ஏழைகளின் ஊட்டி –
பகுதி 8
சென்ற பதிவில் ஏற்காடு நகரில் இருக்கும் ஏரி பற்றியும் அங்கே கிடைத்த சுகானுபவங்களைப் பற்றியும் பார்த்தோம். இப்பகுதியில் நாம் பார்க்க இருப்பது ஏரியின் வெகு அருகிலேயே இருக்கும் மான் பூங்கா பற்றி தான். மான் பூங்கா என்றவுடன் நிறைய மான்கள் துள்ளிக் குதித்து ஓடி விளையாடும், பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்து விடக் கூடாது – சிறைபட்ட மான்களுக்கு ஏது சுகம்! அவைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் தங்களது பிரச்சனைகளைச் சொல்லி இருக்குமே!
ஒரு சிறிய பூங்கா அமைத்து அதற்கு நுழைவுக் கட்டணமும் வாங்கி ஏரிக்கு படகுப் பயணம் வரும் சுற்றுலா பயணிகளை இங்கே அழைக்கிறார்கள்.
உள்ளே செல்ல அனுமதி சீட்டுகளை வாங்கிக் கொண்டு பார்த்தால் ஏரியிலிருந்து வரும் தண்ணீர் சிறு கால்வாய் போன்று ஓடிக் கொண்டிருக்க, அதன் மீது மரப் பாலம் அமைத்து அதன் வழியே பூங்காவிற்குள் நுழைய வழி செய்திருக்கிறார்கள். அதில் நடந்து செல்வதும் நன்றாகத் தான் இருந்தது!
உள்ளே செல்லச் செல்ல, நிறைய விலங்குகளின் உருவங்களை பொம்மைகளாக அமைத்திருக்கிறார்கள். நிஜ விலங்குகள் வைப்பதற்கு இங்கே இடம் இல்லை! மயில்கள், மான்கள் போன்ற மிகச் சில உயிரினங்களை இங்கே சிறிய இடத்திற்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். மயில்களை புகைப்படம் எடுக்கலாம் என பார்த்தால் தனது அலகினால் உடம்பில் இருந்த எதையோ தேடியபடியே இருந்ததால் முழுவதுமாக படம் எடுக்க இயலவில்லை. எடுத்த ஒரு படம் மட்டும் இங்கே தந்திருக்கிறேன்.
சிறைபட்ட மான்களையும் பார்த்து மனதில் கஷ்டம் இருந்தாலும் அழகிய மான்களைப் பார்த்து ரசித்த பிறகு அங்கிருந்து நகர்ந்தோம். மான்கள் எத்தனை முறை பார்த்தாலும் ஏனோ பிடிக்கிறது. பல மிருகக் காட்சி சாலைகளில் பார்த்திருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க முடிகிறது என்பது தான் இவற்றின் சிறப்போ….. மான்களின் சில படங்களும் இன்றைய பதிவில் உங்களுக்காக!
குழந்தைகளை மகிழ்விக்கும் ஊஞ்சல் போன்ற சில விளையாட்டு வசதிகளும், மற்றவர்கள் காலாற அமர்ந்து அளவளாவ சிறிய குடில்கள், திண்ணைகள் போன்ற வசதிகளும் இங்கே உண்டு. இந்த பூங்காவில் சில நிமிடங்களைக் கழித்து நாள் முழுவதும் பார்த்த இடங்களைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்த்து, பேசி பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.
இதுவரை நாங்கள் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு நகரில் பார்த்த இடங்களை உங்களுக்கும் சுற்றிக் காண்பித்தோம்! இந்த இடங்கள் தவிர பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்ன என்று பார்க்கலாமா!
படம்: இணையத்திலிருந்து...
கரடிகள் குகை: தனியார் வசம் இருக்கும் காபி தோட்ட பங்க்ளா அருகே இருக்கும் ஒரு குகை தான் கரடிகள் குகை. அங்கே பல கரடிகள் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பிக்கை! உடம்பினை கூனிக் குறுக்கி அக்குகைக்குள் செல்ல விருப்பம் இருப்பவர்கள் செல்லலாம்! தரையிலிருந்து ஏழு அடி கீழே இருக்கும் இந்தக் குகை வழியே திப்பு சுல்தான் தப்பிச் செல்லும் வழி இருந்ததாகவும், சேர்வராயன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழி என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! தனியார் வசமிருந்தாலும் சுற்றுலா பயணிகள் இங்கே செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். இங்கே ஆறுமுகனுக்கும் ஒரு கோவில் இருக்கிறது.
அறுபடை வீடுகளில் ஒன்று இது என்றும் சொல்லப் படுகிறது. விருப்பமிருந்தால் ஏற்காடு பயணத்தில் நீங்கள் இங்கேயும் செல்லலாம்!
சேர்வராயன் கோவில்: சேர்வாயன் மலையும் காவிரித் தாயும் இறைவன் – இறைவியாக இங்கே குடி கொண்டிருப்பதாக நம்பிக்கை. சேர்வராயன் மலைத்தொடரின் உச்சியில் இருக்கும் இக்கோவிலில் வருடா வருடம் மே மாதத்தில் இறைவன் மற்றும் இறைவிக்கு விழா எடுக்கிறார்கள்.
குறுகிய குகைக்குள் இருக்கும் இந்தக் குகைக் கோவில் பார்க்க வேண்டிய ஒரு இடம் தான். நான் பல வருடங்களுக்கு முன்பு இங்கே சென்றதுண்டு. இம்முறை நேரப் பற்றாக்குறையின் காரணமாக இங்கே செல்ல இயலவில்லை. இந்த மலைத் தொடரில் இருக்கும் அத்தனை கிராமங்களுக்கும் இக்கோவிலில் குடி கொண்டிருக்கும் சேர்வராயன் தான் காக்கும் கடவுள். இக்குகை மிகவும் ஆழமானது என்றும், அடிவரை சென்றால் காவிரி ஆற்றினையே தொட்டுவிட முடியும் என்பதும் இங்குள்ளவர்களின் நம்பிக்கை.
ஏற்காடு செல்லும் வாய்ப்பு இருந்தால் இத்தொடரில் பார்த்த எல்லா இடங்களுக்கும் பார்க்காத இடங்களையும் பார்த்து வாருங்களேன். ஒரே நாளில் பார்த்து விடமுடியும் என்றாலும், இயற்கை எழிலை ரசித்து அங்கிருக்கும் எல்லா இடங்களையும் ஆற அமரப் பார்த்து கொஞ்சம் ஓய்வும் எடுத்து வரலாம். இங்கே தங்குமிடங்கள் – ஹோட்டல்கள், ரிசார்ட்கள் என நிறையவே உண்டு. தங்குமிட வாடகைகளும் அப்படி ஒன்றும் அதிகமில்லை லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் – 3 ஸ்டார் ஹோட்டல்கள் முதல் பட்ஜெட் ஹோட்டல்கள் வரை உண்டு. உங்களுக்குத் தேவையான பட்ஜெட்டில் தங்க முடியும்.
என்ன நண்பர்களே….. ஏற்காடு பயணத்திற்கான பட்ஜெட் தயாரிப்பில் இறங்கி விட்டீர்கள் தானே….. ஒரு நாளோ இரண்டு நாளோ அங்கே சென்று நிம்மதியாக இருந்து, சில சுற்றுலாத் தளங்களையும் பார்த்து மனதுக்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் ஊட்டிக் கொண்டு வரலாமே!
இந்த தொடர் மூலம் உங்களை ஏற்காடு அழைத்துச் சென்றதில் எனக்கும் மகிழ்ச்சி. மினி பயணத் தொடர் என்று சொன்னாலும் எட்டு பகுதிகள் வந்து விட்டது – எழுத ஆரம்பித்தால் இப்படித் தான் நீண்டு விடுகிறது – இருந்தாலும் இந்த விஷயத்தில் துளசி டீச்சர் தான் கிங் – இல்லை க்வீன்! இப்படி ஒரு நாள் பயணத்திற்கு பத்துப் பன்னிரெண்டு பதிவுகளாவது எழுதி இருப்பார்!
சரி நண்பர்களே….. ஏற்காடு பயணத்திற்கு எங்களுடன் நீங்களும் வந்ததில் மகிழ்ச்சி….. அடுத்த பயணம் எங்கே, அது பற்றிய பதிவுகள் எப்போது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் விரைவில் – எனது தளத்தில்!
ஆதலினால் பயணம் செய்வீர் என்ற வாசகத்துடன் இப்பயணத் தொடரை முடிக்கிறேன்!
மீண்டும் சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....
