இந்த வார
தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்
தமிழ்மணம் நட்சத்திர வாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மணம் நட்சத்திர வாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
கூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?
சில நாட்களுக்கு முன் தில்லியில் நடந்த ஒரு
நிகழ்ச்சிதான்
மேலே கேட்ட “கூட்டுக் குடும்பத்தை
இழந்தோமா?” என்ற கேள்வியை என் மனதில் எழுப்பியது. இன்றைய கால
கட்டத்தில் பொருள் ஈட்டுவதற்காக
சொந்த மண் விட்டு தேசத்தினுள் எந்த மூலைக்கும், ஏன்
தேசத்தை விட்டு வெளி தேசத்திற்கும்
சென்று விடுவது எல்லோருக்கும்
தெரிந்தது தான்.
அப்படிச் செல்லும் போது பொதுவாக நாம் மட்டுமோ அல்லது மனைவி-மக்கள் ஆகியோர் கூடவோதான் செல்கிறோம். அப்பா-அம்மா நம்முடன் வர
இயல்வதில்லை. ஆங்காங்கே தனித் தனிக் குடும்பங்களாக
மாறி விட்டோம்.
சரி என்னை யோசிக்க வைத்த அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன். அலுவலகத்தில் இருக்கும் ஒரு
சக ஊழியர், தனது உத்திரப் பிரதேச கிராமத்தினை விட்டு, மனைவி மற்றும் ஒன்றரை வயது சிறு மகனுடன் தில்லி வந்து வசித்துக் கொண்டிருக்கிறார். அவரது தாய்-தந்தை கிராமத்தில் இருக்கிறார்கள்.
சென்ற மாதத்தில் ஒரு
ஞாயிறு அன்று மனைவி வழக்கம் போல் சில காலை வேலைகளை செய்து விட்டு துவைத்த துணிகளை காயப் போட்டு அதற்கு கிளிப் போடாமல் சமையல் வேலை செய்யப் போய் இருக்கிறார். ஹாலில் இப்போது தான் தவழ்ந்து போய் எதையாவது பிடித்து எழுந்து நிற்கத் தொடங்கிய தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார் நண்பர்.
அப்போது மனைவி சமையலறையிலிருந்து “வெளியில் காற்று பலமாக அடிக்கிறது, கிளிப் வேறு போடவில்லை, நீங்கள் கொஞ்சம் போட்டு விடுங்கள்” என்று கணவரிடம் சொல்ல, அவரோ குழந்தை விளையாடிக்கொண்டு தானே இருக்கிறான் என்று வெளியே சென்று கிளிப் போட்டுக்கொண்டிருக்க, சில
வினாடிகளில் வீட்டினுள் இருந்து பலமான சத்தம். உள்ளே விரைந்து வந்து பார்த்தால்…
ஹாலில் இருந்த குழந்தை தவழ்ந்து போய் அங்கிருந்த தொலைக்காட்சி வைத்திருந்த சக்கரங்கள் வைத்த மேஜையினைப் பிடித்துக் கொண்டு எழ
முயற்சிக்க என்ன நடந்ததோ தெரியவில்லை,
குழந்தை அப்படியே கவிழ்ந்து விழ, தொலைக்காட்சிப் பெட்டி குழந்தையின் மேல் விழுந்து சுக்கு நூறாகியது. குழந்தைக்கு வெளிப்புறம் ஒன்றும் அடிபடவில்லை எனிலும் உள்காயம் பட்டு காது வழியே ரத்தம் கசிந்து இருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் செய்து பார்த்து சிகிச்சைகள் செய்தும் பலனில்லாது இறந்து விட,
யாரை நோவது என்று தெரியாமல் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள்
அந்த நண்பரும் அவரது மனைவியும்.
நடந்ததற்கு என்ன காரணம்? இது தெரியாமல் நடந்து விட்ட விபத்தா, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தையுடன் எப்போதும் இருந்திருப்பார்களே என்று நினைப்பதா, குழந்தையைத் தனியே விட்டுச் சென்றது அத்தந்தையின் தவறோ, என்றெல்லாம் யோசித்தாலும் போன
குழந்தையின்
உயிர் திரும்பி வரப்போவதில்லை
என்ற உண்மை நெஞ்சை அறைகிறது.
இப்போதெல்லாம் அப்பா-அம்மா, சித்தப்பா-சித்தி, அண்ணன்கள், தம்பிகள் அவர்களது குடும்பங்கள் என்று கூட்டுக் குடும்பமாக இருந்த காலமெல்லாம் மாறிப் போய் எல்லோரும் தனித் தனி தீவுகளாக மாறி விட்டோம்கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே இல்லாது போய்விட்டது. அப்படி மாறி விட்டதுதான் தவறோ?
குடும்பம் என்றால் என்ன என்று இப்போது கேட்டால் நிறைய பேர் இப்படி பதில் சொல்லக்கூடும் – “நான், என்
மனைவி, மகன்/மகள்”. தன்னைப் பெற்ற தாய்-தந்தை கூட இப்போது குடும்பத்தில் வருவதில்லை நிறைய வீடுகளில் என்பது வருத்தமான ஒரு
விஷயம் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எது எப்படி இருந்தாலும், குழந்தையை இழந்த அந்த தாய்-தந்தையை என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம் நானும் சக
ஊழியர்களும்.
மீண்டும் சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்.
இந்த வார
தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்
Labels:
அனுபவம்,
தமிழ்மணம் நட்சத்திர வாரம்




