திங்கள், 18 டிசம்பர், 2017

சமேரா லேக் – மலைப்பாதைகளில் ஒரு பயணம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 20

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


CHசமேரா ஏரி... என்ன அழகு எத்தனை அழகு....  


CHசமேரா ஏரி......

பஞ்ச்புல்லாவிலிருந்து புறப்பட்டு வழியில் காலை உணவினை முடித்துக் கொண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் CHசமேரா லேக் – இந்த சமேரா ஏரி இயற்கையாக உருவானது அல்ல! மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இருக்கும் சமேரா அணைக்கட்டிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள்! மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் தண்ணீரை இங்கே தான் சேமித்து வைக்கிறார்கள். ராவி நதியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் இந்த ஏரியில் சேமிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த ஏரியும், அணைக்கட்டும். சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க வெகு அழகான ஏரியாக இருக்கிறது இந்த சமேரா ஏரி. அங்கே சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணங்கள் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடும் வசதியும் உண்டு.


CHசமேரா ஏரி... ஏரிக்குச் செல்லும் பாதை....


CHசமேரா ஏரி... பாதையில் ஒரு இரும்புப் பாலம்....

மிகவும் ரம்மியமான இடம் தான் என்றாலும் இங்கே சென்று சேர இருக்கும் பாதை மிகவும் ஆபத்தானதாகத் தான் இருக்கிறது. பாதைகள் சீராக இல்லாமல், பக்கவாட்டில் எந்தவித தடுப்பும் இல்லாமல் இருக்கின்றன. நடுநடுவே வரும் இரும்புப் பாலங்கள் அந்தரத்தில் தொங்குவது போலவே இருக்கின்றன. அப்படியான பாலங்களில் மெதுவாக பயணிக்கும்போது வரும் சப்தங்கள் கூட பயமுறுத்துகின்றன. ஆனால் இத்தனை அனுபவங்களோடு ஏரிக்கு அருகே செல்ல நம்மைத் தூண்டுவது சில இடங்களில் நாம் காணும் ஏரியின் தொலைதூரக் காட்சி தான்! தூரத்திலிருந்து பார்க்கும்போதே இவ்வளவு அழகாக இருக்கிறதே, அருகே சென்று பார்த்தால்…. என்ற எண்ணமே நம்மை அங்கே கொண்டு சேர்த்து விடுகிறது! நாங்களும் அப்படித் தான் பயணித்தோம்.


டல்ஹவுசியிலிருந்து CHசமேரா ஏரி... ஒரு வரைபடம்....


CHசமேரா ஏரிக்கு போகும் குகைப் பாதை....

டல்ஹவுசி நகரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு எங்கள் வாகனத்திலேயே சென்றோம் என்றாலும், போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன. வழியெங்கும் ரம்மியமான காட்சிகளைக் கண்டபடி பயணிக்கலாம். இங்கே செல்ல எல்லா நாட்களும் ஏதுவானது தான் என்றாலும், மழைக்காலங்களில் இங்கே செல்வதை தவிர்ப்பது நலம்! பாதை அப்படி! வழியே சில Tunnel-களும் அமைத்திருக்கிறார்கள். அந்த குகைப்பாதைகள் வழியே பயணிப்பது சுகானுபவம். ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களில் இப்படியான குகைப்பாதைகள் உண்டு. உள்ளே செயற்கையான வெளிச்சம் ஏற்படுத்தி இருந்தாலும் அதன் உள்வழியே பயணிக்கும் போது ஒரு வித பயத்துடன் கூடிய மகிழ்ச்சி நம் மனதுள். சமேரா ஏரி செல்லும் போதும் இப்படியான பாதை வழியே பயணித்தோம்.


CHசமேரா அணைக்கட்டு....


CHசமேரா ஏரிக்கு போகும் கரடு முரடான பாதை...


CHசமேரா ஏரிக்குச் செல்லும் பாதையில் பாலம்...



CHசமேரா ஏரிக்குச் செல்லும் பாதை...

சமேரா அணைக்கட்டு பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பு கருதி இங்கே யாரையும் அனுமதிப்பதில்லை. ஏரிக்குச் செல்லும் போது கூட வழியில் சில பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் உண்டு – “எங்கே செல்கிறோம், எங்கிருந்து வருகிறோம்” என்ற சில கேள்விகளுக்குப் பின்னரே நம்மை அனுமதிக்கிறார்கள். இப்படிச் செய்வது தேவையானதும் கூட! சாகசப் பயணம் போல பயணித்துக் கொண்டிருக்க, எங்கள் ஓட்டுனர் அந்த மலைப்பாதையில் வாகனத்தினை சர்வ சாதாரணமாக செலுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே இப்பகுதிகளுக்கு வந்திருப்பவர் என்பதால் பயமின்றி வாகனத்தினைச் செலுத்துகிறார். புதிதாகப் பயணிக்கும் எங்களுக்கு தான் கொஞ்சம் Thrill இருந்தது. நடுநடுவே சில இடங்களில் தொலைவிலிருக்கும் ஏரி தெரிய உற்சாகமானோம்.  சில மணித்துணிகளுக்குப் பிறகு ஏரிக்கரையைச் சென்றடைந்தோம்.


CHசமேரா ஏரிப் பகுதியில் பார்த்த ஒரு பொருள்...


CHசமேரா ஏரி. இன்னுமொரு படம்!

சின்னச் சின்னதாய் கடைகள் – அங்கே சில பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். சில பொருட்கள் என்னவென்று தெரியவில்லை எங்களுக்கு! அப்படி பார்த்த பொருள் ஒன்று மேலே கொடுத்துள்ளேன்! அது என்ன தெரியுமா? பெண்கள் உதட்டுச்சாயம் பூசிக்கொள்ள உதவும் Lip Stick வைக்கும் Stand! வழியெங்கும் அழகிய பூக்கள் பூத்துக் குலுங்க, அவற்றையும் படம் பிடித்துக் கொண்டே ஏரிக்கரைக்குச் சென்று சேர்ந்தோம்.  நாங்கள் சென்றபோது எங்களைத் தவிர வேறு சுற்றுலாப் பயணிகள் எவருமே இருக்கவில்லை! அத்தனை தனிமை. கடை வைத்திருந்தவர்கள், படகுத்துறை ஊழியர்கள் தவிர வேறு யாருமே சுற்றுலாப் பயணிகள் இல்லை! படகுத் துறையில் நின்று சில நிமிடங்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம். படகோட்டிகள் உணவு உண்ணும் சமயம் என்பதால் ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின்னரே படகுப் பயணம் செய்ய முடியும் என்றார்கள்.


CHசமேரா ஏரியும் படகுத் துறையும்....



CHசமேரா ஏரி - படகுத்துறையில் படகுகள்....

பல இடங்களில் படகுப் பயணம் செய்த அனுபவம் உண்டு என்பதால் இயற்கையை இரசித்தபடி அங்கே அமர்ந்திருந்தோம்.  ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீச, சுகமாக இருந்தது. அப்படியே தனிமையில் அமர்ந்து விடலாம் என்று தோன்றினாலும், அங்கே அமர்ந்திருப்பது சாத்தியமல்லவே! கடைகளில் சில உணவுப் பண்டங்களும் கிடைத்தன.  ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் நிறையவே விளைவதால் ஆப்பிள் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பர்ஃபி நிறையவே கிடைக்கும். இங்கேயும் அப்படி ஆப்பிள் பர்ஃபி விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அதில் அரை கிலோ வாங்கி அங்கேயே சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது.  ஹிமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த ஆப்பிள் பர்ஃபி சாப்பிட்ட பிறகு நண்பர்கள் தங்களது வீட்டிற்கும் கொஞ்சம் வாங்கிக் கொண்டார்கள். மேலும் சில நிமிடங்கள் அங்கே இருந்த பிறகு அங்கிருந்து மனதே இல்லாமல் புறப்பட்டோம்.


CHசமேரா ஏரி... தூரத்திலிருந்து...



CHசமேரா ஏரி - தூரத்திலிருந்து....

அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் எங்கே சென்றோம்? அங்கே என்ன விசேஷம் என்பதையெல்லாம் வரும் பகுதியில் சொல்கிறேன். நாளைய பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்…

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

18 கருத்துகள்:

  1. படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. அழகிய ஏரி.

    ராவி நதி! குல்ஸாரின் சிறுகதை நினைவுக்கு வருகிறது.

    குகைப்பாதைப் படத்தை ரசித்தேன்.

    அங்கு பார்த்த அந்தப் பொருள் பல்லாங்குழியில் பாதியை வெட்டி எடுத்த மாதிரி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பொருள் - Lip Stick Stand! பல்லாங்குழியில் பாதி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஆப்பிள் பர்ஃபி சாப்பிட்டதில்லை. செய்முறை தெரிந்தால் போடுங்களேன். :) இந்தப் பயணம் பற்றிப் படிக்கையில் எங்களோட கயிலை யாத்திரைப் பயணம் நினைவில் வந்தது. அங்கேயும் இப்படித் தான் பக்கவாட்டில் தடுப்புச் சுவர்கள் ஏதும் இருக்காது. ஒட்டில் வண்டி போகும். கொஞ்சம் ஒதுங்கினால் வண்டி அதலபாதாளம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிள் பர்ஃபி இதுவரை செய்ததில்லை. ஹிமாச்சல் நண்பரின் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்.

      கொஞ்சம் ஒதுங்கினால் அதலபாதாளம் - உண்மை. பல மலைப்பகுதிகளில் இது தான் நிலை - குறிப்பாக வடக்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. ஏரி, அணைக்கட்டு, படகுத்துறை அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. பதிவு வெளியானதும் வாசித்துவிட்டேன்...கருத்து போடும் போது கணினி பிரச்சனை....
    ஏரி மனத்தைத் கொட்டிப் போடுகிறது....அழகு அழகு...ஹிமாச்சல் என்றாலே குகைகள், பாலங்கள் ... டநல் வியூ படம் ரொம்ப அழகு....ரசித்தேன்....பாலம் திக் திக் தான் அதுவும் கீழே பார்த்தால். ...

    ஆப்பிள் barfi மற்றும் fruit பர்பி கல்லூரியில் கேனிங் அண்ட் food preservation கற்ற போது சொல்லிக் கொடுத்தார்கள்....நன்றாக இருக்கும்..குறிப்புகள் இருக்கு....மனளியில் ஆப்பிள் festival காட்சியிலும் சாப்பிட்டுருக்கேன்...செய்தும் இருக்கேன்...3 செய்முறைகள்...
    இது போன்ற இடங்களில் காத்திருப்பது போராடிக்காது இல்லையா ஜி...நன்றாக அனுபவித்து ரசித்து புகைப்படமும் எடுத்து என்று....நன்றாகவே இருக்கும்... தொடர்கிறோம் ஜி

    நீங்களும் போடுங்களேன் ஜி...ரெசிப்பி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெசிப்பி - ஹிமாச்சல் நண்பரின் வீட்டில் கேட்டு கிடைத்தால் போடுகிறேன். நீங்களும் உங்கள் நினைவில் இருந்தால் நீங்களும் போடலாமே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. இடங்களும் படங்களும் அருமை. வாவ் இடங்கள். ஆப்பிள் பர்பி படம் காணோமே. மரத்திலிருந்து ஆப்பிள் சாப்பிடவேண்டும் என்பது என் ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்திலிருந்து ஆப்பிள் பறித்து சாப்பிட மணாலி செல்லலாம் - ஜுன் மாதத்திற்குப் பிறகு, செப்டம்பர் மாதம் வரை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. சூப்பரான இடங்கள், அந்த மலை முகட்டில், ஆற்றை பார்த்தமாதிரி வீடு கிடைச்சா எப்படி இருக்கும்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளைய பதிவில் அப்படி ஒரு படம் போடப் போகிறேன் - மூன்று வீடு உள்ளது - அதில் ஒண்ணு உங்களுக்கு! ஓகேவா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. விடிய வோட்டும் போட்டுக் கொமெண்ட்டும் போட்டேன், கொமெண்ட் அனுப்புப்படவில்லையோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய முந்தைய கருத்துரை வரவில்லையே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....