வியாழன், 18 ஏப்ரல், 2019

சாப்பிட வாங்க – பஞ்சாபி ஸ்டைல் ஆலூ மேத்தி




பஞ்சாபிகள் அசைவம் என்றால் சிக்கனும் சைவம் என்றால் ஆலூ என அழைக்கப்படும் உருளையும் இல்லாமல் இருப்பதில்லை. எல்லாவற்றிலும் இந்த ஆலூ சேர்ப்பது உண்டு! மேத்தி என்பது என்ன என்பதையும் முதலிலேயே சொல்லி விடுகிறேன். வெந்தயக் கீரையை தான் மேத்தி எனச் சொல்கிறார்கள். வெந்தயத்தை எப்படிச் சொல்வார்கள் என்பதையும் சொல்லி விடுகிறேன் – அதன் பெயர் மேத்தி dhதாணா!



குளிர் சமயங்களில் இந்த வெந்தயக் கீரை இங்கே நிறையவே கிடைக்கும் என்பதால் அச்சமயங்களில் வாரத்தில் ஒரு முறையாவது பயன்படுத்துவதுண்டு. வாங்கும் ஒரு கட்டு மேத்தியை மேத்தி பராட்டா, ஆலூ மேத்தி, என இரண்டு நாளுக்குப் பயன்படுத்திவிடலாம்! சரி வாருங்கள் இந்த ஆலூ மேத்தியை பஞ்சாபி ஸ்டைலில் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

ஆலூ எனப்படும் உருளைக் கிழங்கு – வேகவைத்து, தோல் உரித்து, சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கியது – இரண்டு கப்.

மேத்தி எனும் வெந்தயக் கீரை – தண்ணீரில் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கியது – நான்கு கப்.

பூண்டு – சிறு துண்டுகளாக நறுக்கியது – நான்கு பற்கள் [பிடிக்காதவர்கள் இதைத் தவிர்த்து விடலாம்!]

இஞ்சி - ஒரு சிறு துண்டு – பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் – ஒன்று – சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

உப்பு – தேவையான அளவு.

சமையல் எண்ணெய் – நான்கு ஸ்பூன்

ஜீரகம் – 1 ஸ்பூன்

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

சிவப்பு மிளகாய் – இரண்டு – சிறு துண்டுகளாக பிரித்துக் கொள்ளலாம்! என்னைப் போல சோம்பேறி என்றால் அப்படியேயும் போடலாம்!

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

தனியா-ஜீரகம் தூள் – இரண்டு ஸ்பூன்

எப்படிச் செய்யணும் மாமு?



வெந்தயக் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு குழிவான கிண்ணத்தில் போடவும். கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  

மூடி வைத்த வெந்தயக் கீரையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நன்கு பிழிந்து கீரையை மட்டும் வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இந்த மாதிரி செய்வது வெந்தயக்கீரையில் இயல்பாக இருக்கும் கசப்பை நீக்கும். அப்படியே செய்தால் கசப்பு அதிகமாகத் தெரியும். பிழிந்து வைத்த தண்ணீரை சிங்கில் கொட்டி விடலாம்! அல்லது கசப்பு பிடித்தால் குடித்து விடலாம்!

வாணலியில் எண்ணெய் விட்டு, கொஞ்சம் காய்ந்ததும், அதில் ஜீரா மற்றும் பெருங்காயம் சேர்த்து, வதக்கவும்.

ஜீரகம் வெடித்த பிறகு, நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டையும் சிவப்பு மிளகாயையும் சேர்த்து கொஞ்சம் மிதமான தீயில் வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த உருளைக் கிழங்குகளைச் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி விடவும். ரொம்பவும் அழுத்தம் தராமால் மேலாகக் கிளறுவது நல்லது. ஐந்து நிமிடத்திற்கு இப்படி கலக்கி விடலாம்.

பிறகு நறுக்கி, பிழிந்து வைத்திருக்கும் வெந்தயக் கீரையையைச் சேர்த்து, தேவையான உப்பு மற்றும் தனியா-ஜீரா பொடியையும் சேர்க்கவும். அவ்வப்போது கலக்கி விடவும். மூன்று நிமிடங்கள் இப்படிச் செய்தால் போதுமானது.

அடுப்பை அணைத்து, தயாராக இருக்கும் ஆலூ மேத்தியை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்! இந்த ஆலூ மேத்தி சப்பாத்தி, பூரி, பராட்டா ஆகியவற்றுடன் நல்ல காம்பினேஷன்! சாதத்துடனும் சாப்பிடலாம்! அது ஒன்றும் கோபித்துக் கொள்ளாது!

என்ன நண்பர்களே, இந்த வாரம் தந்த ஆலூ மேத்தி குறிப்பு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் இருக்கும் இடத்தில் இந்த வெந்தயக் கீரை கிடைத்தால் இப்படிச் செய்து சுவைத்துப் பாருங்கள்! உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  
நாளை மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஆஹா ஆலூ மேத்தி!! போன வாரம் தான் செஞ்சேன். சூப்பர். உங்கள் குறிப்புகளும் பார்க்கிறேன் ஜி.

    குல்தீப் அடுத்த நாள் என் வரவில்லை என்று மண்டை குடைசல் அது வருமோ என்று பார்த்தால் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி!

      குல்தீப் உடன் சுற்றிய இடங்களில் ஒன்று பற்றி பகிர்ந்த பிறகு அடுத்த நாள் பற்றிய விஷயம் சொல்கிறேன்! அதுவரை சஸ்பென்ஸ்!

      ஆலூ மேத்தி - நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. ஒரே ஒரு வித்தியாசம் உப்பு போட்டு மூடி வைத்து பின்னர் பிழிந்து போடுவது மட்டும் நான் செய்வது இல்லை. அப்படியே போட்டுவிடுகிறேன். கசப்பு இங்கு பிடிக்கும் என்பதாலும் மீயும் ஸ்வீட்டாச்சே அதனாலும். சில சமயம் கசப்பதும் இல்லை.

    டக்கென்று செய்ய வெந்தயக்கீரை இல்லை என்றால் கசூரி மேத்தி எப்போதுமே இருக்கும் வீட்டில் அதைப் போட்டும் செய்துவிடுவதுண்டு. ஃப்ரெஷ் கீரை போட்டு செய்வது போல இருக்காது தான். இருந்தாலும் அவசரத்திற்கு.

    குறிப்புகள் சூப்பர் ஜி. உங்கள் படம் பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு. வெந்தயக் கீரை உப்பில் போட்டு அதையும் செய்து பார்க்கிறேன். ஆனால் அந்த நீரை நான் தான் குடிக்க வேண்டும்!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கசப்பு பிடிக்காதவர்கள் நிறைய பேர் உண்டு. பஞ்சாபிகளில் சிலர் இப்படித்தான் பிழிந்து செய்கிறார்கள். சுத்தமாக கசப்பே இல்லாமல் நன்றாக இருக்கும்.

      கசூரி மேத்தி அலங்காரத்திற்கும் வாசனைக்கும் மட்டுமே போடலாம்! நிறைய போடுவதில்லை. மேத்தி இங்கே நிறையவே கிடைக்கிறது - குறிப்பாக குளிர் நாட்களில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங். சுவையான ஆலு மேத்தியைச் சாப்பிட்டுவிட்டு வாக்களிக்கச் செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      ஆஹா ஜனநாயகக் கடமை ஆற்றுவது முதலாய வேலை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அது ஒன்றும் கோபித்துக் கொள்ளாது...

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஒருமுறை செய்துவிடலாம். வெந்தயக்கீரை கிடைக்கும் ஒரு நாளில் இது நினைவில் இருக்கவேண்டும். செய்து சுவைத்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்கும்போது செய்து பாருங்கள். செய்தால் சொல்லுங்கள், எப்படி இருந்தது என்றும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பிரமாத செய்முறையோடு ஆலு மேத்தி படங்கள் சூப்பர் வெங்கட்.
    எனக்கு மேத்தி கசப்பு பிடிக்காது. உப்பில் வைத்து
    செய்து பார்க்கிறேன். மிக மிக நன்றி. ஓட்டளித்து நல்லாட்சி வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்மா... மேத்தியின் கசப்பு பலருக்கும் பிடிப்பதில்லை!

      நல்லாட்சி மலரட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  7. வாங்கும் வெந்தயக்கீரையை அநேகமாய் மேத்தி ரொட்டி செய்தே தீர்த்துடுவேன். எப்போவானும் சாம்பாரில் போடுவது உண்டு. ஆலு மேதி செய்து பல நாட்கள் ஆகிவிட்டன. அடுத்த முறை மேதி வந்தால் செய்து சாப்பிடணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. ஆலூ மேத்தி நல்லாத்தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  9. ஆலூ மேத்தி பஞ்சாபி ஸ்டைலில் நன்றாக உள்ளது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. ஆலூ மேத்தி நல்லாத்தான் இருக்கு, ஆனா எனக்குத்தான் அது ரொம்ப பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... மேத்தியின் கசப்பு சிலருக்குப் பிடிக்காது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  11. சமையலில் என்னவெல்லாம் காம்பினேஷண்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. பிழிந்து வைத்த தண்ணீரை சிங்கில் கொட்டி விடலாம்! //
    சத்து எல்லாம் போய் விடுமே!

    செய்முறையும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கசப்பு பிடிக்காதவர்கள் இப்படிச் செய்யலாம். கசப்புடன் சாப்பிடுவது நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. ஆலு மேத்தி - எனக்குப் பிடிக்காது... இருந்தாலும் செய்முறை நல்லா எழுதியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... இதன் கசப்பு பலருக்கும் பிடிப்பதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. வெங்காயம் தக்காளி சேர்க்காத உணவை எங்க வீட்டில் மதிப்பதே இல்லை.

    எதுவும் இல்லாத போது செஞ்சு பார்க்கனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... சிலருக்கு இப்படித்தான். இங்கே எதனுடனும் ஆலூ செல்லுபடியாகும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  15. குறிப்புகளும் புகைப்படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....