சனி, 13 அக்டோபர், 2018

காஃபி வித் கிட்டு – ஸ்வச்ச் பாரத் – பதிவர் ஆச்சி ஆச்சி – மீண்டும் இணைந்த கேஜேஒய்-எஸ்பிபி – ஹே மா


காஃபி வித் கிட்டு – பகுதி – 10

சாப்பிட வாங்க – ஷிம்லா மிர்ச் சட்னி:



சமீபத்தில் தோசைக்கு தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி, தக்காளி சட்னி போன்றவை போரடிக்க, ஷிம்லா மிர்ச் என இங்கே அழைக்கப்படும் குடை மிளகாயில் சட்னி செய்தேன்! உங்களுக்கும் செய்முறை தெரிந்திருக்கலாம். தெரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் கேளுங்கள் சொல்கிறேன்! :)

ஸ்வச்ச் பாரத் – ஸ்வச்தா ஹி சேவா:

தலைநகர் தில்லியில் என் வீட்டிற்குக் கீழே இருக்கும் பெண்மணி – ஒரு நாள் மாலை நேரத்தில் வீட்டுக் கதவைத் தட்டினார். அலுவலகத்திலிருந்து வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் – பொதுவாக எங்கள் கட்டிடத்தில் இருக்கும் ஒருவரிடமும் நானும் பேசுவதில்லை. அவர்களும் என்னிடமும் பேசுவதில்லை! பிறகு எதற்கு இப்போது வருகிறார் – குழப்பத்துடன் கதவைத் திறந்தால் – ”படிக்கட்டு கீழே நீங்க குப்பையை போட்டீங்களா? யாரோ போட்டுட்டு போயிடறாங்க. நம்ம பில்டிங்க நாம தான் சுத்தமா வைச்சுக்கணும்!” அப்படின்னு சொல்ல, “அட ஏம்மா நீ வேற, நான் எதுக்கு குப்பையை அப்படி போடப்போறேன்! ஏதாவது சொல்லிட போறேன், புள்ளைகுட்டிய படிக்க வைக்கிற வழியைப்பாருன்னு மனதுக்குள் சொல்லிக்கொண்டு, வெளியில் நான் ஏன் போடறேன்னு சொல்லி உள்ளே வந்தேன். அடுத்த நாள் பேருந்தில் அதே பெண்மணி – தலையை வாரி முடியை வெளியே வீசினார், பிறகு சாத்துக்குடி தோல், வரிசையாக வீதியில் எதையோ போட்டபடியே வந்தார் – அடுத்தவங்களுக்கு தான் உபதேசம்!

பதிவர் சந்திப்பு – 02 அக்டோபர் 2018:

காந்தி ஜெயந்தி என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை! வெளியே எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்த போது முகநூல் மெஸ்ஸெஞ்சர் வழியே ஒரு தகவல் – உங்க வீட்டுக்குக் கிட்ட இருக்கற பாலாஜி கோவிலுக்கு வந்துருக்கோம். அங்கேயிருந்து காளி கோவில் போகிறோம் என – அனுப்பியவர் ஒரு காலத்தில் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்த ”ஆச்சி ஆச்சி” – அது ஆச்சி இரண்டரை வருடம் – அவங்க வலைப்பூவில் எழுதி! இப்பல்லாம் முகநூல்ல மட்டும் தான் எழுதறாங்க. தலைநகரிலேயே இருந்தாலும், ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். காளி கோவில் வளாகத்தில் நவராத்ரிக்காக கடைகள் போட்டிருக்கிறார்கள். அங்கே சற்று சுற்றிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு அவர்கள் வழி அவர்கள் செல்ல, நான் வீடு திரும்பினேன். முகநூலில் சந்திப்பு பற்றி அவர்களும் எழுதி இருக்கிறார்கள்.

இந்த வாரத்தின் ரசித்த பாடல் - மலையாளம்:

சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு பாடல் – கே.ஜே. யேசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி. அவர்களும் மிகச் சமீபத்தில் இணைந்து பாடிய ஒரு பாடல் – நீண்ட இடைவெளிக்குப் பிறகு – 27 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை எம். ஜெயச்சந்திரன். மலையாளப் படமான கிணர் படத்தில்.  பாடல் நன்றாகவே இருக்கிறது – நீங்களும் கேட்டுப் பாருங்களேன்…



இந்த வாரத்தின் நிழற்படம்:



சமீபத்தில் ஒரு விழா – நான் குடியிருந்த பழைய தில்லி பகுதியில். ஒரு சமுதாயக் கூடத்தில் தான் அந்த விழா. தில்லி நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூடம். அங்கே பார்த்த காட்சி தான் மேலே படமாக! இப்படி ஒரு மின்விசிறியை நீங்கள் சத்தியமாக வேறெங்கும் பார்த்திருக்க முடியாது! இப்படி இருக்க ஒரு காரணம் உண்டு. அது என்ன என பிறகு சொல்கிறேன் – ஏன் இப்படி வளைத்திருக்கிறார்கள் என உங்களால் யூகிக்க முடிகிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

இந்த வாரத்தின் குறும்படம்:

யாரைப்பற்றியும் ஒரு முடிவுக்கு வந்து விடும் முன்னர் சற்றே யோசியுங்கள் என்று சொல்லும் ஒரு அழகான குறும்படம். பாருங்களேன்….



இதே நாளில் – திரும்பிப் பார்க்கிறேன்:

இதே நாளில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக இருந்திருக்கிறேன்! அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு பகிர்வு “ஹே மா!” தலைநகரில் சந்தித்த ஒரு மனிதர் பற்றிய பகிர்வு. 13 அக்டோபர் 2011 பகிர்ந்து கொண்ட பதிவினை படிக்காதவர்கள் வசதிக்காக… இங்கே மீண்டும் அதன் சுட்டி!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...

20 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். கதம்பத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. எஸ் பி பி யேசுதாஸ் பாடல் கேட்டிருக்கிறேன். நேற்று இனொரு மலையாள படத்திலிருந்து (தீவண்டி) ஒரு மெலடி பகிர்ந்திருந்தார், தமிழ் இந்துவில். ரீதிகௌளை ராகப்பாடல். அதையக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீவண்டி பாடல் ஒன்று நானும் கேட்டேன். பிடித்திருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மின்விசிறியின் இறக்கைகள் ஏன் அப்படி வளைந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ள நானும் ஆவலாய் இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா..... இந்த சீலிங் ஃபேன்கள் பலவும் கெட்டுவிட, பக்கவாட்டில் வேறு சில மின்விசிறிகள் வைத்தார்கள். அந்த விசிறி பெரியது - அதில் பழைய விசிறியின் இறக்கைகள் பட, இப்படிச் செய்து விட்டார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பழைய பதிவான அந்தப் பதிவை நான் இப்போதுதான் படிக்கிறேன். ஹே, மா... நல்ல தலைப்பு!​ போது பின்னூட்டமிட்டிருக்கும் பல பதிவுலக நண்பர்களை இப்போது எழுதக்காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவு - பல பதிவுலக நண்பர்கள் இப்போது எழுதுவதில்லை என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. எங்கள் பள்ளியில் இதுபோன்ற பல மின்விசிறிகள் உண்டு
    எல்லாம் மாணவர்கள் கை திறமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... பள்ளி மாணவர்கள் கைவண்ணம் - எங்கள் கல்லூரி நினைவு வருகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. 'டச்சிங்' குறும்படத்தை ரசித்தேன்! மின்விசிறி என்ன, பெரிய பெரிய டிரான்ஸ்பார்மர்களையே வளைத்துப்போடும் ஆற்றல் காற்றுக்கு உண்டு.

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மின்விசிறி - காற்றினால் வளையவில்லை. வளைக்கப்பட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. அருமையாக இருக்கிறது பதிவு.
    பாடல், குறும்படம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    மின்விசுறி இறக்கை ஏன் இப்படி வளைந்து இருக்கிறது? தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் மேலே ஸ்ரீராம் உடைய கருத்திற்கு பதிலில் சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. மின்விசிறி, பழைய அரசு அலுவலகத்திற்குச் சென்ற நாள்களை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. மலையாள்ப்பாடல் ரசித்துக் கேட்டேன் மின் விசிறி தானாக வளைந்ததா வளைக்கப்பட்டதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளைக்கப்பட்டது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....