மஹாகும்பமேளாவிற்குச் சென்று வந்தேன் என இத்தனை பகுதிகளாகச் சொல்லிக்
கொண்டிருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே... ஆனால் விழாவினைப் பற்றிய தகவல்கள்
ஒன்றும் தரவில்லையே என உங்களில் சிலராவது நினைத்திருக்கக் கூடும். நீங்கள் நினைத்தது
டெலிபதி போல எனக்கும் தெரிந்துவிட்டதால், மஹாகும்பமேளா எனும் பிரம்மாண்டத்தினைக்
கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.
பட உதவி: கூகிள் ஆண்டவருக்கு நன்றி.
- மகரசங்கராந்தி நாளான ஜனவரி 14 ஆம் தேதி துவங்கி மஹா சிவராத்திரி நாளான மார்ச் 10 ஆம் தேதி வரை 56 நாட்கள் நடைபெற்றது மஹா கும்பமேளா.
- இந்த கும்பமேளாவில் பங்குபெற்ற மக்களின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். இதில் வெளி நாட்டவர்கள் மட்டுமே பத்து லட்சம். மௌனி அமாவாசை தினமான ஃபிப்ரவரி 10 ஆம் தேதி மட்டும் இங்கே வந்த மக்களின் தொகை மூன்று கோடி.
- மேளாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி – 1200 கோடி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களுக்கு மேளா சமயத்தில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு.
- உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு வரிகள் மூலமும் மற்ற வழிகளிலும் கிடைக்கக் கூடிய தொகை 12000 கோடி என மதிப்பிடப்பட்டது. எத்தனை கோடி அரசுக்குப் போனது மீதி எங்கே போனது என்ற விவரம் ”எல்லாம் வல்லவனுக்கே” வெளிச்சம்!
- போடப் பட்ட புதிய சாலைகள் – 156 கிலோ மீட்டர். புதிய தண்ணீர் குழாய்கள் – 575 கிலோ மீட்டர். புதிய மின்சாரக் கம்பிகள் 800 கிலோ மீட்டர். புதியதாய் திறக்கப்பட்ட மின்சார விநியோகக் கூடங்கள் – 48.
- பாதுகாப்பிற்கு பணியில் இருந்த காவல்காரர்கள் 30000 பேர். தவிர மத்திய அரசின் 72 படைகள். அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் 120.
- இத்தனை பேருக்கும் உணவு, சுகாதார வசதிகள் என அனைத்தும் செய்ய நிச்சயம் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அமைக்கப்பட்ட தற்காலிக பொது கழிப்பறைகள் மட்டுமே 35000. இருந்தும் பல மக்கள் வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்தியிருந்தது கண்கூடு!
- 24 மணி நேர மருத்துவ வசதி, எப்போதும் பணியில் 25 மருத்துவர்கள், 120 ஆம்புலன்ஸ் வண்டிகள், 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை என நிறைய ஏற்பாடுகள்.
- காணாமல் போனவர்கள், வழி தவறிப் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்ய வசதிகள்.
- பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகள் ஸ்விட்சர்லாந்து தருவிக்கப்பட்டவை. அதற்கான வாடகை மட்டுமே பல கோடிகள்....
- மஹாகும்பமேளா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு 1936 ஹெக்டேர்.
- மேளாவினைப் பற்றிய தகவல்களை நேருக்கு நேர் ஒளிபரப்பு செய்ய ஊடகங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.
இப்படிப் பட்ட பிரம்மாண்டமான கும்பமேளாவில் சில சிக்கல்களும், விபத்துகளும்
ஏற்படாமலில்லை. அலஹாபாத் ரயில் நிலையத்தில் நடந்த விபத்து உங்களுக்கும்
தெரிந்திருக்குமென்பதால் அதைப் பற்றி இங்கே அதிகம் சொல்லப் போவதில்லை.
இந்த கும்ப மேளா சமயத்தில் நாங்களும் அங்கே சென்று, கங்கை, யமுனை மற்றும்
சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் சங்கமத்தில் குளித்து விட்டு வந்தது மட்டுமல்லாது
உங்களுக்கும் அங்கிருந்து சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.
படித்த உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே....
காலையில் சங்கமத்தில் நீராடி மாலையில் அலஹாபாத் நகரில் இருக்கும் சங்கர் விமான மண்டபம், மற்றும் படே ஹனுமான் கோவில் ஆகியவற்றைப்
பார்த்துவிட்டு அன்றிரவே புது தில்லி திரும்பினோம். வழக்கம் போல பீஹாரிலிருந்து
வருகின்ற வண்டியில் வந்ததால் பீஹாரிகளின் குட்கா வாசத்தோடு தில்லி வந்து
இறங்கியபோது நாங்களும் ஒரு வித மயக்கத்தில் இருந்தோம் என்பதைச் சொல்லவும்
வேண்டுமா!
மீண்டும் சற்றே இடைவெளிக்குப் பிறகு வேறொரு பயணம் பற்றிய தகவல்களோடு உங்களைச்
சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.