வைஷ்ணவ் தேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைஷ்ணவ் தேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 டிசம்பர், 2014

நடனமாடியபடி வாகனம் ஓட்டலாமா?



மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 13

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9 10 11 12

படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் பார்க்க வேண்டிய சில இடங்களைப் பற்றிச் சொல்லி இருந்தேன். உங்களுக்கும் இங்கேயெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருந்தால் நான் எழுதியதின் நோக்கம் நிறைவேறியது என்று சொல்லுவேன்!

கட்ரா நகரிலிருந்து தில்லி செல்ல இம்முறையும் www.redbus.in தளத்தின் மூலம் தான் முன்பதிவு செய்திருந்தோம்.  தில்லியிலிருந்து கட்ரா வரும்போது கிடைத்த அனுபவங்களை இத்தொடர் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு பதிவாக வெளியிட்டேன். அப்பதிவு படிக்காதவர்களின் வசதிக்காக இங்கே அதன் சுட்டி – ரெட் பஸ்ஸும் சினிமாவும்.  அப்பயணத்தில் கிடைத்த அனுபவம் போலவே இப்பயணத்திலும் சில அனுபவங்கள். அதை இப்பதிவில் பார்க்கலாம்!

மாலை ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்து 06.15 மணிக்கு புறப்பட்டது. சரியான சமயத்தில் புறப்பட்டால் நம் இந்திய நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டு விடுமே! ஓட்டுனர் ஒரு மோனா சர்தார் – அவருக்கு உதவியாளர் ஒரு சர்தார். மோனா சர்தார் என்பவர் பகடி அணியாத பஞ்சாபி.  பயணிகள் அனைவரும் வந்ததும் பேருந்து புறப்பட்டது. இம்முறை வந்த பேருந்து ஒரு Mercedes Benz பேருந்து.

பேருந்து ஓட்டுனர் கைகளில் அப்படியே விளையாடியது.  சர்வசாதாரணமாக 130 கிலோமீட்டர் வேகத்தினைத் தொட்டது பேருந்து. முன் இருக்கையில் இருந்த எனக்கு அவர் ஓட்டுவதைப் பார்த்தபடியே இருந்ததில் திகில் இருந்தாலும், அவரது திறமையில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை பிடித்திருந்தது. பெரும்பாலான விபத்துகள் சில நொடிகளில் நடந்து விடுவதுதானே... இருந்தாலும் அவரது வேகம் பற்றி பேருந்தில் இருந்த எவருக்குமே கவலை இருப்பது போல தெரியவில்லை. அனைவரும் தூங்குவதிலும் பேருந்தில் ஓடிக் கொண்டிருந்த ஹிந்தி படத்திலும் மூழ்கி இருந்தார்கள். 

சென்ற பயணத்தில் yamla pagla deewaanaa-2 பார்த்து நொந்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்! இல்லையா... இதோ ஒரு அப்பதிவில் ஒரு PEEP IN!


குத்தே, கமீனே, மே தேரா கூன் பீஜாவுங்காஎன டாய்லெட் சீட்டில் அமர்ந்து முக்கியபடியே பேசினால் என்ன குரல் வருமோ அந்த குரலில் பேசும் தர்மேந்திரா, அவரது சத்புத்திரர்களான சன்னி தியோல், பாபி தியோல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த யம்லா, பக்லா, தீவானா பார்ட் 2தான் அந்த படம். படம் முழுக்க ஒரே அபத்தம். ஐம்பது பேரை ஒரே ஆளாக சன்னி தியோல் அடித்து வீழ்த்துகிறார்.


இம்முறை போட்ட படம் தமிழிலும் வந்திருக்கிறது – சூர்யாவின் சகோதரர் கார்த்திக் மற்றும் சந்தானம் நடித்த படம்! ஹிந்தியில் அக்‌ஷய் குமார், சோனாக்‌ஷி சின்ஹா நடித்தது – இயக்கம் – நம்ம பிரபுதேவா - படத் தலைப்பு – ரௌடி ராதோர்.  தமிழ் படம் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்!

பெரும்பாலான பயணிகள் வைஷ்ணவ தேவியை தரிசித்து திரும்புவர்கள் என்பதால் அனைவரின் முகத்திலும் களைப்பு.  ஒரு சிலர் உட்கார முடியாது திண்டாட்டம்.  ஒரு பெண்மணி நடுவே காலை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டார். ஓட்டுனரின் உதவியாளர் அவரை சீட்டில் உட்காரச் சொல்லியபடியே இருந்தார். எல்லோரையும் முன் இருக்கையைப் பிடித்துக் கொள்ளவும் சொன்னார் – வேகத்தில் விழுந்து விடக்கூடும் என்று இப்படி ஒரு எச்சரிக்கை. 

ஜம்முவில் சிலரை ஏற்றிக்கொண்ட பின்னர் வண்டி ஓடிய வேகம் என்னை பயமுறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி ஒரு வேகம்.  பேருந்தினை ஓட்டியபடியே மெல்லிய ஒலியில் பாட்டுக் கேட்டபடி ஓட்டிக் கொண்டிருந்தார்.  பேருந்தில் இருக்கும் அனைவரும் தூங்க, தூங்காது வந்தது நாங்கள் மூவர் தான் – ஓட்டுனர், அவரது உதவியாளர் மற்றும் நான்!  பேருந்து அவர் சொன்னபடியெல்லாம் கேட்டது! அப்படி ஒரு வேகம். 

பஞ்சாபி பாடல்கள் ஒலிக்க அப்பாட்டின் தாளத்திற்கு ஏற்ப இவர் இருக்கையில் இருந்தபடியே நடனமாடிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது உதவியாளரை ஒரு கையால் அணைத்து [ஓயே ஜப்பி பாவ்! – கட்டிப் புடி என்பது தான் இதன் அர்த்தம்!] அவரையும் நடனமாட வைத்தார்.  ஒரு கையால் Steering பிடித்து ஓட்டினாலும் அதே வேகம்.  முழு இரவும் இப்படி இவரது திறமையை பார்த்தபடியே வந்தேன் – தூங்கவே இல்லை என்பது தான் மிச்சம். 

அது எப்படிங்க வண்டி ஓட்டிக்கிட்டே நடனமாட முடியும்?என்று சந்தேகம் இருந்தால் உங்களுக்காகவே யூவில் தேடி ஒரு காணொளி இணைத்திருக்கிறேன்!  இவங்க ஆடறாங்க பாருங்க!



நடுவழியில் ஒரு உணவகத்தில் பேருந்து நிறுத்தும்போது இரவு 12 மணி.  அந்த நேரத்திலும் உணவகத்தில் அப்படி ஒரு ஜனத்திரள்.  நாங்களும் ஜோதியில் கலந்து இரவு உணவை முடித்தோம்.

சாப்பிட்ட பிறகு கொஞ்சம் கண்களை மூடியபடி ஓய்வு எடுத்துக் கொண்டேன்.  வண்டி அதே வேகத்தில் சென்றது கண்களை மூடியிருந்தாலும் புரிந்தது. மாலை புறப்பட்ட பேருந்து அனாயாசமாக வேகம் தொட்டு கட்ராவிற்கும் தில்லிக்கும் இடையே இருக்கும் தூரத்தினை விரைவாக குறைத்தபடி இருந்தது. அதிகாலை ஐந்தரை மணிக்கே தில்லியின் மஹாராணா பிரதாப் ISBT அருமே எங்களை இறக்கி விட்டார் ஓட்டுனர்.  இறங்கும்போது ஓட்டுனர் என்னிடம் கேட்ட கேள்வி – “நான் தூங்காது அவரையே கவனித்ததை அவரும் கவனித்திருப்பதை எனக்கு உணர்த்தியது! அவர் கேட்ட கேள்வி இது தான் – “வேகமா ஓட்டினாலும் நல்லா ஓட்டினேனா!என்பது தான்!

நல்லாதான் ஓட்டுறீங்க – ஓட்டும்போது நடனமாடுவதை மட்டுமாவது குறைத்துக் கொள்ளுங்கள்! உங்களை நம்பி 50 பெயரின் உயிர் இருக்கிறது என அவருக்குச் சொல்லி வந்தேன். வேகம் விவேகமல்ல என்றாலும் இப்படி வேகமாக பயணிப்பது பிடித்திருக்கிறது!

தில்லியிலிருந்து கட்ரா வரை சென்று அன்னை வைஷ்ணவதேவியை தரிசித்த அனுபவங்களையும் வேறு சில விஷயங்களையும் இத்தொடரின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இத்தொடர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  விரைவில் வேறு ஒரு பயணத்தொடரோடு உங்களைச் சந்திக்கிறேன். 

பயணம் இனியது.  ஆதலினால் பயணம் செவோம்!

ஜெய் மாதா [dh]தி!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 1 டிசம்பர், 2014

பத்னிடாப் – மன்சர் ஏரி – ஷிவ்கோரி



மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 12

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9 10 11

சென்ற பகுதியில் நாம் பார்த்த [B]பா[B]பா [DH]தன்சர் அனைவருக்குமே பிடித்திருந்தது தெரிந்து மகிழ்ச்சி.  சிறிய இடம் என்றாலும் கிடைத்த அனுபவம் அரிது. இந்த வாரம் நாம் மேலும் பார்க்க வேண்டிய சில இடங்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம்.  ஒவ்வொரு கட்ரா பயணத்தின் போதும் நான் செல்ல நினைக்கும் – ஆனால் செல்ல முடியாத ஒரு இடம் பத்னிடாப்! [PATNITOP].

பத்னிடாப்:



 படங்கள்: இணையத்திலிருந்து.....

கட்ராவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அருமையானதோர் இடம் இது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இவ்விடத்திற்குச் செல்ல எல்லா மாதங்களும் ஏற்றவை தான். மலையேற்றம், பனிச்சறுக்கு விளையாட்டுகள் என பல விஷயங்களும் இங்கே உண்டு.  அதிகமாக பிரபலம் அடையாத இந்த சுற்றுலாத்தலத்தில் தங்கும் வசதிகளும் உண்டு. ஷுத்[dh] மஹாதேவி கா பஹாட் [மலை] எனும் இடத்தில் தேவியின் திரிசூலம் உள்ள கோவில் ஒன்றும் உண்டு. இயற்கையை ரசித்து சற்றே இளைப்பாற ஏற்ற இடம் இது. மேலதிகத் தகவல்கள் இங்கே!

மன்சர் லேக்:




 படங்கள்: இணையத்திலிருந்து.....

கட்ரா நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு அழகான ஏரி தான் இந்த மன்சர் லேக்.  பக்கத்திலேயே ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலாத் துறையின் தங்குமிடங்களும் உண்டு.  ஏரியில் படகு வசதிகளும் உண்டு.  என்னுடைய முந்தைய கட்ரா பயணத்தின் போது இங்கே ஓர் இரவு ஓர் பகல் தங்கியதுண்டு.  மிகவும் இயற்கையான சூழலில் சிறிய ஏரி, சுற்றிலும் மலை, ரம்மியமான சூழலில் தங்குமிடம் என மிகவும் ரசித்த ஒரு இடம் இது. இந்த ஏரியில் பெரிய பெரிய ஆமைகள் உண்டு. நாங்கள் இங்கே தங்கியிருந்த போது மாலை நேரத்தில் ஏரியைச் சுற்றி ஒரு நடை வந்தோம். வழியெங்கும் கிராமங்கள் – பறவைகளின் குரல்கள் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாது அமைதி – அதில் நடந்து சென்ற அனுபவம் இன்னமும் நினைவில் உண்டு!

அங்கேயே உண்வகமும் உண்டு – இருந்தாலும் நீங்களே சமைத்து சாப்பிட வேண்டுமென்றாலும், தங்குமிடத்தில் வசதி உண்டு! நாங்கள் உணவகத்தில் தான் சாப்பிட்டோம்! சுத்திப் பார்க்க வந்து அங்கேயும் சமையல் வேறா! என்ற எண்ணம் தான் காரணம்!

எந்த கவலைகளும் இன்றி சுகமாய் இருந்த தினம் அது.  நாங்கள் ஏரியைச் சுற்றி வர கொஞ்சம் தாமதம் ஆனதால் பதட்டத்தில் இருந்தனர் தங்குமிட நிர்வாகிகள்!  சொல்லிட்டுப் போயிருக்கலாம் இல்ல!என்று கடிந்து கொண்டார்கள்.

அருமையான இடம் நீங்களும் பார்க்கலாமே!

ஷிவ்கோரி:


  
படங்கள்: இணையத்திலிருந்து.....

கட்ரா ரியாசி பாதையில் 72 கிலோமீட்டர் பயணித்து நாம் அடையும் இடம் ஷிவ்கோரி.  குகைக்குள் இருந்த வைஷ்ணவ தேவியைப் பார்த்தது போலவே குகைக்குள் இருக்கும் சிவபெருமானையும் நீங்கள் தரிசிக்க நினைத்தால் செல்ல வேண்டிய இடம் இந்த ஷிவ்கோரி. சிவபெருமானின் கையில் வைத்திருக்கும் உடுக்கை [ஹிந்தியில் [d]டம்ரு] போலவே வடிவம் கொண்டது இக்குகை. ஆரம்பத்தில் கொஞ்சம் அகலமாகவும் நடுவில் குறுகிய வடிவம் கொண்டது. சில இடங்களில் ஊர்ந்து தான் செல்ல வேண்டியிருக்கும்.

குகையின் நடுவே இயற்கையிலே உருவான சிவலிங்கமும் மேலே இருந்து தாரையாக வழியும் தண்ணீர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும் இவ்விட்த்தின் சிறப்பு.  பால் கலந்த தண்ணீர் போலவே அப்படி ஒரு நிறம் உண்டாம் இத்தண்ணீருக்கு.  இங்கே சென்று வந்த நண்பர்கள் இக்கோவில் பற்றிச் சொல்லும்போது இது வரை நாம் இங்கே சென்று வந்ததில்லையே என்ற எண்ணம் வரும்.  அடுத்த பயணத்திலாவது ஷிவ்கோரி, பத்னிடாப் ஆகிய இரண்டு இடங்களைப் பார்க்க வேண்டும்.

மேலே சொன்ன மூன்று இடங்கள் தவிர, ஜம்மு நகரிலும் சில அருமையான கோவில்கள் உண்டு.  ஜம்முவில் ரகுநாத் மந்திர், குஃபா மந்திர் போன்ற சில கோவில்களும் மேலும் சில சுற்றுலாத் தலங்களும் உண்டு.  இம்முறை கட்ரா நகரிலிருந்தே தில்லி வரை செல்ல முன்பதிவு செய்து விட்டதால் ஜம்மு நகரிலுள்ள கோவில்களுக்கோ மற்ற இடங்களுக்கோ செல்லவில்லை.

மாலை நேரத்தில் முன்பதிவு செய்திருந்த பேருந்து எங்களை சுமந்து செல்ல தயாராக இருந்தது. இப்பேருந்து பயணத்தின் போது கிடைத்த அனுபவங்கள் அடுத்த பகுதியில் – இத்தொடரின் கடைசி பகுதியில்!

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 24 நவம்பர், 2014

நோ பிண்டி – பாபா தன்சர்



மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 11

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9 10

சென்ற பகுதியில் சொன்னது போல கட்ரா அருகில் இருக்கும் சில இடங்கள் பற்றி இன்று பார்க்கப் போகிறோம்.  கட்ரா நகரின் அருகிலேயே சில அருமையான இடங்கள் உண்டு – அனைத்துமே இறைவன் சம்பந்தப்பட்ட இடங்கள் தான் என்றாலும், சில அருமையான காட்சிகள் அங்கேயும் உண்டு.  முதலாக நாம் பார்க்கப் போவது “[B]பா[B]பா [DH]தன்சர் எனும் இடம்தான். 

 சொட்டுச் சொட்டாய்.....  
 
கட்ரா நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது இந்த “[B]பா[B]பா [DH]தன்சர்”.  சலால் அணைக்கட்டு போகும் பாதையில் பயணித்து இந்த இடத்தினைச் சென்றடைய முடியும். சுமார் 200 படிக்கட்டுகள் கீழ் நோக்கி அமைந்திருக்க, சாலையிலிருந்து அந்த படிகளில் நடந்து செல்ல வேண்டும். மலையேற்றம் முடிந்த அடுத்த நாள் என்பதால் கணுக்கால்கள் கெஞ்சத் துவங்கின. இருந்தாலும், என்ன தான் அங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நானும் நண்பரும் கீழே இறங்கினோம்.  அப்படிச் சென்றது நிச்சயம் நல்லதாகப் போயிற்று. செல்லாமலிருந்தால் ஒரு அழகிய காட்சியை நாங்கள் தவற விட்டிருப்போம்.


 என்ன காட்சி டே! 

ஒரு குகை – அதில் இயற்கையாக உருவான சிவலிங்கம் இருக்க, அதன் மேல் குகைக்குள்ளிருந்து தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது.  பக்கத்திலே பாறைகள் மேலிருந்து தண்ணீர் வந்து, அந்த முகட்டில் தனித்தனியாக சின்னச் சின்ன அருவிகளாக கொட்டி, கீழே பாய்ந்தோடி மலைகளுக்கு இடையே இருக்கும் [ch]செனாப்[b] நதியில் சென்று கலக்கிறது.  அற்புதமான காட்சியாக அது இருந்தது. அங்கேயே சில நிமிடங்கள் நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் சாலை நோக்கிய பயணத்தினை – படிகள் வழியாகத் தொடங்கினோம்!  200 படிகள் ஏற வேண்டும் எனும்போதே மலைப்பாக இருந்தாலும், கீழே பார்த்த காட்சிகளைப் பற்றி பேசிய படியே மேலே சென்று சேர்ந்தோம்.  அங்கே எங்களுக்காக வாகன ஓட்டி காத்திருந்தார்.

 எங்கள் சாரதி

அவருக்கும் எங்களுக்குமாக தேநீர் சொல்லி, அதை அருந்தியபிறகு புத்துணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் “நோ பிண்டிஎன்று அழைக்கப்படும் ஒரு குகைக் கோவில். ஒன்பது தேவிகள் இங்கே சிறிய சிறிய பிண்டங்களாக குடிகொண்டிருப்பதாக நம்பிக்கை.  ஒரு சிறிய துவாரத்தினுள்ளே செல்ல வேண்டும் – நேராக நடந்து செல்ல முடியாது.  ஊர்ந்து தான் செல்ல வேண்டும்.  இரண்டு மீட்டர் தொலைவு ஊர்ந்து சென்று தரிசிக்க வேண்டிய இடம் இது.  குகைக்குள் இருப்பதால் அப்படி ஒரு குளிர்ச்சி இங்கே.  நல்ல வெயில் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கிறது.  அருமையான ஒரு அனுபவமாக அமைந்தது இந்த நோ பிண்டி தரிசனம். 

 ”நோ பிண்டி” இருக்கும் இடத்திலிருந்து மலைப்பகுதியில் கீழே ஓடும் சிற்றோடையும்

அங்கிருந்து கீழே நோக்கினால் [ch]செனாப்[b] நதி ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.  அங்கேயும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.  வழியில் நிறைய கடைகள் உண்டு – அங்கே இப்பகுதிகளுக்குத் தேவையான குளிர்கால உடைகள், கார்ப்பெட் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா தளம் என்பதால் நிறைய பேரம் பேச வேண்டியிருக்கலாம்!


 என்னையும் ஃபோட்டோ புடிக்கறாங்கடோய்!
  
மலைப்பகுதிகளில் விளையும் பல பொருட்களையும் ஏதேதோ பெயர் சொல்லி, “இதற்கு நல்லது, அதற்கு நல்லதுஎன்று பார்ப்பவர்களின் தலையில் கட்டப்பார்க்கும் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. அருமையான சில காட்சிகளைக் கண்ட திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தோம். வழியில் இன்னுமொரு பாபாவின் கோவில் இருக்கிறது என்று சொல்ல, அங்கே புல்வெளிகளும் இருந்தமையால் அங்கே அமர்ந்து கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.  இந்த இரண்டு மூன்று இடங்களும் பார்த்து முடிக்கும்போது மணி மூன்று. 

 நோ பிண்டி - குகை வாயில்.
படம்: இணையத்திலிருந்து....

வழியில் இருக்கும் வேறு சில இடங்களையும் பார்த்து விட்டு கட்ரா நகரில் எங்கள் பேருந்து புறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றி இந்த தொடரில் இதுவரை பார்த்தோம்.  நாங்கள் பார்க்காத, பார்க்க வேண்டிய சில இடங்கள் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.