புதன், 7 நவம்பர், 2018

கதை மாந்தர்கள் – சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் கொடுங்களேன்…




படம்: இணையத்திலிருந்து....



சாந்த்னி – எப்போதும் புன்னகை புரியும், பார்க்கும் அனைவரையும் சந்தோஷச் சாறலில் திணற வைக்கும் இளம்பெண். எப்போதும் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் ஒரு குறும்பு, துருதுரு பெண். புன்னகைக்கும் போது கன்னத்தில் விழும் குழி, பலரை இம்சிக்கும். ஒரே அலுவலகம் என்றாலும் வேறு வேறு தளங்களில் நாங்கள். தினம் தினம் ஏதாவது விஷயத்திற்காக தொலைபேசி/இண்டர்காம் அழைப்புகள் அவளிடமிருந்து வந்த வண்ணமே இருக்கும். நானும் அவ்வப்போது அழைப்பது வழக்கம். அப்படி பேசும்போது அலுவலக வேலைகள் தவிர மற்ற விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்போம். என் அறைக்கு எப்போதாவது வரும்போதும், வந்த வேலையை முடித்து விட்டு சில நிமிடங்கள் என்னிடம் ஏதாவது வம்பு வளர்த்துக் கொண்டிருப்பார்.

உடன் பணிபுரியும் வேறு ஒரு இளைஞன் அப்பெண்ணிடம் அவள் மீதான தன் காதலைச் சொல்ல, உலகத்தின் மிகப்பெரிய நகைச்சுவை கேட்டமாதிரி இடி இடியென ஒரு சிரிப்பு. என்னைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே, “சாரி… நான் வேற ஒருத்தர காதலிக்கிறேன் என்று சொல்லி, நீ வேற ஆளை பாருடா” என்று சுலபமாக அவனை விலக்கியவள். என்னதான் என்னுடன் இப்படி கலகலவென பழகினாலும், நான் என்றைக்கும் ஒரு அளவுக்கு மேல் வைத்துக் கொண்டதில்லை. அப்போதெல்லாம் கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் திரிந்த நேரம். அலுவலகத்தில் பேசுவது தவிர வேறு எப்போதும், எங்கேயும் சென்றதோ பேசியதோ இல்லை. இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது எங்கள் நட்பு. ஒரு நாள் அலுவலகத்தில் மாலை நேரம் – வீட்டுக்குப் புறப்படத் தயாராக இருக்கும்போது அவளது அழைப்பு. ”நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா, கொஞ்சம் பேசணும்…” ”பேசலாமே!” என நான் சொல்ல, ”சரி ரெடியா இருங்க, காஃபி ஷாப் போகலாம்” என்றாள்.

கனாட் ப்ளேஸ் காஃபி ஷாப் – ஜோடி ஜோடியாகவும், குழுவாகவும் அனைத்து டேபிள்களிலும் நிறைந்திருந்தார்கள் – ஒரு காஃபியை ஒன்றரை மணி நேரமாக குடிக்கிற ஜோடிகளைப் பார்த்து எனக்குச் சிரிப்பும், வியப்பும். அது எப்படிடா அந்த ஆறிப்போன காஃபியை [கோல்ட் காஃபி!] இவ்வளவு நேரம் ருசிச்சு ரசிச்சு குடிக்க முடியுது உங்களால என நினைத்துக் கொண்டே, இரண்டு பேர் மட்டும் அமரக்கூடிய ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டோம். என்ன சாப்பிடலாம் என்று நான் கேட்க, அவள், சிப்பந்தியை அழைத்து இரண்டு கோல்ட் காஃபி சொன்னாள். காஃபி வர பத்து நிமிடம் ஆனது. அதுவரை ஏதோ விஷயங்கள் – அலுவலக விஷயங்கள், பொது விஷயங்கள் என பேசிக் கொண்டிருந்தோம். இருப்பதிலேயே அதிக சப்தமான குரல் என்னுடையதாகத் தான் இருந்தது!

பெரும்பாலான ஜோடிகள் பேசுவது அவர்களுக்கே கேட்டிருக்குமோ என்று எனக்கு சந்தேகம். சரி எங்கள் சம்பாஷனைக்கு வருகிறேன். காஃபி வரும்வரை தொடர்ந்தது எங்கள் பேச்சு. காஃபி வந்ததும் அதை கலக்கியபடியே இருந்தாள். என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்க நானும் காத்திருந்தேன். ஒரே மடக்கில் குடிக்கக்கூடாது என எனக்கு அறிவுரை வேறு நடுவில்! சிப் சிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த காஃபியை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள் அனைவரும் என்பதை அப்போது தான் பார்த்தேன். அவள் பொதுவாக பேசிக் கொண்டிருக்கிறாளே தவிர சொல்ல வந்த விஷயத்தினைச் சொல்வதாக இல்லை. நேரம் போய்க் கொண்டிருக்கிறது. ”சரி சொல்லு சாந்த்னி, என்ன விஷயம்?” என்று நானே கேட்க, ”எனக்கு தமிழ் கத்துக் கொடுக்கணும் நீங்க…” என்றாள். என் முகத்திலேயே கேள்விக்குறி தெரிந்திருக்கும் போல…. “எப்படியும் தமிழ் கத்துக்கணும், நாளைக்கு வீட்டுல பேசணும்னா தமிழ் தெரியணுமே” என்றாள்.

தமிழ் தானே கத்துத் தரணும். அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. எந்த மொழியையும் ஆர்வம் இருந்தால் கற்றுக் கொள்ள முடியும் என்று சொன்னாலும், அவள் ”எப்படியும் தமிழ் பேசத் தெரிந்து கொள்ளத் தானே வேண்டும்” என்று சொன்னது ஏன் என மனது கேட்டுக் கொண்டே இருந்தது. அவளுக்குத் தென்னிந்திய உணவு ரொம்பவும் பிடித்தமானது. இரண்டு இட்லியை சின்னச் சின்னதாய் வெட்டி நான்கு கப் சாம்பாரில் சுவைத்துச் சாப்பிடுவார். நான் கொண்டு போகும் தென்னிந்திய உணவு பார்த்தால் எடுத்துக் கொண்டு அவள் வீட்டிலிருந்து எடுத்து வரும் சப்பாத்தி சப்ஜியைக் கொடுத்துச் செல்வது அவளது வழக்கம். ஒரு நாள், ஏதோ பார்ட்டி வைக்க ஏற்பாடு செய்த போது எல்லாமே தென்னிந்திய உணவு என்பது நினைவுக்கு வந்தது. சரி அவளாக சொல்லும் வரை நாம் ஒன்றும் கேட்க வேண்டாம் என நினைத்து பேச்சினைத் தொடர்ந்தேன். தினம் தினம் மாலை நேரத்தில் – அலுவலகம் முடிந்த பிறகு தமிழுக்காக நேரம் ஒதுக்கினோம்.

ஒரு மாதத்திற்கும் மேலே ஆகிவிட்டது – தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்து – கொஞ்சம் வார்த்தைகள், வாக்கியங்கள் பேச வந்திருந்தது – Of course பஞ்சாபியில் தமிழ் பேசினாள் சாந்த்னி. தொடர்ந்து கொண்டிருந்தது தமிழ் வகுப்புகள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை அவளது அழைப்பு – ”காஃபி ஷாப் போகலாமா இன்னிக்கு?” சரி போகலாம். இன்றைக்காவது விஷயத்தினைச் சொல்கிறாளா பார்ப்போம் என காஃபி ஷாப் அனுபவத்திற்குக் காத்திருந்தேன். மாலை காஃபி ஷாப் சென்றோம். அன்றைக்கும் அமர்வதற்கான இடத்தினை சாந்த்னியே தேர்ந்தெடுத்தாள். எதிரும் புதிருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காஃபி ஷாப் கதவு திறக்க, ஒருவர் உள்ளே நுழைந்தார். நேரே நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தார். சாந்த்னி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியும் துள்ளலும்….

வந்தவர் என்னிடம் கை நீட்டி, ”ஹாய், நான் சந்த்ரு…  சாந்த்னி உங்கள பத்தி நிறைய என்னிடம் சொல்லி இருக்கா, நானும் சாந்த்னியும் அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். வீட்டுல பேசிட்டு இருக்கோம். அவங்க ஒத்துக்கலன்னா, கோர்ட் மேரேஜ் தான்.  நீங்க தான் சாட்சி கையெழுத்து போடணும் – சாந்த்னிக்காக!” என்றார். அவளின் Trade Mark குறும்புப் புன்னகையோடே, என்னிடம் கேட்டாள் சாந்த்னி – “எனக்காக நீங்க சாட்சி கையெழுத்து போடுவீங்க தானே!”

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

பின் குறிப்பு: சாந்த்னி-சந்த்ரு கல்யாணம் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி! இப்போது தான் இணையம் பக்கம் வர இயன்றது!

      நீக்கு
  2. வெங்கட்ஜி இது கதையா இல்லை உங்கள் அலுவலக நடப்பா...

    கதை மாந்தர்கள் என்று நீங்க உங்க அலுவலக மாந்தர் பற்றி எழுதுவீங்க....தெரியும்...

    உண்மையான நடப்புனா ஆஹா ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க வெங்கட்ஜி! ரொம்பவே ரசித்து வாசித்தேன்...அழகான ஒரு கதை போலவே இருக்கு. அப்புறம் ஏன் நீங்க சொல்றீங்க உங்களுக்கு கதை எழுத வராது தெரியாதுனு...கதை எழுதலாமே வெங்கட்ஜி...ரொம்பவே நல்லா வருது...

    //அப்போதெல்லாம் கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் திரிந்த நேரம்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை மாந்தர்கள் - அலுவலக மாந்தர் மட்டுமல்ல, சந்தித்த சிலரும் இங்கே பதிவுகளின் மையப் பொருளாக வந்ததுண்டு!

      கதையா நிஜமா.... ஹாஹா - இதற்கு பதில் இல்லை!

      இப்போதும் சொல்கிறேன் - எனக்கும் கதைக்கும் ரொம்ப தூரம் கீதா ஜி! பல ஜாம்பவான்கள் இங்கே இருக்கிறார்கள் - நல்ல கதை சொல்லிகள் அவர்கள். இந்தப் பதிவுக்குக் காரணம் கூட ஒரு பதிவுலக/எழுத்தாளர் ஜாம்பவான் தான்!

      கல்யாணம் - பெரும்பாலானவர்களுக்கு செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் உண்டு. வெளியில் சொல்வதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. ஒரே மடக்கில் குடிக்கக்கூடாது என எனக்கு அறிவுரை வேறு நடுவில்! சிப் சிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த காஃபியை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள் அனைவரும் என்பதை அப்போது தான் பார்த்தேன்.//

    இந்த காட்சி தமிழ் சினிமா ஒன்றில் வருமே...ஹையோ பேர் மறந்து போச்சே....ஸ்ரீராம் பார்த்தால் சொல்லுவார்....இதே போலத்தான் அந்தக் காட்சி...வசனம் கூட ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? எனக்குத் தெரியவில்லையே கீதா!

      நீக்கு
    2. எங்கேயும் எப்போதும் என்ற படம் - ஜெய், அஞ்சலி போன்றவர்களின் நடிப்பில்.....

      2011-ல் வந்த படம்! நான் சொன்ன நிகழ்வு அதற்கும் முந்தையது!

      இன்னும் பழைய படமாக இருந்தால் ஸ்ரீராம் சொல்லி இருப்பாரா இருக்கும்... ஹாஹா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. அட உங்களுக்கு இந்தப் படம் நினைவில் இல்லையா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அப்ப சாட்சிக் கையெழுத்து போட்டீங்களா இல்லையா இப்படி சஸ்பென்ஸ் வைச்சுட்டு கல்யாணம் பற்றி வேறொரு பதிவு...னு சொல்லிட்டீங்களே...சஸ்பென்ஸ்..தொடர் கதை சஸ்பென்ஸ் போல...

    வெங்கட்ஜி நெஜமாவே ரொம்ப ரசித்தேன் பதிவை நீங்க கதை எழதுங்க ப்ளீஸ்...விரைவில் உங்க தளம் இல்லைனா எபி யின் கே வா போ க வில் உங்களை எதிர்பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாட்சி கையெழுத்து - அது பற்றி விரைவில் சொல்கிறேன் கீதா ஜி!.

      கதை எழுத எனக்கு வராது என்று தான் தோன்றுகிறது. இது ஏதோ One Off பதிவு என்று தான் தோன்றுகிறது! பார்க்கலாம் - அப்படி எழுதினால் உங்களுக்கு முதலில் அனுப்புகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. குட்மார்னிங் வெங்கட். இது உங்கள் அனுபவமா? நல்லாயிருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிய நேர வணக்கம் ஸ்ரீராம்.

      அனுபவமா? :) முழுவதும் அனுபவமாக இருக்க வேண்டியதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கதையோ சம்பவமா.எதுவாக இருந்தாலும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் வெங்கட்.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.... நன்றிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  7. வரும் நிகழ்வை ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் எழுதுகிறேன் தனபாலன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆஹா முடிவில் உங்களுடன் சேர்ந்து நானும் "பல்பு" வாங்ஙினேன்.

    //அப்போதெல்லாம் கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் திரிந்த நேரம்//

    இது உண்மைச்சம்பவம் என்பதற்கு சான்று. அடுத்த பாகமும் வரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணம் பற்றிய தகவல்கள் விரைவில்..

      பல்பு - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. ஏதோ ஏமாற்றம் தெரிந்தது போல் இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாற்றமா.... ஹாஹா - இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. >>> இப்போதும் சொல்கிறேன் - எனக்கும் கதைக்கும் ரொம்ப தூரம்... <<<

    அப்படி ஒன்றும் தெரியலையே!..

    வாழ்த்துகள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  11. கதை மாந்தர்கள் அருமை.
    கதை மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துவிட்ட பதிவு! சாந்தினி கல்யாணம் ஆகி சௌக்கியமாக இருக்கிறாளா? தமிழ் இப்போது நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாளா? ஒரு நிமிஷம் அனைவரையும் உங்க சொந்தக்கதைனு நினைக்க வைச்சுட்டீங்க! :) இல்லைனா சொந்தக்கதைதானோ! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாந்த்னி பற்றிய அடுத்த பதிவு விரைவில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  13. சூப்பர் ட்விஸ்டுடன் கதை போல எழுதியிருகிறீர்கள்.சபாஷ்! சாந்தினி சௌக்கியமாக இருக்கிறாளா? அவள் குழந்தைக்கு உங்களை மாமா என்று அரிமுகப்படுதினாளா? என்னுடைய கதையை திருடி அமீர் மௌன்ம் பேசியதே என்று படம் எடுத்து விட்டார் என்று நீங்கள் கேஸ் போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மௌனம் பேசியதே.... வழக்கு போட வேண்டுமா... ஹாஹா...

      சாந்த்னி திருமணம் பற்றிய பதிவு விரைவில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....