சனி, 16 டிசம்பர், 2017

ஓடி ஓடி உழைக்கும் அரசு ஊழியர்


இன்றைய நாளிலும் ரன்னர்!

பொதுவாகவே அரசு ஊழியர் என்றாலே, வேலை செய்யாமலேயே சம்பளம் மற்றும் கிம்பளம் வாங்குபவர்கள் என்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். அப்படி இருப்பவர்கள் சிலர் மட்டுமே என்றாலும் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் இப்படித்தான் என்று முடிவு செய்து விடுகிறார்கள். மற்றவர்கள் மீது இப்படிக் குற்றம் சுமத்துவது மிகச் சுலபமான ஒரு விஷயமாயிற்றே. இவர்களிலும் பல நல்லவர்கள் உண்டு என்பதை யாரும் உணர்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இப்படியான நல்லவர்களின் செயல்களை விளம்பரம் தருகிறார்கள் – சனிக்கிழமைகளில் எங்கள் பிளாக் பாசிட்டிவ் மனிதர்கள் போல! இன்றைக்கு இப்பதிவில் நான் அடையாளம் காட்டும் மனிதரும் அப்படி ஒரு பாசிட்டிவ் மனிதர் – அஞ்சல் துறையில் வேலை செய்யும் ஒரு அரசு ஊழியர்.


மீண்டும் “எங்கள் பிளாக்” பதிவு ஒன்றினையே இங்கே எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆரம்ப காலங்களில் அஞ்சல் துறையில் “ரன்னர்” என்ற பதவி ஒன்று உண்டு. இப்போது போல போக்குவரத்து அதிகம் இல்லாத காலகட்டம் – ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு தபால்களை எடுத்துச் செல்ல, அமர்த்தப்பட்ட ஒரு ஊழியர் தான் “ரன்னர்” – கிராமம் கிராமமாக, ஓடி, ஓடி தான் கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பார்கள்.  அது பற்றி அவர்கள் ”தமன்னாவிற்கு ஒரு கவிதை” பதிவில் எடுத்துக்காட்டிய வரிகள் இங்கே.

இன்றுள்ளது போல், அக்காலத்தில், எல்லா ஊர்களிலும், தபால் ஆபீஸ் கிடையாது; போஸ்ட்மேனுக்கு சைக்கிளும் கிடையாது. நகரத்திலிருந்து, ஒரு ஆள், கையில் தடியுடனும், (தடியின் உச்சியில், ஒரு சலங்கை கட்டப்பட்டிருக்கும்) தோளில், தபால்கள் நிரம்பிய பையுடனும், ஓடி வருவார். நடந்து போனால், தாமதமாகும். டெலிவரி செய்ய முடியாது என்பதால், ஓட வேண்டும் என்பது உத்தரவு. ஓடும் அளவுக்கு, உடல் திறன் உள்ளவர்களே, போஸ்ட்மேனாக சேர்க்கப்பட்டனர்.

 இப்படி ஓடும் தபால்காரருக்கு, 'ரன்னர்' என்று பெயர். ஒரு நாள், ஒரு ரூட்டில் போனால், மறுநாள், இன்னொரு ரூட்டில் ஓட வேண்டும். இதனால், கிராமங்களுக்கு, வாரம் ஒரு முறை தான், தபால் வரும். தினசரிப் பத்திரிகைகளும், இப்படி ஏழு நாள் பேப்பருடன், மொத்தமாக வாரக் கடைசியில் வந்து சேரும். பெரிய தலைவர்கள், பிரமுகர்கள் இறந்து போன தகவல்கள் கூட, பத்து நாள் கழித்து தான், தெரிய வரும்.


- ஆர்.சி.சம்பத் எழுதிய, 'சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ்ப் பத்திரிகைகள்' நூலிலிருந்து...

என்ன நண்பர்களே, “ரன்னர்” பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? இன்றைய பதிவுக்கு வருவோம். அந்தக் காலத்தில் ரன்னர் இருந்திருக்கிறார் ஓகே! இப்போது? இப்போதும் அப்படி ஒரு ரன்னர் இருக்கிறார். அவர் பெயர் சுக்பீர் சிங்! அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஒரு தபால் அலுவலகத்தில் அவர் பணி புரிகிறார். ஒவ்வொரு நாளும் அவரது வேலை, இந்தியா, மற்றும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை அந்தந்த அலுவலகங்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போதெல்லாம் யார் கடிதம் எழுதுகிறார்கள்? வேலையே இருக்காது என்று நீங்கள் சொல்லலாம். இப்போதும் அரசுத் துறைக்கு கடிதங்கள் வந்த படியே தான் இருக்கின்றன. அதுவும் ஆயிரக் கணக்கில், மூட்டை மூட்டையாக வருவதுண்டு.

காவல்துறையில் “Beat” என்ற ஒரு விஷயம் உண்டு – அடிப்பதை மட்டும் குறிப்பதில்லை இந்த வார்த்தை – ஒவ்வொரு காவலாளிக்கும் ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்திருப்பார்கள் – அதைத்தான் Beat எனும் வார்த்தை குறிப்பிடுகிறது. அதே போல அஞ்சல்துறையிலும் ஊழியர்களுக்கு “Beat” பிரித்துத் தருவார்கள். அப்பகுதியில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் வரும் தபால்களை கொண்டு சேர்ப்பது அந்த ஊழியரின் வேலை. நண்பர் சுக்பீர் சிங் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் Beat அரசு அலுவலகங்கள் – அதுவும் முக்கியமான அலுவலகங்கள் இருக்கும் பகுதி. ஒவ்வொரு நாளும் ஐந்து அல்லது ஆறு மூட்டைகளில் தபால்கள் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கும். சில மூட்டைகளை – பதிவுத் தபால்கள் அல்லாதவற்றை ஓரிடத்தில் கொடுத்தால் போதும், மற்றவற்றை, யாருக்கு வந்திருக்கிறதோ, அவரிடமே சேர்க்க வேண்டும் – அப்படி ஒரு மூட்டை தபாலாவது இருக்கும். அதுவும் அன்றைய வேலையை அன்றே முடிக்க வேண்டும் – இல்லை என்றால் மூட்டைகள் சேர்ந்து விடும்!

அதுவும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், திங்கள் கிழமைகளில் அவரது வேலை இரட்டிப்பாக இருக்கும். அவரது தபால் அலுவலகத்திலிருந்து, வாகனத்தில் மூட்டைகளைக் கொண்டு வந்து விட்டால், பிறகு அவர் வேலை தான். வாகனம் சென்று விடும். தனித்தனியாக தர வேண்டிய தபால்களை முதுகில் சுமந்தபடி இன்றைக்கும் ஓடுகிறார் இவர். அப்படி ஒரு ஓட்டம் ஓடுவார். நான்கு அடி உயரமே கொண்ட சுக்பீர் சிங், முதுகில் தபால் மூட்டையோடு, இப்படி ஓடிக்கொண்டிருப்பதை பல முறை பார்த்திருக்கிறேன். நிற்க நேரம் இல்லாது ஓடி ஓடியே பல அலுவலகங்களில் ஒவ்வொரு அறைக்கும் சென்று கடிதங்களைக் கொடுத்து, கையெழுத்து வாங்கிக் கொண்டு அடுத்த அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். சில நாட்களில் காலை ஒரு முறையும், மதியம் ஒரு முறையும் கடிதங்கள் கொடுக்க வேண்டியிருக்கும் – நாளொன்றுக்கு இரண்டு டெலிவரி!

தனது வேலையைச் செவ்வனே செய்யும் இவரிடம் சில முறை பேசியதுண்டு. ”என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதைப் போல சில வார்த்தைகள் மட்டும் பேசி ஓட ஆரம்பித்து விடுவார். தில்லியை அடுத்த ஒரு கிராமத்திலிருந்து காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு எட்டரை மணிக்கு அலுவலகம் வந்து விடுகிறார். மாலை வீடு திரும்ப ஏழு மணி ஆகிவிடும்! இப்படி ஓடி ஓடியே தபால்களை விநியோகிக்கும் சுக்பீர் சிங் தனது பதவிக்காலம் முழுவதும் இப்படியே ஓடிக்கொண்டு இருப்பதையே விரும்புகிறார் – இந்த வேலை எனக்கான வாழ்வாதாரம் – வாங்கும் சம்பளத்திற்கு நான் உழைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் எனும் சுக்பீர் சிங் ஒரு சிவ பக்தர் – வருடா வருடம் அமர்நாத் யாத்ரா சென்று பனிலிங்கத்தினை தரிசனம் செய்து வருவார். மற்றவர்கள் மலைப்பாதையில் தடுமாற, இவர் விரைவாகச் சென்று, தரிசனம் செய்துவிடுவார்! அத்தனை ஓட்டம் ஓடி உடலை Fit-ஆக வைத்திருக்கிறாரே!

தில்லியின் ராஜபாட்டையில் முதுகில் ஒரு காக்கி மூட்டை நிறைய தபால்களோடு ஓடிக்கொண்டிருக்கும் சுக்பீர் சிங் அவர்களை நீங்களும் பார்க்க முடியும்! ஓடி ஓடி உழைக்கும் இந்த அரசு ஊழியருக்கு இந்த வாரத்தின் பூங்கொத்தும், உங்கள் சார்பில் வாழ்த்துகளும்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து….. 

16 கருத்துகள்:

  1. சுக்பீர் சிங்கை வாழ்த்துவோம்.

    "இவர்களிலும் பல நல்லவர்கள் உண்டு என்பதை யாரும் உணர்வதில்லை." - சில என்பதற்குப் பதிலாக 'பல'என்று தவறாக வந்துவிட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக வரவில்லை. அரசு ஊழியர்களிலும் பல நல்லவர்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. ஓடி ஓடி உழைக்கும் இந்த அரசு ஊழியருக்கு இந்த வாரத்தின் பூங்கொத்தும்,
    அன்பின் நல்வாழ்த்துகளும்!...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. வாழ்த்துகள் சுக்பீர்சிங்கிற்கு!!! பாராட்டுகளும்!!!

    "ஓடி ஓடி உழைக்கணும்...ஊருக்கெல்லாம் கொடுக்கணும்"!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. சுக்பீர் சிங்கை வாழ்த்துகிறேன். எல்லா அரசு ஊழியர்களும் அப்படி இல்லண்ணே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. பாராட்டப்பட வேண்டிய மனிதர் சுக்பீர் சிங். வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. சுக்பீர் சிங் பாராட்டலுக்குரியவர் ஹபால் துறை பற்றி ஒரு விஷயம்பகிர விரும்புகிறேன் நான் பெங்களூரில் பயிற்சியில் இருந்த போது ஒரு ரெஜிஸ்டர் தபால் வரவேண்டி இருந்தது தபால் காரர் வரும் நேரத்தில் முகவரியில் நான் இருப்பது அரிது அந்த சமயம் ஜெனரல் போஸ்ட் ஆஃபீசுக்குச் சென்று அங்கிருந்த போஸ்ட் மாஸ்டரைப் பார்த்துஎனக்கு வர வேண்டிய தபாலை கேர் ஆஃப் போஸ்ட் மாஸ்டர் என்று அனுப்பினால் நான் வந்து பெற்று கொள்ள முடியுமா என்று கேட்டேன் அவரும் ஒப்புதல் தந்தார் அதிலிருந்து எனக்கு வரும் தபால்களை அவரிடம் சென்று நேரில் வாங்கிக் கொள்வது வழக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  7. போற்றுதலுக்கு உரிய மனிதர்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. தபால் துறையில் ரன்னர் - அந்தகாலத்தில் ஒவ்வொரு சமூகத்திலும் ஓடும்பிள்ளை என்று ஒருவர் இருப்பார். நல்லது, கெட்டது செய்திகளை சேர்ப்பிக்க வேண்டியது அவரது வேலை. அவர் வேலையை அவர் செய்கிறார் என்றபோதும், சுக்பீர் சிங் - பாராட்டப்பட வேண்டிய மனிதர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....