சனி, 8 ஜூலை, 2017

சிம்ஹாசலம் சிங்கம் – ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 3

முந்தைய பகுதிகள்: பகுதி 2 பகுதி 1


படம்: சிம்ஹாசலம் கோவில் புறத்தோற்றம்

தங்கும் விடுதியிலிருந்து தயாராகி புறப்பட்டோம். எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில், சிம்ஹகிரி என அழைக்கப்படும் சிறிய மலை மீது அமைந்திருக்கும் ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி குடிகொண்டிருக்கும் சிம்ஹாசலம் தான் இந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற முதல் இடம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கோவில் என சில தகவல்கள் உண்டு. மஹாராஜா கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோவிலுக்கு செய்த தானதர்மங்கள், இறைவனுக்கு அணிவித்த நகைகள், நிவந்தங்கள் என பல தகவல்கள், கல்வெட்டுகள் உண்டு. 


 படம்: சிம்ஹாசலம் கோவில் நோக்கிய ஒரு பயணம்....

எங்களை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்ற நண்பர், அவரது உறவினர் ஒருவரை எங்களுடன் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்து வைப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தார். கோவிலுக்குப் போகும் வழியில் அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் வாகனம் புறப்பட்டது. சில நிமிடங்கள் பயணித்து கோவிலின் அருகே சென்று சேர்ந்தோம். ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோவிலுக்கு அடுத்தபடியாக, அதிக வருமானம் வரும் கோவில் இந்த சிம்ஹாசலம். கோவிலுக்குள்ளே கேமரா, மொபைல் போன்ற எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இதை முன்னரே சொல்லி இருந்தால் வாகனத்தில் வைத்து விட்டு வந்திருக்கலாம். கார் நிறுத்துமிடத்திற்கு மீண்டும் சென்று கேமராவையும், அலைபேசிகளையும் வைத்து வந்தேன்.  கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க முடியாததில் வருத்தம் உண்டு – குறிப்பாக அங்கே இருந்த ஓவியங்களை படம் எடுக்க முடியாததில் – புராண காட்சிகளை ஓவியமாக வடித்து வைத்திருந்தார்கள்.


படம்: சிம்ஹாசலம் கோவில் ராஜகோபுரம் - குறுக்குவெட்டில்...


கோவில் என்றாலே கதைகள் இல்லாமலா? கோவில் எப்படி வந்தது, கோவிலின் சிறப்பு என்ன என நிறைய விஷயங்கள் இருக்கிறது.  மனித உடம்புடன் சிங்கத்தின் தலையோடு கூடிய உருவத்தில் தான் கோவில் சிலை இருக்கிறது என்றாலும் இந்த ரூபத்தில் பார்க்க வேண்டுமென்றால் வருடத்தின் ஒரே ஒரு நாளில் மட்டும் தான் அனுமதி! மற்ற நாட்களில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்ட சந்தனம் கொண்டு முழுவதுமாக மூடி வைத்திருக்கும் ரூபத்தில் தான் தரிசிக்க முடியும். ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த பிறகு பயங்கர கோபத்துடன் இருந்த நரசிம்ஹ அவதார மூர்த்தியை பறவை வடிவில் வந்த சிவபெருமான் அமைதிகொள்ளச் செய்ததாகவும், அவரது கோபத்தினைத் தணிக்க உடல் முழுவதும் சந்தனம் பூசி குளிர்வித்ததாகவும் நம்பிக்கை.


படம்: சிம்ஹாசலம் கோவில் ராஜகோபுரம் - உள்ளே நுழையலாமா....
கொஞ்சம் ஸ்தலபுராணம்:

பக்தப் பிரஹலாதனின் தந்தையான ஹிரண்யகசிபு, விஷ்ணுபகவானை விட தானே உயர்ந்தவன் என்றும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் சொல்ல, அதைக் கேட்காத தனது மகன் பிரஹாலதனை அழித்துவிடத் துணிந்தான். பலமுறை காப்பாற்றப்பட்ட பிரஹாலதனை அழிக்க மேலும் ஒரு முயற்சியாக, பிரஹலாதனை தூக்கி கடலில் வீசி, மேலே ஒரு பெரிய பாறையையும்/மலையையும் போட கட்டளையிட்டான். அவனது ஊழியர்கள் அப்படியே பிரஹலாதனைக் கட்டி கடலில் போட்டு, ஒரு பெரிய மலையைப் போட, அந்த மலை மேலேயே குதித்து பிரஹலாதனை மீட்டு வந்தாராம் விஷ்ணு பகவான். அந்த இடம் தான் இந்த இடம், அதாவது சிம்ஹாசலம். கடலுக்குள் குதித்து காப்பாற்றியதால் இந்தத் தலத்தில் விஷ்ணுபகவானின் பாத தரிசனம் கிடையாது என்றும் பாதாள லோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பாத தரிசனம் என்றும் சில புராணங்கள் உண்டு. பிரஹலாதனின் விருப்பத்திற்கிணங்க, ஹிரண்யாக்‌ஷனை வதம் செய்த வராஹ ரூபம் மற்றும் ஹிரண்யகசிபுவினை அழிக்கப்போகும் நரசிம்ஹ ரூபம் கலந்த ரூபத்தில் காட்சி தந்ததாகவும் நம்பிக்கை.


படம்: சிம்ஹாசலம் கோவில் - பக்தர்கள் ஓய்வெடுக்க ஒரு வசதி!


படம்: நிஜரூப தரிசனம் - சிம்ஹாசலம் கோவில்
இணையத்திலிருந்து எடுத்த படம்.... 

ஹிரண்யகசிபு வதத்திற்குப் பிறகு பிரஹலாதன் இங்கே வராஹ நரசிம்ஹ ஸ்வாமிக்கு கோவில் கட்டி பூஜித்து வந்ததாகவும், அவனது மகன் காலத்திற்குப் பிறகு கோவில் பூஜைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, சத்ய யுகத்தின் முடிவில் சிலை முழுவதும் புற்றால் மூடிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.  அதற்கடுத்த யுகத்தில் புருரவா என்ற அரசன் தனது மனைவி ஊர்வசியுடன் ரதத்தில் பயணித்தபோது ஏதோ ஒரு சக்தி அவரை ஆட்கொண்டு இங்கே வரவழைத்ததாகவும், வராஹ நரசிம்ஹ மூர்த்தியின் சிலை அங்கே இருப்பதைத் தெரிந்து கொள்ள, சிலையைச் சூழ்ந்திருந்த புற்றை அகற்றி வராஹ நரசிம்ஹ ஸ்வாமிக்கு கோவில் கட்டியதாகவும் ஸ்தல புராணம் சொல்கிறது.  எந்த அளவு புற்று மண்ணை எடுத்தாரோ, அதே அளவு சந்தனம் பூசி தன்னை சாந்தரூபத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற அசரீரி ஒலி கேட்டு இப்படி சந்தனப்பூச்சில் வைத்திருப்பதாகவும் ஸ்தல புராணம் சொல்கிறது. மே மாதத்தின் வைகாசி தினத்தில் சந்தனம் முழுவதையும் அகற்றி சந்தனோத்ஸவம் அல்லது நிஜ ரூப தரிசனம் தருகிறார். அந்த நாளில் லக்ஷக் கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து கொள்கிறார்கள்.


படம்: சிம்ஹாசலம் கோவில் - ராஜகோபுரமும் மூலஸ்தானத்தின் மேலே உள்ள கோபுரமும்....

கப்பஸ்தம்பம்:

தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றினால் கோவிலுக்கு வந்து கப்பம் செலுத்துவதாக வேண்டிக் கொள்வது இங்கே இருப்பவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. நோய் நொடியிலிருந்து பாதுகாக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்க வேண்டிக்கொண்டு இங்கே கப்பம் செலுத்துவதும் வாடிக்கையாக இருக்கிறது. இங்கே இருக்கும் மண்டபத்தில் உள்ள ஒரு ஸ்தம்பம் அதாவது தூணின் முன்னே வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் கப்பம் செலுத்துவார்கள் – அந்த ஸ்தம்பம் கப்பஸ்தம்பம் என்றே அழைக்கப்படுகிறது. போலவே, இங்கே மலைமீது குடிகொண்டிருக்கும் நரசிம்ம ஸ்வாமியை, மலைப் பாதையில் கிரிவலம் வந்து வணங்குவதும் வழக்கம்.   


படம்: சிம்ஹாசலம் கோவில் - சில்லென்று மோர்....  உடம்புக்கு நல்லது குடிங்களேன்!


கோவிலுக்கு எங்களை அழைத்து வந்தவர் தெலுங்கும் ஹிந்தியும் கலந்த ஒரு மொழியில் எங்களுக்கு விவரங்களைச் சொல்லியபடி தரிசனம் செய்து வைத்தார். திருப்தியாக தரிசனம் செய்து கொண்டு, பிரசாத ஸ்டால் வரை வந்து புளியோதரை, லட்டு பிரசாதம் வாங்கி உண்டோம். ஏப்ரல் மாதம் என்றாலும் வெயில் சற்றே அதிகமாகத் தான் இருந்தது. வரும் பக்தர்களின் வசதிக்காகவும், சம்பாதிக்க ஒரு தொழிலாகவும், பலரும் நீர்மோர் விற்பனையில் இருந்தார்கள். இங்கே வரும் பக்தர்கள் திருப்பதி போலவே தங்களது தலைமுடியைக் காணிக்கையாகத் தருகிறார்கள்.  நரசிம்ம மூர்த்தி உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொள்கிறார் என்றால் இவர்கள் மொட்டையடித்துக் கொண்ட தலையை மட்டும் சந்தனத்தில் குளிர்வித்துக் கொள்கிறார்கள்.


படம்: சிம்ஹாசலம் கோவில் 
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... ஸ்வாமி தரிசனம் ஆச்சா....  எனக்கு தான் மொட்டை அடிச்சிட்டாங்க!  பரவாயில்லை சந்தனம் தடவுனதுல ஜிலோன்னு இருக்கு தலை!


தரிசனம் முடிந்து வெளியே வந்ததும், கார் நிறுத்தத்திற்குச் சென்று எனது செல்லப்பெட்டியை எடுத்து சில பல புகைப்படங்கள் எடுத்தேன். கோவில் கோபுரங்கள், சில காட்சிகள் என குறைவாகவே படம் எடுக்க முடிந்தது. அந்தப் படங்கள் இப்பகுதியில் ஆங்காங்கே இணைத்திருக்கிறேன். கோவிலில் நிம்மதியான தரிசனம் முடிந்து நாங்கள் அடுத்ததாக எங்கே சென்றோம்….  அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. ​சுவாரஸ்யம். தொடர்கிறேன். நான் போகவேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்ட ஒரு இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நாங்களும் தரிசித்தோம் ஜி
    மொட்டைக்குழந்தை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. #ராஜகோபுரமும் மூலஸ்தானத்தின் மேலே உள்ள கோபுரமும்....#
    ராஜ கோபுரம் சரி,மூலஸ்தானத்தின் மேலேயுள்ளதை விமானம் என்பார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் அழகு.செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. கோயிலைப் பற்றிய தகவலுடன் படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. சரியா 43 வருசங்களுக்கு முன்னால் சிம்மாச்சலம் போயிருக்கோம். எங்க கல்யாணம் ஆனபின் போகும் முதல் கோவில் அது. கோபாலுக்கு விசாகப்பட்டினத்தில் வேலை. முதல் வீக் எண்ட். எங்க கூட இன்னொரு நண்பர். மூணு பேருமா பஸ்ஸில் போய்ச் சேர்ந்தாச்சு. கீழே அடிவாரத்தில் அர்ச்சனைக்குத் தேங்காய் பழத்தட்டு வாங்கிக்கிட்டுப் படியேறிப்போறோம்.
    அங்கே மூலவர் சந்நிதியில் தேங்காய் உடைப்பதில்லைன்னு சொல்லி ஒரு கொடி மரத்தாண்டை தேங்காய் உடைச்சாங்க. நம்மது உள்ளெ அழுகிப்போயிருந்தது :-(
    முதல் முதல்லே ஒரு கோவிலுக்கு வந்துருக்கோம், இப்படி ஆகிப்போச்சேன்னு எனக்கு அடக்கமுடியாத அழுகை. வெளியே ஒரு மண்டபத்துலேயே உக்கார்ந்துட்டேன். மூலவரைப் பார்க்க நான் வரமாட்டேன்னு தீர்மானச் சொன்னதால், கோபாலும் எனக்கு சப்போர்ட் செய்ய, தானும் போகலைன்னுட்டார்.
    நண்பரும் நானும் வற்புறுத்துனதும் நண்பரோடு உள்ளே போயிட்டு வந்தவர், அங்கே மூலவருக்கு முன்னால் ஒரு திரை போட்டுருப்பதாகவும், அதைத்தான் தரிசனம் செஞ்சுக்கணும். கோபாவேசமா மூலவர் இருப்பார் என்பதால் மக்களுக்கு நேரடி தரிசனம் இல்லையாம்னு சொன்னார்.
    நாங்கள் கீழே வந்து பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்துட்டோம். அதுக்கப்புறம் அங்கே போகவே இல்லை.
    நல்லவேளை.... 108 இந்தக் கோவில் இல்லைன்னு எனக்கு ஒரு சந்தோஷம்தான்.
    இப்ப உங்க பதிவின் மூலம் கோவிலுக்குள் போய் வந்தேன் ! நன்றி. உங்க படத்தில் பார்த்தது போல் அப்போ இல்லைன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லை.

    நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்! அட எதுக்கு டீச்சர்..... நீங்கள் சென்றது 43 வருடங்களுக்கு முன்னர் என்பதால் நிறையவே மாற்றங்கள் இருக்கும்.

      உங்கள் அனுபவங்கள் வேதனை தந்தன. அடுத்த இந்திய பயணத்தில் இப்பகுதிகளுக்குச் சென்று வாருங்கள். இங்கே நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  7. நாங்களும் இக்கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் 19 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடத்தக அனுபவமோ தகவலோ இல்லை. அப்போது புகைபடங்கள் எடுக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  8. நான் பார்க்க ஆசைப்படுகின்ற கோயிலைப் பற்றிய பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன். இக்கோயிலுக்குச் செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. விசாகப்பட்டினம் சென்றபோது இந்த கோவிலையும் பார்க்க நினைத்தேன். முடியவில்லை. அவசியம் சென்று பார்க்கத் தூண்டுகிறது தங்கள் பதிவு.படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா. நிறைய இடங்கள் - பார்க்க வேண்டிய இடங்கள் இப்பகுதியில் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. பதிவை படிச்சு களைச்சுட்டேன். ஒரு டம்ப்ளர் மோர் எடுத்துக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. அழகான இடங்கள், கோயில்கள் தொடர்கிறோம் ஜி.

    கீதா: நானும் சென்று வந்தேன் ஜி! ஆமாம் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை..//குறிப்பாக அங்கே இருந்த ஓவியங்களை படம் எடுக்க முடியாததில் – புராண காட்சிகளை ஓவியமாக வடித்து வைத்திருந்தார்கள்.// யெஸ் எனக்கும் இதை எடுக்க முடியலைனு வருத்தம். கோபுரப் படங்கள் ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க. நான் சமீபத்தில் ஏப்ரலில் சென்று வந்தேன். என்னால் இப்படிக் கோபுரங்களை எடுக்க முடியவில்லை. பக்தர்கள் பிரசாதம் சாப்பிட்டு ஓய்வெடுக்கும் இடத்தின் அருகில் கோசாலை இருந்தது. அந்த வட்ட வடிவ கூரை போட்டு இருக்கும் இடம்...நாங்கள் பேருந்தில் சென்றோம்...ராமகிருஷ்ணா பீச் பஸ்டாப்பிலிருந்தே சிம்மாசலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கு. நாங்கள் மோர் வாங்கிக் குடித்தோம் நன்றாக இருந்தது. ..அது போன்று பிரசாதமும் புளியோதரை. நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சென்றபோது கிடைத்த அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  14. நரசிம்மர் தரிசனம் - மிகவும் சிறப்பானது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

      நீக்கு
  15. சிம்ஹாசலம் சிங்கம் .அருமையான தரிசனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  16. சிம்மாசலம்! போகணும்னு ஆசைதான்! போக முடியலை! இந்தத் தேங்காய் அழுகல் விஷயம் எங்களுக்கும் நடந்தது. மருமகளுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு அர்ச்சனை செய்கையில் முதல் தேங்காய் அழுகல் எனத் தேங்காயை மாற்ற, பின்னர் இரண்டு, மூன்று என வரிசையாகத் தேங்காய் அழுகல். மருமகள் மனம் நொந்து போனாள். பின்னர் பக்தியில் ஒரு கட்டுரை படித்தபோது அதில் தேங்காய் அழுகல் என்றால் உங்கள் பிரச்னைகள் தீர்ந்ததாக நினைக்கவும். அது ஒண்ணும் தப்பு இல்லைனு சொல்லி இருந்தாங்க. அவளுக்கு அதை ஸ்கான் செய்து அனுப்பினேன். :) இப்போவும் சமீபத்தில் அப்படி ஒருத்தர் சொல்லி இருந்ததைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் சொன்னதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....