வெள்ளி, 9 அக்டோபர், 2009

கரோல் பாக் - கல்யாண்புரி

நண்பர் வி.எஸ். தில்லி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. தனக்கு ஹிந்தி பேசதான் தெரியாது ஆனால் சுலபமாக படித்து விடுவேன் என்று எங்களிடம் பெருமையாக சொல்லி இருந்தார். அதனால் எங்கு வேண்டுமானாலும் என்னால் தனியாக போக முடியும் என்றும் எங்களிடம் தற்பெருமையாக சொல்லுவார்.

ஓர் நாள் அலுவலகம் முடிந்து நாங்கள் எல்லோரும் வீடு வந்து நண்பருக்காக காத்திருந்தோம். இரவு 09.00 மணி ஆகியும் வந்து சேரவில்லை. நாங்கள் கவலையுடன் காத்திருக்க இரவு 10.30 மணி அளவில் வி.எஸ். வந்து சேர்ந்தார். எல்லோரும் விசாரிக்க ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டு இருந்தார். சரி பரவாயில்லை சாப்பிடுவோம் என்று சொல்லி சாப்பாடு முடித்து அவரை மீண்டும் வம்புக்கு இழுத்தோம், என்ன தான் நடந்தது சொல்லுங்கள் என்று. ஒருவாறு அவர் சொன்னது இது தான். தான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது எதிரில் ஒரு பேருந்து "க" என்று ஆரம்பிக்கும் அறிவிப்பு பலகையோடு வர அவசரமாக பேருந்து கரோல் பாக் போகிறது என்று ஏறி அமர்ந்து கொண்டு விட்டாராம். அரை மணி நேரம் ஆகியும் கரோல் பாக் வரும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. திடீரென பேருந்து யமுனை நதியை தாண்டி போய்க்கொண்டிருக்க, பதறியபடி அருகில் இருந்தவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் அந்த பேருந்து கல்யாண்புரி செல்கிறது என்று சொல்ல, சத்தம் இல்லாமல் கல்யாண்புரி வரை சென்று அதே பேருந்தில் அலுவலகம் திரும்ப வந்து, வேறு பேருந்து பிடித்து கரோல் பாக் வந்து சேர்ந்து இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர் வி.எஸ். யாரிடமும் தனது ஹிந்தி புலமை பற்றி வாயை திறப்பதே இல்லை.



2 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா..
    ஆமா.. வி.எஸ் னா யாரு?

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  2. எனது பதிவினை படித்து தங்களது மேலான கருத்தினை எழுதியதற்கும் நன்றி கலையரசன்.

    வெங்கட்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....