அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
உங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.
தானம்
வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில இருக்கைகளையும் போட்டு இருந்தனர். ஊரில் உள்ள பல பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வந்தவர்க்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு.சிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார். வாங்கிக்கொண்டு சென்ற அனைவரும் அவரை வாயார வாழ்த்திக்கொண்டு இருந்தார். ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்னது மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது.அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள். ஒரு மாதமாகவே படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம். கடந்த இரு நாட்களாக பேச்சு இல்லை, உடம்பில் அசைவும் இல்லை. உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. மனது மட்டும் முழித்துக்கொண்டு இருக்கிறது.பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது. “எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”.”இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு. காரியமெல்லாம் தடபுடலா செய்யணும். கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும். என்ன பண்றதுன்னு தெரியல. ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்!” என்று சொல்லிக்கொண்டு இருப்பது காதில் விழுந்து தொல்லைப்படுத்தியது.கிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து போயிற்று. கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய பொறுப்பில் அமர்த்தி நல்ல நிலையில் வைக்க, தான் இழந்தது எத்தனை எத்தனை.வேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம் செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம் செய்ய வேலையாளை அனுப்புகிறான். ”வேணு, நான் செத்த பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன? அவை என்னுடைய தியாகங்களுக்கு ஈடாகுமா” என்று கடைசியாக சொல்லிவிட்டு தலைசாய்த்தாள்.கன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர் “இந்த தானங்களை விட நீ உனது தாயார் முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம்” என்று சொல்ல துக்கம் பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.