செவ்வாய், 8 ஜனவரி, 2019

சாப்பிட வாங்க – இஞ்சி தொக்கு – சுதா த்வாரகநாதன்




இஞ்சி தொக்கு...


அனைவருக்கும் வணக்கம். நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பூ மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அவரது வலைப்பூவில் பதிவுகளை படித்து, சில முறை கருத்துகளும் எழுதுவதுண்டு. இன்று என் பதிவாக ஒரு சமையல் குறிப்புடன் உங்களைச் சந்திக்கிறேன். இனி வாய்ப்பும், சமயமும் கிடைக்கும்போது இங்கே எழுத நினைத்திருக்கிறேன். வாருங்கள் இஞ்சி தொக்கு எப்படிச் செய்ய வேண்டும் என இன்றைக்குப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:


தோல் சீவிய இஞ்சி...


வறுத்துப் பொடிக்க...

இஞ்சி – 250 கிராம்.
கல் உப்பு – தேவையான அளவு.
வெல்லம் – சிறிதளவு.
புளி – எலுமிச்சை அளவு. கதகதப்பான நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய்ப் பொடி – அரை ஸ்பூன். காரம் அதிகம் தேவையெனில் ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி – ஒரு ஸ்பூன்.

பொடிக்கு: வெந்தயம், கடுகு, சீரகம் – ஒவ்வொன்றும் அரை/ஒரு ஸ்பூன் அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் – தேவையான அளவு, கடுகு.

அலங்கரிக்க: சிகப்பு மிளகாய் – இரண்டு - எண்ணையில் வறுத்தது.

செய்முறை:


அரைப்பதற்கு முன்னர்....


அரைத்த பின்னர்....


வாணலியில் தயாராகும்  இஞ்சி தொக்கு...

வெந்தயம், கடுகு, சீரகம் ஆகிய மூன்றையும் தனித்தனியே எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவிக் கொள்ளவும்.

இஞ்சி, கல் உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் புளிச்சாறு கலந்து மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தபிறகு, மிக்சியில் அரைத்து வைத்த இஞ்சி விழுதினைச் சேர்க்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். நடுநடுவே கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வதக்கிக் கொண்டே இருக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், அடுப்பை அணைத்துவிடலாம். ஆறிய பிறகு வெந்தயம், கடுகு, சீரகப் பொடியைச் சேர்த்து கலக்கி வைக்கவும். அலங்கரிக்க, தொக்கின் மேலே வறுத்து வைத்த இரண்டு சிகப்பு மிளகாய்களை வைத்து விடலாம்!

சுலபமான செய்முறை தான். இஞ்சியிலேயே காரம் இருக்கும் என்பதால், ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி போதுமானது. கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் எடுத்து வைத்துக் கொண்டால் சில நாட்கள் வரை கேட்டுப் போகாது. சூடான சாதத்துடன் இந்த இஞ்சித் தொக்கு சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும் பயன்படுத்தலாம்.


கொத்தமல்லி தொக்கு...

இதே முறையில் கொத்தமல்லி தொக்கும் செய்யலாம். கொத்தமல்லி தொக்கு செய்யும்போது, காரத்திற்கு, மிளகாய்த் தூளிற்கு பதிலாக, 6-7 பச்சை மிளகாயை அரைத்துச் சேர்த்துக் கொள்ளலாம் [கொத்தமல்லி 250 கிராம்]. கொத்தமல்லி தொக்குக்கு மேல் பொடி [வெந்தயம், கடுகு, ஜீரகப் பொடி போடத் தேவையில்லை. மற்ற செய்முறை அனைத்தும் ஒரே மாதிரி தான். 

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.  தொடர்ந்து வேறு குறிப்புகளுடன் விரைவில் சந்திப்போம்...

நட்புடன்

சுதா
புது தில்லி.

குறிப்பு: தலைநகரில் இருக்கும் நட்புகளில் சிலரது பகிர்வுகளை இங்கே இனி பார்க்கலாம். ஏற்கனவே நண்பர் பத்மநாபன் அவர்களின் ஆக்கங்களை இங்கே பகிர்ந்து கொள்வது உங்களுக்குத் தெரிந்த விஷயம். அந்த வரிசையில் இதோ இன்னுமொரு அறிமுகம். 

இஞ்சி மருத்துவ குணம் நிறைந்தது. தினமும் சமையலில் இஞ்சி சேர்த்துக் கொள்வது நல்லது. நண்பர் வீட்டில் செய்த இஞ்சித் தொக்கு எனக்கும் கிடைத்தது! சுடச்சுட சாதத்தில் கலந்து சாப்பிட்டேன். ரொம்பவே நன்றாக இருந்தது. செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறேன்.


நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!!

    அட சாப்பிட வாங்க சூப்பரா இருக்கு புதிய அறிமுகம் வேறு..பார்க்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இப்படி அறிமுகப்படுத்துவது சிறப்பு ஜி!!

    இஞ்சித் தொக்கு சூப்பர்! சேம் முறை....ஜீரகம் சேர்ப்பதுண்டு. சில சமயம் சேர்க்காமலும் செய்வதுண்டு..

    .சூப்பர் சூப்பர்!!! சுதாஜி!

    கொத்தமல்லித் தொக்கிலும் நான் சில சமயம் வெந்தயப்பொடி சேர்ப்பதுண்டு. ப மிளகாய் போட்டுச் செய்வதுண்டு. சில சமயம் சி மிளகாய் போட்டுச் செய்வதுண்டு...

    செய்முறை படங்கள் விளக்கம் எல்லாமே சூப்பர்...சுதா ஜி! வாழ்த்துகள்! இன்னும் வட இந்திய உணவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன். நன்றி சுதாஜி

    இங்கு பகிர்ந்த/பகிரும் வெங்கட்ஜி உங்களுக்கும் நன்றி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாகம் தரும் கருத்தை வழங்கியதில் மகுழ்ச்சி. அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    2. கரெக்ட் கீதா... வெந்தயப்பொடி சேர்க்கலாம். பெருங்காயமும் சேர்க்கலாமோ? நாங்கள் பெரும்பாலும் மஞ்சள்பொடி சேர்ப்பதில்லை. அதன் வாசனை எனக்கும் பாஸுக்கும் கொஞ்சம் அலர்ஜி!

      நீக்கு
    3. மஞ்சள் பொடி கொஞ்சமாக சேர்த்தால் நல்லதுதான். வடக்கில் எல்லா சப்ஜிகளிலும் மஞ்சள் பொடி சேர்ப்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. சமையலில் தினம் தினம் மஞ்சள் பொடி சேர்ப்பது ரொம்ப நல்லது. பருப்பில் மஞ்சள் பொடி சேர்க்கணுமே! மஞ்சள் பொடிசேர்க்காமல் பருப்பு வேக வைப்பது ச்ராத்த நாட்களில் மட்டுமே! அதே போல் மோர்க்குழம்பும்! ச்ராத்த நாளில் மட்டும் மஞ்சள் பொடி சேர்க்காமல் சமைப்போம். முன்னெல்லாம் என் அம்மா மஞ்சள் கிழங்கை அதற்கென இருந்த ஒரு கல்லில் உரசி விழுதை எடுத்துப் பருப்பில் விடுவார். தேய்த்துக் குளிக்கக் கூட மஞ்சள் கிழங்கு தான். குளியலறையில் மஞ்சள் தேய்க்கவென ஒரு கல் கட்டாயமாய் இருக்கும். உரசி உரசி வழவழவென ஆகி இருக்கும். எங்கேயோ நினைவுகள் போகின்றன! :)

      நீக்கு
    5. மஞ்சள் பொடி நல்லது.... நான் அனைத்து உணவிலும் சேர்ப்பேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட் அண்ட் சுதா த்வாரகநாதன்ஜி...

    பதிலளிநீக்கு
  4. இஞ்சித்தொக்கு வீட்டில் செய்ததில்லை. கடையில் வாங்கிச் சாப்பிட்டிருப்பதோடு சரி. இஞ்சி போன்ற வஸ்த்துகளை என்னைத்தவிர வீட்டில் யாரும் தொடமாட்டார்கள் என்பதும் ஒரு காரணம்! ஆனாலும் புளி இஞ்சி போன்றவை செய்து சாப்பிட்டிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் புளி இஞ்சி பிடிக்கும். ஆந்திராவில் செய்யும் அல்லம் பச்சடி கூடப் பிடிக்கும்.

      பலருக்கு இஞ்சி பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்களோடு விளக்கிய விதம் அழகு சுதாஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இஞ்சித்தொக்கு செய்முறை மிகவும் அருமையாக இருக்கிறது. படங்களும் மிகவும் அழகு. இஞ்சியும், கொத்தமல்லியும் பித்ததிற்கு அருமையான மருந்துகள். இரண்டையுமே தினமும் இல்லாவிடினும், வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் சேர்த்துக்கொண்டால், உடல் நலம் காக்கும் மருத்துவ குணமுடையது.

    கொத்தமல்லி தொக்குவும் மிகவும் அருமையான அறிமுகம். தொடர்ந்து பல விதமான சமையல் ரெசிபிகளை எங்களுக்கு தரவும் வேண்டுகிறேன். சுவைபட தொக்கு செய்து காண்பித்த தங்கள் நண்பி சகோதரி சுதா த்வாரகநாதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அதை எங்களுக்கு பகிர்ந்து தந்த தங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாகம் தரும் உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. சுதாஜியை தொடர்ந்து எழுதச் சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  7. ஆஹா ...இஞ்சி தொக்கு ரொம்ப அருமையா இருக்கு பார்க்கவே

    நன்றி சுதா ஜி ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.

      நீக்கு
  8. இஞ்சித் தொக்கு அருமை... சுதா ஜி அவர்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!

      நீக்கு
  9. சுதாஜிக்கு வாழ்த்துகள்.

    ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி தொக்கு செய்முறை ஈசிதான். இதுல சில பூண்டு பற்கள் போட்டு அரைச்சு செய்வதுண்டு. சரிக்கு சமமா இஞ்சி,பூண்டும் சேர்ப்பதுமுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஞ்சியுடன் பூண்டும் சேர்த்தால் வேறு சுவை வந்து விடும். அதனால் இஞ்சி மட்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  10. இவற்றை சாப்பிட்டால் /////////தின்ற குரங்குபோல் ஆகி விடும்எனக்கு இஞ்சிக்கும் வெகுதூரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... மனிதர்களின் ஆரம்பமே அங்கே தானே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. இஞ்சி தொக்கு செய்முறை படங்களுடன் மிக அருமையாக இருக்கிறது.

    சுதா அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. .பொதுவாக வடக்கு இந்தியாவில் கிடைக்கும் இஞ்சி அவ்வளவாக காரம் இருக்காது. பார்க்கவும் தடிமனாக மாங்காய் இஞ்சி பிபின்ரு இருக்கும். இந்த இஞ்சி சாய் நன்றாக இருக்கும். அதனால் தான் தொக்கு நன்றாக இருக்கும். கேரளத்தில் இஞ்சிப்புளி தான். மிளகாய்ப்பொடி சேர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்து இஞ்சிப் புளி, ஆந்திரா/தெலுங்கானாவின் அல்லம் பச்சடி என அனைத்துமே நல்லது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. இஞ்சித்தொக்கு ஜீரகம் சேர்க்காமல் செய்திருக்கேன். மி.பொடி போட்டதில்லை. இஞ்சியை வதக்கும்போதே ஒன்றிரண்டு மிளகாய் வற்றலையும் சேர்த்து வறுத்துக் கொண்டு புளியோடு சேர்த்து அரைத்துக்கொண்டு தொக்கு செய்வேன். என்றாலும் அவ்வளவு பிடித்தம் இல்லை. எப்போதேனும் ஒரு மாறுதலுக்கு! பச்சைமிளகாய்த் தொக்கு செய்கையில் கொத்துமல்லியையும் சேர்த்து வதக்கி அரைத்துச் சேர்ப்பதுண்டு. இது மதுரையில் கோபு ஐயங்கார் கடைச் சட்னி போல் காரமாக இருக்கும். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் செய்யும் முறையையும் இங்கே சொன்னதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
    2. இதை எழுதினவங்க சுதா த்வாரகாநாதன் எனக் கொட்டை எழுத்தில் போட்டும் அவர்களைப் பற்றி என் கருத்தில் சொல்ல மறந்து விட்டேன். :) அவங்களுக்குப் பாராட்டுகள். அடுத்து ஓர் இனிப்புப் போடச் சொல்லுங்க! :))))

      நீக்கு
    3. அடுத்து ஒரு இனிப்பு.... சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  14. படமும் விளக்கங்களும் அருமை. நான் அடிக்கடி புளி இஞ்சி செய்வதுண்டு, இஞ்சி தொக்கு செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்த்துச் சொல்லுங்கள் மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...

      நீக்கு
  15. இஞ்சித்தொக்கு குறிப்பு மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  16. சுதா உங்களுடைய புதிய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய மற்ற பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....