்பவர்களுக்கு – என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவில் இன்று “போஜனம் செய்ய வாருங்கள்” என்ற பாடலை பதிந்திருக்கிறேன். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் என்னென்ன பகிர்ந்தனர் என்ற விவரங்கள் அடங்கிய பாடல்… அங்கு சென்று ருசித்து மகிழுங்களேன்…

மீண்டும் இன்னுமொரு பகிர்வில் சந்திப்போம்…

வெங்கட்.




50 கருத்துகள்:

  1. திருமண நாள் வாழ்த்துக்கள் வெங்கட். நெறையப் பேருக்கு மே மாதம் திருமணம் நடந்து இருக்கு.

    அப்புறம் இது ஏற்கனவே ஒரு ரவுண்டு வந்த தொடர் பதிவு. நான் இன்னும் விரிவா எழுதலாம்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன்.

    அப்ப அவங்க ப்ளாக்ல போடற சமையல் குறிப்பெல்லாம் உங்க கை வண்ணம்தானா ??

    பதிலளிநீக்கு
  2. Voted 2 to 3 in INDLI.

    உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

    பதிவு நகைச்சுவையாக நன்றாக இருக்குது.

    தலைப்பும், படமும் வெகு ஜோர்.

    அன்புடன்,
    vgk

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா24 மே, 2011 அன்று AM 7:46

    /உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்.//

    ha ha ha

    திருமண நாள் வாழ்த்துக்கள் சார். அப்புறம் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை உங்கள மாதிரி ஆளுங்களால தான் டெலிபோன் துறைக்கே வருமானம். வாழ்க.

    //அப்ப அவங்க ப்ளாக்ல போடற சமையல் குறிப்பெல்லாம் உங்க கை வண்ணம்தானா ?//
    இப்படி எல்லாம் கேட்டு அவர சங்கட படுத்தக்கூடாது கார்த்தி சார்.

    அப்புறம் இந்த கதையை ஆரம்பித்ததே எங்கள் தலைவலி அடப்பாவிதான். இது தெரியாமல் வலை உலகில் இருக்கிறது எவ்வளவு பெரிய இன்சல்ட் எங்க இட்லிமாமிக்கு. இருங்க அவங்க கிட்ட போட்டுக்கொடுத்திட்டு தான் மறுவேலை. இன்னைக்கு திருமண நாள் என்பதால் விட்டு வைக்கிறேன். =))

    பதிலளிநீக்கு
  4. வெங்கட் ..எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    "”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்."...நம்பமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. Happy Anniversary Mrs. Aadhi and Mr. Aadhi too...:))

    இந்த பெண் பார்த்த அனுபவம் நாங்க போன வருஷம் ஆரம்பிச்சு ஒரு ரவுண்டு எழுதினோங்க... ஆனா இன்னும் நெறைய பேரை எழுத வெக்க இது ஒரு வாய்ப்பு... தொடருங்க மக்களே எல்லாரும்..:))


    பொண்ணு பாத்த அன்னைக்கே பல்பு...சூப்பர் ஆதி... கோயமுத்தூருன்னா சும்மாவா? ஹா ஹா... நன்றி பகிர்ந்து கொண்டதுக்கு... மணநாள் வாழ்த்துக்கள்..:)

    பதிலளிநீக்கு
  6. திருமண நன்நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. துளசி கோபால்:

    திருமண நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    மனமகிழ்ச்சியோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் குழந்தை குட்டிகளுடன் இனிதாக வாழ்க்கை தொடர மனமார வாழ்த்துகின்றோம்.

    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும்.


    பி.கு: உங்க பின்னூட்டப்பொட்டி வேலை செய்யலையே:(

    பதிலளிநீக்கு
  8. இனிய, திருமணதின வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் வெங்கட்..சரியான பல்பு.

    பதிலளிநீக்கு
  10. இனிய மண நாள் வாழ்த்துகள் வெங்கட்!இன்னிக்கு ஆஃபீஸ்க்கு லீவு போட்டாச்சா?!

    பதிலளிநீக்கு
  11. என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஹே ஹே ஹே ஹே உங்க ஆளின் முதல் பதில்லையே சூப்பரா பல்பு வாங்கிட்டீங்க....

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா24 மே, 2011 அன்று PM 1:55

    வாழ்த்துக்கள் அண்ணே இன்று போல என்றும் வாழ்க ..

    பதிலளிநீக்கு
  14. //என நான் கேட்க, ”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்.///

    செம்ம் காமடி
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அப்ப அவங்க ப்ளாக்ல போடற சமையல் குறிப்பெல்லாம் உங்க கை வண்ணம்தானா ?\

    நெசமாவா?

    பதிலளிநீக்கு
  16. அனுபவம் சூப்பர்!இனிய திருமண நாள் வாழத்துக்கள் வெங்கட் சார்.

    பதிலளிநீக்கு
  17. நல்லதோர் ‘கிளுகிளு’ பதிவு. இனிய திருமண நாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  18. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

    இந்த “மாட்டிக்கிட்டான். மாட்டிக்கிட்டான்”-ல் ஒன்று கவனியுங்கள். பெண்ணின் கழுத்தில் மங்கள நாண் - பூட்டுவது ஆண். ஆனால் சொல்வது ”மாட்டிக்கிட்டான். மாட்டிக்கிட்டான்” என்று.

    பதிலளிநீக்கு
  19. மனைவி கையில் கரண்டி என்றால்
    சமைக்கிறார்கள் என அர்த்தம் இல்லை
    கொதிப்பில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்
    அதே போல் கணவர் கையில் கரண்டி என்றால்
    வாழ்வின் ரகசியம் புரிந்தவர் என அர்த்தம்
    ஜமாயுங்கள்
    இனிய மண நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. @@ எல்.கே.: திருமண வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி கார்த்திக். ஏற்கனவே ஒரு ரவுண்ட் வந்திருக்கா! நான் படித்த நினைவில்லை…

    ”அப்ப அவங்க ப்ளாக்ல போடற சமையல் குறிப்பெல்லாம் உங்க கை வண்ணம்தானா ??” அட சந்தேகம் வந்திருச்சே……

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா…

    @@ அனாமிகா துவாரகன்: ஆஹா! நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகளுக்கும், அ.த. அவர்களிடம் போட்டுக் கொடுக்கப் போவதற்கும் சேர்த்து ஒரு நன்றி சகோ. :))))))))

    பதிலளிநீக்கு
  21. மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள் நண்பரே
    நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் 73 நாட்கள் கொஞ்சம் அதிகம் தான், எனக்கு 22 நாட்கள். நல்ல சுவையான பகிர்வு நன்றி , பாராட்டு , வாழ்த்து

    பதிலளிநீக்கு
  22. @@ வேடந்தாங்கல் கருண்: மிக்க நன்றி நண்பரே…

    @@ குமார்: வாழ்த்தியமைக்கு நன்றி குமார். சந்தேகமில்லை… நிஜமாகவே ஆஃப் ஆனேன்..

    @@ அப்பாவி தங்கமணி: வாழ்த்துகளுக்கு நன்றி சகோ. கோயம்புத்தூர் பொண்ணுன்னா சும்மாவா என்ன… எல்லாருமே சேர்ந்துட்டாங்கப்பா…..

    @@ சித்ரா: வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

    @@ மாதேவி: நன்றி சகோ.

    @@ துளசி கோபால்: தம்பதி சமேதராய் எங்களை வாழ்த்திய உங்களுக்கும் எங்களது நன்றி…. பொட்டி வேலை செய்யுது இப்ப….

    பதிலளிநீக்கு
  23. @@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: மிக்க நன்றி நண்பரே..

    @@ அமுதா கிருஷ்ணா: நன்றி சகோ. பல்பு வாங்க நமக்கெல்லாம் சொல்லித் தரணுமா என்ன? :))))))

    @@ சென்னைப் பித்தன்: வாழ்த்தியமைக்கு நன்றி. ஆஃபீஸுக்கு லீவா? அட… இன்னிக்குத்தான் இன்னும் சீக்கிரமாவே கிளம்பிவிட்டேன்… பணிச்சுமை அதிகம்…. ஹும்ம்ம்…. :((((((

    @@ இராஜராஜேஸ்வரி: வாழ்த்துகளுக்கு நன்றி.

    @@ நாஞ்சில் மனோ: நன்றி மக்கா! [உங்கள மாதிரியே நானும் சொல்லிப் பார்த்தேன்....] பல்பு வாங்கறதுல நமக்கு நிகர் நாமே…. சமையல் யாருன்ற சந்தேகமேயில்லை… அம்மணிதான்….

    பதிலளிநீக்கு
  24. @@ கந்தசாமி: தங்கள் முதல் வருகை? வாழ்த்தியமைக்கு நன்றி சகோ.

    @@ ஜலீலா கமல்: வாழ்த்துகளுக்கும் இனிய, சுவையான கருத்திற்கும் நன்றி.

    @@ ஜிஜி: மிக்க நன்றி சகோ.

    @@ எல்லென்: ஆஹா! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை. வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

    @@ ஈஸ்வரன்: மிக்க நன்றி அண்ணாச்சி…

    @@ ரமணி: சுவையான கருத்திற்கு நன்றி சார்.

    @@ ஏ.ஆர். ராஜகோபால்: இனிய கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே…

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துக‌ள்... வாழ்த்துக‌ள் ச‌கோ... பிளாக்க‌ரின் ச‌ண்டித்த‌ன‌த்தால் தாம‌த‌மாக‌ வ‌ந்திருக்கிறேன்.(போச்சு போச்சு... நாத்த‌னார் ச‌ன்மான‌ங்க‌ளெல்லாம்) அடிக்க‌டி த‌ங்க‌ள் வ‌லைப்பூ முக‌ப்புப்ப‌ட‌ம் வ‌ரை ம‌ட்டுமே திற‌ந்து த‌விக்க‌ விட்ட‌து. ச‌மைய‌ல் தெரியாது என்ற‌ ஆதியின் நிலையும், காத‌லை அதுவ‌ரை அறியாத‌ த‌ங்க‌ள் நிலையையும் மொத்த‌மாக‌ திருப்பிப் போட்ட‌ அந்த‌ 73 நாட்க‌ள் வாழ்வின் பொன்னான‌ நாட்க‌ள் தானே!! ந‌ல்ல‌ வேளை... குட்டிப் பெண் பெய‌ர் சூட்டும் வைப‌வ‌ப் ப‌திவுக்கு முன்னாவ‌து வ‌ந்து சேர்ந்தேனே... வாங்க‌ப்பா, செவிக்காவ‌து விருந்திட‌லாம்... மீனாட்சி சுந்த‌ரேஸ்வ‌ர‌ர் திரும‌ண‌த்திலிட்ட அபூர்வ‌ வ‌கைய‌றாக்க‌ளோடு!

    பதிலளிநீக்கு
  26. மணநாள் வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  27. //”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்//
    ha ha!good joke!

    பதிலளிநீக்கு
  28. @@ ரத்னவேல்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    @@ நிலாமகள்: தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ. கல்யாண பாடலை ரசித்தீர்களா…. மிக்க நன்றி.

    @@ கலாநேசன்: வாழ்த்தியமைக்கு நன்றி சரவணன்.

    @@ கே.பி.ஜனா: தங்கள் வருகைக்கும் பகிர்வினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  29. திருமண நாள் நல்வாழ்த்துகள்..
    அதைக்கூட நகைச்சுவை மிளிர சொன்ன விதம் மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  30. திருமண நாள் வாழ்த்துக்கள் தல.. (லேட்டா வந்ததுக்கு ஸாரி... )
    சகோதரிக்கும் என் வாழ்த்துக்கள். ;-))

    இப்ப நல்லா சமைக்கிரீங்களா? ;-) .... சமைக்கிறாங்கலான்னு கேக்கணுமோ? ;-)))

    பதிலளிநீக்கு
  31. இதயங்கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களின் இல்லத்தரசிக்கும்!!

    பதிலளிநீக்கு
  32. வெ .நா! என் பின்னூட்டத்தை காணலையே.. பரவாயில்லை. சேர்ந்து வாழும் ஒவ்வொரு நாளும் மணநாள் தானே..என் அன்பும் பிரார்த்தனைகளும்..

    பதிலளிநீக்கு
  33. @@ ரிஷபன்: மிக்க நன்றி சார். உங்கள் வாழ்த்துகள் என்னை மகிழ்வித்தது.

    @@ ஆர்.வி.எஸ்.: வாழ்த்தியமைக்கு நன்றி மைனரே. ”நல்லா சமைக்கிறோம்னு” வேணா சொல்லிடவா! :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @@ மனோ சாமிநாதன்: உங்கள் போன்றோரின் வாழ்த்துகள் எங்களை மேன்மேலும் வளர்க்கும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி மனோ மேடம்...

    @@ மோகன்ஜி: நானே நினைத்துக் கொண்டு இருந்தேன் ஜி! எங்கே உங்களைக் காணோமே என்று... இப்போது தான் தெரிகிறது இந்த பிளாக்கர் பூதம் நீங்கள் வந்து சொன்ன கருத்தை கபளீகரம் பண்ணி விட்டது என்று.

    இருந்தாலும் மீண்டும் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. @@ குணசேகரன்: மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  35. இனிய திருமண நாள் வாழ்த்துகள் வெங்கட் அண்ணா! தொடர் எழுதலா.....ம், ஆனா வில்லங்கமான தலைப்பானா இருக்கு!...:))

    பதிலளிநீக்கு
  36. @@ தக்குடு: வாழ்த்தியமைக்கு நன்றி தக்குடு....

    பதிலளிநீக்கு
  37. பார்க்க தாமத மாகிவிட்டது மன்னிக்க வெங்கட்ஜி ....

    இனிய மண நாள் வாழ்த்துக்கள் ... மாலை சூடிய மணநாளின் நினைவை நகைச்சுவை ததும்ப பகிர்ந்தீர்கள்..

    பதிலளிநீக்கு
  38. //”எந்த பெண்ணை முதன் முதலில் பார்க்கச் செல்கிறேனோ அந்த பெண்ணையே மணப்பேன்” //

    முதல்ல பாத்த பொண்ணே நல்ல பொண்ணா அமைஞ்சதால தப்பிச்சீங்க!! :-))))))

    ஆதி கொடுத்து வைத்தவர்; பின்னே, நல்லா சமைக்கத் தெரிஞ்சவர் கிடைக்கிறதுன்னா சும்மாவா!!

    பதிலளிநீக்கு
  39. @ பத்மநாபன்: தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி பத்துஜி... வாழ்த்து கூறுவதே முக்கியம்... தாமதம் ஆனது பற்றி வருத்தமில்லை...

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  40. @ ஹுசைனம்மா: மிக்க நன்றி சகோ.. வருகைக்கும் சுவையான உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.... சமைப்பதும் ஒரு வித பொழுது போக்கு எனக்கு....

    பதிலளிநீக்கு
  41. வல்லியோட பதிவிலே நீங்க கொடுத்திருக்கும் சுட்டியிலே இருந்து வந்தேன். கல்யாண நினைவுகளே சுவாரசியமானவை. ஓரளவுக்கு நானும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தொடர் பதிவாக இல்லை. தொடர்கதையாக. :)))) நேரம் இருக்கையில் பாருங்கள். கல்யாணமாம் கல்யாணம் என்ற தலைப்பில்இங்கேஆரம்பித்து சில பதிவுகள். நேரமும், பொறுமையும் இருந்தால் படித்துப் பாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  42. அப்போ இன்னுமொருமாதத்தில் திருமணநாள் வாழ்த்துகள் சொல்லணும். மிக சுவாரஸ்யம்.
    ரொம்ப சுவாரஸ்யமாய்க் காதலோடு எழுதி இருக்கிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  43. @ கீதா சாம்பசிவம்: அட கல்யாணம் பற்றி ஒரு தொடரே எழுதி இருக்கீங்களா? நிச்சயம் படித்து விடுகிறேன்...

    தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. @ வல்லிசிம்ஹன்: ஒரு மாதத்தில் அல்ல... :) மே மாதம் 24 தான் என் கல்யாண நாள்.... மார்ச் மாதம் [10-ஆம் தேதி] நிச்சயம் தான் ஆனது]....

    தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்துப் படித்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....