தொகுப்புகள்

செவ்வாய், 23 டிசம்பர், 2025

முகநூல் இற்றைகள் - நச்சுன்னு நறுக்குன்னு - வாசலிலே மல்லியப்பூ.... - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கடைசியில் - சிவசங்கரி - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


நச்சுன்னு நறுக்குன்னு - 17-12-2025:



காலை நேரங்களில், சமையலறையில் நுழைந்ததும் இல்லத்தரசி  செய்யும் வேலை - FM Radio வை ON செய்வது தான். தினம் தினம் RJ-க்கள் வாய் ஓயாமல் பேசுவதையும் பொய்யான விளம்பரங்களையும் அதன் நடுவே ஒலிக்கும் சில பாடல்களை கேட்டுக் கொண்டே தான் வேலை நடக்கிறது. அவர் ரேடியோ கேட்பதால் நானும் கேட்டபடியே, காய்கறி நறுக்கித் தருவது போன்று சில சின்னச் சின்ன வேலைகளை செய்து தருவதும் நடக்கிறது.  அப்படி கேட்கும்போது நச்சுன்னு நறுக்குன்னு குட்டி story என்று ஒரு பகுதி வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் ஒரு கதை சொல்கிறார்கள். 


அப்படி கேட்ட ஒரு கதை.....


பள்ளி/கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தனது அப்பா, அம்மாவிடம் பைக் வாங்கித் தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். கஷ்டப்படும் அப்பா, கடனை உடனை வாங்கி மகனுக்கு பைக் வாங்கித் தருகிறார். அம்மா பையனிடம் அப்பா கஷ்டப்பட்டு வண்டி வாங்கித் தந்து இருக்கிறார். நல்ல படிச்சு, வேலைக்குப் போய், அப்பா அம்மா கஷ்டத்தை தீர்க்கணும் என்று சொல்ல, பையன் சொல்கிறான் - நான் படிக்கிறது போக மீதி நேரத்துல RAPIDO bike ஓட்டி சம்பாதிக்க போறேன்..... அப்பா வாங்கிய கடனையும் அடைச்சுடுவேன் என்று சொல்ல அம்மா பூரிப்படைகிறார். இது தான் அந்த நச்சுன்னு நறுக்குன்னு குட்டி story..... 


படிக்கிற வயதில் படிக்க மட்டும் வேண்டும். சம்பாதிக்கிறேன் என்ற பெயரில் பைக்கில் வலம் வருவது தான் எனக்குத் தெரிந்து நடக்கிறது. எனக்குத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் இப்படி கடன் வாங்கி, rapido ஓட்டுவேன் என்று பைக் வாங்கி சும்மா சுத்தி வருகிறார். உழைக்க வேண்டும் என்ற திட்டம் சரியாக இருந்தாலும் அந்தத் திட்டத்தினை செயல்படுத்துவதில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்று தோன்றுகிறது எனக்கு. 


இது குறித்த உங்கள் எண்ணம் என்ன என்று சொல்லுங்களேன்....


*******


வாசலிலே மல்லியப்பூ.... - 20-12-2025:



மார்கழி மாதம் தொடங்கி சில நாட்கள் ஆகிவிட்டன.  காலை நேரத்தில் பனியாக இருந்தாலும், பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டு வண்ண வண்ணமாக கோலங்கள் போட்டு வைத்திருக்கிறார்கள்.    பனிக்காலமாக இருந்தாலும் இப்படி கோலங்கள் போடுவது வழக்கமாக இருக்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களில் இந்த கோலம் போடும் பழக்கம் அருகி வருகிறது.  திருச்சியில் கூட பல வீடுகளில் இப்படி கோலம் போடுவதில்லை.  இன்னும் சில வருடங்களில் கோலம் போடுவதே மறந்து விடுமோ என்று தோன்றுகிறது.  


முன்பெல்லாம் காலை நேரங்களில் கோலம் போடும்போது - இப்போது போல கலர் கோலங்கள் அல்ல - கோல மாவில் போடப்படும் கோலங்கள் தான் என்றாலும், பெரிய கோலம் போட்டு, நடுவில் சாணி உருண்டை ஒன்றை பிடித்து வைத்து அதன் மீது பூசணிப்பூவை வைப்பார்கள்.  எதற்காக இந்தப் பழக்கம் என்று எதிர் கேள்வி கேட்டதுண்டு.  


எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைக்கப்படுவது வழக்கம் என்று சொன்னதாக நினைவு.  ஆனால் எல்லா வீடுகளிலும் பூ வைத்திருந்தார்கள் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. அந்த காலகட்டத்தில் திருமண புரோக்கர்,  மேட்ரிமோனியல் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. பிள்ளைக்கு பெண் தேடுவோர் எந்த வீட்டு வாசலில் பூசணிப்பூ இருக்கிறதோ அந்த வீட்டில் பெண் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்பது அர்த்தம். இதனை குறித்து கொண்டு தைமாதம் திருமணத்திற்கு பெண்பார்க்கும் வைபவத்தை நடத்துவர்.  பெண் தேடுபவர்களுக்கு எங்கள் வீட்டு பெண் திருமணத்திற்கு ரெடி என்பதை சூசகமாக அறிவிக்கவே வீட்டு வாசலில் பூசணிப்பூ. 


பூசணிப்பூ வைப்பதில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதை இப்போது நினைக்கும்போதும், ஒவ்வொரு செயலிலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.  ஆனால் அந்த அர்த்தத்தினை, எதற்காக செய்யப்படுகிறது இப்படியான செயல்கள் என்பதை அடுத்த சந்ததியினருக்கு கடத்த தவறிவிட்டார்கள் என்று தான் எனக்குத் தோன்றும்.  கேள்வி கேட்டாலே “சும்மா இருடா (டி)” என்று அடக்கி மட்டுமே வைக்கப்பட்டது தான் அதிகம் இல்லையா.... 


இன்றைய மாலை திருவரங்கத்தின் உத்தர வீதிகளில் உலா வந்தபோது சில வீடுகளில் மட்டுமே கோலம் இருப்பதைப் பார்க்க முடிந்தது.  எங்கள் வீடு இருக்கும் சாலையில் நிறைய வீடுகளில் கோலம் கண்டு மகிழ்ச்சி.  எங்கெங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்துவிட்டது என்பதால் கோலம் போடவே இடம் இல்லாமல் போய்விட்டது.  சிறிய இடத்தில் சின்னதாய் கோலம் போடுவதற்குக் கூட சோம்பேறித்தனம் வந்து விட்டது.  அல்லது கோலம் போடுவதன் தாத்பரியம் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது எனக்கு.  


அது சரி, முடிக்கும் முன் சொல்லிவிடேன்....  “வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா” என்று தானே சினிமா பாடல் கேட்டிருக்கிறேன் - நீ என்னடாவென்றால் தலைப்பில் “வாசலில் மல்லியப்பூ” என்று எழுதியிருக்கிறாயே?” என்று கேட்பது எனக்குக் கேட்கிறது.  வேறொன்றுமில்லை. இன்று ஒரு குடியிருப்பில் உள்ள வீட்டின் கதவுக்கு வெளியே சின்னதாய் கோலம் போட்டு நடுவே மல்லியப்பூ வைத்திருந்தார்கள் - சாணி, பிடித்து வைத்து பூசணி வைப்பதற்கு பதில் இப்படி மல்லிகைப் பூ வைத்திருக்கிறார்கள் போலும்! 


கோலம் போடுவது குறித்த உங்கள் சிந்தனைகள் என்ன? சொல்லுங்களேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

23 டிசம்பர் 2025


10 கருத்துகள்:

  1. இன்றைய வாசத்தைவிட படம் பிரமாதம்.

    பைக் பற்றி பேஸ்புக்கிலேயே வாசித்தேன்.  'நல்ல' மகன்.

    பதிலளிநீக்கு
  2. அபார்ட்மெண்ட் வாசலில் சம்பிரதாயத்துக்கு கோலம் போடமுடிகிறதே தவிர, திறமையைக் காட்டி பெரிதாக போடமுடியாது.  அது ஒரு கஷ்டம்.

    கோலத்தின் நடுவே பூ வைப்பதற்கு இப்படி ஒரு காரணமா..  அட...   பூசணிப்பூவுக்கு பதில் மல்லிகைப்பூவா...  பொன் வைக்கிற இடத்துல பூ என்பது போல பூசணி வைக்கற இடத்தில மல்லிகை!  அண்டர் எ மேங்கோ ட்ரீ..  ஆன் தி பேங்க் ஆப் தி காவேரி என்று பாடலாம்.  உஷா உதுப் மல்லிகைப்பூ மல்லிகைப்பூ என்று பாடுவார்!

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை என்றால் படம் சூப்பர்!...வாசகம் உண்மை...

    நச் கதையில் வரும் அப்பையன் நல்ல மகனாக இருப்பான்னு நினைச்சுக்குவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைக்கப்படுவது வழக்கம்//

    அப்படினா மார்கழி மட்டுமில்லாமல் எந்த மாதத்திலும் வைக்க வேண்டி வரணுமே இல்லையா?

    இதனை குறித்து கொண்டு தைமாதம் திருமணத்திற்கு பெண்பார்க்கும் வைபவத்தை நடத்துவர்.//

    அதேதான்...ஆனால் மற்ற மாதங்களில்?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பண்டு நாடோடிகள், பயணத்தை மாட்டு வண்டியில் இல்லைனா நடந்தே தானே செய்தாங்க. அப்ப கிராமங்களைக் கடக்கும் போது, வீட்டு வாசலில் கோலம் இருந்தால், அந்தத் திண்ணையில் படுத்துக் கொண்டு சிரமப்பரிகாரம் செய்வாங்களாம் சில வீடுகளில் மோர், தண்ணீர் இல்லை சாப்பாடே கூடக் கிடைக்கும்...

    கோலம் இல்லா வாசல் என்றால் துக்க வீடு என்று அந்தத் திண்ணையில் படுக்க மாட்டாங்க...அதே போலதான் பந்தல், தோரணம், வாழை இவை எல்லாம் கட்டுவதன் உள் அர்த்தமும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கேள்வி கேட்டாலே “சும்மா இருடா (டி)” என்று அடக்கி மட்டுமே வைக்கப்பட்டது தான் அதிகம் இல்லையா.... //

    நிறைய வாங்கியிருக்கிறேன்.

    பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களோ?

    பண்டு பெண்கள் வயதிற்கு வந்தாச்சு பரிசம் போட வரலாம்னு தான் ஊரைக்கூட்டி செய்வாங்களாம்...முன்ன...அப்பலாம் நீங்க சொல்வது போல் மேட்ரிமோனியலா? இல்லை கல்யாணமாலையா... அப்படித் தொடங்கிய 'சடங்கு' அது. ஆனால் இப்போது அதற்கான அவசியம் இல்லாத காலம். குழந்தைகளே கூட வெளியில் தெரிவதை விரும்புவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எனக்குக் கோலம் போட ரொம்பப் பிடிக்கும். இப்ப இத்துனூண்டுதான் அவ்வளவுதன இடம். ஊரில் இருந்தவரை பெரிதாக, வீட்டிலும், கோவிலிலும் என்ற் போட்டதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் கலர் போட்டதில்லை. அரிசி மாவோடு கோல மாவு கலந்து வைப்பார் பாட்டி. ஆனால் நான் திருமணத்திற்குப் பிறகு அரிசி மாவு மட்டும்தான் பயன்படுத்திக் கோலம் போடுவதுண்டு இப்பவும். அரிசிமாவில் போடுவதன் காரணம் எறும்புகளுக்காக. அப்படித்தான் முன்பு போடுவாங்களாம்..

    பண்டைய தமிழர் வரலாற்றில் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வெளிநாட்டில் பார்ட் டைம் வேலை பார்த்துக்கொண்டு படிக்கிறார்களே. ஆனால் இங்கு அதற்கான சூழ்நிலை, நண்பர்கள், இல்லை. டிஸ்ட்ராக்‌ஷன், கவனச் சிதறல்களுக்கான வாய்ப்புகள் நண்பர்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அருமை. இன்றைய வாசகமும் அருமை. பைக் கதை நன்றாக உள்ளது. அந்த மகனும் சொன்னபடி பெற்றோர்களுக்கு மனம் உகந்த பிள்ளையாய் இருந்தால் நல்லதுதான்.

    மார்கழியில் வாசல் கோலத்தில் பூசணிப்பூ வைக்கும் வழக்கத்திற்கு சொன்ன தகவல் நன்று. இப்போது அப்பார்ட்மெண்டில் தினசரி சின்ன கோலங்கள் போடவே இயலவில்லை. இதில் பெரிய கோலங்கள் என எப்படி போடுவது..? நான் விடாமல் இதுவரை சின்னதாகவேனும் காலை எழுந்தவுடன் போட்டு வந்தேன். தினசரி வீட்டு வாசல்களை மெயிண்டன் பண்ணும் போது பணியாளர்கள் பத்து, பதினொன்று மணி வாக்கில் பெருக்கித் துடைத்து விட்டு போய் விடுவார்கள். பின் சொல்லி, சொல்லி அவர்கள் திருந்தினார்கள்.

    மல்லிகைப்பூ வைக்கும் சம்பிரதாயமும் மனம் கவர்கிறது. எப்படியோ இளைய தலைமுறைகளுக்கு இக் கொள்கைகள் தெரிந்தால் நல்லதுதான். காலமும் நம்முடன் மாறித்தான் நம்மை சந்தோஷ படுத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வாசகம் , மற்றும் படம் அருமை.

    பைக் கதை நன்றாக இருக்கிறது , நானும் காலை நேரம் நச்சுன்னு நறுக்குன்னு கதை கேட்பேன்.
    ரேடியோ கேட்டுக் கொண்டு காலை நேரம் வேலை செய்வது பிடிக்கும் எனக்கும்.
    இந்த மார்கழியில் மூன்று நாட்கள் சின்னதாக வண்ணபொடிகளால் கோலம் போட்டேன், அப்புறம் கீழே விழுந்து முட்டியில் அடிபட்டு மருத்துவரிடம் போய் என்று கோலம் போடுவது போச்சு. விளக்கு மட்டும் வைத்தேன். இன்று சின்னதாக கோல அச்சு தட்டால் கோலம் போட்டேன்.(தட்டினேன்)

    நான் கோலத்தில் சிவந்தி பூ வைப்பேன் . சிறு வயதில் பீசாணி பூக்கள், பீர்க்கன் பூக்கள் பறித்து வந்து நிறைய சாணி பிள்ளையார் வைத்து இருக்கிறோம். 11 மணி ஆனால் அதை தட்டி வைத்து விடுவோம். பெண் பிள்ளை இருக்கும் வீட்டில் கோலத்தில் சாணி பிள்ளையார் பிடித்து பூக்கள் வைக்க வேண்டும் கண்டிப்பாய். சிறுமிகள் சிறுவீட்டு பொங்கல் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....