தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....
ரத்த பூமி - ஒரு புகைப்பட முன்னோட்டம் [பகுதி 1]
தொடர் ஆரம்பிக்கும்போது இந்த பயணம் நான்கு பேருந்துகள் மூலம் பலருடன் சென்றதாக
எழுதியிருந்தேன். இப்படி நிறைய பேருடன் பயணம் செய்வதில் சில நன்மைகளும் சில
கஷ்டங்களும் உண்டு. நிறைய பேர் என்பதால் கூடவே அழைத்து வந்த சமையல் கலைஞர்கள் உணவு
பற்றி நம்மை கவலை கொள்ள விட மாட்டார்கள்.
பயண ஏற்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அழைத்துச்
செல்லும் இடத்திற்குச் சென்றுவிட்டு வரலாம்.
ஆனால் இதில் சில கஷ்டங்களும் உண்டு. மொத்தமாக எல்லோரையும் சேர்த்து ஒவ்வொரு
இடமாக அழைத்துச் செல்லும்போது பலர் தயாராவதற்கே நிறைய நேரம் எடுத்துக்
கொள்கிறார்கள். நீங்கள் தயாராக
இருந்தாலும் மற்றவர்கள் வருவதற்கு நேரம் எடுக்கும்போது நீங்கள் வெட்டியாக இருக்க
வேண்டும். இப்படி நேரம் வீணாவதால் பார்க்க வேண்டிய சில இடங்களை பார்க்க முடியாது
போகும். அப்படி குருக்ஷேத்திர பயணத்தில் பார்க்காது விட்ட சில இடங்கள்
இப்பகுதியில்......
சன்னிஹித் சரோவர்: சரஸ்வதி நதியின் சங்கமம் எனக் கருதப்படும் இடம். அமாவாசை நாட்களிலும்,
கிரகண நாட்களிலும் இங்கே ஸ்னானம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என
நம்புகிறார்கள். தனது காலத்திற்கு முன்னரே
மரணமடைந்தவர்களின் ஆத்மாவுக்கு விடுதலை அளிக்க இங்கே பரிகாரங்கள் செய்கிறார்கள். விஷ்ணுவின்
இருப்பிடமாகவும் கருதுகிறார்கள்.
சரஸ்வதி
தீரத்:
குருக்ஷேத்திரத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் பெஹோவா கிராமத்தில்
இருக்கிறது. இந்த இடமும் சிறப்பு வாய்ந்த
இடமாகக் கருதப்படுகிறது.
அருணை கோவில்: அம்பாலா சாலையில் இந்த
கோவில் இருக்கும் இடம் சரஸ்வதி மற்றும் அருணா நதிகள் சங்கமிக்கும் இடம். மேலும் விஸ்வாமித்திரர்
மற்றும் வசிஷ்டர் ஆகியோருக்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு உண்டு.
ஸ்ரீ கிருஷ்ணா அருங்காட்சியகம்: பிரம்ம சரோவர் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில்
கிருஷ்ண பகவான் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளனவாம்....
Light and
Sound Show: இந்த தொடரின் ஐந்தாம் பகுதியில் பார்த்த
ஜ்யோதிசரில் மாலை வேளைகளில் Light and
Sound Show நடத்துகிறார்கள். யுத்தபூமிக்கே
உங்களை அழைத்துச் செல்வது போல இருக்கும் என பார்த்த நண்பர்கள் தெரிவித்தார்கள். முப்பது
நிமிடங்கள் நடக்கும் இந்த காட்சியின் காணொளி இங்கே
இருக்கிறது. ஹிந்தி தெரிந்தவர்கள் பார்த்து ரசிக்கலாம்.
[Dh]தரோஹர் ஹரியானா அருங்காட்சியகம்: ஹரியானா மாநிலத்தின் நாட்டுப்புறக் கலைகள்,
ஹரியானாவின் பழமையைப் பறைசாற்றும் பொருட்கள் இங்கே காட்சியாக வைக்கப்பட்டு
இருக்கின்றன.
OP Jindal
Musical Fountain: அரசியல்வாதியும்,
தொழிற்சாலைகள் பலவற்றின் உரிமையாளரான திரு OP Jindal அவர்களின் நினைவாக
அமைக்கப்பட்ட பூங்கா இது. இங்கே மாலை வேளைகளில் MUSICAL FOUNTAIN பார்க்க நன்றாக
இருக்கும். அதன் ஒரு பகுதி இங்கே
காணொளியாக!
இந்த இடங்களைத் தவிர, ஒரு முதலைப் பண்ணை, பிப்லி எனும் இடத்திலிருக்கும் ஒரு
சிறிய விலங்குகள் சரணாலயம், பிர்லா மந்திர் என இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள்
நிறைய உண்டு. பதிவின் ஆரம்பத்தில் சொன்னது
போல, நிறைய பேராக பயணம் செல்லும் போது இருக்கும் சில அசௌகரியங்களினால் பல இடங்களை
பார்க்க இயலவில்லை. அடுத்து அந்தப் பக்கமாக செல்லும்போது இந்த இடங்களையும் பார்க்க
வேண்டுமென நினைத்திருக்கிறேன்.....
என்ன நண்பர்களே ரத்த பூமி தொடரினை நீங்கள் அனைவரும் ரசித்தீர்களா? முடிந்தால் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்களேன். இந்தப் பயணத்திற்கு பிறகும் சில இடங்களுக்குச்
சென்று வந்தேன். அது பற்றிய பதிவுகள்
வெளியிடுவது பற்றி இதுவரை ஒன்றும் யோசிக்கவில்லை...... பார்க்கலாம்... நேரமும் விருப்பமும் இருக்கும்போது எழுதுகிறேன்.
மீண்டும் வேறு ஒரு பகிர்வில் உங்களையெல்லாம் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.