புதன், 22 மே, 2019

தில்லி டைரி – பங்க்ளா சாஹேப் குருத்வாரா – லோதி கார்டன்



லோதி கார்டன் - ஒரு பகுதியில்...

லோதி கார்டன்:

இன்றைய தில்லி டைரியில் ஒரு சனிக்கிழமையன்று மாலை லோதி கார்டன் சென்ற பொது கிடைத்த அனுபவங்களை முதலில் பார்க்கலாம். மரங்கள் அடர்ந்த பகுதிகளும், புல்வெளிகளும், Tomb களும் இங்கு காணப்படுகின்றன. கண்ணுக்கினிய காட்சிகளும், பறவைகளின் ஒலிகளும், பார்க்க/கேட்கக் கிடைக்கும் இடம்.



லோதி கார்டன் - பூங்காவின் உள்ளே சமாதி....

காலையும், மாலையும் இங்கு நடைப்பயிற்சி செய்வோரும், உடற்பயிற்சி செய்வோரும் அதிகம் வந்து செல்கின்றனர். அது போக எங்கு சென்றாலும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருப்போரும் உண்டே :) இந்த இடமும் அதற்கு விதிவிலக்கல்ல!

ஒருபுறம் இரண்டு இளைஞர்கள் நடனம் பயிற்சி செய்து கொண்டிருந்தனர் :) தலைகீழாக ஒரு கையில் மொத்த உடல் எடையும் இருக்குமாறு பயிற்சி :) மறுபுறம் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த பெற்றோர்.

கர்ப்பம் தரித்திருந்த பெண்மணி ஒருவர் தன் கணவனுடன் photo shoot ஒன்றில் இருவரும் பிறக்கப் போகும் குழந்தைக்கான உடைகளை கைகளில் வைத்துக் கொண்டு முதுகோடு முதுகு உரசி காண்பித்துக் கொண்டிருந்தது அழகாக இருந்தது :)


லோதி கார்டன் - முகம்மது ஷா சய்யது சமாதி....
 
இப்படி வந்தவர்களை பார்த்துக் கொண்டு கார்டனை வலம் வந்தோம். சிறிது நேரம் புல்வெளியில் அமர்ந்திருந்தோம். இன்னும் சில இடங்களை பார்க்கலை. போகலாம் என்றேன். இருட்டியதும் சிறிது பயமாக இருக்க, கணவரையும் மகளையும் பற்றிக் கொண்டு வெளியே வந்துவிட்டேன் :)

அங்கிருந்து புறப்பட்டு பங்க்ளா சாஹேப் குருத்வாரா சென்றோம்.

பங்க்ளா சாஹேப் குருத்வாரா:


பங்க்ளா சாஹேப் குருத்வாரா
 
சனியும், ஞாயிறும் தான் வெளியே செல்ல முடிகிறது :) வெயில் வேறு அதிகமாகி விட்டது. புழுக்கமும் சேர்ந்து கொண்டது :( லோதி கார்டனிலிருந்து புறப்பட்டு அடுத்ததாக பங்க்ளா சாஹேப் குருத்வாரா சென்றோம்.

குருத்வாரா என்பது சீக்கியர்களின் கோவில். புனிதநூலான குருக்ரந்த் சாஹேப்பை வைத்து தான் இங்கு வழிபாடு. மிகவும் சுத்தமாக பாதுகாக்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தை முதல், பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் தலையை துணியால் மூடியே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.

நானும் மகளும் துப்பட்டாவால் மூடிக் கொண்டோம். என்னவர் அங்கே ஆண்களுக்காக வைத்திருந்த ஸ்கார்ஃப் போன்ற துணியால் மூடிக் கொண்டார்.

இங்கு யாரும் ஊழியர் இல்லை. அனைவரும் சேவை செய்ய வந்த சேவகர்களே என்பது ஆச்சரியமான விஷயம். முதலில் நாம் செருப்புகளை வைக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நல்ல அந்தஸ்து உள்ள பெண்மணி ஒருவர் எங்களிடம் 'நமஸ்தே' சொல்லி எங்கள் செருப்புகளை வாங்கி எடுத்து வைத்து டோக்கன் தருகிறார்.



அடுத்து கைகளை கழுவ வாஷ்பேசின் ஆங்காங்கே. அடுத்து உள்ளே செல்ல படிகள். அனைத்தும் பளிங்கினால் ஆனவை. படிகள் ஏறும் இடத்தில் சிறு சிறு குழாய்கள் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நம் கால்களை நனைக்க. அப்படியே உள்ளே சென்றால் மையத்தில் குருக்ரந்த் சாகிப் இருக்க, சுற்றி அமர்ந்திருக்கும் மக்கள். கோவிலின் உள்ளே கண்கவரும் வேலைப்பாடுகள். நாங்களும் ஒருமுறை வலம் வந்து ஒரு இடத்தில் அமர்ந்தோம்.

அங்கிருந்து வெளியே வந்து சரோவரை (தெப்பக்குளம்) அடைந்தோம். மிகப் பெரியது. குளித்து, உடைமாற்ற அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கால்களை நனைத்துக் கொண்டோம்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்று ஒரு வரிசையில் நின்றோம். Karah prashad அதாங்க பிரசாதம் வாங்கும் வரிசையில் நின்றோம். இரண்டு கைகளையும் சேர்த்து ஏந்தினால் தான் பிரசாதம் தரப்படும். நெய் மணத்துடன் பிரசாதம் இளம்சூட்டுடன் அளவான இனிப்புடன் பிரமாதமாய் இருந்தது. கைகளெல்லாம் நெய் :)

அம்ருத் பானி என்ற புனித தீர்த்தமும் ஒரு இடத்தில் தரப்பட்டது. ஜக்கிலிருந்து விடும் போது அப்படியே வேண்டுமளவு குடித்தார்கள். நாங்களும் வாங்கி குடித்தோம். இது நோய்களிலிருந்து நிவாரணம் தருபவை என்று நம்பப்படுகிறது.


லங்கர்....


தாகத்திற்கு தண்ணீர் தரவும் ஆங்காங்கே சேவை செய்யும் பலர். டம்ளரில் தரவும், குடித்த டம்ளர்கள் கழுவவும் சேவை. தினந்தோறும் லங்கர் எனப்படும் அன்னதானமும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் பெரிய ஹால், அனைவருக்கும் ஸ்டெயின்லஸ்டீல் தட்டுகள் என்று சிறப்பான ஏற்பாடு. சப்ஜிகள் பரிமாறியதும் ரொட்டிக்கு கைகளை ஏந்தினால் தான் தரப்படும். அப்போது தான், இரவு வேளைக்கான லங்கர் ஆரம்பித்திருந்தது. ஆனால் நாங்கள் அங்கே சாப்பிடவில்லை!

நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு எங்கள் பகுதியிலிருந்த உணவகத்தில் பட்டர் நான், ஷாஹி பனீர், தால் மக்கனி மற்றும் ரப்டி ரசமலாயை சுவைத்து வீடு திரும்பினோம்.

அடுத்த நாள் மாலையும் ஊர்சுற்றல் தான். அது பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

ஆதி வெங்கட்
புது தில்லியிலிருந்து….

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி..

    அட தில்லி இடங்களா படங்கள் நன்றாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. இரு இடங்களும் பார்த்ததுண்டு. குருத்வாரா அதிக நேரம் இருக்க முடியவில்லை மிகவும் பிடித்த இடம் அழகாகவும் இருக்கும் அது. படம் சூப்பரா இருக்கு.

    ஆஹா பட்டர் நாண், ஷாஹி பனீர் தால் மக்கனி ஆஹா.....சில மாதங்களுக்கு முன் உறவினர் வந்த போது தால்மக்கனி செய்தேன்...மகன் இல்லாததால் எல்லாமே குறைந்துவிட்டது. யாராவது வந்தால் செய்வது என்றாகிவிட்டது.

    எஞ்சாய் ஆதி.

    கீதா







    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தால் மக்கனி - நானும் வீட்டில் செய்வது குறைந்து விட்டது! தனியொருவனுக்குச் செய்வதில் பிரச்சனைகள் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    லோதி கார்டன் வர்ணனைகள் அருமை. மரங்கள் நிறைந்த என்பதே ஒரு கவர்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் மனதுக்குப் பிடித்தமானது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. குருத்வாரா பற்றி பேஸ்புக்கில் படித்திருந்தாலும் மறுபடி படிக்கும் அளவு சுவாரஸ்யம்தான். மக்கள் மனதின் அகந்தையை அகற்றும் கோவில். ஜெயில் சிங் மற்றும் மன்மோகன் சிங் இங்கு தண்டனைச் சேவை பெற்றதைப் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அமிர்தசர் பொற்கோயில்னு நினைக்கிறேன் ஶ்ரீராம்.

      நீக்கு
    2. மனதின் அழுக்கை அகற்றல் - நல்ல விஷயம். ஆனால் பலராலும் இதைச் செய்ய முடிவதில்லை.

      ஜெயில் சிங் தண்டனைச் சேவை போன்று பல குருத்வாராக்களில் உண்டு. அவரவர் பகுதியில் இருக்கும் குருத்வாராவில் இப்படிச் சிலருக்கு தண்டனை தருவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. Bபூட்டா சிங் அவர்களுக்குக் கூட இப்படி தண்டனை வழங்கப்பட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  5. லோதி கார்டன், குருத்துவாரா எல்லாம் பார்த்த நினைவுகள் மனதில் வந்து போகிறது.
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வந்த போது நீங்களும் பார்த்திருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  7. நாங்களும் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. சப்பாத்தியே இப்போக் கொஞ்ச நாட்களாக/மாதங்களாகப் பண்ணல்லை! எப்போவோ ஓர் நாள்! வெயில் காலத்தில் இரவு கூடச் சப்பாத்தி செய்யவென்று அடுப்பருகே நிற்க முடிவதில்லை. ஆகவே மாசம் ஒரு நாள் பண்ணினால் பெரிசா இருக்கு! இத்தனைக்கும் நாங்க இரண்டு பேர்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடை காலங்களில் சப்பாத்தி செய்வதும் சாப்பிடுவதும் கடினம் தான். அதுவும் தலைநகரின் சூட்டிற்கு அடுப்படியில் நிற்பது சிரமம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. முகநூலிலும் பார்த்தேன். நாங்க தில்லிக்கு அடிக்கடி சென்றிருந்தாலும் சுற்றிப்பார்க்க என்று போனது சுமார் 40 வருஷங்களுக்கு முன்னர் தான்! அதுக்கப்புறமாப் போனாலும் மலை மந்திர் மட்டும் போயிருக்கோம். அநேகமா குர்காவில் தங்கி இருந்ததால் தில்லிக்கு வந்து சுற்றிப் பார்த்தது குறைவு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருகிராமிலிருந்து தில்லி வந்து செல்வது கொஞ்சம் கடினமான வேலை. தற்போது மெட்ரோ வசதி இருந்தாலும், குருகிராமில் போக்குவரத்து வசதிகள் குறைவு. அவரவர் வண்டி வைத்து இருக்க வேண்டியது அத்தியாசவசத் தேவையாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. அழகான இடங்கள். பார்க்க ஆவலாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி/வட இந்தியாவிற்க்கு ஒரு பயணம் திட்டமிடுங்கள் ஐயா. எல்லா இடங்களும் பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. இத்தனை வருஷமாச்சு தில்லி வந்து. இன்னும் இந்த குருத்வாராவுக்கு போகவில்லை. அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குகூட போயிட்டு வந்தாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... இன்னும் பங்க்ளா சாஹேப் குருத்வாரா சென்றதில்லையா? நான் அழைத்துச் செல்கிறேன் விரைவில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. You live in the heart of the city. Good location. Centre of all tourist attractions.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் புது தில்லியில் இருப்பதில் ஒரு வசதி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....