செவ்வாய், 24 மே, 2011

மாட்டிக்கிட்டான்… மாட்டிக்கிட்டான்…



மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம். இந்த தினத்தினை உலக மகளிர் தினமாகக் கொண்டாட ஆரம்பித்து 100 வருடம் ஆகிவிட்டதாம்! அன்று தான் என் வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தாள். நான் சிவனே என்று தில்லியில் இருக்க, ”பெண் பார்க்க போக வேண்டும் வா!” என்று அம்மா-அப்பாவின் ஆணை. அவர்கள் திருச்சியிலிருந்து கோவை வந்து விட நான் தில்லியிலிருந்து கோவை வந்தேன்.

பெண் பார்க்கும் படலம் என்பதெல்லாம் பிடிக்காது என்றாலும், அப்பா-அம்மா சொல்லைத் தட்டாமல், எட்டுவித கட்டளைகள் போட்ட கிட்டுமணி போல இல்லாமல் நான் போட்ட ஒரே கட்டளை – ”எந்த பெண்ணை முதன் முதலில் பார்க்கச் செல்கிறேனோ அந்த பெண்ணையே மணப்பேன்” என்பதுதான்! இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. அவரின் புகைப்படத்தைக் கூட நான் அதுவரை பார்க்கவில்லை!

பெண்பார்க்கச் செல்லும் எல்லா இளைஞர்களைப் போலவே நானும் அன்றே பல்பு வாங்கினேன்! 12-13 வருடங்களாக ஸ்வயம்பாகமாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்த காரணத்தால் “உனக்குச் சமைக்கத் தெரியுமா? என நான் கேட்க, ”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்.

போட்ட கட்டளைப்படியே அன்றே முடிவு செய்து மார்ச் 10-ஆம் தேதியே நிச்சயதார்த்தம் – திருச்சியில் எங்கள் வீட்டில். அதுவரை காதலிக்காதது தப்பு என்பதே அப்போது தான் தெரிந்தது! நிச்சயதார்த்தம் முடிந்து நான் தில்லி வந்து விட அவர்களோ கோவையில்! அதனால் தொலைபேசியில்தான் கட்டிக்கொள்ளப்போகும் மனைவியை காதலிக்க முடிந்தது! தொலைபேசித் துறைக்கு எங்களால் நல்ல வருமானம்! வெறும் குரல் மட்டுமே கேட்க முடிந்தது என்பதால் 3ஜி வசதிகள் அப்போதே வரவில்லையே என்ற வருத்தம் இப்போது வருகிறது!

இப்படியாக 73 நாட்கள் தொலைபேசியிலேயே காதல் தொடர்ந்தது! மே 23 அன்று தான், 2611 கிமீ தொலைவில் இருந்த என் தொலைபேசிக் காதலியை தான் திரும்பவும் சந்தித்தேன்! மே 24-ல் கல்யாணம்! இப்படியாக கெட்டிமேளத்துடன் என் காதலியை நான் மணந்து கொண்டேன்! கெட்டிமேளம் என்றவுடன் தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

தில்லியின் ஒரு அரங்கத்தில் பாக்யராஜ் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ஒரு பேச்சாளர் இப்படி பேசினார் – “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்ற ஆணை கிடைத்தவுடனே தவில் வாசிப்பவர் கெட்டி மேளம் கொட்ட அதன் சத்தம் எப்படிக் கேட்கும் தெரியுமா? கல்யாணம் பண்ணிக்கொள்ளும் அந்த ஆணைப் பார்த்து “மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்!” என்று சொல்வது போல இருக்கும்” என்று.

அந்த நிகழ்ச்சியினை மனைவியுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த ஒரு 65 வயது பெரியவர் மிகவும் ரசித்து கை கொட்டி வாய்விட்டுச் சிரித்தார் – பக்கத்தில் மனைவி இருப்பதை மறந்து – விளைவு? அவர் தொடையில் ஒரு அடி, ஒரு நிமிட்டாம்பழம்! அதாங்க ஒரு கிள்ளு! இந்த நிகழ்வினை பார்த்து, ரசித்து, என்னிடமும் பகிர்ந்து கொண்ட பத்மநாபன் அண்ணாச்சிக்கும் நன்றி!

ஆக,என்னுடைய திருமண நாளான இன்று பெண் பார்க்கும் படலத்திலிருந்து கல்யாணம் வரை சொல்லியிருக்கிறேன். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கல்யாணத்திற்காக பெண் பார்த்த அனுபவங்கள் உண்டு. இதையே ஒரு தொடர் பதிவாக ஆக்கினால் என்ன என்ற ஒரு யோசனை! ஆகவே இதைத் தொடர விரும்புவர்கள் தொடரலாமே….

”கல்யாண நாள்னு சொல்றீங்க, விருந்தெல்லாம் கிடையாதா?” என்று கேட்பவர்களுக்கு – என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவில் இன்று “போஜனம் செய்ய வாருங்கள்” என்ற பாடலை பதிந்திருக்கிறேன். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் என்னென்ன பகிர்ந்தனர் என்ற விவரங்கள் அடங்கிய பாடல்… அங்கு சென்று ருசித்து மகிழுங்களேன்…

மீண்டும் இன்னுமொரு பகிர்வில் சந்திப்போம்…

வெங்கட்.




புதன், 18 மே, 2011

தீர்க்க சுமங்கலிகள்



மோகன்ஜி "வடு" என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். நீங்களும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். படிக்கவில்லையெனில் படித்து விடுங்களேன். அற்புதமான கதை. தனக்குப் பிரியமான ஒன்றினைப் பிரிய நேரும்போது நம்மில் பொங்கும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பினை அழகாய் சொல்லிப் போகும் கதை.

அதை படித்து கருத்தினை எழுதும்போது ”//ஸ்டிக்கர் பொட்டு பற்றிய என்னுடைய நினைவுகள் வேறு மாதிரி! முடிந்தால் தனியே பகிர்கிறேன். :)// என்று எழுதி இருந்தேன். இதோ அதை பகிர்ந்து விட்டேன்.

நம் எல்லோருக்குமே ஸ்டிக்கர் பொட்டு பரிச்சயம்தான். இப்போதெல்லாம் அது இல்லாத வீடு எது? என் அம்மா காலத்தில் நெற்றியில் வைத்துக் கொள்ளும் குங்குமம், மை போன்றவற்றை வீட்டிலேயே செய்து விடுவார்களாம். பிறகு சாந்து. இப்போது உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் அதைப் பற்றி கேட்டீர்களேயானால் "இதுக்கெல்லாம் வீணா எதுக்கு கஷ்டப் படணும்? அட்டையிலிருந்து எடுத்தமா, நெத்தியில ஒட்டினோமா, போனோமான்னு இருக்கணும்" என்பார்கள்.

நல்ல வசதிதான். ஆனால் சிலருக்கு இந்த பொட்டின் பின்புறம் இருக்கும் பிசின் ஒத்துக் கொள்வதில்லை – அரிப்பு வந்து வெள்ளையாக, சிலருக்கு தழும்பாகவும் மாறி விடுகிறது என்பதும் உண்மை.

அதில் இருக்கிற இன்னொரு பிரச்சனை, பல வீடுகளில் நெற்றியிலிருந்து எடுத்த ஸ்டிக்கர் பொட்டினை கைக்கெட்டும் இடங்களில் எல்லாம் ஒட்டி விடுவது தான். பல நாட்களானாலும் அதை எடுப்பதில்லை. மேலும் மேலும் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். எனக்குத் தெரிந்த நண்பரின் வீட்டில் குளியலறைச் சுவர் முழுவதும் விதவிதமான வண்ணங்களில், பலவித வடிவங்களில் ஸ்டிக்கர் பொட்டுகள். சுவர் நிரம்பியதும் கதவின் பின்புறம். பொட்டு வைத்து அலங்காரம்!

நான் கூட சில சமயம் இனி பொட்டு ஒட்ட இடமில்லையெனில் என்ன செய்வாரோ என்று நினைத்திருக்கிறேன். நல்ல வேளை அப்படி ஒரு நிலை வரவில்லை. திருந்தி விட்டாரோ என்று நினைத்து விடாதீர்கள் – வேறு பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் – புதியதாய் ஒரு இடம் கிடைத்து விட்டதே பொட்டு ஒட்ட!

நிறைவாக கல்லூரிக் காலத்தில் படித்த, தற்போது நினைவுக்கு வந்த ஒரு கவிதை! எழுதியது சத்தியமாய் நானில்லை. எழுதிய அந்த”யாரோ”விற்கு எனது நன்றி.

”பாத்ரூம் பைப்பே…. பக்கத்து சுவரே….
படிதாண்டா என் பத்தினிக் கதவே...
படுதா அணிந்த ஜன்னலே…
பளபளக்கும் கண்ணாடியே….
பலர் அமரும் சோஃபாவே….
நீங்கள் அனைவரும்
தீர்க்க சுமங்கலிகள்…

ஸ்டிக்கர் பொட்டைக் கழற்றி
எட்டிய இடமெல்லாம் ஒட்டி
மறந்து போன
என் பெண்ணின் கை வண்ணத்தால்….”



திங்கள், 9 மே, 2011

காதலென்பது…


காதலுக்காகவும், காதலிக்காகவும் என்னென்ன செய்யலாம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது – ஏனெனில் கல்யாணத்துக்கு முன் நான் காதலித்ததில்லை. கல்யாணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்கும் போதுதான் அதெல்லாம் எனக்குத் தெரிந்தது.

என்னடா இது என்னிக்கும் இல்லாம இத்தனை பதிவுகளுக்குப் பிறகு இவன் காதல் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே என்று கேட்பவர்களுக்கான பதில் – மேலும் படியுங்க புரியும்.

சென்ற வாரத்தில் அலுவலகத்தில் ஒருவர் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போக, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கவும், நலம் விசாரிக்கவும் சென்றேன். அவருக்கு உடல் நிலை சற்று தேறிவிட்டதாகக் கூறி “பணம், சம்பாத்தியம் என்று எதுவுமே நிலையில்லை, உடல் நிலை கெட்ட பிறகு இப்படிப் படுத்துக் கொள்வது தான் நிலை!” என்றெல்லாம் பேசிவிட்டு, பக்கத்து படுக்கையில் இருந்த ஒருவரைக் காண்பித்தார். அங்கே...

24-25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் – ஜீன்ஸ் பேண்டும், மேலே பட்டன் போடாத சட்டையுமாய் படுத்திருந்தார். உடலில் மூன்று நான்கு இடங்களில் கட்டு, முகத்திலும் தலையிலும் பெரிய கட்டு. அவரைச் சுற்றி உறவினர்கள் அழுதபடி நின்றிருந்தார்கள். அவருடைய தாய் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி, அவருக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவரைக் காண்பித்து, அவர் கதையைக் கூற ஆரம்பித்தார் – அது அவரது வார்த்தைகளிலேயே...

“ரமேஷ் ஒரு பெண்ணை ஒரு தலையாகக் காதலித்திருக்கிறார் –ஆனால் அந்தப் பெண் இவரைக் காதலிக்கவில்லையாம். ஆனாலும் அவரைத் தொடர்ந்து சென்று தனது காதலை பிரஸ்தாபித்திருக்கிறார்.

இவருடைய தொல்லை தாங்காமல் அந்தப் பெண் தனது சகோதரர்களிடம் விஷயத்தைக் கூற அவர்களும் இவரை எச்சரித்திருக்கிறார்கள். சிறிது நாட்கள் சும்மா இருந்த ரமேஷ் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவில் அந்தப் பெண் வீட்டிற்குச் செல்லும்போது அவரை பின் தொடரவும் பெண்ணின் சகோதரர்கள் இவரைத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

கை, கால்களில் அடித்தது மட்டுமில்லாமல் ஒரு கத்தியை எடுத்து வயிறு, மார்பு, இடுப்பு, முகம், தலை என்று ஐந்து இடங்களில் சரமாரியாகக் குத்தி இருக்கின்றனர். உடல் எங்கும் ரத்தம் அருவியாய்க் கொட்ட, இவர் தடுமாறியபடி விழவும், தாக்கியவர்கள் ஓடி விட்டார்களாம். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த யாரோ காவல்துறைக்குச் தகவல் அனுப்பவே இவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

இத்தனை நடந்தும், அவரின் அம்மா, மற்றும் நண்பர்கள் “அந்தப் பெண் யாருன்னு சொல்லு , பதிலுக்கு நாங்களும் ஏதாவது செய்கிறோம்! " என்று கேட்டதற்கு சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாயிருக்கிறாராம். ஏனென்றால் ”சொன்னால் அவளை கஷ்டப்படுத்துவ தோடல்லாமல், போலீஸ் வேற தொல்லை கொடுப்பானுங்க” என்று காரணம் சொல்கிறாராம் இன்னும் காதலோடு!

அட தேவுடா!

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.



வெள்ளி, 6 மே, 2011

இதுக்குப் போயி பயப்படலாமா?




குழந்தைகள் அதிலும் ஆண் குழந்தைகள் என்றால் அதுகள் செய்யும் விஷமங்களுக்குக் கேட்கவே வேண்டாம்!  செய்வதையும் செய்து விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல இருப்பதில் சமர்த்தர்களாக இருப்பார்கள்.  நானும் அப்படி இருந்திருக்கிறேனே...

தீபாவளி சமயத்தில் ஒரு நாள்.

நானும் என் நண்பரும் தில்லியின் கரோல் பாக் பகுதியில் காலாற நடந்து கொண்டிருந்தோம் .  அந்த குறுகிய வீதியில் வெறும் வீடுகள் தான், கடைகள் இல்லை.  தமிழில் பேசியபடி சென்று கொண்டிருந்த எங்களைப் பார்த்து சிறிது தொலைவிலிருந்த ஒரு சிறுவன் புன்முறுவல் பூத்தான்.  அது ஸ்னேகப் பார்வை இல்லை என்பது பின்னர்  தானே எங்களுக்குப் புரிந்தது

பேச்சு ஸ்வாரஸ்யத்தில் எங்களைப் பார்த்துப் புன்னகைக்கும் முன் அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சற்றும் எதிர்பாராத  நேரத்தில் எங்கள் முழங்கால்களைக் குறி வைத்து ஒரு ராக்கெட் ஏவுகணை போல வருகிறது.  கண் சிமிட்டும் நேரத்தில் நண்பரின் கணுக்காலை குறி வைத்து அந்த ஸ்கட் மிசைல் தாக்க அவரும் நானும் அலறியபடி பெயர் தெரியா நடனம் ஆட, இன்னும் மருந்து இருந்த அந்த ஏவுகணை இன்னும் எங்கே தாக்கலாம் என்று எங்கள் உடம்பின் மற்ற பகுதிகளைப் பார்க்க ஒரே கூத்து தான் போங்க.

நாங்கள் போட்ட நடனத்தைக் கண்டு முகத்தினை பரிதாபமாய் வைத்துக் கொண்டு, எங்களைப் பார்த்து கேட்டானே ஒரு கேள்வி – “ என்ன அங்கிள், இவ்வளவு பெரீசா வளர்ந்து இருக்கீங்க, ஒரு சாதாரண ராக்கெட்டைப் பார்த்து இப்படி பயப்படறீங்களே! ” 

அவன் இப்படிக் கேட்கவும் பெரிய மனதுடன் சிரித்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்நண்பரின் கணுக்காலில் தீப்புண் காயத்தோடு

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.