சனி, 31 டிசம்பர், 2016

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…..



2016 இதோ முடிவுக்கு வந்துவிட்டது. 2017-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இன்னும் சில மணித்துளிகளே பாக்கி! 2016-ஆம் ஆண்டு நல்லதாகவே துவங்கி நல்லதாகவே முடியப் போகிறது.  சில பயணங்கள், நிறைய செலவு, உடல் ரீதியாக குடும்பத்தினருக்கு சில பிரச்சனைகள் என எல்லாம் கலந்த ஒரு வருடம். வாழ்க்கைப் பயணத்தில் பிரச்சனைகளும் வரத்தானே செய்கிறது.  அதை மாற்றுவது நம் கையில் இருந்தாலும், சமயங்களில் தவிர்க்க முடிவதில்லையே…..  முடிந்த வருடத்தின் நிகழ்வுகளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் நமக்குத் தேவையில்லையே. நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருந்தால் போதுமே.  ஒரு சின்ன கதையை, படித்ததில் பிடித்த ஒரு கதையை, இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு கணவன் – மனைவி….  கணவன் ஒரு பிரபல எழுத்தாளர் - வருடத்தின் கடைசி நாள் அன்று அந்த வருடத்தின் நிகழ்வுகளைப் பற்றிச் சிந்தித்து, ஒரு காகிதத்தில் இப்படி எழுதி வைத்தார்…..

இந்த வருடம் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. பித்த நீர் பையை எடுத்து விட்டார்கள். அதன் காரணமாக நான் பல நாட்கள் படுத்த படுக்கையாகவே இருக்க நேர்ந்தது.

இந்த வருடம் எனக்கு வயது 60 ஆகிவிட்டது.  முப்பது வருட காலம் நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து, எனக்குப் பிடித்த வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் அமர்ந்திருக்கும்படி ஆயிற்று!

இந்த வருடம் எனக்கு மிகவும் பிடித்த எனது பாசத்துக்குரிய தந்தையை இழக்க நேர்ந்தது.

இதே வருடத்தில் தான் எனது மகன் ஒரு வாகன விபத்தில் சிக்கி, அதனால் மருத்துவர் தேர்வில் தோல்வியுற்றான். கால்களில் அடிபட்டு பல மாதங்கள் மருத்துவமனை படுக்கையில் வீழ்ந்து கிடந்தான்.  விபத்துக்குள்ளான வாகனமும் முழுவதும் வீணாகி பெரிய இழப்பு.

இப்படி எல்லாம் எழுதி கடைசியில் “இந்த வருடம் எனக்கு ஒரு மோசமான வருடம்” என்று எழுதி இருந்தார்.

அந்த சமயத்தில் அவரது அறைக்கு வந்த அவரது மனைவி, தனது கணவர் சோகமே உருவாக எண்ணச் சிறையில் சிக்கி தன்னிலை மறந்து அமர்ந்திருந்ததைப் பார்த்தார்.  பின்னால் இருந்து காகிதத்தில் எழுதி இருந்ததைப் படித்துப் பார்த்த அவரது மனைவி சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினார்.  சிறிது நேரம் கழித்து அறைக்குத் திரும்பி, கணவர் எழுதி வைத்திருந்த காகிதத்திற்குப் பக்கத்தில் வேறு ஒரு காகிதத்தினை வைத்தார். அந்த காகிதத்தில் எழுதி இருந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்!

என்னை நீண்ட நாட்களாகத் தொல்லைபடுத்திய, வலி தந்த, பித்த நீர்ப் பையை இந்த வருடம் அகற்ற முடிந்தது. இனி நான் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

ஆஹா, எனக்கு 60 வயது ஆகிவிட்டது. தினம் தினம் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்து விடுதலை. நல்ல உடல்நிலையோடு பணிஓய்வு பெற்று விட்டேன். எனக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில், நான் பல காலமாக எழுத நினைத்தவற்றை நல்ல விதத்தில், சிறப்பாகவும் முனைப்புடனும் எழுத முடியும்.

இதே வருடத்தில், இத்தனை வருடங்களாக, யாரையும் எதிர்பார்க்காமல் 95 வயது வரை இருந்த எனது தந்தை எந்த வித கஷ்டமும் படாமல் அவரை உருவாக்கிய கடவுளின் பாதங்களை அடைந்தார்.

எனது மகனுக்கு புது வாழ்வு கிடைத்தது.  அவன் பயணித்த வாகனம் முழுமையாகப் பழுதடைந்தாலும், மகன் எந்தவித குறைபாடும் இல்லாமல் நல்லபடியாக, உயிருடன் வீடு திரும்பினான்.

கடைசியாக “கடவுளின் கிருபையால், இந்த வருடம் நன்றாகவே முடிந்தது” என்று எழுதி இருந்தது.

எந்த விஷயத்தினையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது நம் மகிழ்ச்சி. நேர்மறையான எண்ணங்களோடு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இன்னுமொரு சின்ன கதை…..

ஒரு கொசு முதன் முதலாக பறந்து சென்று திரும்பியது. கொசுவின் தந்தை, “மகனே, முதல் முறை பறந்து சென்றது எப்படி இருக்கிறது?” என்று கேட்க அதற்கு குட்டி கொசு சொன்ன பதில்……

“தந்தையே, முதல் முறை பறந்து சென்றது மிகவும் அற்புதமாக இருந்தது. எல்லா மனிதர்களும் நான் பறப்பதைப் பார்த்து கை தட்டினார்கள்!”

வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கட்டும்.  சிறு சிறு பிரச்சனைகள் வரும், போகும் அதற்காக கவலைப்படாது இருப்போம். எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்மறைச் சிந்தனைகளோடு சிறப்பாக இருப்போம்.  கடந்த வருடத்தினை விட வரும் வருடம் எல்லோருக்கும் நல்லதையே கொடுக்கட்டும்…..

அனைத்து நண்பர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. அற்புதம். பார்க்கும் பார்வையில் இருக்கிறது எல்லாம். பாஸிட்டிவ்! புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கும் பார்வையில் இருக்கிறது எல்லாம்... அதே தான்.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. என்றென்றும் வாழ்க நலம்!..
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. //எல்லா மனிதர்களும் நான் பறப்பதைப் பார்த்து கை தட்டினார்கள்! - கொசு //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! உண்மையிலேயே சூப்பர் ஜோக் !! ரசித்துச் சிரித்தேன், வெங்கட்ஜி.

    அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்திவேல்..

      நீக்கு
  5. அருமை புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. அருமையான கதைகளோடு புத்தாண்டை வரவேற்றிருக்கிறீர்கள். இந்த பாசிட்டிவ் அணுகுமுறை எப்போதும் எல்லோருக்கும் இருக்க வேணுடை வாழ்த்துகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  8. அருமையான கதை வெங்கட்ஜி! நாம் பார்ப்பதும், அதைப் புரிந்து கொள்வதிலும் தான் இருக்கிறது எல்லாமே! நேர்மறை எண்ணத்துடன் பார்த்தால், எதிர்வினையைக் கூட நேர்மறையாய் மாற்றும் சக்தி உண்டுதான்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்! தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. வருட இறுதியில் படித்த பாசிட்டிவ் பதிவு அருமை... நான் எதையும் எமோஷனலாக நினைத்து வருந்துவதில்லை ஒரு சில நாட்களுக்கு முன்னால் என் தந்தை மரணத்தை தழுவிய போது அவர் மேலும் அதிகமாக கஷ்டப்படாமல் சென்றரே என்று என் மனது நினைத்து கலங்காமல் இருந்தது.

    நாம் வருகிற புத்தாண்டில் என்ன நடந்தாலும் அதை சந்தோஷமாக எதிர் கொள்ள வேண்டும் என்று அனைவரையும் இந்த புத்தாண்டில் வாழ்த்துகிறேன். அனைவரும் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும்.....

      எதையும் எமோஷனலாக நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.

      நீக்கு
  10. எதையும் எதிர்மறையாக நோக்காமல் நேர்மறையாக பார்க்கவேண்டும் என்ற நல்ல தகவாலோடு புத்தாண்டை வரவேற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி!

    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு....

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  12. புத்தாண்டு நல்வாழ்த்துகள்….

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  13. 'பாசிட்டிவிட்டி'யுடன் புத்தாண்டு தொடங்கட்டும் ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பி. பிரசாத்.

      நீக்கு
  14. நேர்மறைஐ எண்ணங்களோடு புத்தாண்டை வரவேற்போம் எதிர்ம்றை எண்ணங்கள் தவறுகளைத் திருத்த செய்யுமொரு முயற்சியாகவும் இருக்கலாமே வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி GMB ஐயா.

      நீக்கு
  15. ஆஹா! அப்படியே என் ம்னதில் தோன்றும் சிந்தனைகளை எழுத்தாக்கி இருக்கின்றீர்கள். தீமையிலும் நனமையை தேடி பார்க்க வேண்டும் என நினைப்பேன். எது நடந்தாலும் அது நல்லதுக்கே என நினைத்தால் எல்லா வருடமும் நல்லவருடமே. கடந்த கசப்புக்கள், சிந்தனைகளை தூரமாக்கி நல்லவைகளை முன் நிறுத்தினால் மனசும் இலகுவாகும். அருமையான பகிர்வு இது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நிஷா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....