சனி, 30 நவம்பர், 2013

சிகரெட்டா சாப்பாடா?


சாலைக்காட்சிகள் – பகுதி 7
 
தலைநோக்குப் பார்வை – சாலைக்காட்சிகள் பகுதி 6 - இங்கே
Bloody Indian - சாலைக் காட்சிகள்பகுதி 5 - இங்கே
வெங்கலக் கடைக்குள் யானை- சாலைக் காட்சிகள்பகுதி 4 - இங்கே
அலட்சியம்சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே


தில்லி என்றதும் நினைவுக்கு வருவது கன்னாட் ப்ளேஸ் அல்லது கன்னாட் சர்கிள் [Inner and Outer Circle] என அழைக்கப்படும் இடம். அரசியல் காரணமாக இந்த இடங்களில் Inner Circle ராஜீவ் சௌக்எனவும் Outer Circle  இந்திரா சௌக்எனவும் பெயர் மாற்றப்பட்டாலும் பலரது பேச்சில் இந்த இடம் பற்றி சொல்லும்போது கன்னாட் ப்ளேஸ் எனும் பெயர் தான் வரும்!

1929 ஆம் வருடம் ஆரம்பித்து 1933-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த இடம் தில்லியில் மிகவும் பிரபலம். உலகில் இருக்கும் அதிக விலைமதிக்கக் கூடிய இடங்களில் ஐந்தாவது இடத்தினைப் பெற்ற இடம். மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் இங்கெ நிறைய மக்களை கூட்டமாக காண முடியும். இந்தியர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான வெளிநாட்டவர்களும் இங்கே வந்து போவதால், பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடியும் இடம்!

பாராளுமன்ற சாலை வழியே வந்து சிவாஜி ஸ்டேடியம் பகுதிக்கு வருவதற்கு சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு 09.30 மணிக்கு மேல் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த மூலையில் ஒரு உணவு விடுதி உண்டு. பெயர் “[P]பிண்ட் [B]பலூச்சி!பஞ்சாபி மொழியில் பிண்ட் என்றால் கிராமம். உணவு மட்டுமல்லாது மதுபானமும் அங்கே கிடைக்கும்....  சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை இங்கே சென்றிருக்கிறேன்.



வாசலிலே ஒரு காவல்காரர்! பஞ்சாபி உடையணிந்து, கையில் ஒரு பெரிய குச்சியும் முகம் கொள்ளா மீசையும் உடைய இவரைப் பார்த்தாலே உள்ளே போகவா வேண்டாமா என ஒரு பயம் தோன்றும்!

அவரைத் தாண்டி நடக்கும்போது உங்கள் மீது மற்றவர்களோ, அல்லது நீங்கள் மற்றவர்கள் மீதோ இடித்துக் கொள்ளாமல் போக பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். இருக்கும் அந்த நடைபாதையில் பலவித நடைபாதைக் கடைகள் வேறு.  அவர்கள் குரல் கொடுத்து விற்கும் பொருட்கள் பலவகையனவை – வெறும் குரல் மட்டும் வரும் – “சோ கா [CH]சார்![நூறு ரூபாய்க்கு நாலு!] என்ன விற்கிறார் என்பதை நாம் தான் கவனிக்க வேண்டும்!

விதவிதமான உடைகளில் மங்கைகளைக் காண முடியும். கூடவே அவர்களை அழைத்து வரும் ஆண் சிங்கங்களையும் தான்.... பல பெண்கள் அவர்களது தோழிகளோடு வருவதும் உண்டு.  அப்படியே ஆண்களும். வழியில் விற்கும் பொருட்களை வாங்குவதும் நடைபாதை வியாபாரிகளுடன் பேரம் பேசுவதும், ஐந்து ரூபாய்க்கு விற்கும் “Softy” ஐஸ்க்ரீமை ஒன்று வாங்கி ஜோடியாக இரண்டு பேர் சாப்பிடுவதையும் காணலாம்!

சென்ற வாரம் வந்து கொண்டிருந்த அந்த இரவிலும் இந்தக் காட்சிகளை ரசித்தபடியே வந்து கொண்டிருந்தேன். என்னை இடித்துக் கொண்டே முன்னேற யாரோ முயற்சி செய்ய, திரும்பினேன். அவர்களது பேச்சு ஸ்வாரசியத்தில் இடிக்கிறோம் என்பது கூட தெரியாது அல்லது கண்டுகொள்ளாது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேசியது!

முதலாமவர்: “ரொம்ப பசிக்குது. முதல்ல சாப்பிடணும்.” 

இரண்டாமவர்: சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு தம் அடிக்கணும்! அப்புறம் தான் சாப்பாடு!” 

முதலாமவர்: சரி வா, முதல்ல சிகரெட், அப்புறம் சாப்பாடு!

கையைப் பிடித்து அழைத்துச் சென்ற பக்கத்தில் இருந்த கடையில் ஒரு கிங்ஸ் வாங்கி பற்ற வைத்து “சார்மினார்சிகரெட்டுக்கு வரும் விளம்பரத்தில் சொல்வது போல “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரைஎன்பதாக ஒரு நீண்ட இழுப்பு! பிறகு ஒரு மந்தகாச புன்னகை....  ஆஹா ஆனந்தம்!அதற்குள் முதலாமவர் கை நீட்ட அவரும் ஒரு முறை ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்றார்!

அட சொல்ல மறந்துட்டேனே! அந்த இரண்டு பேரும் பெண்கள் – மிஞ்சிப் போனால் 18 வயது இருக்கலாம்! தில்லியில் பல ஆண்களும், வயதான கிராமத்துப் பெண்கள் பலர் பீடி புகைக்கும் போது, இவர்கள் சிகரெட் குடிக்கக்கூடாதா என்ன! இன்னும் இரண்டு இழு இழுத்தப்படியே அவர்கள் அருகில் உள்ள உணவகத்துக்குள் செல்ல, நான் அவர்களைத் தாண்டி சிந்தனையொடு நகர்ந்தேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வெள்ளி, 29 நவம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 69 – அடி மாடுகள் – Sei Bhalo Sei Bhalo - கூகிள் விளம்பரம்



இந்த வார செய்தி:

நாகர்கோவில்/திருநெல்வெலியிலிருந்து கேரளம் செல்லும்போது கவனித்தது உண்டா? பல வாகனங்களில் மாடுகள் ஏற்றப்பட்டு கேரளத்திற்குக் கொண்டு செல்லப் படுவதை கவனித்து இருக்க முடியும். எனது சமீபத்திய கேரளப் பயணத்தின் போது கூட இப்படி வண்டிகளில் கொண்டு செல்லப்படுவதை பார்த்தேன். தவிரவும், கேரளத்தின் எல்லை அருகே இருக்கும் தமிழக கிராமங்களில் நிறைய மாடுகளைக் கட்டி வைத்திருப்பதை கவனித்தேன்.

அனைத்தும் அடிமாடுகளாக விற்கப்பட காத்திருப்பவை. கேரளத்தில் மாட்டு இறைச்சிக்காக தமிழகத்திலிருந்து மாடுகள் கொண்டு செல்லப்படுவதைப் பார்க்கும் போது மனதுக்குள் தோன்றும் – “அவற்றிடமிருந்து கறக்கும் வரை கறந்து விட்டு இப்போது இப்படி இறைச்சிக்காக விற்க எப்படி மனசு வருகிறது?

இந்த எண்ணம் எப்போதும் இருக்க, நேற்றைய தி இந்துவலைபக்கத்தில் இருந்த இந்த செய்தி மனதைத் தொட்டது. அதை இங்கே உங்களுடன் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி “தி இந்து”.


வசதியான வீட்டில் பிறந்தவர்கள் செல்லப்பிராணிகளாக நாய், பூனைகளை வளர்ப்பது வாடிக்கை. வயதான, பால் சுரப்பு நின்றுபோன அடிமாடுகளை, வீடு நிறைய வளர்த்தால் வித்தியாசம் தானே? ஜீவகாருண்யத்தோடு இப்பணியில் ஈடுபட்டுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த சசிகலா, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்.

நாகரீக மாற்றத்தால், சொந்த பந்தங்களையே உதறித் தள்ளி விட்டுப் போகும் இன்றைய உலகில், அடிமாடுகளின் நலனுக்காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமல், அவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா.

பொதுவாகவே கால்நடை வளர்ப்போம்... காசை குவிப்போம்என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். சசிகலா வீட்டில் 50க்கும் மேற்பட்ட அடிமாடுகள் நிற்கின்றன. அவற்றை பராமரிக்க மாதம் ரூ. 35,000 வரை நஷ்டப்படுகிறார் சசிகலா. இதுபற்றி, சசிகலா சொல்வதைக் கேட்போம்.

57 மாடுகள்:

எங்கள் தாத்தா காலத்துல வீடு நிறைய கால்நடை நிற்கும். அக்காலத்தில் எங்க வீட்டுல நிற்கும் மாடுகள்தான், கால்நடைப் போட்டியில் பரிசு வாங்கும். என் அப்பாவும் நிறைய மாடுகள் வச்சுருந்தாங்க. அப்பா காலமானதும், டீச்சர் வேலை பார்த்த அம்மாவால மாடுகளை பராமரிக்க முடியல. வள்ளியூர்ல ஒருத்தருக்கு மாடுகளை கொடுத்துட்டாங்க. வீட்டுல மிஞ்சுனது என்னவோ 3 மாடுங்க தான். அதோட வாரிசுகள், தெருவோரமா வயசாகி சுத்துற மாடுங்க எல்லாம் சேர்த்து, 57 மாடுகளை வளர்க்கிறேன்.

கறிக்கடையில் மீட்பு பணி:

பொதுவாக மாடு வளர்க்குறவங்க, பால் கொடுக்கும் வரைதான் பசு மாட்டை வளர்ப்பாங்க. உழைக்கும் வரைதான் காளை மாட்டை வளர்ப்பாங்க. அதன்பின், கறிக்கடைக்கு வித்துருவாங்க. அப்படிப்பட்ட அடிமாட்டைத்தான் நான் வளர்க்குறேன். சில சமயம் கறிக்கடையில் நிற்கும் மாட்டைக் கூட பேரம் பேசி வாங்கிட்டு வந்திருக்கிறேன்.

கரிசனம் ஏன்?

ஒரு தடவை, நாகர்கோவிலில் பஸ்ல போயிட்டு இருந்தேன். அப்போ நான் பார்த்த காட்சியை, இப்போ நினைச்சாலும் பயம் தொத்திக்குது. கறிக்காக, ஒரு காளை மாட்டை நடு முதுகுல அடிச்சுக் கொன்னாங்க. அதற்கு பிறகுதான், பராமரிக்க முடியாம விற்கப்படும் அடிமாடுகளை விலைக்கு வாங்கி பராமரிப்பதுன்னு, முடிவு செய்தேன்.

ஒரு காலத்தில், வயசான மாடுகளை ஊரிலேயே ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பராமரிப்பாங்க. ஆனால், இன்னிக்கு வயசான மாடுகளை கறிக் கடைக்குதான் அனுப்பி வைக்குறாங்க. அவற்றை விலை கொடுத்து வாங்கி, பராமரிப்பதை வேள்வியாக செய்கிறேன் என்று, தாயுள்ளத்தோடு சொன்னார் சசிகலா.


நல்ல மனம் கொண்ட இந்தப் பெண்மணியை வாழ்த்துவோம்....

இந்த வார முகப்புத்தக இற்றை:


சஞ்சய் தத் சிறையிலிருந்து பரோலில் வந்ததைப் பற்றி படித்த ஒரு தாய், தனது மகனிடம்: “நீ அப்படி எங்க தான் வேலை செய்யற, சிறையில் இருக்கறவங்களுக்கு கூட 14 நாள் லீவ் கிடைக்குது உனக்கு லீவே கிடைக்காதா?

இந்த வார குறுஞ்செய்தி

ஒரு தோட்டத்தினை பராமரிக்கும் தோட்டக்காரர் மரங்களுக்கு தினம் தினம் தண்ணீர் பாய்ச்சினாலும், அதற்கான காலங்களில் மட்டுமே பழம் தரும். போலவே நல்லது அதற்கான நேரத்தில் நிச்சயம் நடக்கும்.  நம்பிக்கை கொள்!

இந்த வார புகைப்படம்: 



இந்த புகைப்படம் சமீபத்தில் நான் எடுத்தது. பார்த்தால் ஏதோ கோலம் போல தெரிகிறதல்லவா? இதில் ஒரு சிறப்பு இருக்கிறது – இது வரையப்பட்டது சமதளத்திலோ, தரையிலோ அல்ல! இது வரையப்பட்டிருப்பது ஒரு கட்டிடத்தின் கூரையில்! எத்தனை நுணுக்கமாக வரையப்பட்டிருக்கிறது. அப்பப்பா....  அந்த கலைஞர்களுக்கு ஒரு பூங்கொத்து!

படம் எடுக்கப்பட்டது எந்த இடம், என்ன கட்டிடம் என்பது வரும் நாட்களில் “தலைநகரிலிருந்துபகிர்வாக வரும்!
  

ரசித்த பாடல்:

இந்த வாரம் ரசித்த பாடலில் ஒரு வங்காள மொழி பாடல் – Sei Bhalo Sei Bhaloபாடியவர் ஜயதி சக்ரபோர்த்தி. மொழி புரியவில்லையெனிலும் கேளுங்கள்....  மனதிற்கு ரம்யமான இசையும் குரலும்....  நான் ரசித்த Sei Bhalo Sei Bhalo பாடல் இதோ உங்கள் ரசனைக்கு!




ரசித்த விளம்பரம்:

கூகிள் நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஒரு தேடியந்திரம். நாம் பதிவுகள் எழுதப் பயன்படுத்தும் பிளாக்கர் கூட கூகிள் தந்த வரம் தானே.  இந்த மாதம் 13-ஆம் தேதி கூகிள் ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது பார்த்தீர்களா? பார்க்கவில்லையெனில் உடனே பாருங்கள். கூகிள் வெளியிட்ட விளம்பரம் இதோ உங்கள் பார்வைக்கு!




படித்ததில் பிடித்தது!:

அ முதல் ஔ வரை!
அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
அவ்வ்வ்வ்!
-          தமிழன் என்ற இந்தியன்

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 28 நவம்பர், 2013

எங்கெங்கும் அம்மா.....



தலை நகரிலிருந்து பகுதி – 22

தில்லியில் வருடா வருடம் நடக்கும் கோலாகலமான திருவிழா ஒன்று India International Trade Fair.  எல்லா வருடமும் ஜவஹர் லால் நேரு அவர்களின் பிறந்த நாளான 14 நவம்பர் அன்று துவங்கி, 27 நவம்பர் அன்று முடியும்.  இந்த வருடமும் நடந்தது.  ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் கூட்டம் அலை மோதுமிங்கே.  தில்லி வாசிகளுக்கு இதை விட பொழுதுபோக்கு ஒன்றுமில்லையே. அதுவுமில்லாது நமது நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்திருக்கும் கடைகளில் பல பொருட்களை வாங்க முடியுமே!

தில்லி வாழ்வின் 23 வருடங்களில் பல வருடங்கள் இந்த Trade Fair காண சென்றிருக்கிறேன். ஒவ்வொரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது மாநிலத்தின் சிறப்புகளையும், அங்கே கிடைக்கும் பிரதான பொருட்களையும், சுற்றுலாவாக வர இருக்கும் வாய்ப்புகளையும், தங்களது மாநிலத்தில் வியாபாரத்திற்கு இருக்கும் வாய்ப்புகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் விதமாக தங்களது பகுதிகளை அலங்கரிப்பார்கள். 



ஒவ்வொரு பெரிய மாநிலங்களுக்கும் இங்கே நிரந்தர கட்டிடங்கள் உண்டு – ஒவ்வொரு வருடமும் அவர்களது கட்டிடத்தின் முகப்பிலும் உள்ளேயும் தங்களது மாநிலத்தினைக் கண் முன்னே கொண்டு வரும்படி அழகிய வேலைப்பாடுகளை வருடம் முழுதும் செய்து வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட/அலங்கரிக்கப்பட்ட மாநிலத்திற்கு சிறப்பு பரிசுகளும் அறிவிப்பார்கள். 

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் அழகிய சிற்பங்களை வடிவமைத்து வைப்பார்கள்.  கேரள மாநிலத்தின் பகுதியிலும் அந்த வருட Trade Fair தரும் Theme பொறுத்து அற்புதமாக வடிவமைப்பார்கள்.  இந்த வருடம் அஸ்ஸாம் மாநிலத்தில் வடிவமைத்திருந்த ஒரு சிற்பம் கீழே.



அது போலவே ஒரிஸ்ஸா மாநிலம் கடல் பகுதியைத் தொட்டு இருப்பதால், இங்கே Sand Art மிக பிரபலம்.  Shridhar Dash எனும் ஒரு கலைஞர் மிக அழகாய் பூரி ஜகந்நாத் கோவிலை மணலிலே மிக அழகாய் சிற்பமாக வடித்து வைத்திருந்தார்.  எத்தனை பொறுமை வேண்டும் – கொஞ்சம் தவறினாலும் மீண்டும் முழுவதுமாய் செய்ய வேண்டியிருக்குமே.....  அப்படி செய்திருந்த Sand Art உங்கள் பார்வைக்கு.....



மூங்கில் கொண்டு எத்தனை எத்தனை பொருட்களை தயார் செய்து விடுகிறார்கள். பூ ஜாடிகள், முறங்கள், வீட்டினை அலங்கரிக்கும் கிளிக் கூடுகள், அலங்கார விளக்கு Stand போன்ற பொருட்கள், சுவரோவியங்கள் என பலவிதமான பொருட்களை இங்கே பார்க்கவும், வாங்கவும் முடியும்.





ஒவ்வொரு மாநிலமும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது மாநிலத்தின் பெருமைகளை நிலைநாட்ட நமது மாநிலமும், மேற்கு வங்காளம், ஆந்திரம் போன்ற சில மாநிலங்கள் அந்தந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. நமது ஊரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – எங்கெங்கு காணினும் அம்மா தான். இப்போது அம்மா, ஐயா இருக்கும் போது ஐயா! வேறொன்றும் பெரிதாக செய்து விடுவதில்லை.  ஊரிலிருந்து இங்கே கடை போடும் மக்களும் வெகு சிலரே.

என்ன தான் தில்லியில் இருந்தாலும் நம் ஊரிலிருந்து என்ன இங்கே செய்திருக்கிறார்கள் எனப் பார்க்க, ஒவ்வொரு வருடமும் முதலில் செல்வது இங்கே தான். ஒவ்வொரு முறை ஏமாற்றம் தான் மிஞ்சும்.  இந்த வருடமும்  முதலில் சென்றது தமிழகத்தின் அரங்கத்திற்கு தான். நுழைவிலேயே இரண்டு பெண்களின் சிலைகள் – அப்படி ஒன்றும் அழகாகவும் வடிக்கவில்லை.....  இரண்டு பெரிய கைகள் மேலே உலகத்தினை தாங்கி இருக்க, அந்த உலகத்தின் மேல் அம்மா!



கடைகளுக்காக ஒதுக்கி இருக்கும் இடங்களை தில்லி வியாபாரிகளுக்கே கொடுத்து விடுகிறார்கள்! இந்த முறை நமது தமிழகத்தின் பொருட்களை வாங்க நினைத்து வந்த ஒரு வட இந்திய பெண்மணி பேசிக் கொண்டிருந்தது! – மதராஸிலிருந்து வந்திருக்கும் பொருட்கள் கிடைக்கும் என நினைத்தால், இங்கே சாந்த்னி சௌக் கடைகளிலிருந்து பர்தாக்களை வைத்திருக்காங்களே!எனக் கிண்டலாக சொல்லி விட்டு, இங்கே இந்தப் பெண்மணியின் படங்கள் தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் சொல்லிவிட்டு போனார்கள்.....



மூன்று வருடங்களுக்கு முன்னால் [2010] தானியங்கள் கொண்டு பொங்கல் பானை செய்திருந்தார்கள். இந்த வருடம் அதே போலவே தானியங்கள் கொண்டு ரதம் செய்திருந்தார்கள். மற்றபடி எல்லா இடங்களிலும் முதல்வர் புகழ், இலவசமாகத் தரும் பொருட்கள் என்பதைப் பற்றிய பிரதாபங்கள் தான். எல்லா வருடம் போலவே ஏமாற்றம் மட்டுமே! இங்கே அம்மா என்றால் மேற்கு வங்காளத்தின் அரங்கில் அக்கா! ஆந்திர மாநிலத்தில் அண்ணவாரு!

இந்த வருடத்தின் முக்கியத்துவம் COIR.....  அதில் செய்த பல பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தார்கள். தேங்காய் நார் கொண்டு செய்யும் பொருட்கள் கேரளத்தில் மிக அதிகமாயிற்றே.  அங்கிருந்து கடைகள் போட பலர் வந்திருந்தார்கள். அங்கே ஒரு தூக்கணாங்குருவியின் கூடு கண்ணை ஈர்க்க, அதை புகைப்படம் எடுத்தேன் – எடுக்குமுன்னர் அங்கிருந்த சேச்சியிடம் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்ட பின்னர் தான்! 


கூடவே சில Door Mats வைத்திருந்தார்கள் விற்பனைக்கு – அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு!



இப்படி வீட்டு வாசல்ல இருந்தா, யாராவது வீட்டுக்கு மறுக்கா வருவாங்க! :(

மற்ற மாநிலங்களின் அரங்குகளில் எடுத்த புகைப்படங்களும், நாங்கள் சென்ற அன்று கேரள நாள்கொண்டாட்டத்தில் எடுத்த சில புகைப்படங்களும் ஏதாவது ஒரு ஞாயிறில் வெளியிடுகிறேன்.

என்ன நண்பர்களே தலைநகரிலிருந்து பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.