வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

ஃப்ரூட் சாலட் – 104 – பிளாஸ்டிக் சுவர் – தங்க மீன்கள் – மௌனம்


இந்த வார செய்தி:


செங்கல்லுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சுவர்

கரூர் : வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் டிசைன் பார் சேஞ்ச்என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடத்துகிறது. இப்போட்டிகள், எதிர்கால உலகை தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், மாசில்லாத வகையிலும் உருவாக்கும் அடிப்படையில் இருக்கும். இப்போட்டியில் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஒன்றியம் ஆட்சிமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பதை விட அவர்கள் செய்த போட்டிக்கான பணி சிறப்பானது!



கட்டிடத்துக்கு மிக முக்கியமான அடிப்படை தேவையான செங்கல்லுக்கு பதிலாக ஏன் பிளாஸ்டிக் பாட்டிலைகளை பயன்படுத்தக் கூடாது என இவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினர். பள்ளியை சுற்றிலும் குறிப்பிட்ட து£ரம் வரை சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்க, சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக, நான்கு நாட்களாக, மாணவர்கள் தங்களின் வீடுகளில் இருந்தும், மற்ற வீடுகளுக்கு சென்றும்  1,300 குடிநீர் மற்றும் குளிர்பான காலி பாட்டில்களை சேகரித்தனர். முதல்கட்டமாக இந்த பாட்டில்களில் மணல் நிரப்பப்பட்டது. பின்னர், வழக்கம் போல் கொஞ்சம் தண்ணீர், மண் கலவையை வைத்து, அதன் மேல் செங்கலுக்கு பதிலாக இந்த மணல் நிரப்பிய பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்துஅதன் மேல் மீண்டும் மண் கரைசலை வைத்து சுற்றுச்சுவரை 3 நாட்களில் உருவாக்கினர். இந்த பள்ளியில் பயிலும் ஒரு மாணவனின் தந்தை கொத்தனராக இருப்பதால் அவர் தனது குடும்பத்துடன் வந்து சுற்றுச்சுவர் எழுப்ப உதவியாக இருந்தார். மொத்தம் ஸீ5500 செலவில், 25 அடி நீளம், 4 அடி அகலத்தில் ஒரு சுற்றுச்சுவரும், மற்றொரு பகுதியில் 4 அடி நீளம், 4 அடி அகலத்தில் மற்றொரு சுவரும் உருவாக்கப்பட்டது.

இதே அளவு சுற்றுச்சுவர் செங்கல் கொண்டு கட்டப்படும் பட்சத்தில் ஒரு சதுர அடிக்கு ரூ.200 என்ற அடிப்படையில் ரூ.23ஆயிரத்துக்கும் அதிகமான செலவு பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை செங்கலுக்கு பதிலாக பயன்படுத்தியதால் ரூ.5500ல் பணிகள் முடிவடைந்தது. நான்கில் ஒரு மடங்கு செலவு செய்தாலே போதும். நீண்ட ஆயுளும் கிடைக்கும். சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மக்காத பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களும், நகரை மாசுப்படுத்தாமல், பாதுகாப்பு அரணாக திகழ்ந்து விளங்கும் என்றனர்.

     நன்றி: தினகரன்.

இந்த வார முகப்புத்தக இற்றை:




THE ABILITY TO SPEAK SEVERAL LANGUAGES IS AN ASSET, BUT THE ABILITY TO KEEP YOUR MOUTH SHUT IN ANY LANGUAGE IS PRICELESS.

இந்த வார குறுஞ்செய்தி:

எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்...

ரசித்த விளம்பரம்:

சரக்கடித்து விட்டு வாகனங்களை ஓட்டும் மனிதர்களை தங்களது நிறுவனத்தின் ஓட்டுனர்களை அமர்த்திக்கொள்ள சிபாரிசு செய்யும் இந்த விளம்பரம் சமீபத்தில் பார்த்தேன்.  விளம்பரம் சோமபானம் அருந்தியவர்களை திருத்தி இருக்குமோ இல்லையோ, என்னை நிச்சயம் கவர்ந்தது! நீங்களும் பாருங்களேன்! 




ரசித்த பாடல்:
 
தங்க மீன்கள் படத்திலிருந்து ஆனந்த யாழை மீட்டுகிறாய்பாடல் இந்த வார ரசித்த பாடலாய்.  சில நாட்கள் முன்னர் தான் முதல் முறையாகக் கேட்டேன். அதன் பின்னர் பலமுறை! நீங்களும் கேட்க!



இந்த வார புகைப்படம்:

ஒரு தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகளை வைத்து என்ன செய்யலாம்? அடுப்பு/விளக்கு பத்த வைக்கலாம்என்று தான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்!  இல்லை என்கிறது இப்படம்! தீக்குச்சி எதிலிருந்து வந்ததோ அதையே செய்யலாம் என்கிறது படம்!  பாருங்களேன்....



படித்ததில் பிடித்தது:

இன்றைக்கு படித்ததில் பிடித்ததுபகுதியில் ஒரு கவிதை!  கவிதை எழுதியவர் ஸ்ரீ”.

உன்
மௌனத்தை ஒரு கரையாகவும்
என் எழுத்தை [ஏக்கத்தை]
மறுகரையாகவும் கொண்டு
நகர்கிறது
வாழ்க்கை நதி

உன் மௌனம்
உன்னை எனக்கு
உணர்த்துவதை விட
என்னை
எனக்கு
அதிகமாய் உணர்த்துகிறது

நீ
என்னை என்னவாக
உணர்கிறாய் என்பது
உள்பட!

உன் மௌனங்களின் வெளியில்
என் எண்ணங்கள்
இப்போது நடக்கத்தொடங்கிவிட்டன!
நல்ல பயிற்சிக்குப் பின்பு!

எல்லையற்ற அந்த பரந்தவெளியில்
தொன்ம கனவுகளையும்
தொல்லை தரும் நினைவுகளையும்
விடவும் முடியாத,
அடையவும் முடியாத,
அவஸ்தையுடன் என்
அலைச்சல்கள்!

-          ஸ்ரீ

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஸ்பெஷல் மீல்ஸ்!

இரயில் பயணங்களில் – 4

சாதாரண ரயில் பயணத்தில் கிடைக்கும் உணவிற்கும் ராஜதானி விரைவு வண்டியில் கிடைக்கும் உணவிற்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. உணவு வகைகளை அலுமினியம் ஃபாயில் டப்பாவில் வைத்து அப்படியே கொடுப்பது சாதா ரயிலில். அதை ஒரு நெகிழி தட்டில் வைத்துக் கொடுத்தால் அது ராஜ்தானி! இதில் கிடைக்கும் உணவு வகைகளும் அதன் தொல்லைகளும் இந்தப் பதிவில் பார்க்கலாமா!

 படம்: நன்றி கூகிள்.....

வண்டியில் அமர்ந்து சரியான நேரம் கழித்து புறப்பட்டவுடன் “Welcome Drinks” தருவார்கள்! ஆஹா பரவாயில்லையே என தமிழ்க்குடிமகன்கள் ரொம்ப ஆசைப்பட வேண்டாம்! வெறும்ரயில் நீர்தான்! பிறகு ஒரு சமோசா, அதற்கு தொட்டுக்கொள்ள கெச்-அப், ஒரு சின்ன டப்பியில் சோன்பாப்டி, ஒரு சிறிய பாக்கெட் வறுத்த கடலை [கடலை மாவில் குளிப்பாட்டி பொறித்தது!], மற்றும் பால் பவுடர், சர்க்கரை, ஒரு டீ பேக்!

இதையெல்லாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் ஒரு சின்ன ஃப்ளாஸ்க்கில் வென்னீர் வர ப்ளாஸ்டிக் கப்பில் பால்பவுடர், சர்க்கரை போட்டு கலந்து கொஞ்சமாக வென்னீர் விட்டு கலந்து டீ பேக்-னை போட்டு ஆட்டிக் கொண்டே இருந்தால் தேநீர் வண்ணத்தில் வென்னீர் கிடைக்கும்! அதை தேமேன்னு குடிச்சுட்டு பக்கத்துல இருக்கற மற்ற பயணிகளை கவனிக்க ஆரம்பிச்சா கொஞ்சம் நேரம் போகும்!

அடுத்ததா ஒரு சிறிய தட்டில் ஒரு வெண்ணை பாக்கெட், இரண்டு ஸூப் ஸ்டிக்ஸ், ஒரு சிறிய பாக்கெட் மிளகுத் தூள் கொண்டு வந்து தருவார். பிறகு ஒரு கப் ஸூப் வரும்.  நிறைய பேருக்கு ஸூப் ஸ்டிக்ஸ் பார்க்கும்போதே நாய்க்கு போடும் எலும்புத்துண்டு நினைவுக்கு வர வெண்ணையில் முக்கிகடக், முடக்என்ற சப்தத்தோடு கடித்துச் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.  ஒரு சிலர், குறிப்பாக வட இந்தியர்கள், வெண்ணை மேல் மிளகுத் தூள் தூவி, ஸூப் ஸ்டிக் மூலம் வெண்ணையை எடுத்து சாப்பிடுவார்கள்இவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் கூட மசாலா தூவி சாப்பிடுவது வழக்கமாயிற்றே!

வெகு சிலரே ஸூப் வரும் வரை காத்திருந்து, ஸுப் ஸ்டிக் மூலம் வெண்ணையை எடுத்து ஸூப்பில் கலந்து தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து கலக்கி மெதுவாக அருந்துவார்கள்! என்னவோ தேவாமிர்தம் அருந்திய முகபாவனை வேறு காட்டுவார்கள்.  கொஞ்சம் சூடு குறைந்தால் அந்த ஸூப் என்று பெயர் கொண்ட திரவத்தினை வாயில் வைக்க முடியாது என்பது ரகசியம்!

அடுத்ததாய் உணவுஇரண்டு சப்பாத்திஓரங்கள் அப்படி ஒரு கூர்மை கொஞ்சம் பெரிய துண்டாக வாயில் போட்டால், உங்கள் தொண்டையை கிழித்தபடியே வயிற்றுக்குள் செல்லும் அபாயம் உண்டு! 50 கிராம் அளவிற்கு வேகவைத்த சாதம்அது என்ன பங்காளி சண்டையோ அதில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளுக்கு! தனித்தனியாகத் தான் காட்சி தரும்தண்ணீராக இருக்கும் “[Dh]தால் எனும் பதார்த்தத்தினை அதனுடன் கலந்த பிறகும்! அடுத்தது ஒரு பனீர் சப்ஜி! – மட்டர் பனீர், ஆலு பனீர், கடாய் பனீர் போல ஏதோ ஒன்று.

இந்த சாப்பாட்டிலேயே ரொம்பவும் சுகமானது, அலாதியானது என்று சொன்னால் அது சில சமயங்களில் அவர்கள் தரும் மதர் டைரி தயிர் தான்! பல சமயங்களில் வழியில் கிடைக்கும் சாதாரண தயிர்புளிப்போ புளிப்புஏதோ ஊறல்/டப்பா சோறு திறந்த ஒரு வாடை வரும் சில சமயங்களில்! ஒரு ஊறுகாய் பாக்கெட்! – அதை திறப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்! சாப்பிடும் முன்னரே அதை திறந்து விடுவது நல்லது! இல்லையெனில் பல்லால் கடித்து அநாகரிகமாக திறக்க வேண்டியிருக்கும்! ஆனால் அந்த அநாகரீகம் தான் பலருக்குப் பிடித்திருக்கிறது என்பது கண்கூடு!

Lunch, Dinner என இதே மாதிரி சாப்பாடு தான்! சில சமயங்களில் மெனுவில் சிறு மாற்றங்கள் உண்டு! வட இந்திய உணவு வகைகளில் கோஃப்தா என்று ஒன்று உண்டுஅந்த கோஃப்தா பெரும்பாலும் உருளைக்கிழங்கு கொண்டு செய்தது தான் தருகிறார்கள் ரயிலில். சுரைக்காய், பருப்பு வகைகள் கொண்டும் இந்த கோஃப்தா செய்யலாம் என்பதை இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் சுகம்!

ரொம்பவும் கொடுமையான விஷயம் என்றால் அது அவர்கள் தரும் ப்ரேக்ஃபாஸ்ட் தான்! வெஜிடேரியன் என்றால் ஒரு சிறிய கரண்டி அளவில் வெள்ளை கலரில் மொத்தையாக ஒன்று இருக்கும்அதன் பெயர் உப்புமா! அதன் மேல் பொன்னிறத்தில் ஒரு மொத்தைநடுவே ஒரு ஓட்டை இருப்பதால் அதன் பெயர் வடை என்று கொள்க! அந்த உப்புமா செய்தவருக்கு நள மஹாராஜா பட்டம் தரலாம்வெறுமே ரவையை வேக வைத்து கடுகு, மிளகாய், தாளிக்காது உப்புமா செய்கிறாரோ! கூடவே இரண்டு ஸ்லைஸ் Brown Bread. அதன் மேல் தடவ அமுல் பட்டர். ஒரு கப் லைம் ஜூஸ்.  கூடவே தேநீர் [] காப்பிWhat a combination! இப்படி ஒரு மெனு தயாரித்த மஹானுபாவர் யாரோ! அவருக்கும் ஒரு Special Award கொடுக்கலாம்!

இப்படி பயணத்தில் தொடர்ந்து கொடுத்து உங்களை அலுக்க வைத்தாலும் ஒரு சிலருக்கு இது ரொம்ப பிடித்திருக்கிறது! கதவைத் திறந்து சிப்பந்தி வரும்போதெல்லாம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது சிலர் முகத்தில்அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில்! சமீபத்திய பயணத்தில் ஒரு மலையாள ஜோடிகதவைத் திறந்து அந்த சிப்பந்தி வரும்போது சேச்சியிடம் சந்தோஷ சாரல்! – “ஆயாளு வந்னு வந்னுஎன்று மகிழ்ச்சியோடு கூவினார்!

என் போன்ற சிலருக்கு அவரைப் பார்க்கும்போதே மனதில் கிலி! என்ன கொண்டு வந்தாலும், பசி இல்லையெனில் வேண்டாமென்று சொல்லி விடுவேன்! Lunch/Dinner முடிந்த பிறகு தரும் ஐஸ்க்ரீம் மட்டும் வேண்டாமெனச் சொல்வதில்லை! :)

இப்படியாக உணவினைப் பார்க்கும்போதே ஒரு வெறுப்பு உண்டாக்குவது தான் ராஜ்தானி விரைவு வண்டி! எப்போது வீட்டுக்கு வருவோம் என்று பல சமயங்களில் தோன்றி விடுகிறது! வீட்டிற்குச் சென்றதும் பழைய சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து ஒரு மோர் மிளகாயோ அல்லது வடு மாங்காயோ வைத்து சாப்பிட்டால்ஆஹா தேவாமிர்தம்!”

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.