வியாழன், 3 மே, 2018

மனதை விட்டு அகலாத காட்சி…



இவர்கள் அவர்களல்ல....
படம் - இணையத்திலிருந்து...

சென்ற வாரத்தில் ஒரு நாள் – அலுவலகத்திலிருந்து வீடு திரும்போதே எட்டு மணி! காலை எட்டரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது – சற்றேறக்குறைய 12 மணி நேரம் – அதில் பதினோறு மணி நேரம் அலுவலகத்தில் பணி புரிந்திருக்கிறேன் – உடம்பு முழுவதும் ஓய்வு கொடுக்கச் சொல்லி கதறிக் கொண்டிருந்தது – கண்களும் கொஞ்சமாவது என்னை மூடிக்கொள்ள அனுமதி தா என்று கெஞ்சியது. வீட்டிற்குச் சென்று ஒரு குளியல் போட்டு சிம்பிளாக ஒரு அவல் உப்புமா செய்து சாப்பிட்டுப் படுக்க வேண்டியது தான் என நினைத்தபடி வந்து கொண்டிருந்தேன். பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்தபோது எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரே கூச்சல் – சண்டை….

குடியிருப்புப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களை நான் அறிந்திருக்கவில்லை. யார் இருக்கிறார்கள், எங்கே வேலை செய்கிறார்கள் என எதுவும் தெரியாது. இருக்கும் பல குடும்பங்களில் நான் அறிந்த குடும்பங்கள் ஒற்றை இலக்கத்தில் தான். யார் எந்த வீடு என்பது கூடத் தெரியாது. எத்தனையோ பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கலாம் – வீட்டுக்கு வீடு வாசப்படி! நான் பகல் நேரம் முழுவதுமே வீட்டில் இருப்பதில்லை என்பதால் இந்த விவரங்கள் அவ்வளவாகத் தெரியாது. அப்படி ஒரு குடும்பம் தான் சண்டையில் ஈடுபட்டு இருந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை – இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் பிடித்து இழுத்தும், தள்ளியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமும் – எதற்கு சண்டை என்று தெரியவில்லை.

சண்டை ரொம்ப நேரமாகவே நடக்கிறது போலும். பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆண் காவலர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். அவரால் இந்தப் பெண்கள் சண்டையை விலக்க முடியவில்லை. அலைபேசி மூலம் பெண் காவலர்களை வரவழைக்கப் பேசிக் கொண்டிருந்தார். மாமியார், மருமகளை இழுத்துக் கொண்டு இருக்கிறார் – மருமகளோ மாமியாரின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டு, அவரை தள்ளிவிட முயற்சி செய்கிறார். இத்தனை நடந்து கொண்டிருக்கும்போதும் அவர் வீட்டிலிருந்து ஒரு ஆண் கூட வெளியே வரவில்லை – அந்தப் பெண்ணின் கணவர் உட்பட. பார்த்துக் கொண்டிருக்கும் யாருமே சண்டையை விலக்க முயற்சிக்கவில்லை – நான் உட்பட!

பக்கத்திலிருந்த பூங்காவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மூலமாகத் தெரிந்த விஷயம் – இது அடிக்கடி நடக்கும் சண்டை. மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆவதில்லை. ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் பெற்ற பிறகும் சண்டை ஓயவில்லை. ஆண் குழந்தையை மட்டும் வைத்துக் கொண்டு மருமகளையும், பெண் குழந்தையையும் விரட்டி விட்டார்களாம். எனது ஆண் குழந்தையைக் கொடு, என்று அவ்வப்போது அந்தப் பெண் வந்து கேட்க, சண்டை நடக்குமாம். இன்றைக்கும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதில் குடியிருப்பு வாசிகள் யாருமே தலையிட முடியாது. பல முறை காவல் நிலையத்திலிருந்தும், பெண்களுக்கான ஆதரவு கொடுக்கும் அரசுத்துறை அலுவலர்கள் வந்தும் சொல்லிப்பார்த்து விட்டார்கள். தீர்வே இல்லை என்றும் தெரிந்தது.

மாமியார், மருமகளை, குடியிருப்புப் பகுதியிலிருந்து எப்படியாவது இழுத்துக் கொண்டு வெளியே மந்திர் மார்க் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட முயற்சி செய்கிறார். இருந்த ஒரே ஆண் காவலர் சண்டையைத் தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் நடந்து கொண்டிருக்கிறார். சில நிமிடங்கள் அங்கே இருந்தாலும் என்னாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை – யாரென்று தெரியாமல், எதற்குச் சண்டை என்றும் தெரியாமல் தலையிட எனக்கும் இஷ்டமில்லை. ஆனால் அந்த இடத்தில் இருந்த போது மட்டுமின்றி, சில நாட்கள் வரை என்னை ரொம்பவே பாதித்த ஒரு காட்சி உண்டு. அது…..

சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் பெண் குழந்தை, “எங்க அம்மாவை, பாட்டி அடிக்கிறாங்க, பாட்டி அடிக்கிறாங்க! அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க, பாட்டி அடிக்காதீங்க!” என்று அழுத காட்சியை என்னால் மறக்கவே இயலவில்லை. பெண்களின் சண்டையில் குடியிருப்பில் இருந்த மற்ற பெண்களே ஒன்றுமே சொல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் உள்ளே புகுந்து சண்டையைத் தடுக்க முயற்சி செய்யத் தோன்றவுமில்லை. அதுவுமில்லாமல் தடுக்க வேண்டிய காவலரே சும்மா இருக்கும் போது நான் என்ன செய்து விட முடியும் என்றும் தோன்றியது. அங்கிருந்து அப்பெண் குழந்தையின் அழுகையைத் தடுக்க ஏதும் செய்ய இயலாத நிலையில் வருத்தத்துடன் வீடு நோக்கி நடந்தேன். பெண் காவலருடன் காவல் துறை வாகனம் வந்த சப்தம் கேட்டது.

நிற்காமல் வீடு வந்து சேர்ந்து விட்டேன். அலுப்புடன் இருந்தாலும் அந்தக் காட்சி தந்த அதிர்ச்சியிலும், அந்தப் பெண் குழந்தை சிறு வயதிலேயே படும் கஷ்டங்களையும் நினைத்து வருத்தம் தான் வந்தது. வருத்தப்படுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலை. என்னவோ போங்க, அந்தக் குழந்தையின் எதிர்காலம் நினைத்தால் ரொம்பவே பயமாக இருக்கிறது. திருமணம் புரிந்து, இரண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்ட அந்தப் பெண்மணியின் கணவனை நினைத்தால், இத்தனை பிரச்சனை நடக்கும்போதும் வீட்டுக்குள்ளிருந்து வெளியேவே வராத அந்தக் கணவனை நினைத்தால், கோபமும் வருகிறது. என்ன மனிதர்களோ….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். இது மாதிரிக் காட்சிகள் ஆங்காங்கே கண்ணில் படும்போது வேதனையைத்தான் தரும். நம்மால் தீர்க்கவும் முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினை என்பது நிதர்சனம் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆனால் பாருங்கள்.. அழும் அந்தப் பெண் குழந்தை மிகுந்த திட மனதுடன் பிற்காலத்தில் வளரும். வாய்ப்பிருந்தால் ஏதாவது சாதனைகளும் செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பின்னூட்டம் மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது ஸ்ரீராம். அப்படியே அந்தப் பெண் நன்றாக முன்னுக்கு வரட்டும்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்து, கவனமாக... பிழைகள் இல்லாமல் இன்று பின்னூட்டம்!!!!!

    இதுவரை இரண்டு மூன்று முறை கணினி அணைந்து மீண்டு விட்டது! நீலத்திரைப் பிழை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீலத் திரை பிழை! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. காலை வணக்கம் வெங்கட்ஜி! ஹப்பா இத்தனை நேரம்....வழக்கம் போல் லிங்க் பார்க்கும் முன்னரே ஒபன் செய்து... நான் வந்த ஃப்ளைட் சுத்தி சுத்தி இப்பத்தான் லேன் ஆச்சு!!! ஸ்ரீராம் வந்த ஃப்ளைட் கரெக்ட்டா லேண்ட் ஆகியிருக்கு...ஹா ஹா ஹா இதோ பதிவு பார்த்துவிட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. மாமியார் மருமகள் சண்டைக்கு ஓய்வே கிடையாதா இப்படியுமா இப்பவும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓயாத சண்டை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. ஜி! மனம் கலங்கியது. இன்னும் பெண்களூக்கு பெண்களே எதிரியாக இருப்பது..!! ஆம் நம்மால் தீர்க்க முடியாதுதான் ஜி. அதுவும் நமக்கு அது பற்றி ஒன்றும் தெரியாத போது எப்படிப் பஞ்சாயத்து பண்ண முடியும்?

    ஆனால் அக்குழந்தை இத்தனை சிறுவயதில் இத்தனைக் கஷ்டங்களை அனுபவிப்பதால் கண்டிபாக நல்ல சூழல் அமைந்தால், சுய சிந்தனைகள் வளரும் இக்காலத்தில் அதுவும் அதைக் கற்றுக் கொண்டால் நல்ல குழந்தையாக உருவெடுக்கும். நல்ல பெண்ணாக உருவாகும்....என்று நம்புவோம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. வேதனையான நிகழ்வுதான் ஐயா
    புரிதல் இல்லா வாழ்க்கை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. எல்லா ஊரிலும் இந்தவகை காட்சிகள் உண்டு ஜி மனதுக்கு வேதனையாக இருக்கும் நம்மால் ஏது செய்ய நினைத்தாலும் நாம் அவமானத்தை சந்திக்க வேண்டியது வரும்.

    எனக்கு அனுபவம் உண்டு பிறகு நினைப்பேன் சராசரி மனிதர்களைப்போல் ஒதுங்கிப் போயிருக்கலாம் என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. மாமியார் மருமகள் சண்டை, இப்படி அடிப்பது துரத்துவது எல்லா இடங்களிலும் ப்ரவலாகக் காணப்படும் ஒன்று என்றாலும் கூட இங்கு விட எல்லாம் வட இந்தியாவில் ரொம்பவே அதிகமாக நடக்கும் போலத் தெரிகிறது....

    பாவம் அக்குழந்தை. இந்த அனுபவங்கள் அக்குழந்தைக்கு நல்ல பாடங்களைப் புகட்டினால் நல்லது. வேதனைதான்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  10. நாம் அந்தச் சிறுபெண்ணின் வளமான எதிர்காலத்துக்குப் ப்ரார்த்திப்போம். பாவம் அந்தச் சிறு குழந்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. மனிதம் மரணித்துக்கொண்டிருப்பதை இவ்வாறான நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. என்ன செய்வது? நாம் எல்லோருமே பல சமயங்களில் சூழ் நிலை கைதிகள்தான். காலம் அந்த குழந்தைக்கு நல்லது செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  13. யாராவது அலைபேசியில் காணொளி எடுத்தார்களா அதுதானே செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை யாரும் அப்படி எடுக்க வில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. வெளியில் வந்தால் அந்த கணவன் தீர்ந்தான். அதான் சார் உள்ளவே இருக்காரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... அதுவும் சரிதான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  15. வட நாட்டில் ஆண் குழந்தை மோகம் அதிகம். எல்லாம் ஆண் குழந்தையாக இருந்து விட்டால் பெண்ணுக்கு எங்கே போவார்கள்?

    அந்த பெண் குழந்தையும் தாயும் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. அன்பு வெங்கட், அந்தப் பெண்ணும் அவள் தாயும் மனதை விட்டுப் போகவில்லை.

    பெண்குழந்தையின் மனமும் வன்மை பெற்றுவிடக்கூடாதே என்று தோன்றுகிறது. அப்படி ஒரு சமுதாயம் இருந்தால் ஆண்களைக் கரித்துக் கொட்டும் பெண்களும் வளர சாத்தியக் கூறுகள் உண்டல்லவா.

    அந்தப் பிஞ்சு நெஞ்சம் வலிமை பெற்று வளரட்டும். மிக வருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    கொடுமையான நிகழ்வு. மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மாமியார் மருமகள் சண்டை வீட்டுக்குள் இருந்தாலே அக்கம் பக்கம் ஆயிரம் பேசும். வெளியே வந்து விட்டால், கேட்கவே வேண்டாம். பார்க்கும் நம்மை போன்றோர்க்குதான் தர்ம சங்கடம். அந்த பெண் குழந்தை நல்லபடியாக இருக்க வேண்டும்.அது ஒன்றைத்தான் நம்மால் பிரார்த்திக்க முடியும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  19. வட நாட்டில் மட்டுமா? நம் நாட்டிலும் ஆண் குழந்தை மோகம் அதிகம் தான். இப்படி மருமகளை அடித்துத் துரத்தி வீட்டுக்கு வெளியேயானும் நிறுத்தி வைத்து ஆறுதல் பெறும் மாமியாரைப் பார்த்திருக்கேன். குழந்தையுடன் நிறுத்தி வைப்பார்கள். உள்ளே அவங்க சிரிப்பாங்க! என்ன ஒரு ஆறுதல்னா அந்தப் பெண்ணின் கணவர் வந்தால் கதவைத் திறந்து உள்ளே அனுமதிப்பார்கள். அவருக்கு நேரே மருமகளை வெளியேற்றியதைக் காட்டிக்கொள்ளாமல் எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....