திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 16
கடந்த பதினைந்து பகுதிகளாக உங்களையும் காசி மற்றும் அலஹாபாத் அழைத்துச்
சென்றதில் உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே. இரண்டு நாட்களில் நான் பார்த்த,
ரசித்த சில இடங்களையும், மனிதர்களையும் பற்றி இது வரை பதினைந்து பகுதிகளாக எழுதியிருக்கிறேன் [இது கொஞ்சம் ஓவரோ?].
அருங்காட்சியகத்திலிருந்து நாங்கள் வெளியே வரும்போது மாலை நான்கு மணி. தில்லி
திரும்ப நாங்கள் முன்பதிவு செய்திருந்த ரயில் இரவு 09.30 மணிக்குதான். அது வரை
என்ன செய்வது என யோசித்து எங்கள் வாகன ஓட்டுனர் அப்துல் கலாம் அவர்களிடம்
கேட்டபோது ”அலஹாபாத் கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் ஷாப்பிங் மால் கொஞ்சம் வண்ணமயமாக இருக்கும், அங்கே
இறக்கி விடுகிறேன், கொஞ்சம் சுற்றி விட்டு நீங்கள் தங்குமிடம் சென்று தயாராகிக்
கிளம்ப சரியாக இருக்கு”மெனச் சொல்லவே ஷாப்பிங் மால் சென்றோம்.
பட உதவி: கூகிள்
ரயில் நிலையம் அருகில் இருக்கும் பகுதிகள் கொஞ்சம் பழமையாகவே அழுக்காக இருக்க,
கண்டோன்மெண்ட் பகுதிகளில் நல்ல முன்னேற்றம். சாலைகள் சுத்தமாகவும், அகலமாகவும்
இருந்தன. உள்ளே நுழையுமுன் சோதனைகள் செய்த பின்னரே அனுமதித்தனர். ஆங்காங்கே 6½ அடி மனிதர்கள் தலைப்பில் தொப்பி, கையில் வாக்கி சகிதம் சுற்றிக்
கொண்டிருந்தனர் – Bouncers ஆம். எதற்கு என யோசித்து சில நொடிகள் ஆகவில்லை – அவர்களின் தேவையும் சேவையும்
அறிய வாய்ப்பு கிட்டியது.
இரண்டு இளைஞர்கள் நல்ல மப்பில் எதிரே வந்த பெண்களை
இடித்துத் தொந்தரவு செய்ய, இந்த 6½ அடி மனிதர்களில் இருவர், குடி-இடி மன்னர்களை
குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர். இடிமன்னர்களுக்கு இது தேவை தான் என
நினைத்தபடியே கடைகளை நோட்டமிட்டோம். எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்து
கொண்டே தான் இருந்தது. உள்ளே இருக்கும் திரையரங்கத்தில் ஏதாவது படம்
பார்க்கலாமெனில் கைப்பைகள், கேமரா ஆகியவை எடுத்துச்செல்ல அனுமதியில்லை, அவற்றை
எதாவது கடையின் பாதுகாப்பு அறையில் வைத்து வாருங்கள் எனச் சொல்லவே ‘படமே பார்க்க
வேண்டாம்!’ என வெளியே வந்து
விட்டோம்.
ஏழு மணி வரை நேரம் போவது தெரியாது சுற்றிவிட்டு சில
பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அறைக்குத் திரும்பினோம். சற்றே இளைப்பாறியபோது, மனதில் அலஹாபாத் இனி
எப்போதும் வரப்போவதில்லை என்று தோன்றியது. இரவு உணவு உண்டு, கடைசியாக ஒரு முறை
தயிரில் முக்கிய ஜாங்கிரி சாப்பிட்டு எதிரே இருக்கும் ரயில் நிலையத்திற்கு பத்து
ரூபாய் கொடுத்து ரிக்ஷாவில் சென்றோம். ரயில் எங்களுக்காகவே காத்திருந்த்து போல,
அமர்ந்து சில நிமிடங்களில்யே சரியான சமயத்தில் கிளம்பியது. அப்போது தெரியவில்லை –
அடுத்த நாள் சரியான சமயத்தில் புது தில்லி சென்று சேராது என!
ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர் வரும் வரை உறங்காது
காத்திருந்தோம். மொபைலை எடுத்து எஸ்.எம்.எஸ். காண்பிப்பதற்குள், இருக்கை எண்ணை
மட்டும் கேட்டு விட்டு சென்று விட்டார் – ஐடி கூட கேட்க வில்லை – முகத்தில் எழுதி
ஒட்டியிருக்கும் போல! – நிச்சயம் சீட்டு வாங்கியிருப்போமென. நித்திராதேவி அழைக்க அவள் மடியில் உறங்கச்
சென்றுவிட்டேன்.
பட உதவி: கூகிள்
ரயில் செல்லும் சலனமே இல்லாதது போல உணர, சரி எதாவது
ரயில் நிலையமாக இருக்குமென நினைத்தேன். அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே
இருப்பது போலத் தோன்றவே எழுந்து பார்த்தால், அதே இடத்திலேயே கிட்டத்தட்ட ஐந்து மணி
நேரமாக நின்று கொண்டிருப்பதாக பயணச் சீட்டு பரிசோதகர் சொன்னார். என்ன காரணம் என்று
தெரியவில்லை எனவும் சொன்னார்.
பொழுதும் புலர்ந்தது. தில்லியிலிருக்கும்
நண்பரிடமிருந்து அழைப்பு – “என்னய்யா, எங்கே நின்னுட்டு இருக்கு வண்டி?” ஐந்தரை மணிக்கு மேலாக ஒரே இடத்தில்
இருப்பதைச் சொன்னபோது இன்னும் கூட நேரமாகலாமெனச் சொல்லி, மொத்த வட இந்தியாவிலும் Power Grid Failure எனும் செய்தியைச் சொன்னார். ரயிலை
விட்டு இறங்கி சாலை வழி வரலாமெனில் ரயில் நின்றுகொண்டிருந்த்து அத்வானக் காட்டில்.
அங்கிருந்து சாலைக்குச் செல்ல வழியில்லை. எனவே வெளியே பார்வையை ஓட்டினேன்.
அருகிலிருந்து மரமொன்றில் தூக்கணாங்குருவிகள் பல கூடுகளைக் கட்டி ஒற்றுமையாக
வசிப்பதைப் பார்க்க முடிந்த்து – அவர்களின் அடுக்கு மாடி குடியிருப்பு போலும்!
மீண்டும் நண்பரின் அழைப்பு –
”தமிழ்நாடு விரைவு வண்டியில் தீ விபத்து. முப்பதிற்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழப்பு”. செய்தி கேட்டவுடன் பதைபதைப்பு. என்னுடைய நண்பர் ஒருவரும்
அதே வண்டியில் சென்று கொண்டிருந்தார். உடனே அவருக்கு அலைபேசியில் அழைத்து நலம்
விசாரித்தேன். நல்ல வேளை அவருக்கு ஒன்றும் ஆக வில்லை.
என்ன தான் மிகப்பெரிய
நிறுவனமாக இருந்தாலும், இன்னும் இந்திய இரயில்வே துறை பாதுகாப்பிற்கும், சுத்தத்திற்கும்,
பயணிகள் சௌகரியத்திற்கும் நிறையவே ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. ஒரு வழியாக மின்சாரம் வந்து வண்டி கிளம்பியது.
ஆனாலும் சரியான வேகத்தில் வராது மிகவும் மெதுவாக, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும்
நின்று, தில்லி வந்து சேர்ந்த போது மதியம் மணி 12.30. வீட்டிற்குச் சென்று குளித்து தயாராகி அலுவலகம்
சென்றேன்.
பயணத்திற்கான
முன்னேற்பாடுகள் இல்லாவிட்டாலும், இரண்டு தினங்களில் காசி – அலஹாபாத் மற்றும் அதன்
சுற்றுப்புறங்க்ளில் சில இடங்களைக் கண்டு வந்தாயிற்று. உங்களுடன் இப்பயணத் தொடரின்
மூலம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் மகிழ்ச்சியாகத் தான்
இருக்குமென்பதில் சந்தேகமில்லை.
மீண்டும் வேறொரு பயணத்
தொடரில் விரைவில் சந்திக்கலாம் – அது இந்தியாவின் தென்பகுதிப் பயணமாக்க் கூட
இருக்கலாம்! :)
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.

