சனி, 7 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – இணையத் தமிழ் பயிற்சி – வாழ்க்கை – வீட்டுச் சாப்பாடு – பதிவர் சந்திப்பு


காஃபி வித் கிட்டு – பகுதி – 44

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டும்… ஒன்று முயற்சி; இரண்டாவது பயிற்சி!

இந்த வாரத்திற்கான அறிவிப்பு – இதுவும் பயிற்சி தான்!





புதுக்கோட்டை வாழ் வலைப்பதிவர்கள், திரு முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டலில் சிறப்பான பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். இணையத் தமிழ் பயிற்சி வகுப்புகள், “வீதி” இலக்கியக் கூட்டங்கள் என பலதும் அங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதிரி முனைப்புடன் செயல்படுவது பாராட்டுக்குரிய விஷயம். இணைய தமிழ் பயிற்சி வகுப்புகள் இதுவரை மூன்று முறை நடத்தி இருக்கிறார்கள். இப்போது நான்காம் முறையாக புதுக்கோட்டை நகரில் பயிற்சி நடக்க இருக்கிறது – இரண்டு நாட்களுக்கு இந்தப் பயிற்சி இருக்கும்.  விவரங்கள் வளரும் கவிதை வலைப்பூவில் இருக்கின்றன.  அழைப்பிதழின் இரண்டு பக்கங்களும் மேலே கொடுத்திருக்கிறேன். இந்தப் பயிற்சியில் பல தலைப்புகளில் விவரங்களைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு – சமூக வலைத்தளங்களில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும், வலைப்பக்க உருவாக்கம், மின்னூல் பதிவிறக்கம் என நல்ல பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விருப்பம் இருப்பவர்களும், வாய்ப்பு இருப்பவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்! மேலதிகத் தகவல்கள் மேலே குறிப்பிட்ட வளரும் கவிதை தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  கட்டணம் அப்படி ஒன்றும் அதிகமில்லை – 200/- ரூபாய் மட்டும் – மாணவர்கள் எனில் 100/- ரூபாய் மட்டும்!

கோரா கேள்வி பதில்கள் – குட்டிக் கதை:

கேள்வி: 11 வார்த்தைகளை விடக் குறைவான சொற்களில் உங்கள் வாழ்க்கையின் தத்துவத்தைச் சொல்லுங்கள்…

பதில்: இதோ, ஒன்பதே சொற்களில் வாழ்க்கையின் தத்துவம் மற்றும் நிதர்சனமான உண்மை.

வாழ்க்கை

வெறும் கையுடன் வந்து

வெறும் கையுடன் செல்லும்

ஒரு பயணம்.

படித்ததில் பிடித்தது – விடுதி:

மன்னன் ஒருவன், ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.” சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,”என்றார் அவர்.

மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான், ”குருவே, இது என் அரண்மனை. இதை விடுதி என்று சொல்கிறீர்களே?” குரு கேட்டார், ”மன்னா, உனக்கு முன்னால் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?” மன்னன் தன தந்தையார் என்று சொல்ல, அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.

அரசனும் தன பாட்டனார் என்றான். குரு, ”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டார். மன்னனும், ”அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,” என்று சொன்னான். அதன் பின் குரு கேட்டார், ”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?” அரசன் சொன்னான், ”என் மகன், அதன் பின் என் பேரன்.” குரு, ”ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார். பிறகு போய் விட்டார். அதன்பின் உன் தந்தையார் இருந்தார். பிறகு போய் விட்டார். இப்போது நீ இருக்கிறாய். நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய். உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான். அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான். யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?” என்று கேட்டார்.

இந்த வாரத்தின் பாடல்: காந்தக் கண்ணழகி!

“நம்ம வீட்டுப் பிள்ளை” எனும் சிவகார்த்திகேயன் படத்தில் வரும் பாடல். பெரியதாக அர்த்தமோ, இலக்கிய மயமாக இருக்கும் என்றோ நினைக்க வேண்டாம் – பாடல் எழுதியது சிவகார்த்திகேயன்! சும்மா ஒரு ஜாலிக்கு கேட்டு பாருங்க…


இந்த வாரத்தின் விளம்பரம்:

விடாமுயற்சியுடன் வரும் அந்தப் பாட்டி மனதை ரொம்பவே கவர்ந்து விட்டார். பாருங்களேன். ஹிந்தி விளம்பரம் என்றாலும் ஆங்கில சப் டைட்டில் உண்டு என்பதால் புரிந்து கொள்ள முடியும்!



பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2013-ஆம் வருடத்தின் இதே நாளில் எழுதிய ஒரு பதிவு! 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின் போது நான் எடுத்த நிழற்படங்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அப்படி வெளியிட்ட ஒரு நிழற்படத் தொகுப்பு தான் இன்றைய பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க பதிவாக! படிக்காத/பார்க்காத பதிவுலக நண்பர்கள் படிக்க/பார்க்க ஏதுவாய் இங்கே அப்பதிவின் சுட்டி…


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.  நானெல்லாம் முயற்சிக்கே பயிற்சி செய்ய வேண்டிய ஆள்!  ஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      முயற்சிக்கே பயிற்சி - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பயிற்சிக்கு புதுகை செல்பவர்களுக்கு வாழ்த்துகள்.  நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்போது இந்த மாதிரி பயிற்சி நடப்பது நல்ல விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. விளம்பரம் வழக்கம்போல தன் பணியைச் செவ்வனே செய்தது!
    கண்கலங்க வைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் - உண்மை தான் கலங்க வைக்கும். அந்தத் தாயின் அன்பு எவ்வளவு அழகாக இதில் சொல்லப் பட்டிருக்கிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பழைய பதிவு மறுபடியும் பார்த்து மகிழ்ந்தேன்.  இப்பல்லாம் வலையுலகம் களையிழந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவு படித்தது அறிந்து மகிழ்ச்சி. வலையுலகம் களையிழந்து விட்டது - உண்மை தான். மீண்டும் புத்துணர்வு பெற வேண்டும்... முகநூல் பக்கம் போனவர்களும் இங்கே திரும்ப வேண்டும். புதியவர்கள் எழுத வேண்டும். பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஜென் குருவின் விளக்கம் அசத்தல் ஜி.
    இவ்வளவுதான் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு தான் வாழ்க்கை - இது அனைவருக்கும் புரிந்தால் நலம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. அனைத்தும் அற்புதம் .பதிவர் சந்திப்பு குறித்த பேச்சு அடிபடத் துவங்கியுள்ள சமயத்தில் தங்கள் புகைப்படங்கள் மீண்டும் சந்திப்பு உண்டு என்பதை உறுதி செய்வது போல உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் சந்திப்பு - மீண்டும் நடந்தால் மகிழ்ச்சி. பெரும்பாலான பதிவர்கள் பதிவுகளே எழுதுவது இல்லை என்பது வருத்தமானது. மீண்டும் எழுதுவார்களா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எப்போதும் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. பதிவர் பயிற்சி இப்போதும் நடப்பது மகிழ்ச்சியான விஷயம். இனிதே நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் பயிற்சி - ஆமாம் ஜோசப் ஐயா. தொடர்ந்து நடப்பது நல்ல விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  10. வாழ்க்கையில் வெற்றிபெற...முயற்சி பயிற்சி உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. இந்த வாரம் நீங்கள் இரசித்த வாசகத்தை நானும் ரசித்தேன். புதுக்கோட்டையில் திரு முத்து நிலவன் அவர்களின் வழிகாட்டலில் நடக்க இருக்கும் பயிற்சி வகுப்புகள் பற்றி தெரியப்படுத்தியது, அது பற்றி அறியாதவர்களுக்கு தெரிந்துகொள்ள உதவியிருக்கிறீர்கள்.

    வாழ்க்கையின் தத்துவத்தை ஒன்பதே சொற்களில் சொன்ன கவிதையும், ஜென் குரு கதையும், Fortune இன் விளம்பரமும் மிக அருமை.

    2013 இல் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின் படங்களை வெளியிட்டு திரும்பவும் இன்னொரு பதிவர் சந்திப்பு நடைபெறாதா என ஏங்க வைத்துவிட்டீர்கள்.

    இந்த வார காஃபி வித் கிட்டு சுவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயிற்சி பற்றிய தகவல் பலரையும் அடைய ஒரு சிறு முயற்சி....

      தத்துவம், ஜென் கதை, விளம்பரம் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவர் சந்திப்பு விரைவில் நடக்க ஆசைப்படும் நபர்களில் நானும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. அனைத்தும் மிக அருமை.
    பாட்டி கண்ணில் நீர் வரவழைத்தார். அன்பு அது தரும் தெம்பு.
    நடித்தவ்ர்கள் அனைவரும் அருமையாக இயல்பாய் நடித்தார்கள்.
    ஜாலியான பாட்டை கேட்டேன்.

    துறவி சொன்ன விடுதி கதை அருமை.
    வாழ்க்கை தத்துவம் உண்மை.
    பின்னோக்கி பார்த்தேன், நானும் கருத்து சொல்லி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அன்பு அது தரும் தெம்பு.// உண்மை தான் கோமதிம்மா. அன்பின் வலிமை அப்படி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அன்பு வெங்கட் ,பதிவும், பதிவர்கள் ப்டங்களும் மிக அருமை. ஜென் கதை வெகு யதார்த்தம்.
    எல்லாம் நமது என்று நினைக்கும் போதுதான் கவலையும்
    காவலும் தேவை இந்த குரு சொல்வது போல நடக்கலாம்.

    பாட்டி விளம்பரம் அழகும் அன்பும்.
    பதிவர் சந்திப்பின் போது நான் ஏன் போகவில்லை என்று யோசிக்கிறேன்.
    அத்தனை நண்பர்களையும் பார்க்க மிக மகிழ்ச்சி.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டி விளம்பரம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா... அந்த மூதாட்டி தொடர்ந்து முயற்சிப்பதும், ஒவ்வொரு முறையும் அவரது முகத்தின் தோன்றும் உணர்வுகளும் அப்பப்பா... மிகவும் பிடித்த காணொளியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் ஒரு திருப்தி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. மிக்க நன்றி ஜி...

    ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாபகம் வருதே... :) நல்லது தான். அடுத்த பதிவர் சந்திப்பு நடந்தால் நானும் மகிழ்வேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. வாழ்கை தத்துவம் நிஜம்.பயிற்சி,இலக்கிய நிகழ்வுகள் நடத்துவது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  16. " செயல் மன்றம் " என பதிவராக முகநூலில் தொடர்ந்து பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.
    மறுபடியும் சந்திப்போம்.
    மிக்க அன்புடன்,
    தங்கவேலு சி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....