அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நார்க்கண்டாவிலிருந்து சராஹன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
யானை டாக்டர் - ஜெயமோகன்
சமீபத்தில் என் வகுப்புத்தோழி எனக்கு பரிந்துரை செய்து அனுப்பிய மூன்று புத்தகங்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன் இல்லையா! அதில் ஒன்று தான் யானை டாக்டர்! எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எழுத்தில் நான் வாசித்த இரண்டாவது புத்தகம் இது! 64 பக்கங்களில் நம்மை ஒரு வனத்திற்குள் அழைத்துச் சென்று வனவிலங்குகளிடம் பழக விட்டுவிட்ட உணர்வு ஏற்பட்டது!
டாக்டர் கே என்று அன்போடு அழைக்கப்படும் கால்நடை மருத்துவரான டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி எனும் உன்னத மனிதர் தன் வாழ்நாள் முழுவதையும் வன உயிரினங்களுக்கு தாயாகவும் நண்பனாகவும் செலவிட்ட அழகானத் தருணங்களை தன் எழுத்தின் வழியே ‘யானை டாக்டர்’ எனும் உணர்வுப்பூர்வமான காவியமாக படைத்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்!
“உண்மையிலே மனுஷன் தான் இருக்கிறதிலேயே வீக்கான மிருகம்! மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுக்கறதில இருக்கிற கம்பீரத்தைப் பார்த்தா கண்ணுல தண்ணி வந்துடும்! உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது!”
“ஏன் புழுவைப் பார்த்து அருவருப்பு வருது? புழுங்கிறது பூச்சியோட கைக்குழந்தை தெரியுமா! புழுவை இனி கைக்குழந்தையா பாருங்க!”
தாயான செந்நாய்க்கு ஏதோ பிரச்சினை! அதுதான் அந்தக் கூட்டத்துல குரல் கொடுக்கிறாங்க! நம்ம மேல நம்பிக்கை வந்திட்டா ஒதுங்கிப் போயிடுங்க! அப்புறம் என்னோட வேலைய ஈசியா பார்க்க முடியும்!
வனத்துக்கு வருகிற இளைய தலைமுறையினர் தூக்கிப் போட்டு உடைக்கிற பீர் பாட்டில் யானை காலுல ஏறிடுச்சு! இப்போ அதுக்கு மயக்க ஊசி போட்டு தான் கிழிச்சு எடுக்கணும்!
இந்த மிருக டாக்டர் தான் இங்க மனுசனுக்கும் வைத்தியம் பார்க்கறாரு! மிருகத்துக்கு கொடுக்கிறதுல பாதி டோஸ் குடுத்தா சரியாயிடும்! இங்க அவரு தான் எங்க குலசாமி!
இப்படி யானைகளுக்கு பிரசவம் பார்ப்பது, இறந்து போன யானை அழுகிய நிலையிலும் அதன் உடலை உடற்கூறாய்வு செய்து காரணத்தை அறிய முற்படுவது, மனிதர்களால் யானைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளுக்காக போராடுவது, பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியது, வன உயிரினங்களின் உடல்மொழியையும் சப்தத்தையும் அறிந்து தக்க சமயத்தில் உதவி செய்வது என்று இந்த மனிதர் செய்த சேவைகள் ஏராளம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது!
யானைகள் காட்டுல தான் இருக்கணும்! பச்சை பசேலென்ற செடிகொடி மரம்னு இந்த சூழல்ல தான் அது ஆரோக்கியமா இருக்கும்! இந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு தான் இவரின் முயற்சியில் ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது!
‘யானை டாக்டர்’ என்று அழைக்கப்படும் மிருக வைத்தியரான வி. கிருஷ்ணமூர்த்தி என்ற இந்த உன்னதமான மனிதரின் முயற்சிகளும், ஆய்வுகளும் இன்றளவும் போற்றப்படுகிறது!
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்!”
‘அன்புடைமை' எனும் அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடுவதும் இதைப் பற்றித் தான்! அன்புக்குரியவர்களின் துன்பத்தைக் காணும்போது, அன்புடையவர்களின் கண்களில் வழியும் சிறு கண்ணீரே அந்த அன்பை உலகறிய வெளிப்படுத்திவிடுமாம்!
நல்லதோர் மனிதனைப் பற்றிய காவியம் யானை டாக்டர்! எழுத்தாளர் ஜெயமோகனின் அற்புதமான எழுத்தில் அடர்ந்த வனத்திற்குள் வன உயிரினங்களோடு கைகோர்த்து உலா வந்த உணர்வைத் தந்தது! வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
18 ஜுன் 2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....