சனி, 22 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ரங்கவல்லி கோலம் – கண்மணி பூவே – வாக்குறுதி - பூரிக்கட்டை


காஃபி வித் கிட்டு – பகுதி 55

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கோபம், சோகம், அதீத யோசனை ஆகிய மூன்றுமே எதற்கும் பயன்படாது! இந்த நிமிடத்தில் சந்தோஷம் கொள்வோம்! வரப் போவதை அதன் போக்கில் விடுவோம்! நேர்மறையாக சிந்திப்போம்.

இந்த வாரத்தின் செய்தி – ரங்கவல்லி குழுவின் கலக்கல் கோலம்:



அவர்கள் ஒருவர் இருவர் அல்ல ஒரு அணி, அந்த அணிக்கு பெயர் ரங்கவல்லி அணி. சென்னையைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி, கோலம் போடுவதில் ஆர்வம் அதிகம், தான் போட்ட கோலங்களை வாட்ஸ் அப்பில் தோழியருக்கு அனுப்பிவைத்தார் அவர்களும் பதிலுக்கு தங்கள் கோலங்களை அனுப்பிவைத்தனர். நாம் போடும் கோலங்கள் நமக்குள் மட்டுமே பரிமாறிக் கொள்கிறேமே இதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சென்றால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்தனர். ரங்கவல்லி என்ற பெயரில் கோலமிடும் பெண்கள் அணியை அமைத்தனர் ,இந்த அணியின் அழகிய கோலங்களை பார்த்து வடபழநி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி நேரத்தில் கோலம் போட முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.  நவராத்திரி விழாவிற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோலங்களை பார்த்து பாராட்ட அதன் பின் வந்த அழைப்பின் பேரில் இந்த அணியினர் சென்னை,பெங்களூர் உள்பட 29 கோயில்களில் கோலமிட்டு பெயர் பெற்றுள்ளனர். விரைவில் மந்திராலய கோயிலுக்கு செல்ல இருக்கின்றனர். இப்போது இந்த ரங்கவல்லி அணியில் 250 உறுப்பினர்கள் உள்ளனர் , எங்கே கோலம் போடப்போகிறோம் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவோம் உறுப்பினர்கள் அந்தப்பகுதிக்கு வந்துவிடுவர் பின் கோலமிட்டுவிட்டு சென்றுவிடுவோம்.

கோலம் போடுவது என்பது நமது பராம்பரியமான அழகுக்கலை, இதனால் மனதிற்கு உடம்பிற்கு பயிற்சி கிடைப்பதுடன் ஆத்மதிருப்தியும் உண்டாகிறது. எங்கே கோலமிடுவது என்றாலும் நாங்கள் எங்கள் செலவில் சென்றுதான் கோலம் போடுவோம் கோலமிடுவதற்கு தேவையான பொருட்களையும் நாங்களே கொண்டு செல்வோம். இதில் நாங்கள் செய்யும் புதுமையை பார்த்துவிட்டு இளைய தலைமுறை பெண்கள் பலரும் எங்களுக்கும் இதைச் சொல்லிக்கொடுங்கள் என்று கேட்கின்றனர் நாங்களும் சந்தோஷமாக சொல்லிக்கொடுக்கிறோம். எங்கள் ரங்கவல்லி அணியின் சார்பாக மிக அதிக கோலங்கள் போட்டு கின்னஸ் ரிக்கார்ட் செய்யவேண்டும் என்பது எங்கள் விருப்பம் அதை நோக்கியே தற்போது நாங்கள் பயணிக்கிறோம் என்று கூறி முடித்தார் லட்சுமிதேவி. – தினமலர் நாளிதழிலிருந்து…

நல்ல விஷயம். நமது பாரம்பர்ய கலையினை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் ரங்கவல்லி குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். குழுவில் பங்குபெற ஆசை இருந்தால், அவர்களை வாழ்த்தும் எண்ணமிருந்தால், rangavallikolam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வாரத்தின் இசை – கண்மணி பூவே - மலையாளம்:

இந்த வாரத்தின் பாடலாக, மலையாளப் பாடல் ஒன்று. மிகவும் இனிமையாக இருக்கிறது இப்பாடல். கடைசியில் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் கேட்க இனிமையாக இருந்ததால் இங்கே இந்த வாரத்தின் ரசித்த பாடலாக…



பேருந்து பயணத்தில் – குழந்தையாகவே இருந்துவிட்டால்…

சமீபத்தில் ஒரு பேருந்து பயணம் – தமிழகத்தில்! அப்போது வழியில் ஏதோ ஒரு ஊரில் ஒரு அம்மாவும் பத்து-பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவனும் ஏறிக் கொண்டார்கள். அந்தச் சிறுவன் பேருந்துக்குள் வந்ததிலிருந்தே உற்சாகப் பெருவெள்ளம் அவனுக்குள். அங்கேயும், இங்கேயும் எட்டி எட்டிப் பார்ப்பதும், சப்தமாக அவனது மகிழ்ச்சியை வெளியிடுவதுமாக இருந்தான். ஓட்டுனர் எப்படி வண்டியைச் செலுத்துகிறார், வெளியே என்னென்ன காட்சிகள் என அனைத்தையும் சப்தமாக சொல்லிக் கொண்டே வந்த அவனை அனைவருமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ குறைபாடு இருப்பது நன்கு தெரிந்தது. ஆனாலும் அந்தக் குழந்தையின் செய்கைகளை மன வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்த அம்மா அவ்வப்போது சிறுவனை அதட்டிக் கொண்டிருந்தார் – ”சப்தம் போடக்கூடாது, எல்லாரும் பார்க்கறாங்க பாரு” என. வழியில் வேறு ஒரு ஊரில் இறங்கிப் போகும் வரை சிறுவன் மகிழ்ச்சிப் பரவசத்தில் இருக்க, அம்மா சோகத்தில்!

சில காட்சிகள் மனதை ஏதோ செய்துவிடுபவை அல்லவா? இந்தக் காட்சியும் அப்படியே – குழந்தை நல்லபடியாக இருக்க பிரார்த்தனை செய்வது தவிர நம்மால் முடிவது வேறொன்றுமல்ல! ஆண்டவன் அக்குழந்தைக்கும் அவனது அம்மாவுக்கும் குறையொன்றுமில்லாமல் பார்த்துக் கொள்ளட்டும்.

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் – Bowls for Humanity!

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக மலேசியாவின் ஒரு விளம்பரம் – அந்தக் குண்டுப் பையன் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியூட்டினாலும் கடைசியில் மிகவும் பிடித்துப் போனான்! பாருங்களேன்.



படித்ததில் பிடித்தது – தமிழ் கோரா:



அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர். முதியவருக்கு அருகில் வந்து கேட்டார் - "வெளியே குளிர், உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?”

முதியவர் பதிலளித்தார், "எனக்கு சூடான உடைகள் இல்லை, ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்".

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார் "நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்".

அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவர் வருவார் எனக் காத்துக்கொண்டிருந்தான். அந்த மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான். காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.

அந்த மனிதன் கையில் ஒரு வாசகம் எழுதப் பட்டிருந்த தாள் - "எனக்கு சூடான உடைகள் இல்லாத போது, நான் குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளித்த போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான் குளிர்க்கு எதிராக இருக்கும் திறனை இழந்துவிட்டேன். வாக்குறுதி அளிக்கும் முன், பொய்யான வாக்குறுதிகளை உருவாக்கும் முன், சற்றே யோசியுங்கள். அது ஒருவரின் மரணத்திற்கு கூட காரணமாக இருக்கலாம்.”

நல்ல கதை இல்லையா.  இப்போதைய அரசியல்வாதிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2014-ஆம் வருடம் இதே நாளில் பதிவர் மதுரைத் தமிழனை கலாய்த்து வெளியிட்ட ஒரு பதிவு -


அந்தப் பதிவில் கருத்துரையிட்ட பதிவர்களில் நிறைய பேர் இப்போது பதிவுலகம் பக்கமே வருவதில்லை என்பதில் வருத்தம் உண்டு.

அந்த நாளில் பதிவினை படிக்காத நண்பர்களின் வசதிக்காக, இங்கே அதன் சுட்டி!

நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. வாசகம் இயல்பான வாழ்க்கையைச் சொல்கிறது.  

    கோலம் அதி அற்புதமாக இருக்கிறது.  கோலம்போட குழுவா?   ஆச்சர்யமாக இருக்கிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    அந்தச் சிறுவன் சிறப்புக் குழந்தையோ என்னவோ...   கடவுள் படைப்பில் வினோதங்கள்...

    கோராவில் அந்தக் கதையை நானும் படித்தேன்.

    பழைய பதிவு நானும் படித்து ரசித்திருக்கிறேன் என்று தெரிந்தது- அங்கு சென்றதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      கோலம் போட இங்கேயும் ஒரு குழு உண்டு. திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில் தினம் தினம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு சில தமிழ்-தெலுங்கு தகராறு காரணமாக நின்று போனது - கோவில் நிர்வாகம் வாசலில் பெயிண்ட் கொண்டு கோலம் போட்டு விட்டார்கள்! :(

      சிறப்புக் குழந்தை தான்.

      கோரா கதை நீங்களும் படித்தது அறிந்தேன். நல்ல கதை என்பதால் படிக்காதவர்களுக்காக இங்கேயும்.

      பழைய பதிவில் உங்கள் கருத்து பார்த்தேன் - இன்று பகிரும்போதும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. // பழைய பதிவில் உங்கள் கருத்து பார்த்தேன் - இன்று பகிரும்போதும்! //

      எங்கு? உங்கள் பதிவிலா?

      கோலக்குழு பற்றி இன்றைய தினமலர் பொக்கிஷம் பகுதியில் வந்திருக்கிறது பார்த்தீர்களா?

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம். பழைய பதிவில் தான்.

      கோலக்குழு தகவல் தினமலரிலிருந்து தான். இன்றைய பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கோலக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
    ஏழையின் குட்டிக்கதை மனதை வருத்தியது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலக் குழுவினர் செய்வது சிறப்பான விஷயம் தானே கில்லர்ஜி. உங்கள் வாழ்த்துகளும் அவர்களுக்குச் சேர்ந்ததில் மகிழ்ச்சி.

      ஏழையின் குட்டிக் கதை - வருத்தம் தான். பலர் இப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் - திருந்தினால் நல்லதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தமிழ்கோரா கதை படித்திருக்கின்றேன். நமது அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய கதை - உண்மை தான் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அனைத்தும் அருமை..எதையும் அதீத விருப்பத்தில் செய்யத் துவங்கினால் வாய்ப்புகளும் புகழும் வானம் தொடும் என்பதற்கு கோலக் குழுவே அத்தாட்சி...வாக்குறுதிக் கதை சுருக்கமாக எனினும் நினைவில் எப்போதும் நிலைக்கும்டியாக...வாழ்த்துகளுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்வின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      வாக்குறுதிக் கதை - நம் அரசியல்வாதிகள் அள்ளிவீசும் வாக்குறுதிகள் நினைவுக்கு வருகிறதல்லவா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மலையாளப் படங்கள் பார்க்கும் போது நம் உடம்பில் ஜில் உருவாகி விடுவதை பல முறை கவனித்துள்ளேன். நாம் கிராமத்துக்குள் இருப்பது போலவே தோன்றும். அழகான திரை. விளம்பரப் படங்களில் உள்ள மெல்லிய உணர்வுகள் என்பது எழுதினால் கூட கடத்தி விட முடியாது. மிக மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரப் படங்கள் பல நம்மை பிரமிப்பில் ஆழ்த்துபவை தான் ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    கோலக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.அழகான கோலங்கள்.

    //அந்தக் குண்டுப் பையன் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியூட்டினாலும் கடைசியில் மிகவும் பிடித்துப் போனான்! பாருங்களேன்.//
    அந்த குண்டு பையன் கடைசியில் வரும் சிறுவனுக்கு உணவு கொடுப்பானா? அது காட்சியில் இல்லையே!
    சிறுவன் உண்வௌ இல்லாமல் தவித்து அழௌம் போது என் கண்ணிலும் நீர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் மனதைத் தொட்டது கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மலையாள பாட்டு கடைசியில் அதிர்ச்சியை தந்தது கனவு பாட்டோ படத்தில் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவுப் பாட்டா என்பது தெரியவில்லை கோமதிம்மா... பாடல் மட்டுமே கேட்டேன் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கோரா கதையும் படமும் மனதை கனக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோரா கதை - மனதை கனக்க வைத்த கதை தான் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமை 2014-ஆம் வருடம் இதே நாளில் பதிவர் மதுரைத் தமிழனை கலாய்த்து வெளியிட்ட ஒரு பதிவை மீண்டும் படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை முரளிதரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாசகம் நன்று. கோலம் போடும் குழு நல்ல யோசனையாக இருக்கிறதே. கண்மணி பூவே இனிமையான பாடல் இறுதியில் இதயம் அறுத்தது. கோர கதையும் மனம் தொட்டது ஏனோ நம்மூர் விவசாயிகள் கண் முன் வந்தனர். மதுரைத்தமிழன் சகோவும் பூரி க்கட்டையும் சிரிப்போ சிரிப்பு. அனைத்துமே அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

      பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இந்தக் கோலக்குழுவைப் பற்றி அரசல் புரசலாகக் கேள்விப் பட்டேன். ஆனால் முழு விபரம் இப்போத் தான் தெரியவந்தது. பனிமழையில் நனைந்த பெரியவர் மனதை வருத்தினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலக் குழு விவரங்கள் உங்களுக்கு இப்பதிவு மூலம் தெரிந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கோலக் குழுவினருக்கு வாழ்த்துகள். வாக்குறுதிகள் நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலக் குழு நல்ல விஷயம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....