சனி, 12 ஆகஸ்ட், 2017

ஹரியும் சிவனும் ஒண்ணு – கலெக்‌ஷனில் இரண்டாம் இடம் - அன்னவரம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 18

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


அன்னவரம் - கோவில் வளாகம்

பயணத்தின் மூன்றாம் நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து தயாரானோம். அன்று தான் விசாகப்பட்டினத்தில் கடைசி நாள். அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்களாக சிலவற்றை நினைத்திருந்தோம். காலையிலேயே வண்டி ஏற்பாடு செய்திருந்தோம். முதல் நாள் வந்த அதே வண்டி – ஓட்டுனர் மட்டும் வேறு. தங்குமிடம் அருகே இருந்த ஒரு உணவகத்தில் காபி மட்டும் குடித்து நேரே தசபல்லா! காலை உணவை முடித்துக்கொண்டு அன்றைய பயணத்தினைத் துவக்கினோம்.  அன்று முதலாவதாகச் செல்ல நினைத்தது விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தா விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அன்னவரம். அட விஜயவாடா வந்துருமோ, அப்படியே பயணித்து, சென்னை சென்று திருச்சி சென்றுவிடலாமா என்று தோன்றியது!



ரத்னகிரி மலை அடிவாரத்தில் நுழைவாயில்
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்

சாலைக்காட்சிகளை படம் பிடித்தபடியே அன்னவரம் சென்று சேர்ந்தோம். ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதிக்கு அடுத்து மிகவும் பிரபலமான இடம் இந்த அன்னவரம். மலைகளின் மன்னனான மேருவின் புதல்வன் ரத்னாகர் பெயரில் ரத்னகிரி என அழைக்கப்படும் மலையின் மீது அமைக்கப்பட்டிருக்கும் கோவில் – அங்கே கோவில் கொண்டிருப்பது ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயண ஸ்வாமி, உடன் இடப்பக்கத்தில் ஸ்ரீ அனந்த லக்ஷ்மி, வலப்பக்கத்தில் சிவபெருமான்! ஹரியும் சிவனும் ஒரே கர்ப்பக்கிரஹத்தில் குடிகொண்டிருக்கும் கோவில். ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு! என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கும் கோவில்! சத்யதேவா என்று அழைக்கப்படும் விஷ்ணு, முறுக்கிய மீசையோடு இருக்கிறார்!


ரத்னகிரி மலைப்பாதையில் சில கடைகள்
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்


அச்சச்சோ... அந்த மாமா ஃபோட்டோ புடிக்கறாரே.... ரொம்ப வெக்கமா இருக்கு!
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்


ரத்னகிரி மலை அடிவாரத்தில் பம்பா நதி....
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்

பெரும்பாலான கோவில்கள் போலவே, இக்கோவில் அமைந்திருக்கும் ரத்னிகிரி மலையின் அடிவாரத்தில் பம்பா நதி ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளத்தில் இருக்கும் பம்பை நதியோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்! பலருக்கு ஒரே பேர் இருப்பது போல, சில நதிகளுக்கும் ஒரே பெயர் இருந்தால் தவறென்ன! எப்போதும் இங்கே பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. மலைமேலே அமைந்திருந்தாலும், கோவில் பிரம்மாண்டமாக இருக்கிறது. தினம் தினம் திருமணங்கள், உபநயனங்கள் என நடந்தபடியே இருக்கிறது. இப்பகுதியில் இருக்கும் மக்கள் இக்கோவிலில் வந்து திருமணம் செய்து கொள்வது சிறப்பு என்பதை நம்புவதால், ஒவ்வொரு நாளும் பல திருமணங்கள் நடந்தபடியே இருக்கின்றன [ஜோடி மாறாம இருந்தா சரி எனத் தோன்றியது! ஹரியானாவில் ஒரு ஜோடி மாறிய கதை ஒன்று தனிப்பதிவாக!]


ஒரே குடும்பமோ.... மணப்பெண்கள் தனியாகப் பேசிக்கொண்டிருக்க, மணமகன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னுமொருத்தர் பேக் வைத்த அம்மணியின் பின்னால்!
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்


ஓடம் கரையினிலே..... பம்பா நதி
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்


மலைமீது அமைந்திருக்கும் கோவிலுக்கு இரண்டு வழிகள் – ஒன்று படிகள் வழியாக [சுமார் 300 படிகள்], மற்றொன்று வாகனங்கள் செல்லும் வழி! படிகள் வழியே ஏறிச்செல்லும் பக்தர்கள் நிறைய என்றாலும் நாங்கள் வாகனத்தில் தான் சென்றோம். நண்பருக்குத் தெரிந்தவர் மூலமாக தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து வைத்திருந்ததால், நேரே கோவில் அலுவலகத்திற்குச் சென்று, கோவில் அதிகாரியைப் பார்க்க, அவர் எங்களோடு ஒரு கோவில் சிப்பந்தியை அனுப்பி வைத்தார். அவர் கூடவே வர, தடைகளைத் தாண்டி வேகமாகச் சென்று தரிசனம் செய்ய முடிந்தது. கோவிலில் இருக்கும் முக்கியமான சன்னதிகள் அனைத்திற்கும் அவரே அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்க திவ்யமான தரிசனம்.  இது போன்ற கோவில்களில் நிறையவே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பதால் இங்கே செல்வதை தவிர்த்து விடுவது என் வழக்கம் – யாரையாவது சிபாரிசு பிடித்து ஸ்வாமி தரிசனம் செய்வது பிடிக்காத விஷயம் என்றாலும் பயணத்தில் இதையெல்லாம் பார்க்க முடிவதில்லை.


”மாமோய்.... என்ன தனியா உட்டுட்டு நீங்க எங்கே போனீங்க! பாருங்க இந்தாளு என்னை ஃபோட்டோ புடிக்கறாப்ல!”
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்

இக்கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் மஹா நாராயண யந்த்ரம் இந்தியாவின் வேறு எந்தக் கோவிலிலும் அமைக்கப்படவில்லை என்பதால் தான் இங்கே வருமானமும் அதிகம், கோவிலுக்கு வரும் பக்தர்களும் அதிகம் என்று கேள்வி. ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதிக்கு அடுத்ததாக இந்தக் கோவிலில் தான் வருமானம்! எப்படி இருந்தால் என்ன, கோவிலுக்கு வரும் நன்கொடை வைத்து நல்ல சில விஷயங்கள் செய்கிறார்கள் – இலவச மருத்துவமனை, சில கல்லூரிகள், வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச சாப்பாடு என நிறைய விஷயங்கள் நடக்கிறது என்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இங்கே வரும் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது என்பதால் தான் இந்த இடத்திற்கே அன்னவரம் என்ற பெயர் என்றும் சொல்கிறார்கள். இல்லை இல்லை, பக்தர்கள் கேட்கும் வரம் எல்லாம் அருள்பவர் என்பதால் அன்னவரம் என்ற பெயர் என்போரும் உண்டு.

இன்னுமொரு புராணக் கதை:


கோவில் வளாகம் - மண்டபங்கள்....
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்

மலைகளின் அரசன் மேரு மற்றும் அவனது இல்லத்தரசி மேனகா இருவரும் பகவான் ஸ்ரீவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்து பெற்ற இரு மகன்கள் Bபத்ரா மற்றும் ரத்னாகர். Bபத்ரா, விஷ்ணுபகவானை நோக்கி கடும் தவம் இருக்க, தவத்தினை மெச்சிய ஸ்ரீவிஷ்ணு ராமாவதாரத்தில் பத்ராசலம் மலையிலேயே தங்கி விட்டார் என்றும், சகோதரத்தின் தவத்தினை மிஞ்ச விரும்பி ரத்னாகர் தவம் இருக்க, அந்தத் தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீவிஷ்ணு பகவான் ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயண ஸ்வாமியாக ரத்னகிரி மலைமீது கோவில் கொண்டார் என்பதும் ஒரு புராணக் கதை.


அன்னவரம் கோவில் - இன்னுமொரு படம்
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்

கோவில் அமைந்திருக்கும் மலைப்பகுதியில், ஸ்ரீராமர், வனதுர்கா, கனகதுர்கா ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு. கல்யாண மண்டபங்கள், உற்சவக் கூடங்கள் என நிறைய விஷயங்கள் இங்கே இருக்கின்றன. தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சத்யநாராயண பூஜை இங்கே மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள்.  நாங்கள் சென்ற அன்றும் நிறைய திருமணத் தம்பதிகளைப் பார்க்க முடிந்தது. ஜோடிஜோடியாக மலைப்பாதையில் அமர்ந்திருக்கிறார்கள். கோவிலில் திருமணம் முடித்து, அங்கேயே அன்னதானம் சாப்பிட்டு, மெதுவாக உறவினர்களுடன் வீடு திரும்புகிறார்கள். நாங்கள் பார்த்த சில தம்பதிகளை தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.


இவரும் ஒரு சுமைதாங்கியே....
அன்னவரம் - ஆந்திரப் பிரதேசம்

வழியில் மலைப்பாதையில் நின்று பம்பா நதியைச் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, விசாகப்பட்டினம் செல்லும் பாதையில் பயணித்தோம்.  வழியில் வேறு ஒரு இடத்திற்கும் செல்ல முடிந்தது. அது எந்த இடம், அங்கே என்ன சிறப்பு என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்…. 

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

41 கருத்துகள்:

  1. ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருந்தால் 'திருவனவரத்து அண்ணா' என ஆண்டவனை விழித்திருப்பார், என்பது என் வியூகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

      நீக்கு
  2. அன்னவரம் நாங்களும் சென்றிருந்தோம் ஜி! நாங்கள் சென்றிருந்த போது செம கூட்டம். //இது போன்ற கோவில்களில் நிறையவே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பதால் இங்கே செல்வதை தவிர்த்து விடுவது என் வழக்கம் – யாரையாவது சிபாரிசு பிடித்து ஸ்வாமி தரிசனம் செய்வது பிடிக்காத விஷயம் என்றாலும் பயணத்தில் இதையெல்லாம் பார்க்க முடிவதில்லை//

    யெஸ் ஜி மீ டூ.

    பம்பா நதியில் தணீரே இல்லை நாங்கள் சென்றிருந்த போது....தூரத்தில் பாலம் தெரிந்தது. கோயிலின் அருகே ஒரு சிறிய குட்டை போல தண்ணீர் இருந்தது அவ்வளவே...நாங்கள் போகும் போது ரயிலில் சென்றோம். வரும் போது பேருந்தில் வந்தோம்.

    படங்கள் வழக்கம் போல் அருமை ! தொடர்கிறோம் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. உங்கள் ஹெட்டர் படங்கள் முந்தையதும், இப்போதுள்லதும் அழகு ஜி! ப்ளாக் டிசைன் மாற்றியுள்ளது போலத் தெரிகிறதே. முந்தைய கமென்ட் பாக்ஸ் பெரியதாக இருந்தது ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ளாக் டிசைன் அதே தான். தலைப்பு மட்டும் மாற்றினேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. சுவாரஸ்யமான தகவல்கள், படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அருமை ஐயா
    படங்கள் வழக்கம்போலவே அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. அன்னவரம் தரிசனம் ஆச்சு. சிபாரிசோடு தெய்வதரிசனம் மனசுல எனக்கும் குற்ற உணர்வைத் தரும். த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்ற உணர்வு - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. படங்களும் செய்திகளும் அருமை.

    //கோவிலில் திருமணம் முடித்து, அங்கேயே அன்னதானம் சாப்பிட்டு, மெதுவாக உறவினர்களுடன் வீடு திரும்புகிறார்கள்.//
    எவ்வளவு எளிதாக இறைவன் சன்னதியில் திருமணம், அங்கு கிடைக்கும் இறைவனின் அருள்பிரசாதம். !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. ஹை! 1987-ல் இங்கு சென்றிருக்கிறேன். பழைய நினைவுகளைக் கிளறியதற்கு மிக்க நன்றி ஜீ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் அங்கே சென்றிருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. அன்னவரம் குறித்த பல விடயங்கள் ரசிக்க வைத்தன ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. இந்த ஊரின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கோவிலையும் கோவிலுக்கு செல்லும் வழியில், தங்களின் புகைப்படக்கருவியின் கண் மூலம் பார்த்தவைகளையும் அழகாய் படம் பிடித்துள்ளீர்கள். பாராட்டுகள்! அடுத்து சென்ற இடம் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. அன்னவரம் பற்றிய அரிய தகவல்கள்,
    படங்களே முக்கால் வாசி செய்தி
    சொல்லிச்சென்றவையாக,
    வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

      நீக்கு
  13. ஜி தமிழ்மணம் பலமுறை முயன்றும் சேர்க்கப்பட்டதாக பொய் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணம் - புரியாத புதிர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
    2. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  15. தமிழ்மணப் பெட்டியையும் காணவில்லை...தமிழ்மண லிங்கும் காணவில்லையே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணம் லிங்க் தர இயலவில்லை! காரணம் உங்களுக்குத் தெரியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. எங்க ஊர் பக்கமும் ஒரு ரத்ணகிரி கோவில் உண்டு. இங்க முருகன் குடி இருக்கார்.

    மணமக்கள் உக்காந்திருக்கும் படத்தை பார்த்ததும் ஒரு நிமிசம் ஷாக். ஒரு மாப்பிள்ளைக்கு ரெண்டு பொண்ணான்னு... கொஞ்சம் கூர்ந்து பார்த்த பொறவுதான் புலனாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர் பக்கமும் ரத்னகிரி! வந்துடுவோம்!

      ஒரு மாப்பிள்ளைக்கு ரெண்டு பொண்ணு! நல்லா கூர்ந்து கவனித்தது நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  17. நாங்கள் அன்னாவரம் சென்றதை சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன் அன்னதானம் நமக்குப் போறாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னதானம் நமக்குப் போதாது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  18. அன்னவரம் போகணும் என்று ஆசை உங்கள் பதிவு போகணுமென்ற ஆசையை இன்னும் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  19. புதுப் பொண்ணை தைரியமாய் படம் பிடித்து இருக்கிறீர்களே .மொழி தெரியாத யாராவதுசண்டைக்கு வந்தால் என்ன செய்வீர்கள் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற படங்கள் Discreet படங்கள் தான். காரில் பயணித்தபடியே எடுத்தவை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  20. வெங்கட்,

    நல்ல தகவல்.

    ஆமாம் நீங்கள் புகைபடமெடுத்த அந்த புதுப்பெண் நன்றாக தமிழ்பேசுவது வியப்பு.
    ”மாமோய்.... என்ன தனியா உட்டுட்டு நீங்க எங்கே போனீங்க! பாருங்க இந்தாளு என்னை ஃபோட்டோ புடிக்கறாப்ல!”

    அரியும் சிவனும் ஒன்னு .. இதை அறிந்தவர் வாயில கிரீம் பண்ணு.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....