வியாழன், 30 நவம்பர், 2017

ஜோத் என்றொரு மலைச்சிகரம் – அற்புத அனுபவம்



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பனிபடர்ந்த மலைச்சிகரங்களும் இயற்கை எழிலும்...


தரம்ஷாலாவிலிருந்து 110 கிலோமீட்டர் பயணித்து நாங்கள் அடைந்த மலைச்சிகரம் ஜோத் எனும் இடம். கரடு முரடான மலைப்பாதையில் பயணித்து அந்த இடத்தினை அடைந்த போது நேரம் காலை 11.30 மணி. சூரியன் கொஞ்சம் மந்தமாகவே இருந்தார்! காலையில் கண் விழிப்பது கொஞ்சம் லேட் தான்! சூரியன் தனது கிரணங்களால் சுட ஆரம்பித்தாலும், இந்தப் பகுதியில் இருக்கும் குளிர் காற்று சூரியக் கிரணங்களின் வீரியத்தினைக் குறைத்திருந்தது. சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திய பின்னர் சில படிகள் வழியே மேலே ஏறி வர, ”Heighest Picnic Spot [Jot]” என்ற பதாகை எங்களை வரவேற்றது. சுற்றிச் சுற்றி மலைகள் – மலைகளில் வளர்ந்திருந்த தேவதாரு மரங்கள் – தூரத்துச் சிகரங்கள் முழுவதும் பனி மூடியிருக்க அற்புதமான காட்சி பார்த்த அனுபவம்.


பனிபடர்ந்த மலைச்சிகரங்களும் இயற்கை எழிலும்...


உச்சியில் சிறு குடிலும் பதாகையும்...


மலையுச்சி மண் குடிசை அருகே நான் - நண்பர் எடுத்த படங்களிலிருந்து...

மேலே இருந்த சிறு கொட்டகையில் அமர்ந்து கொள்ள சிறு பலகைகள் இருக்கின்றன. அங்கே அமர்ந்து குளிர்ந்த காற்று உடலை ஊடுருவிச் சென்று ஊசியாய்க் குத்தினாலும் அந்த அனுபவத்தினை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தோம். காணும் காட்சிகளை புகைப்படம் எடுக்க வேண்டும் என கைகள் பரபரத்தாலும், மனது ”அப்புறம் எடுக்கலாம், முதல்ல கொஞ்சம் அனுபவிடா ராஜா” என்று கட்டளையிட்டது. நீண்ட நேரம் அங்கே நின்றபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். ஐந்து பேருமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை! எங்கே பார்த்தாலும் இயற்கை எழில்! நின்று நிதானித்து அந்த சுகானுபவத்தினை மனதில் உள்வாங்கிய பிறகு சில புகைப்படங்கள் எடுக்கத் துவங்கினேன்.   


தண்ணீர் சுமக்கும் கிராமத்துப் பெண்மணி...


சிறு கோவிலும், பூஜை செய்யும் முதியவரும்....


இயற்கை எழில் - நண்பர் எடுத்த படங்களிலிருந்து...

சாலையோரத்தில் ஒரு சிறு கடை. அங்கே தான் மலைப்பாதையில் வரும் பேருந்தின் நிறுத்துமிடம் என்பதால் சில கிராமத்து மனிதர்கள் பேருந்திற்காகக் காத்திருந்தார்கள். கடைக்கு வியாபாரம் அந்த மனிதர்களால் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே! மலைச் சிகரத்தின் மீது அமைந்திருந்த சிறு கொட்டகைகளில் அமர்ந்தும், அதன் அருகே நின்றும் நானும் நண்பர் பிரமோத்-உம் படங்கள் எடுத்துத் தள்ளினோம். அந்தப் பகுதியில் பார்த்தால் ஒரு கிராமத்துப் பெண்மணி தலையில் இரண்டு பாத்திரங்களிலும், கைக்கு ஒன்றாக இரண்டு பாத்திரங்களிலும் தண்ணீர் சுமந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. மலைப்பகுதியில் இப்படி சுமையோடு நடப்பது எவ்வளவு கடினம் என்பது அப்படி நடந்தால் தான் நமக்குத் தெரியும்.


ஒரு வகை மஷ்ரூம்...


மஷ்ரூம் தந்த பெரியவர்...

பக்கத்திலேயே ஒரு சிறு கோவில். அதில் ஒருவர் ஏதோ பூஜை செய்து கொண்டிருந்ததையும் மலையுச்சியிலிருந்து பார்க்க முடிந்தது. இந்தப் பகுதி முழுவதுமே பனிகாலத்தில் பனிப்பொழிவினால் மூடப் பட்டிருக்கும். அச்சமயத்தில் மலைப்பாதையும் மூடிவிடுவதால் இங்கே செல்வது மிகவும் கடினமான விஷயம். மார்ச் மாத கடைசி அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் இந்தப் பாதையும் திறக்க முடியும். நாங்கள் சென்ற போது திறந்திருந்தாலும், தூரத்து மலைகள் அனைத்திலும் அடர்த்தியான பனிபடர்ந்திருப்பதைப் பார்த்து ரசிக்க முடிந்தது.  நீண்ட நேரம் குளிர்ந்த காற்று உடம்பில் பட, கொஞ்சம் சூடேற்றிக் கொண்டால் நல்லது எனத் தோன்றியது. அலுக்க அலுக்க படங்கள் எடுத்துக் கொண்டு வந்த வழியே கீழே இறங்கி, அப்பகுதியில் இருந்த கடைக்கு வந்தோம். கடைக்காரரிடம் தேநீர் சொல்ல, தேநீர் என்ற பெயரில் ஏதோ ஒரு திரவம் கிடைத்தது! சூடாக இருந்தது என்பதால் மட்டும் அதைக் குடிக்க, கொஞ்சம் தெம்பு கிடைத்தது!


இயற்கை எழில் - நண்பர் எடுத்த படங்களிலிருந்து...


இயற்கை எழில் - நண்பர் எடுத்த படங்களிலிருந்து...

இந்த மலைப்பகுதிக்கு நாங்கள் வாகனத்தில் வந்திருந்தாலும், குளிர்/பனி இல்லாத நாட்களில் இங்கே நிறைய சுற்றுலாப் பயணிகள் Trekking செய்ய வருகிறார்கள். இங்கேயும் ஒரு கைலாஷ் உண்டு. மணிமஹேஷ் கைலாஷ் யாத்ரா என செப்டம்பர் மாதங்களில் ஒரு சிறப்பு யாத்திரையை இப்பகுதி மக்கள் மேற்கொள்கிறார்கள்.  ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று தொடங்கி ராதாஷ்டமி அன்று முடியும் இந்த யாத்திரையில் பங்கு கொள்வது மிகவும் கடினமான ஒரு விஷயம். CHசம்பா மாவட்டத்திலிருந்து பேருந்தில் Bபார்மௌர் வரை வந்து, அங்கிருந்து ஹட்சர் வரை ஜீப்பிலும், ஹட்சரிலிருந்து 13 கிலோமீட்டர் நடந்தும் சென்று மணிமஹேஷ் அடைகிறது யாத்திரை. பக்கத்தில் மணிமஹேஷ் ஏரி. தவிர அங்கே இருக்கும் கௌரிகுண்ட் குளத்தில் பெண்களும், ஷிவ க்ரோத்ரி எனும் குளத்தில் ஆண்களும் குளித்து கைலாஷ் நாதரை தரிசிப்பது வழக்கம். அந்த குளங்களில் முறையே பார்வதியும், சிவனும் குளிப்பதாகவும் ஐதிகம்.


இயற்கை எழிலை ரசித்தபடி நான்! - நண்பர் எடுத்த படங்களிலிருந்து...


இயற்கை எழில் - நண்பர் எடுத்த படங்களிலிருந்து...

நாங்கள் வாகனங்களில் தான் சென்றோம் என்றாலும், நாங்கள் சென்ற சமயத்தில் இந்த மணிமஹேஷ் யாத்திரை [செப்டம்பர் தவிர மே, ஜூன், ஜூலை மாதங்களில் தனியார் நிறுவனங்களின் ட்ரெக்கிங் வசதி உண்டு] இல்லை.  ஜோத் மற்றும் சென்று அங்கே இயற்கை எழிலில் திளைத்திருந்தோம். கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு பெரியவர் கையில் வித்தியாசமான ஒரு காளான்! மிகவும் விலை அதிகமான அதை அந்தப் பெரியவர் கொடுத்து, வீட்டில் சமைத்து சாப்பிடுங்களேன் என்றார்! அதன் விலை கிலோ இருபதாயிரம் வரை கூடச் செல்லும் என்றும் தகவல் தந்தார்.  இப்படி இயற்கையை ரசித்ததோடு, சில பல விஷயங்களையும் தெரிந்து கொண்டு அந்த இடத்திலிருந்து புறப்பட மனதே இல்லாமல் புறப்பட்டோம்.  அங்கிருந்து அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. முதல் படத்தில் அடுக்கடுக்காய் மலைகளின் சிகரங்கள் தெரிவது அழகு.

    //காணும் காட்சிகளை புகைப்படம் எடுக்க வேண்டும் என கைகள் பரபரத்தாலும், மனது ”அப்புறம் எடுக்கலாம், முதல்ல கொஞ்சம் அனுபவிடா ராஜா” என்று கட்டளையிட்டது. //

    ஆம், உண்மைதான். அதேபோல, என்னதான் கேமிராவின் நாங்கள் இந்தக் காட்சிகளைக் கண்டாலும் நேரில் கண்களால், புலன்களால் அனுபவித்த பரவசம் வராது.

    ஆட்கள் வராதபோது அங்கிருப்போர் வியாபாரம் இன்றி வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனி மூடிய காலங்களில் வியாபாரம் இல்லை! வெளியூர்களுக்குச் சென்று விடுவார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. குடிசை படம் இரசிக்க வைத்தது ஜி
    தண்ணீர் சுமையுடன் மலை ஏறுவது எவ்வளவு சிரமம் திடகாத்திரமானவர்களே...

    சில மலைப்படங்கள் ஓவியம் போலவே நேர்த்தியாக உள்ளது வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. துளசிதரன்: அருமையான படங்கள் ஜி! வெள்ளிப் பனி மலை..பாரதியார் பாடல் நினைவுக்கு வருது..வித்தியாசமான அனுபவங்கள் தான் இல்லையா ஜி!! தொடர்கிறோம்

    கீதா: //காணும் காட்சிகளை புகைப்படம் எடுக்க வேண்டும் என கைகள் பரபரத்தாலும், மனது ”அப்புறம் எடுக்கலாம், முதல்ல கொஞ்சம் அனுபவிடா ராஜா” என்று கட்டளையிட்டது// ஹா ஹா ஹா அப்படித்தான் எனக்கும் தோன்றும் வெங்கட்ஜி!!! நேரில் கிடைக்கும் அனுபவம் தனிதானே இல்லையா ஜி!! கண் குளிரக் கண்டு அப்புறம் சரி மீண்டும் வர இயலுமோ இயலாதோ எனவே மனதிலும் மூன்றாவது விழியிலும் சேமிப்போம்னு சேமித்து அப்புறம் எஞ்சாய் செய்யலாம் தான்...

    அந்தப் பெண் பாவம்...இப்படி அங்குள்ளவர்கள் எல்லோருக்குமே தண்ணீர் சுமக்கத்தான் வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டிற்குள் தண்ணீர் வரும்படி எல்லாம் இருக்காதே..எப்ப்டி மேனேஜ் செய்கிறார்களோ பாவம் தான்...
    படங்கள் எல்லாம் அழகு!! பதிவும்...தொடர்கிறோம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான மலைப்பகுதி வீடுகளில் தண்ணீர் வரும்படி இருக்காது. சுமப்பது ஒன்றே வழி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  7. என்னது அந்த காளான் இருபதாயிரம் வரை இருக்குமா ?புகைப்படத்துடன் நன்றி. இயற்க்கை காட்சிகள் அற்புதம், பனியுடன்கூடியமலையின் அருகில் இருந்தும் நீங்கள் ஸ்வெட்டர் எல்லாம் யூஸ் செய்யவில்லை போலவே அந்த அளவு குளிர் தாங்கி பழகுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் தாங்கிப் பழக்கம்! :) அந்த சமயம் எங்களுக்குத் தேவையில்லை. டிசம்பர்-ஜனவரி மாதமாக இருந்தால் நிச்சயம் தேவை. நாங்கள் சென்றது குளிர் முடியும் தருணத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  10. பதிவைப் படித்ததும் 'பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே' என்று பாடத் தோன்றியது. எப்போதும் உங்கள் பதிவுகளில் தெளிவாக இருக்கும் படங்கள், இங்கு டல்லாக இருக்கக் காரணம், பனிதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் பனியே தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....