வியாழன், 23 நவம்பர், 2017

சாமைசோறு – தினை வடை – சிக்கன் தாய் பூ - ஆதி மஹோத்ஸவம் 2017


சிக்கன் தாய் பூ


விற்பனைக்கு ஒரு ஓவியம்!

தில்லியில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும் என சில பதிவுகள் முன்னர் எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். இப்போதும் தலைநகர் தில்லியில் இரண்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று தில்லியின் பிரகதி மைதானில் நடக்கும் Trade Fair – நவம்பர் 14 முதல் 27 வரை எல்லா வருடங்களிலும் நடக்கும் நிகழ்வு இது. தில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இந்த நிகழ்வுக்கு செல்பவர்கள் ஏராளம். இந்த வருடமும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் செல்லவில்லை. நான் சென்றது இரண்டாம் நிகழ்வான ஆதி மஹோத்ஸவம். இந்தியா முழுவதிலும் இருந்து ஆதிவாசிகளை வரவழைத்து தில்லியின் INA பகுதியில் இருக்கும் Delhi Haat-ல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதம் [நவம்பர்] 16-30 வரை நிகழ்வு உண்டு. 


மஹூவா மாண்ட் - சாராயம்!


தலைகீழ் குடைகள் அலங்காரமாக!

இந்த சனிக்கிழமை அன்று நானும் நண்பர் பத்மநாபனும் இந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தோம். Delhi Haat உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு – ரூபாய் 30/- மட்டும். இரண்டு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல, வாயிற்பகுதியிலிருந்தே மாநில வாரியாக கடைகள்/ஸ்டால்கள் இருந்தன. அவர்கள் பகுதியில் தயாரிக்கும் பொருட்களை விற்பனைக்கும் பார்வைக்கும் வைத்திருந்தார்கள். நுழைவாயிலில் முதலில் பார்த்த விஷயம் – சாராயம் காய்ச்சுவது எப்படி? என்பது தான்! ஆஹா ஆரம்பமே சுதியோடு இருக்கே என நினைத்தபடி உள்ளே செல்ல, நிறைய கலைப்பொருட்களைப் பார்க்க முடிந்தது. ஆதிவாசிகள் தயாரிக்கும் பொருட்கள், அவர்கள் கைப்பட வரையும் ஓவியங்கள், அவர்கள் உணவு, கலை நிகழ்ச்சிகள் என நிறைய விஷயங்கள் அங்கே உண்டு. தமிழகத்திலிருந்து குறும்பர்கள் ஓவியம் வரைவதைப் பார்க்க முடிந்தது.


தொங்கல்ல உட்ருவோம்லே!” 


ஆட்டோ மாடல் - பித்தளையில்! 

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டேன். தமிழகத்திலிருந்து யார் வந்திருக்கிறார்கள் என பார்த்தால், குன்னூர்-ஊட்டி பகுதிகளிலிருந்து வந்திருந்தார்கள். யூகலிப்டஸ் தைலம், மலைத் தேன், எம்ப்ராய்டரி செய்த துணி, சாக்லேட் போன்றவை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். சில இடங்களில் மண்பாண்டங்களும் விற்பனைக்கு இருந்தன. உணவு என்று பார்த்தால், முறுக்கு போன்ற தின்பண்டங்கள் தான் இருந்தன. ஒரு இடத்தில் ஆங்கிலத்தில் Kheer, samasoru, vadai  என எழுதி இருக்க, அந்த ஸ்டாலுக்குச் சென்றோம். எங்களுக்குள் தமிழில் பேசிக் கொண்டதைப் பார்த்து, "ஆஹா தமிழா நீங்க?" எனக் கேட்டு, சாப்பிட்டுப் பார்க்கச் சொன்னார். பயத்தம்பருப்பு பாயசம் [20/-], சாமைச் சோறு, தினை பயன்படுத்திச் செய்த வடை [15/-] என வைத்திருக்க, வடையும் பாயசமும் சுவைத்தோம். "வடைக்கு காசு வேண்டாம் சார்" எனச் சொல்ல, வற்புறுத்தி காசு கொடுத்தேன்.


கலசத்தில் வேலைப்பாடுகள்... 


 எப்படி இருக்கு இந்த முக அலங்காரம்?


பொம்மை முகங்களோடு நிஜ முகம் ஒன்றும்!

ஆதிவாசிகளுக்கு என்று இருந்த நிலம் முழுவதும், இப்போது மற்றவர்கள் கையில் இருக்கிறது என்றும், அவர்களுக்கு பல குறைகள் இருப்பதையும் சொல்லி, எந்த அரசியல்வாதியோ, இல்லை மாநில அதிகாரியோ, அவர்களுக்கு உதவி செய்வதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். போலவே, ஆதிவாசிகளுக்குள்ளேயே பல பிரிவினர்களுக்கும் பிரச்சனை இருப்பதையும் சொல்லி, மத்திய அரசிலிருந்து எப்படி உதவி பெறுவது எனக் கேட்க, சில வழிகளைச் சொல்லிவிட்டு வந்தோம். அவர்களுடைய அத்தை, அம்மா ஆகியோரும் இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதாய் சொன்னார். அவர்களிடம் பேசிவிட்டு, கலைநிகழ்ச்சி என்ன என்று பார்த்தால், ஒரு பெண் மகாபாரதக் கதையை கதாகாலட்சேபம் போல நின்றபடியே சொல்லிக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் நின்று அதைக் கேட்டு ரசித்தோம்.


இவரை நினைவிருக்கிறதா? என் வலைப்பூவில் ஏற்கனவே இடம்பிடித்தவர்!


கச்சேரி ஆரம்பம்!


மர வடிவம்!

மணிப்பூர் மாநில ஸ்டாலில் பெரிது பெரிதாய் மோமோஸ் மாதிரி இருக்க, உருளைக்கிழங்கு மசாலாவுடன் அதைத் தருகிறார். புகைப்படம் மட்டும் எடுக்க, சாப்பிட்டுப் பாருங்கள் என்றார்! நான் அசைவம் சாப்பிடுவதில்லை எனச் சொல்ல, சற்றே சிரித்து "புகைப்படம் எடுத்ததற்கு நன்றி" எனச் சொன்னார். அதன் பெயர் என்ன என்று கேட்டால் ”தாய் பூ” என்றார்! நிறைய இடத்தில் புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்தோம். ராஜஸ்தான் மாநில ஸ்டால் ஒன்றில் வயதான பெண்மணி இருக்க, அவர் முன்னே சின்னச் சின்னதாய் பொம்மைகள் – நம் ஊர் செட்டியார் பொம்மைகள் போல – ராஜஸ்தான் ஆணும் பெண்ணும் – தலை மட்டும். மண் பொம்மையில் வண்ணம் பூசி, அலங்காரம் செய்து இருந்தார்கள். அவற்றில் ஒரு ஜோடி வாங்கிக் கொண்டேன் – கொலு வைக்கும் போது பயன்படுமே! பொம்மைகளோடு அந்தப் பெண்மணியின் படமும் எடுத்துக் கொண்டேன்.


குறும்பர்களின் ஓவியம்....


கதாகலாட்சேபம்.... 


கண்ணாடிக்குள்  ஒளிவிளக்கு!

ஆதிவாசிகள் நலனுக்காக இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள். இங்கே வந்து போக ஆகும் செலவை அரசாங்கமே தரும் என்று நினைக்கிறேன். ஆனால் இங்கே கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்ய முடிந்தால் அவர்களுக்குக் கொஞ்சமாவது லாபம் கிடைக்கும். அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் சுலபமாக முடியும் பிரச்சனைகள் அல்ல! விரைவில் அவர்களுக்கு நல்ல வழி பிறக்கட்டும். நிகழ்வை ரசித்து வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, இரண்டு சுவாரஸ்யமான மனிதர்களைக் கண்டோம். அவர்கள் பற்றிய தனிப்பதிவு விரைவில்! இந்தப் பதிவில் குறைவான படங்களே பகிர்ந்து கொண்டேன். இன்னும் சில படங்கள் வரும் ஞாயிறில் புகைப்பட உலா பகிர்வாக வெளி வரும்!

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்,

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. குறும்பர்கள் படமோ, ஓவியமோ வரிசையில் இல்லையே.... ஓ... ஓவியம் மட்டும் கீழே இருக்கிறது.

    சாமைசோறு. வடை படம் கூட இல்லையே...

    மற்ற படங்களை ரசித்தேன்.

    //இவரை நினைவிருக்கிறதா? //

    இல்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமை சோறு, வடை படம் - எடுக்கவில்லை! சரியாக exhibit செய்யாததும் ஒரு காரணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஹப்பா.. சலிப்பில்லாமல் பயணிக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார இறுதியில் இப்படி எப்போதாவது செல்வது தான். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  3. துளசி: அனைத்தும் சுவையான, சுவாரஸ்யமான தகவல்கள்...நீங்களும் தேடித் தேடி கலந்து கொண்டு எங்களுக்கு பகிர்கின்றீர்கள்...நன்றி ஜி.

    கீதா: சூப்பர் வெங்கட் ஜி! சாமை சோறு, திணை வடை ஆதி மஹோத்சவம் என்று பார்த்ததும்....ஆஹா. நம்ம ஆதிதான்
    வலைல ரெசிப்பிஸ் போட்டு மேளா நடத்திருக்கங்க போலனு நினைத்த்தேன்....அப்புறம் தான் தெரிந்தது இது டெல்லி மேளா என்று...ஹாஹாஹா...

    படங்கள் விவரங்கள் அருமை...வழக்கம் போல்...இங்கு இப்படி நடப்பதில்லையென்னு தோன்றியது...

    எவ்வளவு கலைகள்....முன்பு நீங்கள் பகிர்ந்து நினைவிருக்கு...

    சாமை சோறு வீட்டில் செய்வதுண்டு....திணை வடை படம் ஞாயிருக்கு ரிசேர்வ்ட் இல்லையா!!?

    காத்திருக்கோம் ஞாயிறு படங்கள் பார்க்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. முற்றிலும் வித்தியாசமான இந்தியாவினை உங்கள் பதிவுகள் மூலமாகப் பார்க்கிறோம். கலை, பண்பாடு, ரசனை என்ற நிலையில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. வழக்கம் போல அழகான படங்களுடன்
    இனிய தகவல்கள்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  7. அனைத்துத் தகவல்களும் அருமை. ஆனால், இவர்களை ஆர்கனைஸ் செய்து அவர்கள் பொருட்களை விற்கும் வியாபாரிகள்தான் நன்மை அடைவர். நேரடியாக மலைப்பகுதி மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பது தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரடியாக மலைப்பகுதி மக்களே விற்பனை செய்கிறார்கள் என்பதால் நன்மை இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. முக அலங்காரம் நல்லா இருக்கு....

    சாராயம் காய்ச்சுறதுலாம்கூடவா ஸ்டால்ல வைப்பாங்க?! விட்டா சிறு குறு தொழில்ல சேர்த்துடுவாங்க போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு தொழிலாகவே இப்போதும் பல இடங்களில் நடக்கிறது - சாராயம் காய்ச்சுவது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. நன்றி ஐயா. மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  10. குறும்பர்களின் ஓவியம் மஹன்சதாரா ஹாரப்பா எழுத்துகள் போல் தெரிகிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. ஆதி வாசிகளுக்காக நடப்படுகிறதா அருமை படங்களை பகிர்ந்தும் அருமை அவர்களுடன் பேசி குறைகளையும் அறிந்துவிட்டீர்கள் பொறுமைதான்.... இன்னும் படங்களின் அணிவகுப்பு ஞாயிறு அன்றா.... காத்திருக்கிறேன் பார்வையிட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  12. படங்கள் அழகு அண்ணா...
    பதிவும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  13. தலைப்புக்கும் போஸ்ட்டுக்கும் சம்பந்தமே இல்லையே:).. அது திணை அல்ல தினை:)..
    படங்கள் ரொம்ப அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  14. உங்கள் பதிவும் படங்களும் அருமை.

    /தில்லியில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும்/

    உண்மைதான். தமிழக நகரங்களில் இப்படி எதுவும் நடத்தப்படாதது ஏனோ தெரியவில்லை. அப்படியே நடந்தாலும் அவை அந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு
  15. மிக அழகான படங்கள்
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....