புதன், 29 நவம்பர், 2017

இரண்டாம் நாள் – மலைச்சிகரம் நோக்கி – மாமா மருமான் உணவகம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 13

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தங்குமிட ஜன்னல் வழியே தௌலாதார் மலைச்சிகரங்கள்....


வழியில் பார்த்த ஒரு ஆறு....
முதல் நாள் ஆட்டங்களில் கலந்து கொள்ளாத நானும் நண்பர் பிரமோத்-உம் காலையில் எழுந்து எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு தயாரானோம். மற்ற அறையில் இருந்த மூன்று நண்பர்களும் ஒரு வழியாகத் தயாரானார்கள். முதல் நாள் எங்களுக்கு வாகனம் அளித்த சர்தார்ஜியிடம் பேசியதில் CHசம்பா மாவட்டத்தில் உள்ள இரண்டு மூன்று இடங்களைப் பற்றிச் சொல்லி அங்கே சென்று வாருங்கள் – மிக அழகிய இடம் என்று சொல்ல, அந்த இடங்களை நோக்கித் தான் எங்கள் இரண்டாம் நாள் பயணம் இருந்தது. மற்றவர்கள் தயாராகும் வரை அறையின் ஜன்னல் வழியே தெரியும் தரம்ஷாலா நகரின் பனிபடர்ந்த தௌலாதார் மலைகளையும், மலைகள் முழுவதும் கட்டியிருந்த வீடுகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். மலையே தெரியாத அளவிற்கு வீடுகள் கட்டி இருக்கிறார்கள்!


சாலைப்பயணத்தில் - புல்வெளியுடன் கூடிய அழகிய வீடு...


வயலும் வீடும்....


நாங்கள் செல்லப்போகும் இடம் தரம்ஷாலாவிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் இந்த தூரத்தினை கடக்க மூன்றரை மணி நேரத்திற்கு மேலே ஆகும். தரம்ஷாலாவிலிருந்து நாங்கள் புறப்படவே காலை எட்டு மணிக்கு மேலே ஆகிவிட்டது. காலை உணவினை தரம்ஷாலாவில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் நேரமாகிவிடும். அதனால் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என புறப்பட்டோம். தரம்ஷாலாவிலிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் அருகே இருக்கும் நுர்புர் எனும் இடம் வரை சென்று அங்கிருந்து, பிரியும் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். நுர்புர் வரை வேகமாகச் சென்றுவிடலாம் – அங்கே சென்று காலை உணவை முடித்துக் கொண்டு பிறகு மேலே பயணிக்கலாம் என்பது எங்களுடன் வந்த ஓட்டுனரின் திட்டம். நாங்களும் அதற்கு ஒத்துக் கொண்டோம். 




உணவகத்தில்....

இந்த மாதிரி பயணங்களின் போது அவர்கள் சொல்லும் உணவகங்களுக்குச் செல்வதே ஒரு விதத்தில் நல்லது. அடிக்கடி அந்த பாதைகளில் பயணிப்பதால் எங்கே உணவு நன்றாக இருக்கும், எங்கே நன்றாக இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர் சொன்னபடியே நுர்புர் நோக்கி பயணித்தோம். விரைவாகச் சென்று கொண்டிருந்த பாதையில் பார்த்த சில காட்சிகளை சென்றபடியே படம் பிடித்தேன். புல்வெளியுடன் கூடிய அழகிய வீடுகள், பெரிய கற்களில் ஓடிச்செல்லும் ஆறு, அந்த ஆற்றின் கற்களில் இருந்த சிவன் சிலை, வயல்வெளி என பல!வற்றையும் பார்த்தபடியே நாங்கள் நுர்புர் சென்றடைந்த போது காலை 09.15 மணி. அங்கே இருந்த ஒரு உணவகத்தின் முன்னர் வண்டியை நிறுத்தினார் எங்கள் ஓட்டுனர். உணவகத்தின் பெயரே வித்தியாசமாக இருந்தது – மாமா Bபாஞ்சா Bபோஜனாலய்!


Step farming, மலைப்பாதை, வீடுகள்....
மாமா என்று அழைப்பது நம் தமிழ் மாமாவே! Bபாஞ்சா என்றால் மருமகன்/மருமான்! [சகோதரியின் மகன்] அதாவது மாமா மருமான் உணவகம்! மாமனும் மருமானும் சேர்ந்து நடத்தும் உணவகம்! அவர்கள் இருவருமே கடையை நடத்துகிறார்கள் – சில பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் தாங்களே உணவு தயாரிப்பதிலிருந்து உணவகத்தினை நிர்வாகம் செய்வது வரை பல பணிகளில் ஈடுபடுகிறார்கள். உணவகத்தில் இருந்த பித்தளைப் பாத்திரங்கள் பளபளவென தேய்க்கப்பட்டு இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி – நம் ஊர் வெங்கலப் பானை போல இல்லாமல் வேறு வடிவங்களில் இருந்த அந்தப் பாத்திரங்களையும் மாமா Bபாஞ்சாவில் எங்களுக்காக உணவு தயாரித்த Bபாஞ்சாவையும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நண்பரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


மலைப்பாதையில் அரசுப் பேருந்து....


பொதுவாக வட இந்திய மாநிலங்களில் காலை உணவு பராட்டா தான் என்பதால் இங்கேயும் அதே கிடைத்தது. லைட்டாக ஒன்றிரண்டு பராட்டாக்கள், தேநீர் என காலை உணவினை முடித்துக் கொண்டோம். காலை உணவினை சாப்பிட்ட பிறகு, மலைச்சிகரம் நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது. குறுகலான, மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையில் எங்கள் வாகனத்தினை செலுத்தினார் ஓட்டுனர். மலைப்பாதைகளில் செல்லும் ஹிமாச்சலப் பிரதேச வாகனம் ஒன்று பார்த்தபோது எப்படி இந்த குறுகிய பாதையில் பேருந்து செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றியது! அந்த மலைப்பாதைகளில் பேருந்தை இயக்கும் ஓட்டுனர் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் – இல்லாவிட்டால் பயணிக்கும் அனைவருக்கும் ஒரு நொடியில் மரணம் சம்பவிக்கலாம்!


கரடு முரடான மலைப்பாதை....


முதுகுப் பையிலிருந்து எட்டிப்பார்க்கும் ஆட்டுக்குட்டி....



மலைப்பாதையில் ஆடுகள்....


ஆடு மேய்ப்பவரும் ஆடுகளும்!

அந்த மலைப்பாதைகளில் நடுநடுவே ஆடுகளை மேய்ப்பவர்கள் வேறு – ஆடுகளை இருக்கும் பாதையில் ஓட்ட, மிகவும் கவனமாக வாகனத்தினைச் செலுத்தி ஆட்டு மந்தையைக் கடக்க வேண்டியிருந்தது. ஆடுகளை மேய்ப்பவர் முதுகில் ஒரு Backpack! அதில் ஒரு அறை திறந்திருக்க, அதிலிருந்து எட்டிப் பார்க்கிறது ஒரு குட்டி ஆடு! சின்ன ஆடு நடக்க முடியாது என்பதால் அப்படி வைத்திருக்கிறாராம் அந்த ஆடு மேய்ப்பவர்! நல்ல மனம் வாழ்க! இப்படியாக காலை உணவினையும் முடித்துக் கொண்டு எங்கள் இலக்கான மலைச்சிகரம் நோக்கி பயணித்து அங்கே சென்றடைந்த போது கண்ட காட்சி – வாவ்! சொல்ல வைத்தது – பனிபடர்ந்த மலைச் சிகரங்கள், கிராமிய வீடு என பார்க்கவே பரவசமாக இருந்தது.  நாங்கள் கண்ட காட்சிகள், இடத்தின் பெயர் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஜி!

      நீக்கு
  2. ரசனையான புகைப்படங்கள். அருமையான செய்திகள், வழக்கம்போல. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. படங்கள் அருமை
    முதுகுப் பையில் குட்டி ஆடு
    போற்றுதலுக்கு உரியவர்கள்
    தம=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. நீங்க சொன்னப்பொறவுதான் கவனிச்சேன் ஆட்டுக்குட்டிய...

    தண்ணிக்குடமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  5. வாசித்தேன் தெரிந்து கொண்டேன் பாதைகள் தான் மிகவும் பயமாக காட்சியளித்தது ரிஸ்க்குத்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதைகள் - கொஞ்சம் பயம் தரத்தான் செய்கிறது! :) சில இடங்களில் இதை விட மோசமான சாலைகளில் பயணித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  6. படங்களும் அருமை. இடங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. படங்களையும், பதிவையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வாசித்தாயிற்று...பின்னர் வருகிறோம் ஜி ..இது மொபைலில் இருந்து எனவதால்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. படங்கள் அழகு வெங்கட்ஜி! போகாத, போக முடியாத இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்கின்றீர்கள். மிக்க நன்றி

    கீதா: வெங்கட் ஜி அந்த முதுகுப் பையிலிருந்து எட்டிப் பார்க்கும் ஆடு அழகு!! ஆம் அவர் மனம் வாழ்க!!

    வித்தியாசமான பெயர் கொண்ட உணவகம். இங்கும் ஆன்டி அங்கிள் அப்படினு ஒரு மருந்தகம் அடையாரில் இருக்கு. அப்புறம் டாலர்ஸ் அண்ட் பௌன்ட்ஸ் அப்படினு ஒரு துணி மற்றும் இதரப் பொருட்கள் உள்ள கடை ஒன்று எங்கள் வீட்டிற்குத் திரும்பும் ரோட்டின் முனையில் இருக்கு...

    தொடர்கிறோம் நாங்களும் மலைச் சிகரத்திற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  10. படங்கள் இயற்கை அழகை சொல்கிறது.
    குட்டி ஆடு எட்டிப்பார்ப்பது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....