வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஃப்ரூட் சாலட் – 145 – குடிசையிலிருந்து மருத்துவர் – 12000 தேங்காய் – நாயுடு ஹால்

இந்த வார செய்தி:

சமீபத்தில் ஓய்வு பெற்ற டாக்டர் விஜயலக்ஷ்மி தேஷ்மானே எனும் மருத்துவரைப் பற்றிய செய்தியை சமீபத்தில் படித்தேன். மருத்துவம் வியாபாரமாகிவிட்ட இக்காலத்தில் இப்படியும் ஒரு மருத்துவர்.  சாதாரண குடும்பத்தில் பிறந்து மருத்துவ துறையில் சிறப்பான இடம் பிடித்த இவரைப் பற்றிய முழு செய்தியும் ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.


டாக்டர் விஜயலக்ஷ்மி அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து. 

இந்த வார முகப்புத்தக இற்றை:

சிக்கல்கள் என்பவை ஓடும் ரயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அது சிறிதாகி விடும்!


இந்த வார குறுஞ்செய்தி:



டெங்கி:

தொடர்ந்து டெங்கி ஜூரம் உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான மருந்தினை Serum Institute of India கண்டுபிடித்துவிட்டதாக சில செய்திகள் படித்தேன். ஒரே தடுப்பு ஊசி  மூலம் டெங்கி வராமல் தடுக்க முடியும் என்றும், தற்போது கடைசி கட்ட சோதனைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அடுத்த வருடத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.  அது வரை கொசுக்கள் உற்பத்தியாகமல் இருக்கட்டும்... இருக்கும் கொசுக்களும் நம்மை கடிக்காமல் இருக்கட்டும்! 

மணலில் சிற்பங்கள் செய்யும் ஒருவர் செய்த சிற்பம் உங்கள் பார்வைக்கு!  சிற்பிக்கு உங்கள் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டுகள்!



இந்த வார காணொளி:

ஒரு தேங்காய் உடைக்கவே கத்தியையும் கல்லையும் தேடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.  இங்கே வட இந்தியாவில், தேங்காயின் மேல் சுத்தியால் கொஞ்சம் கொஞ்சமாக தட்டி, ஓட்டை மட்டும் உடைத்து எடுப்பார்கள். ஒரு தேங்காய் உடைக்க இவர்கள் படும் கஷ்டம் பார்க்க சிரிப்பை வரவழைக்கும்! இப்படி இருக்க ஒரே சமயத்தில் 12000 தேங்காய் உடைக்கும் பழக்கம் பட்டாம்பி எனும் இடம் கேரளத்தில் இருக்கிறது.  இது வித்தியாசமான ஒரு வழிபாடு! ஒரே ஒருவர் 12000 தேங்காய்களை அசறாது உடைக்கிறார். கைகளும், தோள்களும் என்ன வலி வலிக்குமோ! பாருங்களேன்! ஒரு வேண்டுகோளும்: முழுவிவரங்களை துளசிதரன் ஜி முடிந்தால் பதிவிடலாமே!




படித்ததில் பிடித்தது:

மன்னை மைனர் RVS.  இவரது வலைப்பூ தீராத விளையாட்டுப் பிள்ளை.  முகப் புத்தகத்தில் மூழ்கி விட்டதால் வலைப்பூவில் எழுதுவதே இல்லை என்ற நிலை.  சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரர்.  முகப்புத்தகத்தில் நேற்று எழுதிய நாயுடு ஹால் அனுபவம் இங்கே படித்ததில் பிடித்ததாய்!  வலைப்பூவில் எழுதுங்கள் மைனரே!

பூர்வ ஜென்மத்தில் மடி பெருத்த நாலு காராம் பசுக்களை சிணுங்காமல் தானம் செய்திருந்தால் மட்டுமே பாண்டி பஜார் நாயுடு ஹால் வாசலில் கார் பார்க்கிங் கிடைக்கும். நான் செய்திருக்கிறேன் என்று இன்று ருசுவானது. திருவிழாக்கோலம் பூண்டிருந்த கடைக்குள் வெட்கம் பிடிங்கித் திங்க காலால் கோலம் போட்டபடி தூணோடு தூணாக சர்வ ஜாக்கிரதையாக நின்றுகொண்டிருந்தேன். அறியாப் பெண் யாராவது தனக்குத் தேர்வாகாத நைட்டியைத் தோளில் மாட்டிவிடும் அபாயம் இருந்தது. அதனால் அவ்வப்போது குனிந்த தலை நிமிராமல் பெண்டுலமாய் சிரசாடிக்கொண்டிருந்தேன். நடுநடுவே ரெவ்வெண்டு நொடிக்கொருதரம் இனிய இம்சையாக கட்டைவிரலை கெட்டவிரலாக்கி ஃபேஸ்புக் ஸ்க்ரால்.
ஹாஹ்ஹா..என்ற அதிர்வேட்டுச் சிரிப்பு என்னுடைய முகப்புஸ்தகத் தவத்தைக் கலைத்தது. ஆம்பிளைச் சிரிப்பாக இருந்ததால் மனதில் தெகிரியத்தை வரவழைத்துக்கொண்டு நிமிரலாம்என்று நிமிர்ந்தேன்.
பல்வரிசையில் பாதி காலியாகி டெண்டல் கேர்ஆசுபத்திரிக்குக் கிடைத்த பொக்கிஷமாக, பூர்ணாயுசை எக்கிப் பிடிக்கும் வயதில் ஒரு பெரியவர். திடகாத்திரமாகத்தான் இருக்கிறார். கொள்ளுப் பேத்தி கல்யாணத்திற்கு சீர் முறுக்கு சாப்பிடமுடியாது என்கிற குறையைத் தவிர சம்பூர்ணமாக இருந்தார். எதிரில் பெர்முடாஸ் மற்றும் குறுந்தாடியில் மேதாவிலாசம் காட்டும் அமெரிக்க ஆக்ஸண்ட் மாமா. மீனம்பாக்கத்திலிருந்து இறங்கி நாயுடு ஹால் தள்ளுபடிக்காக வந்து இறங்கியிருக்கும் மோஸ்தரில் பளபளத்தார்.
நாம இங்கதான் அடிக்கடி பார்த்துக்கிறோம்...என்று பெ.மாமா என்னமோ இருவரும் அந்த ஃப்ளோரில்தான் அனுதினமும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டு உள்ளாடை வாங்கி மாட்டிக்கொள்வது போல வெற்றிச் சிரிப்பில் தேமேன்னு நைட்டி பார்த்துக்கொண்டிருந்த நான்கு குடும்ப ஸ்த்ரீகளை தன் பக்கம் பார்க்க வைத்தார். சுவாரஸ்யமாக ஏதும் ஆம்புடும் என்று காதைத் தீட்டிக்கொண்டு தீனிக்காக காத்திருந்தேன்.
போன வாரம் வந்தீங்கல்ல...பெரிசு ஆரம்பித்தது.
ஆமா... நீங்க வாசல்ல மல்லிப்பூ வாங்கிக்கிட்டிருந்தீங்க...ஷார்ப் மெமரி.
உங்களைப் பார்த்தேன்.. நீங்க திடுதிப்பு மேலே ஏறிட்டீங்க....
ஆமாமா... துப்பட்டாவுக்கு மேட்ச்சிங்கா பாட்டம் வாங்கணும்னு வீட்ல சொன்னாங்க... அதான்..
ஓ.. நீங்க நைட்டி வாங்கதான் வரீங்கன்னு நினைச்சேன்..
யோவ் பெர்ஸு! நைட்டி என்ன மாசாந்திர சாமானா?” என்கிற லுக் விட்டார் பெர்முடாஸ். பெரியவர் லேசில் விடுவதுமாதிரி இல்லை.
லோகத்துல துப்பட்டாவே யாரும் போட்டுக்கிறதில்லை.. அதுக்கு ஏன் பாட்டம் வாங்கணும்?” என்கிற க்ரூப் ஒண் கேள்வி மூலம் கிடுக்கிப்பிடி போட்டார்
பெர்முடாஸ் சிரிப்பதை நிறுத்திவிட்டு எங்க வீட்ல போட்டுப்பாங்க சார்...என்று காமெடிக்காட்சியிலிருந்து நழுவி க்ளைமாக்ஸ் காட்சியாய் சீரியஸானார்.
எங்க வீட்ல நாந்தான் போட்டுப்பேன்என்று ஒரே போடாய்ப் போட்டார் பெரிசு. ஏதாவது மரணக்கடியாக ரம்பம் போடுவாரோ என்று அச்சப்பட்டேன்.
இப்படி வாராவாராம் நாயுடுஹால் வந்ததன் பலனாக (கோயில்...குளம்னு பிரதக்ஷிணம் வந்தால் கிட்டும் பலன் போல) அவர் துப்பட்டாவும் இவர் ஃப்ரீ சைஸ் நைட்டியும் மாட்டிக்கொள்வதற்கு சித்திக்கும் என்று நினைத்துக்கொண்டேன். பெர்முடாஸ்காரருக்கு புதிரில் கண்கள் இரண்டும் கோலிக் குண்டாகி இரு புருவங்களை மேலே உயர்த்தி தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரின் ஆஸ்ச்சரிய பாவஅபிநயத்தோடு என்ன சொல்றீங்க?” என்று பதறிக் கேட்டார்.
தோளில் சுற்றியிருந்த துண்டை படையப்பா ரஜினி போல சுழற்றி எடுத்து இதைச் சொன்னேன்... இதில்லாம நான் வெளிய வர்றது இல்லை...என்றார். அவர் அடித்த அந்த மொக்கை ஜோக்குக்கு பெர்முடாஸ் சிரித்த சிரிப்பில் நாயுடு ஹால் அஸ்திவாரம் பலவீனமாகி எந்தநேரமும் உட்கார்ந்துவிடும் என்று நினைத்தேன். எங்கள் குலதெய்வம் திருவேங்டமுடையானின் அனுக்கிரஹத்தால் அப்படியாகப்பட்ட அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.
சிறிது மேயட்டும் என்று அவரை விட்டுவிட்டுப் போன திருமதி போலாமா...என்று முதுகைத் தட்டிக் கூப்பிட்டார். அது என் காதில் மன்னையில் வெங்கடாசலம் தனது ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவது போல ஹை..ஹை...என்று டிகோட் ஆகி விழுந்தது. வரேன்...என்று பெரிவரை க்ஷண நேரத்தில் அறுத்துக்கொண்டு பெண்டாட்டியின் கையைப் பிடித்துக்கொள்ளாத குறையாகக் கிளம்பிவிட்டார். பார்ட்டிக்கு மந்திரம் அப்படி அனுபூதி ஆகியிருக்கிறது.
இப்போது பெரியவரின் நிலை என்ன என்று பார்க்க என்னை விட என் கண்ணுக்குள் ஆர்வம் முட்டியது. பெரியவர் பட்டிணம் பொடி ஆசாமி போல. ஹச்என்று நிலமதிரத் தும்மி நான்கடி சதுரத்துக்குள் இருந்த அனைவருக்கும் ஜலதோஷத்தை பரிசாகக் கொடுத்துவிட்டு துண்டால் புர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று மூக்கை துடைத்துக்கொண்டார். சாரி.. அவரது வெள்ளை துப்பட்டாவால் துடைத்துக்கொண்டார்...
ஆனால் வீடு வரும் வரை ஒரே ஒரு கேள்வி மட்டும் மூளையை ஓவர் டைம் செய்யச்சொல்லி வற்புறுத்தியது. அவஸ்தையை அடக்கமுடியாமல் தர்மபத்னியிடம் இந்த இராமாயணத்தைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.
மெனக்கெட்டு எல்லா வீட்டு வேலையையும் விட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் ஏன் கடமையாய் அடிக்கடி நாயுடு ஹால் வர்றாங்க?”
நான் கப்சிப்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.


24 கருத்துகள்:

  1. நானும் இந்தச் செய்தியை நாளைய பாஸிட்டிவ் செய்திகளில் இணைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸிட்டிவ் செய்திகளை தொடர்ந்து தரும் உங்களுக்குப் பாராட்டுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இன்றைய பதிவு - ரகளை.. தான்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  3. தகவல் நன்று காணொளி கண்டு ஆச்சர்யமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி ஆச்சர்யம் தான். அதனால் தான் பகிர்ந்து கொண்டேன் நண்பரே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. மணல் சிற்பம் செய்தவரின் அபாரத்திறமை அசத்துகிறது. முகப்புத்தக இற்றை அருமை! மருத்துவர் விஜயலக்ஷ்மிக்கு என் சார்பிலும் ஒரு பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  5. நல்ல ஃப்ரூட் சலாட் இன்றும்.
    நவரசங்கள் போல் எண்ணத்தில் பல ரசனைகள் தோன்றிய வைத்த பதிவு!

    அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோதரரே!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி ஜி!.....

      நீக்கு
  6. முகப் புத்தகத்தில் இவ்வளவு நீளமாகவும் எழுதுகிறாரே. நான் முகப் புத்தகத்தில் ஏதோ எஸ் எம் எஸ் போலச் செய்திகளைச் சுருக்குவார்கள் என்றல்லவா இருந்தேன் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. என்று ஏதோ கேட்கிறது. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகப்புத்தகத்தில் இவர் போல நீண்ட இற்றைகளை எழுதுபவர்கள் இன்னும் உண்டு. உதாரணத்திற்கு அனன்யா மஹாதேவன் - இவரும் ஒரு வலைப்பதிவர் தான். முகப்புத்தகத்தில் தற்போது மூழ்கிவிட்டவர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. முதல் செய்தி சூப்பர்! பாஸ்ட் ஆன் ஓவர் டு ஸ்ரீராம்!!

    குறுன்செய்தி அருமை..

    திறமை மிக்க மணல் ஓவியருக்கு எங்கள் சார்பிலும் வாழ்த்துகள்! மருந்து விரைவில் வந்தால் நல்லது ஓவியம் அழகு!

    படித்ததில் பிடித்தது அஹஹஹஹஹஹ் செம மிக மிக ரசித்தோம்...

    நிச்சயமாக தங்கள் வேண்டு கோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது! மிக்க நன்றி வெங்கட்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

      பட்டாம்பி நிகழ்வு பற்றிய உங்கள் பதிவினை எதிர்பார்த்து நானும்!

      நீக்கு
  9. அருமையான தகவல்களின் தொகுப்பு!
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
    2. வணக்கம்
      ஐயா.

      சிறப்பான தகவல் திரட்டு... படங்களும் வீடியோக்கள் எல்லாம் நன்று.. வாழ்த்துக்கள் ஐயா.த.ம 7
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  10. நானொரு மனலோவியம் கண்டேன் இங்கே ,அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  11. அருமையான சாலட்! ஆர்.வி. எஸ் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும் முகநூலில் தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....