புதன், 7 மார்ச், 2018

குஜராத் போகலாம் வாங்க – உலுக்கப்பட்ட நகரம் – ப்ராக் மஹால்….



இரு மாநில பயணம் – பகுதி – 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ப்ராக்g மஹால் - வெளிப்புறத் தோற்றம்




ப்ராக்g மஹால் - வெளிப்புறத் தோற்றம் - வேறு கோணத்தில்...

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி பற்றிச் சொல்லும் போது அதன் கூடவே Bபுஜ் பற்றியும் சேர்த்துத் தான் சொல்கிறார்கள். பேசும்போது கட்ச்-Bபுஜ் என்றே சொல்வதுண்டு. ஹோட்கா கிராமத்தில் தங்குமிட உரிமையாளர்களின் வீடுகளுக்குச் சென்று பார்த்த பிறகு நாங்கள் எங்கள் ஓட்டுனர் முகேஷ் உடன் புறப்பட்டுச் சென்ற இடம் Bபுஜ் தான். 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி – காலை 08.46 – இந்தியாவின் குடியரசு தினக் கொண்ட்டாட்டதில் மூழ்கியிருந்தவர்களுக்கு ஒரு பேரிடி. இரண்டே நிமிடம் தான் அந்த ஆட்டம் என்றாலும் மரண ஆட்டம். ஊரையே உலுக்கிப் போட்டது அந்த அதிர்வு! ரிக்டர் ஸ்கேலில் 6.9 அளவு. மொத்த நகரமே பாழ் ஆனது. அந்தப் பகுதியில் இன்றைக்கும் இடிபாடுகள் பல உண்டு.  அந்த நகரத்திற்குத் தான் நாங்கள் பயணப்பட்டோம்.


ப்ராக்g மஹால் - வெளிப்புறத் தோற்றம்


ப்ராக்g மஹால் - தர்பார் ஹால் 


ப்ராக்g மஹால் - வெளிப்புறத்தில் ஜன்னல்கள் - அதில் புறாக்கள்...


ப்ராக்g மஹால் - வெளிப்புறத் தோற்றம்
இன்னுமொரு படம்......

வழியில் கழுதை இழுக்கும் வண்டி, ஒட்டகம் இழுக்கும் வண்டி என வித்தியாசமான வண்டிகளைப் பார்த்துக் கொண்டே, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு பயணப்பட்ட பிறகு நாங்கள் வந்து சேர்ந்த இடம் Bபுஜ் நகரம். நகரின் புராதனச் சின்னங்கள் பலவும் இடிபாடுகளுக்கு உட்பட்டு இருக்கிறது. மக்கள் வசிக்கும் வீடுகள் பெரும்பாலும் புதுப்பிக்கப்பட்டு இருக்க, புராதனச் சின்னங்களான அரண்மனைகளின் பகுதிகள் புதுப்பிக்க முடியாத அளவு இடிபாடுகளுடன் காட்சி அளித்து, அந்த சோகம் ததும்பிய நாளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. எத்தனை உயிர் இழப்பு, பொருட் சேதம்! இயற்கை தனது வீர்யத்தை அவ்வப்போது காண்பித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அதை விட மனித சக்தி பெரியது என நாம் நினைப்பதை நிறுத்துவதில்லை. ஒவ்வொரு இடத்திலும் இப்படி இடிபாடுகளைப் பார்க்கும்போது மரண ஓலம் கேட்பது போல ஒரு உணர்வு எனக்குள்.


ப்ராக்g மஹால் - மணிக்கூண்டும் புறாக்களும்....


ப்ராக்g மஹால் - சிதிலமடைந்த பகுதிகள்....


ப்ராக்g மஹால் - நல்லதொரு வாசகம்...


ப்ராக்g மஹால் - சிதிலமடைந்த உப்பரிகைகள்...

நாங்கள் முதலில் பார்க்கச் சென்ற இடம் ப்ராக்g மஹால் எனும் இடம் தான். வெளியிலிருந்து பார்க்கும்போதே நாம் பார்ப்பது இந்தியக் கட்டிடமா இல்லை வெளிநாட்டின் ஏதோவொரு நகரத்துக் கட்டிடம் ஒன்றா என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம்! ப்ராக்மல்ஜி என்ற மஹாராஜாவில் 1860-களில் நிர்மாணம் செய்யப்பட்ட ஒரு மஹால் தான் இந்த ப்ராக்g மஹால். கர்னல் ஹென்றி செய்ண்ட் வில்கின்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த மஹால் இத்தாலிய கோத்திக் கட்டமைப்பினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தர்பார் ஹாலும் மேலுள்ள மணிக்கூண்டும் ரொம்பவே அழகு.  இந்த ப்ராக்g மஹால் பார்க்க நுழைவுக்கட்டணம் உண்டு [ரூபாய் 20/-] காமிராவுக்கும் கட்டணம் உண்டு [ரூபாய் 30/-]! காலை 09.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிறகு மாலை 03.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.  


ப்ராக்g மஹால் - மார்பிள் கற்களில் கார்விங்....


ப்ராக்g மஹால் - அலங்காரச் சர விளக்குகள்....


ப்ராக்g மஹால் - தர்பார் ஹால்.... 


ப்ராக்g மஹால் - தர்பார் ஹால்...

ப்ராக்g மஹால் உள்ளே பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. ராஜாவின் தர்பார் ஹால் பிரம்மாண்டம் – கலைநயம் மிக்க இந்த இடத்தினை வார்த்தைகளில் எழுதுவது கடினம். மிகவும் அழகான சிற்ப வேலைப்பாடுகள், பிரம்மாண்ட அலங்கார தொங்கும் விளக்குகள், இருக்கைகள், என அனைத்திலும் பிரம்மாண்டம்.  தர்பால் ஹால் தவிர, பல்வேறு அறைகளும் இங்கே உண்டு. ஒவ்வொரு அறையிலும் ராஜாக்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள், இசைக்கருவிகள், உடைகள், டோலி எனப்படும் இருக்கைகள், கடிகாரங்கள், அரண்மனையில் பயன்படுத்திய பெரிய பாத்திரங்கள், வேட்டையாடிய மிருகங்கள் பதப்படுத்தப்பட்டவை] என நிறைய விஷயங்கள் உண்டு. வேடையாடிய மிருகங்களின் பற்களே ஒரு அலமாரி நிறைய இருக்கிறது! எத்தனை மிருகங்களைக் கொன்றிருப்பார்கள் என நினைக்கும்போதே நெஞ்சில் வலி.


ப்ராக்g மஹால் - தர்பார் ஹால்....


ப்ராக்g மஹால் - நகர் உலா வர டோலிக்கள்....


ப்ராக்g மஹால் - கொல்லப்பட்ட மிருகங்கள்... 
வெற்றிச் சின்னங்களாக


ப்ராக்g மஹால் -  இசைக்கருவிகள்....

இப்படி ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே போனால் சில படிகள் வருகிறது. அந்தப் படிகள் வழியே மேலே சென்று பார்க்க முடியும். அங்கேயும் சில அறைகள். இந்த மஹாலில் ஒரு சிறப்பம்சம் இங்கே இருக்கும் மணிக்கூண்டு. ஐந்து மாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மணிக்கூண்டு மிகவும் பிரபலமான ஒன்று. என்ன ஒரு பயம் – குறுகலான படிகள் வழியே செல்லும்போது சுவர்களில் தெரியும் இடிபாடுகள் பார்த்து பயப்படக்கூடாது – நிலநடுக்கம் இந்த கட்டிடங்களையும் விட்டு வைக்கவில்லை! சரி செய்திருக்கிறார்கள் என்றாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது! மணிக்கூண்டின் உள்ளே சுற்றிச் சுற்றிச் செல்லும் படிகள் வழியாக மேலே செல்ல முடியும். மேலிருந்து மொத்த நகரத்தினையும் பார்க்க முடிகிறது.


ப்ராக்g மஹால் - பிரம்மாண்டப் பாத்திரங்கள்.... 


ப்ராக்g மஹால் - கொல்லப்பட்ட மிருகங்களின் பற்கள்...


ப்ராக்g மஹால் - மணிக்கூண்டிலிருந்து நகரம் - ஒரு பார்வை...


ப்ராக்g மஹால் - மணிக்கூண்டிலிருந்து நகரம் இன்னுமொரு பார்வை...

இந்த மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் வேலை செய்வதற்கு பயன்படுத்திய முறை – எடைகளைக் கொண்டு இயக்கும் முறை. ஐந்து மாடிகளில் - ஒவ்வொரு மாடியிலும் கடிகாரத்தின் ஒவ்வொரு பகுதிக்கான கருவிகள் இருக்கின்றன. Pendulam – எடை மட்டுமே 100 கிலோ! மேலே இருக்கும் மணிகள் சுமார் 700 கிலோ எடை கொண்டவை! பதினைந்து நிமிடத்திற்கு 4 முறையும், அரை மணி நேரத்திற்கு எட்டு முறையும், முக்கால் மணிக்கு 12 முறையும், ஒரு மணி நேரத்திற்கு 16 முறையும் இந்த மணி ஒலிக்கிறது. பிரம்மாண்டமான மணிகளைப் பார்க்கும்போதே அதன் ஒலி எப்படி இருக்கும் என்று யோசிக்க முடிகிறது. இந்த மணிக்கூண்டின் மொத்த உயரம் 45 மீட்டர்! அதாவது சுமாராக 148 அடி! சராசரி இந்திய ஆணின் உயரமான 5.5 அடி என்றால் சுமார் 27 பேர் ஒருவருக்கு மேல் ஒருவராக நிற்கும் உயரம்!


ப்ராக்g மஹால் - பிரம்மாண்ட மணிகள்....


ப்ராக்g மஹால் - இடிபாடுகள் - பயம் வருகிறதல்லவா?



ப்ராக்g மஹால் - மணிக்கூண்டு...


ப்ராக்g மஹால் - உட்புறத் தூண்களில் அழகிய வேலைப்பாடு...

இந்த இடத்தில், நானும் நண்பரும் எடுத்த படங்கள் அனைத்தையும் இங்கே பகிர்ந்து கொள்வது முடியாத செயல். சில படங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். Bபுஜ் நகருக்குச் சென்றால் தவிர்க்கக் கூடாத இடம் இந்த ப்ராக்g மஹால். நாங்கள் பார்த்த இந்த இடத்தினை நீங்களும் பார்த்து ரசிக்கலாம் – ஒரு முறையாவது. இன்னும் செய்திகள் அடுத்த பகுதியில்….

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

26 கருத்துகள்:

  1. புஜ் சம்ப்வம்...இயற்கை அன்னையின் மிக மிகக் கொடூரமான கோரத்தாண்டவம் தான்...ஆனாலும் உங்களின் இந்த வரிகளை //எத்தனை உயிர் இழப்பு, பொருட் சேதம்! இயற்கை தனது வீர்யத்தை அவ்வப்போது காண்பித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அதை விட மனித சக்தி பெரியது என நாம் நினைப்பதை நிறுத்துவதில்லை.// டிட்டோ செய்கிறேன்....உண்மைதான் அதான் இன்னும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. வழியில் கழுதை இழுக்கும் வண்டி, ஒட்டகம் இழுக்கும் வண்டி என வித்தியாசமான வண்டிகளைப் பார்த்துக் கொண்டே,//

    வித்தியாசமான அனுபவம்.....ப்பராக்G மஹாலின் வெளியில் மேலே இருக்கும் ஜன்னல்கள் அழகு....அதே சமயம் சிதிலமடைந்த பகுதிகள் வருத்தம் அளிக்கிறது. சக்ஸஸ் பற்றிய அந்த வாசகம் செம..

    //என்ன ஒரு பயம் – குறுகலான படிகள் வழியே செல்லும்போது சுவர்களில் தெரியும் இடிபாடுகள் பார்த்து பயப்படக்கூடாது – நிலநடுக்கம் இந்த கட்டிடங்களையும் விட்டு வைக்கவில்லை! சரி செய்திருக்கிறார்கள் என்றாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது! //

    கேட்க நினைத்தேன் நீங்களே சொல்லிட்டீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படிகளில் செல்லும்போது “இடிந்து விடுமோ?” என்ற எண்ணம் வந்தது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. எல்லா படங்களும் அழகு...பாத்திரங்கள், இசைக்கருவிகள் படம்....ஒரு வியூ சிதிலமடைந்த இடங்கள், மற்றொன்று கொஞ்சம் புதுப்பிக்கப்பட்ட இடங்கள்...

    மணிக்கூண்டு பற்றிய செய்திகள் பிரமிப்பான தகவல்கள்...உயரம் பிரமிப்பு நல்ல அனுபவம்...

    தொடர்கிறோம் ஜி

    பதிலளிநீக்கு
  4. மணிக்கூண்டு கடிகாரம் இப்பவும் வேலை செய்கிறதா? 2001 இல் சிதிலமடைந்து வேதனைதான் என்றாலும் எத்தனை காலம் தாக்குப் பிடித்திருக்கிறது என்கிற பிரமிப்பு. மிகவும் பிரம்மாண்டமாய், கலைநயத்துடன் காணப்படுகிறது. சொல்லப்பட்டிருக்கும் விவரங்களும் மிகவும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடிகாரம் வேலை செய்வதாகத் தான் தெரிகிறது. நாங்கள் படம் எடுத்த நேரமும், கடிகாரம் காண்பித்த நேரமும் கிட்டத்தட்ட ஒன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. எவ்வளவு கலைநுற்பத்துடன் செய்து இருக்கின்றார்கள் அன்றைய தொழிலாளர்கள் சரித்திரத்தில் நிற்பதற்காக உழைத்தவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைநயம், திறமை இருந்ததோடு, கடமையைச் சரி வரச் செய்யும் எண்ணமும் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. கலைநயம் காணும் படங்களில் தெரிகின்றது.. ஆனால்
    இயற்கைக்கு முன்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கைக்கு முன்.... மனித சக்தி எம்மாத்திரம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. புஜ்நகரம் என்றால் ந்லநடுக்கம் நினைவுக்கு வரும் நிலநடுக்கமேற்பட்ட போதுஎன்சித்தப்பா குஜராத்தில் இருந்தார் அவரதுநலமறிய நாங்கள்விழைந்ததும் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ உங்கள் சித்தப்பா அப்போது அங்கே இருந்தாரா..... பயங்கர அனுபவம் தான் அது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. ப்ராக் மகாலின் ஜன்னல் வித்தியாசமா இருக்கு. கொல்லப்பட்ட மிருகங்களின் பற்கள் இவ்வளவு இருக்குன்னா எம்புட்டு மிருகங்கள் கொல்லப்பட்டிருக்கும்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம்புட்டு மிருகங்கள் கொல்லப்பட்டிருக்கும்? கணக்கே இருந்திருக்காது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  9. உலுக்கப்பட்ட நகரத்தின் கலைக் களஞ்சியம் என்னையும் உலுக்கிவிட்டது. அதுவும் உப்பரிகை... இளவரசி... கீழே குதிரையில் காதலன்.. நல் இரவு.. அவள் திரைச் சீலையை உபயோகப்படுத்தி கீழே இறங்கி வருகிறாள்.. காதலன் அவளைக் கவர்ந்து செல்கிறான்...

    புலிப் பல்லையா இப்படி சேகரித்திருக்கிறார்கள். மனுஷனுக்கு எதில்தான் ஆசை என்பதற்கு விவஸ்தை இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்பரிகையில் இளவரசி. கீழே காதலன்!

      ஆஹா நல்ல கற்பனை!

      புலிப்பல் மட்டுமல்ல. பல மிருகங்களின் பற்கள்... எதில் தான் ஆசையில்லை மனிதனுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பிரம்மாண்ட கட்டிடம்.. பிரமிபூட்டும் தகவல்கள். அனைத்து புகைப்படங்களும் அழகு. தர்பாரின் அழகும்,சிற்பங்களின் கலையம்சமும் மனதை கவர்ந்தது. வேட்டையாடுவது அரச பரம்பரைக்கு புதிதில்லையென்றாலும்,வேட்டையாடிய விலங்குகளின் சேகரிப்புகளை கண்டால் வருத்தம் எழுகிறது. மணிக்கூண்டின் உயரமும் காலத்தை கணிக்கும் கால அளவைகள் பற்றிய செய்திகளும் சுவாரஸ்யமானவை. சிதைந்த கட்டடங்களை காணும் போது மணிக்கூண்டின் உச்சி வரை எப்படி ஏறினீர்களோ என்ற பயம் வருகிறது.மஹால் பற்றி விரிவான செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படியேறிச் சென்று விட்டோமே தவிர, உள்ளுக்குள் கொஞ்சம் பயம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. அருமையான பதிவு.
    அழகான கட்டிடம் தூண்கள் கலைநயத்துடன் இருக்கிறது.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. பார்த்திருக்கோம் என்றாலும் பூகம்பத்துக்கு முன்னாடி! படங்கள் எல்லாம் ஒவ்வொரு கதை சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூகம்பத்திற்கு முன்னாடி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  13. TravelXP என்ற தொலைக்காட்சி சானலில் BHUJ நகரின் புகழ்பெற்ற Prag Mahal (ப்ராக் மஹால்) Aina Mahal (அய்னா மஹால்) போன்ற பிரம்மாண்ட கட்டடங்களை விரிவாகக் கட்டினார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாமல் தங்கள் அளித்த படங்கள் பதிவு எல்லாம் வெகு சிறப்பாய் அமைந்துள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....