ஞாயிறு, 30 ஜூன், 2013

மனதை கொள்ளை கொண்ட நீர்வீழ்ச்சி

சமீபத்தில் ஜம்மு சென்று வந்தது பற்றி பிட்டூ – ஒரு பேட்டி பதிவின்மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அட தெரியாதா? அப்படின்னா அந்த லிங்கில் போய் படிச்சுட்டு வாங்களேன்!

இந்த ஞாயிறன்று கட்ரா அருகில் 15 கிலோமீட்டர் தொலைவில் மலைகளினூடே அமைந்திருக்கும் ஒரு நீர்வீழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தான் ஸ்பெஷல்! படங்களை ரசியுங்கள்....

எந்த இடம், எப்படிச் செல்ல வேண்டும் என்ற தகவல்கள், குருக்ஷேத்திர பயணத்தொடரிற்குப் பிறகு பயணக் கட்டுரையாக வெளி வரும்!











என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி

வெள்ளி, 28 ஜூன், 2013

ஃப்ரூட் சாலட் – 51 – மறைந்த மனிதம் – நடனம் - ராணுவம்


இந்த வார செய்தி:



இந்த வாரமும் உத்திராகண்ட் வெள்ளம் பற்றிய செய்தி தான். நேற்று தில்லி நண்பர் ஒருவர் கேதார்நாத் பகுதியிலிருந்து தில்லி திரும்பினார். பல்வேறு இடையூறுகளைத் தாண்டி அவரது கிராமத்திலிருந்து தில்லி வந்த அவர் அப்பகுதிகளில் நடந்த கதைகளைப் பற்றிச் சொல்லும் போது மனதில் அப்படி ஒரு அதிர்ச்சி. நீங்களும் கேளுங்களேன்....





வெள்ளத்தினாலும், மேகம் உடைந்ததாலும் ஏற்பட்ட சேதங்களும், அது பறித்த உயிர்களும் ஒரு புறம் இருக்க, அவர் அங்கே பார்த்து வந்து சொன்ன விஷயங்கள் – அப்பப்பா, கேட்கவே பயங்கரம்.  மலைப்பிரதேசங்களில் கிடந்த பல சவங்களில் கை விரல்களையும், சில உடல்களில் கைகளும் காணவில்லை – காரணம் அதில் உள்ள தங்க மோதிரம் மற்றும் வளையல்கள். கொஞ்சம் ஊறிப்போய் உப்பிவிட்ட சடலங்களிலிருந்து தங்க ஆபரணங்களை உருவ முடியாது போக, சில வெறிபிடித்த திருடர்கள் மொத்தமாக உருப்புகளை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டார்களாம். என்ன ஒரு கொடுமை!



குடும்பம் மொத்தமும் வெள்ளத்தில் மறைந்து போக, அவர்களுடைய உடைமைகளைத் திருடுவதில் பலர் மும்மரமாக இருந்திருக்கிறார்கள் – தொலைக்காட்சிகளில் தண்ணீர்ல் அடித்துச் செல்லப்பட்ட ATM-லிருந்து பணம் எடுத்துக் கொண்ட சாமியார்களைக் காண்பித்தார்கள். பல கடைகளில் திருட்டுப் போனதும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் நாடு கடந்து போனதும் அங்கிருந்து வந்த நண்பர் சொன்னபோது, அவரிடம் நான் கேட்டது – அப்படி திருடுபவர்களை யாரும் ஒன்றும் செய்யவில்லையா? என்று தான்.



உயிரோடு இருப்பவர்களைக் காப்பாற்றவே ஆட்கள் தேவையாக இருந்தபோது இவற்றை கவனிக்க இயலவில்லை என்பது தான் அவரது பதில்.



எல்லாருக்கும் பணத்தின் மேலும், விலை உயர்ந்த பொருட்கள் மேலும் மோகம் இருக்கும். அது எப்போதும் விலகப் போவதுமில்லை.  அப்படியே மோகம் இருந்தாலும் இப்படியா, கொடுமையானவர்களாக இருப்பார்கள்.



என்னத்த சொல்ல! ச்சே..... 



இந்த வார முகப்புத்தக இற்றை:



IT IS HARD WHEN SOMEONE SPECIAL IGNORES YOU. BUT IT’S HARDER PRETENDING THAT YOU JUST DON’T CARE.



இந்த வார குறுஞ்செய்தி



PAST OF ICE IS WATER. FUTURE OF ICE IS WATER TOO. LET’S LIVE LIFE LIKE ICE. NO REGRET FOR PAST AND NO WORRIES FOR FUTURE…..  ENJOY EVERY DAY!



ரசித்த காணொளி: 



இந்த வயசிலேயே இப்படி ஆடுதே இந்தக் குழந்தை...  “மேகம் கருக்குது மழை வரப் பார்க்குதுபாடலின் காணொளி கிடைக்கிறதா என யூவில் தேடும்போது கிடைத்த காணொளி இது! 







சேவையைப் பாராட்டுவோம்!:



உத்திராகண்ட் மாநிலத்தில் நமது ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுவோம்..... கீழே உள்ள படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை......








ராஜா காது கழுதை காது:



நேற்று பேருந்தில் ஒரு குடிமகன் – ஏம்பா இப்படி தண்ணி அடிச்சு வீணாப் போற?என்று கேள்வி கேட்ட மிஸ்டர் பொதுஜனத்திடம் – “வேலை செய்யறேன் குடிக்கறேன்...  உனக்கென்ன ஆச்சு! அதுவுமில்லாம, எனக்கு கிடைக்கற சம்பளம் இப்படி தண்ணி அடிச்சா கூட தீரமாட்டேங்குது!”.....



அப்படி காசு வேண்டாம்னா, தேவைப்பட்டவங்களுக்குக் குடுக்கலாமே! :)



படித்ததில் பிடித்தது!:



பஸ்ல இடம் பிடிக்க எதை போடுறதுன்னே விவஸ்தை இல்லாம போச்சு!



ஏன் என்னாச்சு!



யாரோ இடத்தை ரிசர்வ் செய்ய தன்னோட பல்செட்டை போட்டுட்டு போயிருக்காரு!



என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 26 ஜூன், 2013

பீஷ்ம குண்ட் – ரத்த பூமி பகுதி 4

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....


சென்ற பகுதியான சர்வேஷ்வர் மகாதேவ் பதிவில் இட்லி-சாம்பார் மணத்துடன் முடித்திருந்தேன். இந்த பகுதியில் குருக்ஷேத்திராவில் உள்ள நரக்தாரி எனும் சிறிய கிராமத்தில் அமைந்த பீஷ்ம குண்ட் [அ] பாண்கங்கா எனும் இடத்தினைப் பற்றிப் பார்க்கலாம்.

 
 பீஷ்ம குண்ட் – ஒரு தோற்றம்

மஹாபாரதப் போர் நடந்தபோது பீஷ்மர் கௌரவர்களின் பக்கம் இருந்தது அனைவரும் அறிந்ததே. பீஷ்மர் அவர்கள் பக்கம் இருக்கும் வரை பாண்டவர்களுக்கு வெற்றி கிடைப்பது கடினம் என்பதும், பீஷ்மர் எப்போது நினைக்கிறாரோ அப்போது தான் அவர் மரணிப்பார் என்ற வரம் பெற்றவர் என்பதாலும் பாண்டவர்களுக்கு போரில் முதல் ஒன்பது நாட்கள் வரை கடினமான சேதம்.

முதல் ஒன்பது நாட்கள் வரை வில்லாளி அர்ஜுனனுக்கு, கிருஷ்ணனே தேரோட்டியாக இருக்க, பத்தாவது நாள் அவருக்கு தேரோட்டியாக வந்தது ஷிகண்டி. பெண்களுக்கு எதிராக போர் புரிய மாட்டேன் என்ற கொள்கை உடைய பீஷ்மர் தனக்கு எதிரே பெண்ணாக மாறிய ஷிகண்டி அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வந்து நிற்க, அவர் சற்றே தடுமாறி அம்புகள் எய்வதை நிறுத்த அர்ஜுனன் பீஷ்மர் மேல் அம்புகள் தொடுத்து அவரை கீழே விழ வைத்தார்.


அம்புகளுடன் பீஷ்மர்
 

ஆனாலும் உயிர் பிரிவது எப்போது என அவரே முடிவு செய்ய வேண்டியபடியால் அம்புகளுடன் கீழே விழுந்து கிடந்த இடம் தான் இன்றைய நரக்தாரி கிராமம். வீழ்ந்து விட்ட பீஷ்மரைப் பார்க்க பாண்டவர்களும், கௌரவர்களும் அங்கே வந்த போது, தனக்கு தண்ணீர் தாகமாக இருக்கிறது எனச் சொல்லவே, கங்கையை நினைத்து பூமியில் தனது பாணத்தினைச் செலுத்தி அங்கேயே கங்கையை தோன்றச் செய்தான் அர்ஜுனன். பாணத்தினால் தோன்றிய கங்கா – பாண் கங்கா. அதிலிருந்து வந்த தண்ணீரைப் பருகி தாகம் அடங்கியது பீஷ்மருக்கு.



பீஷ்ம குண்ட் கோவில்



எங்கேயாவது தாவிடுவாரோ என 
 கூண்டில் அடைத்து விட்டார்கள் போலும்!

இந்த இடத்தில் அம்புகள் தைத்த உடலோடு பீஷ்மர் படுத்திருக்க, அருகிலேயே பாண்டவர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்கும்படி ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் வாசலிலேயே அனுமனுக்கு 26 அடியில் ஒரு பெரிய சிலையும் கட்டியிருக்கிறார்கள். பாணத்தினால் உருவான குளத்தினைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் படிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள். கோவிலும் மற்ற கட்டுமானங்களும் அமைக்கப்பட்டது இந்த நூற்றாண்டிலாகத் தான் இருக்க வேண்டும்.


  வயல்வெளி


ஆங்கான்வாடி பள்ளியில் இருந்த ஒரு குழந்தை

கோவில் இருக்கும் கிராமத்தில் பெரியதாக விளம்பரங்களோ சுற்றுலா பயணிகளுக்கான ஏற்பாடுகளோ கிடையாது. சிறிய சிறிய கடைகள், கோவில் மற்றும் ஆங்கான்வாடி பள்ளி, வயல்வெளிகள் என ரம்மியமான கிராமம். வரும் பாதையும் அப்படி ஒன்றும் நன்றாக இராது. கிராமத்திற்குள் வரும் வழியில் ஒரு மிகச்சிறிய தகவல் பலகை. குருக்ஷேத்திரத்திற்கு வரும் மக்கள் எல்லோரும் இங்கு வரும் வகையில் ஹரியானா சுற்றுலாத்துறை வசதிகளும், விளம்பரங்களும் செய்தால் இந்த இடத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். பொதுவாக கிரகண சமயங்களில் மட்டும் பெருந்திரளாக மக்கள் வருகிறார்கள் என கோவிலின் பிரதான பூஜாரி சொன்னார்.

கோவிலின் ஒரு பகுதியாக “[G]கோ சாலையும் இருக்கிறது. நிறைய பசுக்களும் கன்றுகளோடு அங்கே இருக்க, பசுஞ்சாணத்தின் வாசம் இடம் முழுவதும் பரவி இருக்கிறது. அவற்றின் பரமாரிப்பு, மற்றும் கோவில் பராமரிப்பு ஆகியவற்றிற்கு அங்கு வரும் மக்களும், வெளிநாட்டிலுருந்தும் பணம் கொடுப்பதாக எழுதி வைத்திருந்தார்கள்.

சாதாரணமாக நிலத்தடி நீரின் மட்டம் எல்லா இடங்களிலும் குறைந்து இருக்க, பீஷ்ம குண்ட் குளத்திலும் நீர் இல்லாது போய்விட்டது. சமீபத்தில் ஒரு பெரிய ஆழ்துளை குழாய் அமைத்து மோட்டார் மூலம் குளத்தினை நிரப்புகிறார்கள். மாதத்திற்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றி குளத்தினை சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்புகிறார்கள்.



நாணயம் தேடும் சிறுவர்கள்
 

நாங்கள் சென்றபோது அந்த குளத்தினைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். குளத்தினுள் பல நாணயங்கள் பாசியோடு பாசியாக சிதறிக் கிடக்கின்றன போலும். சிறுவர்கள் கால்களால் தேய்த்துக் கொண்டே நடக்க, என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால், நாணயங்களை காலாலே தேடித்தேடி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த சிறுவர்கள்!


அழகான ஆமைக்குட்டி!


உணவு உண்ணும் அணில்!
   
அப்படி கால்களால் தேடிக்கொண்டிருக்கும்போது அகப்பட்டது ஒரு உயிரினம்! அட சிறுவன் கையில் ஒரு சிறிய ஆமை. ஒரு கையளவு தான் இருக்கும் குட்டி ஆமை. அதைக்கையில் பிடித்துக் கொண்டு வந்தார்கள் சிறுவர்கள். கோவிலின் வெளியே மாடுகள் தண்ணீர் குடிக்க வைத்திருந்த ஒரு பெரிய தொட்டியில் அதைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கையில் பிடித்துக் கொண்டிருந்த ஆமைக்குட்டி மேலே!   அங்கே எடுத்த அணில் படம் பகுதி 1 இல் வெளியிட்டு இருந்தேன். மீண்டும் இங்கேயும்!


 
 ஆங்கான்வாடி பள்ளியில் இருந்த ஒரு குழந்தை

பக்கத்திலேயே ஆங்கான்வாடி பள்ளி. அங்கே சில குழந்தைகள் விளையாடிக்கொண்டு பாடம் படித்தபடி இருந்தனர். அவர்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பீஷ்மகுண்ட் எனும் இந்த புராதனமான இடத்திலிருந்து ரத்தபூமியான குருக்ஷேத்திரத்தில் ரத்தம் சிந்திய அத்தனை பேரின் நினைவுகளோடே அடுத்த இடத்திற்குக் கிளம்பினோம். அடுத்த இடம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்லட்டா!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.