சனி, 16 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – தவலை அடை - ஃப்ளெக்ஸ் – எறும்பு – பாதாம் கிரி

காஃபி வித் கிட்டு – பகுதி – 24

சாப்பிட வாங்க – தவலை அடை




அத்தை பாட்டி, அம்மா பிறகு இல்லத்தரசி, என வீட்டினர் மட்டும் அல்லாது பலரின் கைகளால் பாசத்துடன் சமைத்த உணவு வகைகளை எந்த வித கவலையும் இன்றி ரசித்து ருசித்து உண்பதில் இருக்கும் ஆனந்தம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதைப் போலவே நானே சமைத்து சாப்பிட்டும் ஆனந்தம் அடைகிறேன். இந்த வாரத்தில் ஒரு நாள் முகநூலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது தவலை அடை பற்றிய குறிப்பு வரவே எனக்கும் ஆசை வந்து விட்டது! வேறென்ன தவலை அடை சாப்பிட வேண்டும் என்ற ஆசை தான். இது வரை செய்ததில்லை என்றாலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிவேன். உடனே களத்தில் இறங்கி விட்டேன்! அப்படிச் சமைத்து ருசித்த தவலை அடையைச் சுவைப்பதற்கு முன்னர் எடுத்த படம் மேலே! வாங்க தவலை அடை சாப்பிடலாம்!

ஃப்ளெக்ஸ் பேனர்கள் – இன்னும் எத்தனை நாளைக்கு?

இந்த ஃப்ளெக்ஸ் பேனர்கள் வந்தாலும் வந்தது, எங்கே பார்த்தாலும் இதே தான். அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு இந்தப் பதாகைகளை வைத்துத் தள்ளுகிறார்கள். எங்கே வைப்பது எதற்கு வைப்பது என்ற கணக்கே கிடைக்காது – சாவு முதல் வாழ்வு வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, அரசியல் முதல் சினிமா வரை என எதானாலும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் முளைத்து விடுகிறது. சமீபத்தில் திருச்சியிலிருந்து நெய்வேலி செல்லும்போது ஒரு ஊரில் வழியெங்கும் விதம் விதமான ஃப்ளெக்ஸ் பேனர்கள். அதில் எழுதியிருந்த வாசகங்கள்…. 

காடுவெட்டியில் அவதரித்த….” என்று ஒரு பேனர் என்றால் இன்னும் ஒரு பேனரில் ”தையில் பிறந்த தைரியமே... என்ன சொல்ல! அவதார புருஷர்கள்!

படித்ததில் பிடித்தது – கவிஞர் மகுடேஸ்வரன்:

இந்த வாரம் படித்ததில் பிடித்ததாக, ஒரு கவிதை. கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களின் கவிதை. நான் ரசித்த இக்கவிதையை நீங்களும் ரசிக்க இங்கே… கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி – மனம் நிறைந்த வாழ்த்துகளும்.



கரும்பினையோ
வெல்லத்தையோ
மொய்த்துத் தின்னும்
எறும்புகளைத் தட்டிவிட்டிருக்கிறீர்களா?

கரும்புத் துண்டில்
வெல்லக் கட்டியில்
அசைவு தெரிந்ததும்
அவை
மொய்ப்பு மயக்கத்திலிருந்து
விடுபடும்.
கிடைத்த திக்கில்
பதறியோடும்.

அவற்றில் சில
கைகளிலும் கால்களிலும்
ஏறி அலைவதுண்டு.

என்றேனும் அவை
கடித்திருக்கின்றனவா ?
இல்லவே இல்லை.

எறும்புக்குத் தெரிகிறது,
தம் உணவு இதுதான் எனினும்
யார்க்கோ உடைமைப்பட்ட
பொருளையா தின்றோம் என்று
தடுமாறுகிறது.

எறும்பு சிறிது,
எறும்பின் தலை எறும்பினும் சிறிது,
தலையில் இருக்கும் வாய்
சின்னஞ்சிறிது,
அதன் வாய்க்கடிக்குள் வந்த இனிப்பு
துகளில் நூற்றிலொரு பங்கு இருக்குமா,
அதற்கே அச்சிற்றுடல்
நாணிக்கூசிச் சிதறி ஓடுகிறது.
ஒருபோதும் சினந்து கடிப்பதில்லை.
தன் குற்றத்தை ஏற்று நகர்கிறது.

அடுத்தவர் பொருளைப்
பறித்துத் தின்னும் கொடியோர்க்கு
இக்கதைப்பொருள்
விளங்கும் என்றா நினைக்கிறீர்கள் ?

     கவிஞர் மகுடேஸ்வரன்

அட்டா gகட்டா பாட்டி – பேருந்துப் பயணத்தில்:

அட்டா Gகட்டா பாட்டி – நல்ல திடகாத்திரமான பாட்டி ஒருவரை பேருந்தில் பார்த்தேன் – காதோரம் ஒற்றை ரோஜா, கை நிறைய பாதாம்… ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே தள்ளியபடியே வந்தார். இத்தனை பாதாம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது அல்ல! சிலருக்கு ஒரு பழக்கம் – இது உடம்புக்கு நல்லதுன்னு சொல்லிட்டா தொடர்ந்து சாப்பிட்டுட்டே இருப்பாங்க – கணக்கே கிடையாது! பாதாம் பருப்பிற்கு ஒரு குணம் – உடலுக்கு உஷ்ணம் கொடுக்கும். அதனால் தான் வடக்கே குளிர் காலத்தில் இந்த பாதாம் பருப்பினை அச்சமயத்தில் தினமும் சாப்பிடுவார்கள் – அதற்கும் அளவு உண்டு – தினமும் நான்கு அல்லது ஐந்து பருப்பு மட்டுமே. கிரி எனச் சொல்வார்கள் இங்கே! அதனையும் முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதன் மேலாக இருக்கும் ப்ரவுன் தோலை நீக்கிச் சாப்பிடுவார்கள்.

பேருந்துப் பாட்டி, எதற்கும் கவலைப் படவேயில்லை. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தார். இனிமேல் சொல்லப் போகும் விஷயம், பேருந்தில் என்னை புன்னகைக்க வைத்த விஷயம். அந்தப் பாட்டிக்கு அடுத்த இருக்கையில் ஒரு பெண்மணி – தன் மடிமீது கொஞ்சம் ஏலக்காய்களை போட்டு, அதனை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தார். பாதாம் பாட்டி, அவரிடம் எதற்கு இந்த மாலை எனக் கேட்க, அவர் இறைவனுக்கு என்று சொல்லிய அடுத்த கணம், மடிமீது வைத்திருந்த ஏலக்காய்களை எடுத்து கொஞ்சம் தள்ளி வைத்து இருந்த பைக்குள் போட்டுக் கொண்டு அங்கேயிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து மாலை கோர்த்தார் – பாதாம் சாப்பிட்டுக் கொண்டே ஏலக்காய்களையும் சாப்பிட்டுவிடுவாரோ என்ற பயம் அந்தப் பெண்மணியின் கண்களில்! ஹாஹா…

இந்த வாரத்தின் நிழற்படம்:



சமீபத்தில் எடுத்த ஒரு படம் – கும்பமேளா 2019 - பக்திப் பரவசத்தில் ஒருவர்! இடம் ப்ரயாக்ராஜ் [எ] இலாஹாபாத்….

இந்த வாரத்தின் காணொளி:

உங்கள் குழந்தைகளிடம் “கண்ணா, அம்மா/அப்பாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா…”ன்னு கேட்டுப் பாருங்க! இப்படித் தான் நடக்கும்!



என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி



32 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட்ஜி. தவலை அடை வாவ்! பார்க்க சூப்பராக இருக்கிறது. அப்படியே நீங்கள் செய்த குறிப்பும் கொடுத்துருங்க ஒரு பதிவாக..ஹா ஹா ஹா...நானும் இதை உறவினர் ஒரு பாட்டியிடம் கற்றுக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      தவலை அடை குறிப்பு - பலருக்கும் தெரிந்த குறிப்பு தானே இது! பார்த்துப் பார்த்து தெரிந்து கொண்ட செய்முறை தான் எனக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மகுடேஸ்வரன் அவர்களின் கவிதையை மிகவும் ரசித்தேன்...எறும்புகள் மிக மிக வியப்பானவை நானும் மகனும் மிகவும் ரசிப்பதுண்டு..

    நிழற் படம் மிக அழகாக இருக்கிறது...பக்தி பரவசத்துடன் எதையோ பார்த்து ஏதோ சொல்ல வருவது போல் இருக்கிறது..

    ஃபெளெக்ஸ் போர்ட்ஸ் ...இப்பத்தான் எல்லாத்துக்கும் வைக்கிறார்களே...ஒரு காதணி விழாவுக்குக் கூடபாண்டிச்சேரியில் ஏதேனும் ஒரு அரசியல் தலைவர் படத்தோடு வைச்சுருவாங்க..பெண் வயதுக்கு வந்தாலும் இப்படித்தான்...பார்க்க மிக கஷ்டமாக இருக்கும்..

    காணொளி பின்னர் பார்க்கிறேன் பூஸார் செம க்யூட்டா இருக்கார்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எறும்புகள் - எத்தனை சுறுசுறுப்பு, இடைவிடா உழைப்பு அவற்றிடம்....

      வயதுக்கு வந்தாலும் ஃப்ளெக்ஸ்! உண்மை - அதுவும் அப்பெண்ணின் நிழற்படத்துடன்... என்னவோ போங்க ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் கிட்டு!

    தவலை அடையா? வடையா? இரண்டு ஒன்றா? வெவ்வேறா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தவலை அடை. தவலை வடை? வேறாக இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஃப்ளெக்ஸ் பேனர்களை அகற்ற பாடுபடும் டிராஃபிக் ராமசாமி நினைவு வருகிறது. சில இடங்களில் போலீஸ்காரர்கள் பார்த்திருக்கையில் அவரே அகற்றவும் தொடங்கி விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ளெக்ஸ் பேனர்கள் - இங்கே தில்லி அரசே நிறைய இடங்களில் தங்களது புகழ் பரப்ப வைக்கிறது! என்ன சொல்ல. வீடில்லாத பல ஏழைகளுக்கு இந்த ஃப்ளெக்ஸ் மேற்கூரையாக, போர்வையாக பயன்படுகிறது என்பதைத் தவிர இதில் வேறு ஆதாயம் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஆஹா... நண்பர் மகுடேஸ்வரன் கவிதை அசத்துகிறது. ஏதோ எப்போதும் போல ஒரு கவிதையாயிருக்கும் என்று படிக்கத்தொடங்கினால் முதுகில் தட்டி உண்மை சொல்கிறது அ(க்) க( )விதை பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சொன்ன கவிதை. ரசித்ததில் மகிழ்ச்சி. மகுடேஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பஸ் சம்பவம் : எடுத்துவிடுவாரோ ஏலக்காய்களையும் என்கிற பயம் புன்னகைக்க வைத்தது. அதே சமயம் பாதாம் சாப்பிடும் பாட்டி ஒரு பழைய ஜோக்கையும் நினைவு படுத்தியது.

    தினமும் அந்தப் பேருந்தில் வழக்கமாக வரும் அந்தப் பாட்டி அந்தப் பேருந்தின் நடத்துனரும் தினமும் பாதாம், முந்திரி என்று சாப்பிடத் தருவாராம். பாட்டியின் அன்பில் நெகிழ்ந்து, மறுக்காமல் அவரும் வாங்கிச் சாப்பிடுவாராம். ஒருநாள், "பாட்டி, தினமும் எனக்கு இப்படித் தருகிறீர்களே... நீங்களே சாப்பிடலாமே, எனக்கு ஏன் தருகிறீர்கள்?" என்று கேட்டாராம். "எனக்கு பல் இல்லையே, அதனால் சாப்பிடுவதில்லை" என்றாராம் பாட்டி. "அப்புறம் ஏன் இதைக் கொண்டு வருகிறீர்கள்?" என்று கேட்டாராம் நடத்துனர். "அப்பா.. இதை நான் தனியாய் கொண்டுவருவதில்லை.. இது சாக்லேட்டில் உள்ளே வைத்திருக்கிறார்கள். சாக்லெட்டை நான் சாப்பிட்டு விடுகிறேன். இதைக் கடிக்க முடியாததால் உன்னிடம் தந்து விடுகிறேன்" என்றாராம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... உங்கள் நினைவுக்கு வந்த ஜோக்... செம. ஒரு படத்தில் பாக்கை வைத்து காண்பித்து இருப்பார்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. சந்தனப்பட்டை. விபூதி விளக்கில் குங்கும தீபம். பக்திman!

    எஸ்கேப் ஆகும் பூனாச்சு... அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்திman! ஹாஹா...

      பூனாச்சு - அழகு - அதன் முகத்தில் தெரியும் உணர்வு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. அனைத்தும் அருமை.
    தவலை அடை நன்றாக இருக்கிறது.
    ஃப்ளெக்ஸ் பேனர்கள் மதுரையில் அதிகம்.
    பாதாம் சாப்பிடும் அம்மாவிடமிருந்து ஏலாக்காயை பத்திரபடுத்தியது நல்ல சிரிப்பு.
    காணொளி பார்த்தேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் உள்ள அனைத்து விஷயங்களையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. கவிதை சுருக்கென்று தைக்கவேண்டும் கயவர்களுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. ஃப்ளெக்ஸ் பேனர்கள் தயாரிப்பு நிறுத்தவும் ஒரு போராட்டம் நடக்கும்... நடக்கவும் வேண்டும்... வீடு விசேஷங்களுக்கு, உட்புற கிராமங்களில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் மிகவும் அதிகம்...!

    கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை அருமை...

    வியப்படையும் கும்பமேளா படமும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ளெக்ஸ் பேனர்கள் இப்போது எங்கெங்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. எப்போதோ ஒரு பதிவு எழுதி இருந்தேன் பேசாமல் பெண்ணாகப் பிறந்திருக்கலாம் என்று அது மகுடேஸ்வரன்கவிதை என்று பின்னூட்டம் மூலம்தெரிந்துகொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. தவலை வடைக்கான பெயர்காரணம் என்னவோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரை விட சாப்பிடக் கிடைப்பது முக்கியம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. சிறப்பான தொகுப்பு. என்ன எல்லோரும் பூசாரை கட்டி இழுத்துக் கொண்டு வந்து விடுகிறீர்கள்? அதிராவின் பாதிப்பு கொஞ்சம் அதிகம்தான் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவின் பாதிப்பு - ஹாஹா... The Athhira effect! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மா.

      நீக்கு
  15. ஹா ஹா ஹா ஹா பூஸார் என்னமா டபாய்க்கிறார்!!!

    சூப்பர் மிகவும் ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. மகுடேஸ்வரன் அவர்களின் எறும்பு கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது ஜி!

    காணொளி சிரிப்பை வரவழைத்தது.

    படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....