புதன், 31 ஆகஸ்ட், 2016

கண்ணுக்கு மை அழகு – கார்த்திகை தீபம் – கல்லுரல்

முகப் புத்தகத்தில் நான் – 12

கண்ணுக்கு மை அழகு! – 27 ஆகஸ்ட் 2016



சமீபத்தில் எனது பெரியம்மாவின் வீட்டிற்குச் சென்றபோது அங்கே மீன் வடிவத்தில் இந்த கண் மை வைக்கும் சிமிழ் பார்த்ததும் அதனை எனது மொபைல் கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன். இந்த மாதிரி கண் மைச் சிமிழ்கள் இப்போதெல்லாம் யாரும் பயன்படுத்துவது இல்லை. Eyetex கண் மை தான் பலரும் பயன்படுத்துவார்கள்.  அதற்கு முன்னர், எங்கள் அம்மாவின், பாட்டி காலத்தில் இந்த கண்மையை வீட்டிலேயே தயாரிப்பார்களாம். அதற்காகவே கேமரா ரூம் என அழைக்கப்படும் இருட்டறையில் தான் தயாரிப்பார்கள் என்று சொல்வார்கள்!

இப்போதெல்லாம் வீட்டில் தயாரிப்பது இல்லை, Eyetex கண் மையும் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் மாறி பென்சில் வடிவத்தில் வந்து விட்டது! கண் மையே இல்லாத போது கண் மை வைத்துக் கொள்ள பயன்படும் இந்தச் சிமிழ் எங்கே! இந்தப் படத்தினை முக நூலில் பகிர்ந்து “இது என்ன தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்என்று கேட்டபோது பலரும் சரியான விடையைச் சொல்லி விட்டார்கள்....  புன்னகை புரிய வைக்கும் சில பதில்களும் வந்தன!

தமிழர்கள் மட்டுமல்ல, மலையாள நண்பர், ஜார்க்கண்ட் மாநில நண்பர் என இந்தியாவின் வேறு வேறு மூலையிலும் இந்த வடிவில் கண் மைச் சிமிழ் பயன்பட்டிருக்கிறது என்ற தகவலும் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது!

இது என்ன? – 28 ஆகஸ்ட் 2016



மேலுள்ள படத்தினைப் பாருங்கள்....  இந்த படத்தினை காலையில் பகிர்ந்து இது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.  மாலைக்குள் பல பதில்கள் – பெரும்பாலானவை உணவு சம்பந்தமான பதில்களே! அனைத்தும் ஸ்வாரஸ்யமான பதில்கள் – குமுட்டி, அபிஷேகத் தீர்த்தம் வைக்கும் பாத்திரம், பிரசாதம் வைக்கும் பாத்திரம், வெற்றிலை துப்பும் பாத்திரம், ஹூக்கா, வெந்நீர் போடும் பாத்திரம், தண்ணீர் ஜக், காப்பிக்கொட்டை அரைக்கும் இயந்திரம், காப்பி டிகாக்‌ஷன் ஃபில்டர், மூலிகை Hair Oil குவளை, ஸ்டீமர், Water Heater, தீர்த்தக் குவளை, இட்லி புட்டு ஸ்டீமர், காஞ்சிபுரம் குடலை இட்லி செய்யும் பாத்திரம், கொழுக்கட்டை செய்யும் பாத்திரம் – இப்படி பலப்பல பதில்களை யோசித்து சொன்னார்கள்!

நண்பர் ஒருவர், கூகிளாண்டவரிடம் கூட கேட்டு விட்டாராம், யோவ்வ்...  போய்ய்யா நீ... நானும் கூகுள் முழுசும் தேடிட்டேன்... Titanic கப்பல் கூட கெடச்சுடுச்சு....என்று வெறுத்துப் போய் பதில் எழுதினார்.  மாலை வரை இப்படி பல விதமான சுவையான பதில்கள்..... 

அது சரி, உண்மையா என்னதான்யா அது? அதைச் சொல்லவே மாட்டியா? “விடை எப்ப போடூவீங்க்!என்றும் ஒரு நண்பர் கேட்டிருந்தார்.  விடையை மாலையில் எழுதினேன்.  அந்த விடை இது தான்.....

திருப்பராய்த்துறையில் இருக்கும் பராய்த்துறை நாதர் – பசும்பொன் மயிலாம்பிகை கோவிலில் வைத்திருந்த பொருள் இது. சுமார் 100-150 லிட்டர் எண்ணை பிடிக்கும் அளவில் பெரிய பாத்திரம். கார்த்திகை தீபம் சமயத்தில் இதில் எண்ணை நிரப்பி, அதில் எட்டு/பதினாறு முழ வேட்டியை திரியாகப் பயன்படுத்தி, இதன் பக்கவாட்டில் இருக்கும் துளை வழியே திரி வெளியே கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்க, அந்த தீபத்தினை ஏற்றுவார்கள். பல மணி நேரம் நின்று எரியும் இந்த விளக்கு!

இந்த மாதிரி பொருட்கள் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் வருத்தமான விஷயம்!

கல்லுரல் [ஆட்டுக்கல்] – 30 ஆகஸ்ட் 2016



இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவரங்கத்து வீதி ஒன்றில் நடந்து கொண்டிருந்தபோது சாலையோர சாக்கடை அருகில் மாடு ஒன்று நின்று கழுநீர் குடித்துக் கொண்டிருந்தது. எதில் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது ஒரு கல்லுரல்....   சற்றே தொலைவு நடந்த பிறகு, மற்றுமொரு வீதியில் ஒரு வீடை இடித்துப் புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் தரையில் பதித்திருந்த கல்லுரலை பெயர்த்து குப்பையோடு குப்பையாக போட்டிருந்தார்கள்.

இந்த இரண்டையும் பார்த்தபோது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. எத்தனை முறை இந்த கல்லுரல் பயன்படுத்தி இட்லி, தோசைக்கு மாவு அரைத்திருப்பார்கள், எத்தனை முறை உலக்கை வைத்து இதில் பொருட்களை இடித்துப் பொடித்திருப்பார்கள். நமது உணவுக்காக இதனை எவ்வளவு பயன்படுத்தி இருந்தாலும், இப்போதெல்லாம் இதைப் பயன்படுத்த யாருமே தயாராக இல்லை....  மின்சாரத்தில் இயங்கும் கிரைண்டர்கள் வந்தபிறகு இந்த கல்லுரல்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்றாலும், இப்படி வீதியில் எறிந்து விட்டதைப் பார்க்கும்போது கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. முதலாவது கொஞ்சம் நிம்மதி – ஏதோ ஒன்றுக்குப் பயன்படுத்துகிறார்களே!

இன்னமும் வீட்டில் இந்த மாதிரி கல்லுரல்களைப் பயன்படுத்துபவர்கள் யாரும் உண்டா? இந்தக் கல்லுரலில் அரைத்து இட்லி, தோசை செய்தால் எத்தனை ருசி...... ஒரே ஒருவர் மட்டும் இன்னமும் இந்த மாதிரி கல்லுரலைப் பயன்படுத்துவதாக எழுதி இருந்தார் – அதனால் மகிழ்ச்சி!

என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

லண்டன் டயரி – இரா. முருகன்




இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவரங்கம் வடக்கு அடையவளஞ்சான் தெருவில் இருக்கும் நூலகத்திற்குச் சென்றிருந்தோம். புத்தக அலமாரியில் பார்த்துக் கொண்டிருந்தபோது “லண்டன் டயரிஎன்ற புத்தகம் கண்ணில் பட, அதில் எழுதி இருந்த இந்த வரி “பயண அனுபவங்களின் ஊடாக தேம்ஸ் நதி நகரத்தின் சுவாரசிய சரித்திரம் பார்த்த உடனேயே கையில் எடுத்துவிட்டேன். எனக்குத் தான் பயணம் என்பது மிகவும் பிடித்த விஷயமாயிற்றே! எடுத்து வந்த அடுத்த நாளே முழுவதும் படித்து விட்டேன்.  

மொத்தம் 26 பகுதிகள் – ஒவ்வொரு பகுதியிலும் முதல் பாதியில் லண்டன் மாநகரின் வரலாற்றைச் சொல்வதோடு, இரண்டாம் பாதியில் அவர் பார்த்த இடங்கள் பற்றிய குறிப்புகளை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் இரா. முருகன். பிரபல எழுத்தாளர், முகப்புத்தகத்திலும் நிறைய எழுதுகிறார். அவரது புத்தகங்கள் நான் இதுவரை படித்ததில்லை. இது தான் நான் படிக்கும் அவரது முதல் புத்தகம். ஆங்காங்கே நகைச்சுவை மிளிர மிகவும் சுவையாக எழுதி இருக்கிறார்.

பல வரலாற்றுக் குறிப்புகளையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. லண்டன் நகருக்கு முதன் முதலில் வைத்த பெயர் லண்டினீயம்! கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது லண்டன் நகரின் வரலாறு! அவரது வார்த்தைகளில் சொன்னால் ரோமானிய வழக்கப்படி ‘லண்டீனியம்என்று கனகம்பீரமாக நாமகரணம் செய்யப்பட்ட அந்தக் கிராமம் வளர்ந்து பெருநகரமானபோது பெயரிலிருந்து “ஈயம்உருகிப்போக, சிக்கென்று ‘லண்டன்ஆனது. அபிதகுஜலாம்பாள் அபிதா ஆனது போல காலத்தோடு ஒட்டிய மாற்றம் இது!

குழாயைத் திறந்தால் வெள்ளமாகத் தண்ணீர் கொட்டும் நாட்டில், எத்தனை மரத்தை, காட்டை வெட்டிக் காய்ச்சிக் கூழாக்கி இப்படி சுருள் சுருளாக துடைக்கிற பேப்பர் செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்களோ. காகிதத்துக்குக் கட்டுப்பாடு வந்தால் முதலில் பத்திரிகை அச்சடிப்பதைத்தான் நிறுத்துவார்களோ என்னமோ, துடைத்துப் போடுகிற காகித உற்பத்தி தடையின்றி நடக்கும் போலிருக்கிறதுஎன்று எழுதியதைப் படிக்கும் போது எனக்கும் எங்கள் அலுவலகத்தில் கை துடைக்க இது போன்று பேப்பர் நாப்கின்கள் எத்தனை எத்தனை வீணாக்குகிறார்கள் என்று தோன்றியது!

1338-ஆம் ஆண்டு.... இப்போதைய பிக்கடிலிக்கு அருகே டைபர்ன் பகுதியில், கொலைக் குற்றவாளிகளுக்கு பகிரங்கமான தூக்கு தண்டனை நிறைவேற்றுவதும் அறிமுகமானது. யாரையாவது தூக்கில் போடும்போது, திருவிழா போல் மக்கள் கூட்டம் கட்டுச்சாதம், இனிப்பு, சாராயம், சரக்கு இத்யாதிகளோடு வேடிக்கை பார்க்க நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு, நோட்டீஸ் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆஜராகிவிடும்! பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்தப் பகிரங்கத் தூக்குத் தண்டனை அமலில் இருந்ததாம்!  எட்டாம் ஹென்றி எனும் அரசன் தனது முதல் மனைவி ஆன் போலின் என்பவரை சிரச்சேதம் செய்தாராம் – காரணம் அரசன் இரண்டாம் முறையாக திருமணம் புரிந்து கொள்ள தடையாக இருந்தது தானாம்!

1944-ஆம் ஆண்டு போரில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாக செயல்பட்ட எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க்கப்பலை இப்போது யுத்தகால அருங்காட்சியகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அது பற்றிய ஒரு தகவல் – உண்மையோ, பொய்யோ – ஆனால் சுவாரஸ்யம்!

கப்பலின் ஒரு பகுதி – கக்கோல்ட் முனை. “சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்து தான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விடுய்யான்னு அவனவன் க்யூவில் நின்னு கெஞ்சறான். நோ ப்ராபளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கொண்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம் பார்த்தானாம்! 

தேம்ஸ் நதி என நாம் சொன்னாலும், அதை டெம்ஸ் என்று தான் உச்சரிக்கிறார்களாம். ஒண்ணாம் ஜார்ஜ் மன்னனின் அம்மா ஜெர்மனியிலிருந்து வந்தவராம். ஜார்ஜுக்கு தேம்ஸ் என்று சொல்ல நாக்குப் புரளவில்லை. ஜெர்மன் மொழி உச்சரிப்பில் டெம்ஸ் என்று அரசன் சொல்ல, என்னத்துக்கு வம்பு என்று அரசவையில் எல்லோருமே மரியாதையை உத்தேசித்து அதேபடி டெம்ஸ் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். “ராஜா உச்சரிச்சா அது ராங்காப் போனதில்லைஎன்பதல் இன்றைக்கும் அதிகாரபூர்வமான உச்சரிப்பு டெம்ஸ்தான்....

மதுக்கடை ஒன்றிற்குச் சென்றபோது அங்கே Pub Quiz நடந்ததாம். அது பற்றி இப்படிச் சொல்கிறார் நூல் ஆசிரியர்.  மைக்கைப் பிடித்தபடி ஒருத்தர் குடிமக்களுக்கு முன்னால் மேடையில் கேள்வி கேட்கத் தயாராக நிற்கிறார். சுற்றிலும் பார்க்கிறேன். முட்டக் குடித்தபடி இருக்கும் இந்த ஜனக்கூட்டத்திடம் என்ன க்விஸ் நடத்தப் போகிறார்? இரண்டு விரலை விரித்துக் காட்டி இது எத்தனை என்று கேட்டு, உத்தேசமாகச் சரியாக மூணு என்று சொன்னவர்களுக்குப் பரிசாக இன்னொரு கோப்பை பியர் கொடுப்பார்களோ?

பழைய காலங்களில் லண்டன் நகரின் பெரும்பாலான கட்டிடங்கள் மரத்தினால் கட்டப்பட்டிருக்க, அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு பலத்த அழிவு உண்டாயிற்றாம். வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை – “கவர் ஃபயர்”.  ஊர் முழுக்கக் கடைப் பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த கவர் ஃபயர் சட்டம். அது தான் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னமும் அமலாக்கப்படுகிறது!

இப்படி பல ஸ்வாரஸ்யமான தகவல்களும், அனுபவங்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளை நூல் வடிவில் “கிழக்குப் பதிப்பகம்வெளியிட்டு இருக்கிறார்கள். நூலின் விலை ரூபாய் 125.

பயணமும் வரலாறும் பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இந்த நூல் நிச்சயம் பிடிக்கும். முடிந்தால் படித்துப் பாருங்கள்....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து....

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

போம்டிலா – மார்க்கெட் மூதாட்டி


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 42

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


சிங்ஷூவிலிருந்து போம்டிலா...


சிங்ஷுவிலிருந்து போம்டிலா....
வரைபடம்: இணையத்திலிருந்து....

காலை உணவை சிங்ஷூவில் முடித்துக் கொண்டு நாங்கள் தவாங் நோக்கி புறப்பட்ட அந்த காலை நேரத்திலேயே கொஞ்சம் குளிர் இருந்தது. தவாங் இன்னும் அதிக உயரத்தில் இருக்கும் ஒரு இடம். மார்ச் மாதத்திலும் அங்கே பனிப்பொழிவும் மழையும் இருக்கலாம். பனிப்பொழிவு இல்லை என்றாலும் குளிர் இருக்கும் என்று சிங்ஷூ நண்பர்களும் சொல்லி இருந்தார்கள். தில்லியில் இருப்பதால் குளிர் எனக்குப் பழகிய விஷயம் என்றாலும் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்லும்போது தகுந்த குளிர்கால உடைகளோடு செல்வது நலம்.  எங்கள் குழுவில் இருந்த ஆறு பேரில் ஐந்து பேரிடம் குளிர்கால உடைகள் இருந்தன என்றாலும் ஒருவரிடம் மட்டும் இல்லை.



பயணித்த பாதை....
சிங்ஷுவிலிருந்து போம்டிலா....

முந்தைய நாள் ஓட்டுனராக இருந்த டோர்ஜிக்கு பதிலாக வேறு ஒரு ஓட்டுனர் வந்திருந்தார் என்று சொல்லி இருந்தேன். அந்த ஓட்டுனர் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக உச்சரித்தார் – முதலில் கேட்ட போது புரியவில்லை. மீண்டும் கேட்க “சொம்புஎன்றார்! வித்தியாசமான பெயராக இருக்கிறதே என நினைத்து இரண்டு மூன்று முறை கேட்ட பிறகு தான் புரிந்தது ஷம்பு என்ற பெயரைத்தான் இப்படி உச்சரிக்கிறார் என்று! அவர் சொன்னபடியே வைத்துக்கொள்ளாலாமே. ஓட்டுனர் ஷம்புவிடம் நண்பருக்கு குளிருக்கு இதமாய் ஜாக்கெட் வாங்க வேண்டும் எனச் சொல்ல, வழியில் வாங்கலாம் என்று சொன்னார்.


போம்டிலா நுழைவாயில்....

சிங்ஷூவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் போம்டிலா....  அங்கே தான் கொஞ்சம் பெரிய மார்க்கெட் இருக்கிறது.  சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களிலிருந்தும் இங்கே வந்து தான் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்.  தவாங் செல்லும் பலரும் இந்த போம்டிலாவில் தான் ஒரு இரவு தங்கிச் செல்கிறார்கள் என்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கிற இடம். அங்கே சென்றால் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று ஓட்டுனர் ஷம்பு சொன்னது மட்டுமல்லாது அங்கே சென்று வண்டியை கடைத்தெருவில் நிறுத்தினார்.  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த கடைத்தெரு. நிறைய கடைகளில் குளிர்கால உடைகள் இருக்க, நண்பர்கள் இருவர் Winter Jacket வாங்கச் செல்ல, நானும் நண்பர் பிரமோத்-உம் மார்க்கெட் பகுதியில் உலவிக் கொண்டிருந்தோம்.


மூதாட்டியின் கடை முன்னர்...

வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் பருப்பு, தானிய வகைகள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி வைத்திருக்கிறார்கள். தேவயான அளவுகளில் கட்டி வைத்திருப்பதை வாங்கிக் கொண்டு செல்ல ஒரு வசதி. மளிகைப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான மற்ற பொருட்கள் என அனைத்தும் ஒரே கடையில் கிடைக்கின்றன.  எல்லா இடங்களைப் போலவே இங்கேயும் கடைகளை நடத்துவது பெண்கள் தான். நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு மூதாட்டிதான் கடை வைத்திருந்தார். தள்ளாத வயது, முகத்தில் நிறைய சுருக்கங்கள்.....


கடைத் தெரு....

எனக்கும் நண்பர் பிரமோத்-க்கும் அந்த மூதாட்டியை ஒரு புகைப்படம் எடுக்கலாம் எனத் தோன்றியது. கைகளில் கேமராவுடன் இருப்பதைப் பார்த்த உடனேயே அந்த மூதாட்டிக்கு முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது. தனியாக முணுமுணுக்கவும் செய்தார் என்பதால் அவரிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. சாலையிலிருந்து செய்து படமெடுக்க முயற்சிக்கலாம் என கேமராவுடன் நகர, அந்த மூதாட்டி, வரவங்க எல்லாம் புகைப்படம் மட்டும் எடுக்கறீங்க, ஒண்ணும் வாங்க மாட்டீங்க! உங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையாஎன்று ஹிந்தியில் திட்டியபடியே கடைக்குள் மறைந்து கொண்டார்.


வேறொரு கோணத்தில் கடைத் தெரு....

இரண்டு மூன்று முறை முயற்சித்தும் பலனில்லை. அவரிடம் வாங்குவதற்கு எங்களுக்குத் தேவையான பொருள் ஏதும் இல்லை – மளிகைச் சாமான்களும், அது போன்ற பொருட்களும் இங்கே இருந்து வாங்கி என்ன செய்வது? அதையும் தூக்கிக் கொண்டு அலைய முடியாது என்பதால் வாங்க வில்லை. சரி என்று மூதாட்டியிடம் அப்படியே சொல்ல, அவர் முகத்தில் இன்னும் அதிக கோபம்! அவரிடம் இப்படி நிறைய பேர் சொல்லி இருப்பார்கள் போலும்! எதற்கு வம்பு என சாலைக் காட்சிகளை மட்டும் படம் பிடித்துக் கொண்டு நண்பர்களுக்காகக் காத்திருந்தோம்.


காத்திருக்கும்போது ரிப்போர்ட்டிங்....

காத்திருக்கும் நேரத்தில் இந்த போம்டிலா பற்றியும் கொஞ்சம் பார்க்கலாமா... அருணாச்சலப் பிரதேசத்தில் புத்தர்களை வழிபடுபவர்கள் தான் அதிகம். வழியெங்கும் சிறு சிறு மண்டபங்கள் கட்டி அதில் வெளியே புத்தர் கோவில்களில் இருக்கும் சிறு உருளைகளை அமைத்திருப்பதைப் பார்க்க முடியும். அந்த உருளைகளை உருட்டி பிரார்த்தனை செய்வது இவர்களது வழக்கம்.  போம்டிலாவிலும் Monastery இருக்கிறது. புத்தர் கோவிலும், புத்த மதம் பற்றி சீடர்களுக்குச் சொல்லித் தரும் Gகொம்பாக்களும் இங்கே உண்டு.


வழியில் ஒரு இரும்புப் பாலம்....

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8500 அடி உயரத்தில் இருக்கும் போம்டிலா, கிழக்கு காமெங்க் மாவட்டத்தின் தலைநகர். தேஸ்பூர், பலூக்பாங்கிலிருந்து திராங்க், தவாங் செல்லும்போது வரும் முக்கியமான மற்றும் பெரிய ஊர் இது தான். இங்கே மிதமான தட்பவெப்ப நிலை இருக்கும். இங்கிருந்து ஹிமாலய மலைத்தொடரையும், பனிபடர்ந்த மலைச் சிகரங்களையும் காண முடியும் என்பது கூடுதல் வசதி. 1965-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட Buddhist Monastery திபெத்தில் இருக்கும் Tsona Gontse Monastery போலவே அமைக்கப்பட்டது.  போம்டிலாவில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளமும் இது தான்.

இதோ நண்பர்களும் வந்து விட்டார்கள்....  தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பராய் மரமும் கல்யாணமும்


 பராய் மரம் - ஸ்தல விருக்ஷம்

திருப்பராய்த்துறை பற்றியும் அங்கே இருக்கும் பராய்த்துறைநாதர் கோவில் பற்றியும் முன்னரே சில முறை எனது பதிவில் எழுதி இருக்கிறேன். முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே...




பராய் மரத்தின் கீழே சிவலிங்கம்

அந்த ஊர் பற்றியும் சமீபத்திய பயணத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் பகிரவும் மீண்டும் ஒரு பகிர்வு! பராய் மரம் தான் பராய்த்துறைநாதர் கோவிலின் ஸ்தல விருக்ஷம். அம்மையின் பெயர் பசும்பொன் மயிலாம்பிகை.  பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருப்பராய்த்துறையும் ஒன்று. நால்வர் தவிர அருணகிரிநாதரும் இத்தலம் பற்றி திருப்புகழில் பாடி இருக்கிறார். மிகவும் பழமையான கோவில் என்றாலும் மிகவும் குறைவான மக்களே இங்கே வருகிறார்கள் – பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் கொஞ்சம் அதிகமான மக்கள் வருகை உண்டு.   திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களில் இரண்டினைப் பார்க்கலாம்....

விடையும் ஏறுவர் வெண்பொடிப் பூசுவர்
சடையில் கங்கை தரித்தவர்
படைகொள் வெண்மழு வாளர்பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

தருக்கின்மிக்க தசக்கிரீவன்தனை
நெருக்கினார்விரல் ஒன்றினால்
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அரக்கன்தன்னை அடிகளே.....

     திருஞானசம்பந்தர்....

பாடலுக்கான பொருளுரை:

திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர். 

திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால்விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

டிஸ்கி: பொருளுரை – இணையத்திலிருந்து.....

சமீபத்தில் ஏதோ ஒரு தமிழ் இதழில் இந்தக் கோவில் பற்றியும் அங்கே ஸ்தல விருக்ஷமான பராய் மரம் பற்றியும் அந்த மரத்திற்கு பன்னிரெண்டு குடம் தண்ணீர் விட்டால் திருமணம் நடக்கும் என்றும் எழுதிய பிறகு தினம் தினம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது! இது ஒரு புறம் இருக்க, பராய் மரத்தின் இலை, குச்சி, பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் உடையது என்பதால் சிலர் அதன் பட்டைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள்.  விரைவில் பட்டையை உரித்து மரத்தை பாழடிக்காமல் இருந்தால் சரி! ராசி மரங்கள் போலவே, நட்சத்திரங்களுக்குரிய மரங்களும் உண்டு. பராய் மரம் கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய மரம்.

சப்த கன்னியர்கள்


 நால்வர் அணி!

திருப்பராய்த்துறை கோவிலின் உள்ளே நாயன்மார்கள், சப்தகன்னியர்கள், கால பைரவர் ஆகியோருக்கும் பிரகாரத்தில் சிலைகள் உண்டு. சப்த கன்னியர்களை நினைவில் வைத்துக் கொள்ள ஏதுவாய் ஒரு பாடல் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த பாடல் கீழே.....

நாமம் பிராம்மி மஹேஸ்வரியாம்
நன்மை செய்யும் கௌமாரி
சேமம் வளர்க்கும் வைஷ்ணவியும்
சீரார் தேவி வராஹியுமாய்
மேவும் தெய்வம் இந்திராணி
வீரசாமுண்டேஸ்வரியாம்
ஏமம் நமக்குச் செயவல்ல
எழுவர் – தம்மைப் பணிவோமே....

சரி இந்த ஞாயிறில் கோவிலில் எடுத்த சில சிற்பங்களின் படங்கள், மற்ற படங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்......


வலம்புரி விநாயகர்


தக்ஷிணாமூர்த்தி


கங்காள மூர்த்தி


துர்கா லக்ஷ்மி


ஆறுமுகன் - வள்ளி தெய்வானையுடன்


தில்லையம்பலவாணன் - உலோகச் சிலை


கோவிலுக்கு வந்திருந்த எதிர்காலம்....


அடுக்கு நந்தியாவட்டை மொட்டுக்கள்


கொன்னைப் பூ மொட்டுகள்....

பாழடைந்த நிலையில் ஒரு சிற்பம்.... :(

என்ன நண்பர்களே, பகிர்வையும் படங்களையும் ரசித்தீர்களா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெஙகட்.
திருவரங்கத்திலிருந்து....


டிஸ்கி: படங்கள் மொபைல் கேமராவில் எடுத்தவை.....

சனி, 27 ஆகஸ்ட், 2016

சிங்ஷூ – இரவு உணவு - எதிர்பாரா சந்திப்பு

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 41

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


பூக்கள் – கொத்திலிருந்து சில பூக்கள் மட்டும்!

சிங்ஷூ தங்குமிடத்தில் நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பு தீர ஒரு குளியல் முடித்து மற்ற நண்பர்கள் பாட்டிலைத் திறந்து அன்றைய கணக்கைத் துவக்க, நானும் இன்னுமொரு நண்பரும் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் அருந்தியபடி அங்கே இருந்த நபர்களிடம் சுய அறிமுகம் செய்து கொண்டோம். அதில் ஒருவரை மட்டும் எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது எனக்கு – அதுவும் நன்கு தெரிந்த ஒருவரின் முகச்சாயல் அவரிடம்.  ஆனாலும் என்னால் அவரிடம் நேரடியாக கேட்க முடியவில்லை. முதல் முறை பார்க்கும்போதே இப்படி ஒருவரிடம் கேட்க முடிவதில்லை.


தங்குமிடத்தில் இருந்த ரோஜா!

அவர் ஒரு பள்ளி ஆசிரியராம். அதுவும் சிங்ஷூவில் வசிக்கும் பள்ளி ஆசிரியர். சில நிமிடங்கள் பேசியபிறகு அவரவர் பணி செய்யும் இடங்கள் பற்றியும் சொந்த ஊர் பற்றியும் பேச்சுகள் ஆரம்பித்தன.  நானும் பணிபுரியும் இடம் தில்லி எனச் சொல்லி, அலுவலகத்தினையும் சொன்னவுடன், அந்த ஆசிரியர் அவராகவே என் குழப்பத்தினைத் தீர்த்து வைத்தார். என்னுடன் பணிபுரிந்த மலையாள நண்பரின் நெருங்கிய உறவினர் அவர். அதனால் தான் அவர்களிடையே முகச்சாயலில் ஒற்றுமை இருந்திருக்கிறது. நான் பணிபுரியும் இடத்தினைச் சொன்னவுடன் நண்பரின் பேரைச் சொல்லி, அவரின் நண்பரான உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி என்னுடன் நிறைய பேசினார்.


ஆசிரியர் வளர்க்கும் டைகர், என் நண்பருடன்.....

நாங்கள் சந்தித்த சில நாட்களுக்கு முன்னர் தான், தில்லியில் வசிக்கும் அந்த நண்பர் இறந்து போனதையும், தன்னால் வர முடியாததையும் சொல்லி வருத்தப்பட்டதோடு, தனது ஆரம்ப காலங்களில் வேலை இல்லாதிருந்தபோது தில்லியில் வந்து எனது நண்பர் வீட்டில் தங்கி வேலை தேடியதையும், அவர் செய்த உதவிகளையும் சொல்லிக் கொண்டிருந்தார்.  நீங்கள் தில்லி போனதும், உறவினரின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களை நிச்சயம் நேரில் சென்று தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எத்தனையோ தூரத்தில் இப்படி ஒருவரைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.


தங்குமிடத்திலிருந்து ஒரு காட்சி....

தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, மற்ற நண்பர்கள் ஒன்றிரண்டு குப்பிகளை முடித்திருந்தார்கள். அதற்குள் இரவு உணவு தயாராக இருப்பதாக பணியாட்கள் வந்து சொல்ல, அனைவரும் உணவு உண்பதற்கான அறைக்குச் சென்றோம். அங்கே ஒரு நீண்ட மேஜையில் உணவு தயாராக இருந்தது. உணவு தயாரித்தவர் வட இந்தியர் தான் என்பதால் அருணாச்சல உணவுகள் இல்லை! நல்ல வேளை என்று நினைத்துக் கொண்டேன். சோறு, சப்பாத்தி, தால் தட்கா, மிக்ஸ் வெஜிடபிள், சிக்கன், மீன் வருவல், சாலட், ஊறுகாய், தயிர் என பல உணவு வகைகள் செய்து வைத்திருக்க, அனைவரும் தேவையானவற்றை போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம்.


காலை நடைப் பயணத்தின் போது எடுத்த ஒரு படம்...
ஆறும் ஆற்றின் கரையில் கட்டிடங்களும்...
ஒரு கழுகுப் பார்வை

என்னைத் தவிர மற்ற அனைவருமே அசைவப் பிரியர்கள் என்பதால், தால், மிக்ஸ் வெஜிடபிள் பக்கம் அவர்கள் வரவே இல்லை. பொறுமையாக சில சப்பாத்திகளை, சைவ உணவுகளை சாப்பிட்டு முடிக்க, காலையில் விரைவாக புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு, பணியாட்களிடமும் காலையில் சப்பாத்தி, பராட்டா போதும் என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்றோம்.  நாள் முழுவதும் பயணித்த அலுப்பு தீர நன்கு தூங்கினோம். அடுத்த நாளும் முழுவதும் பயணம் தான் – நீண்ட நெடிய பாதை – வழியில் வெகு சில ஊர்களே என்பதால் என்ன அனுபவம் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்புகளோடு உறங்கினோம்.


மலைப்பாதையிலிருந்து நதியும் சாலையும்....

அடுத்த நாள் காலை எழுந்து காலைக் கடன்களை முடித்து, தயாராகி வெளியே வந்தால் மார்ச் மாதத்திலும் குளிர் இருந்தது. தயாராக இருந்த மற்றொரு நண்பரும் நானுமாக ஒரு நடை சிங்ஷூ கிராமப் பாதைகளில் நடந்தோம்.  பெரும்பாலான பகுதிகளில் ராணுவத்தினர் இருக்கிறார்கள். சிலச் சில வீடுகளில் அந்தக் கிராமத்து மக்களும் உண்டு. அவர்கள் பேசும் மொழி நமக்குப் புரியாது என்றாலும், நாம் ஹிந்தி பேசினால் புரிந்து கொள்கிறார்கள் – ஏதாவது கடை திறந்திருந்தால், தேநீர் அருந்தலாம் என்று நண்பர் சொல்ல, அந்த நேரத்தில் ஒரு கடையும் திறந்திருக்கவில்லை! நீண்ட தூரம் நடந்து சென்று அறைக்குத் திரும்ப மற்ற நண்பர்கள் தயாராகி காத்திருந்தார்கள்.


சிங்ஷூ நண்பர்களோடு ஒரு புகைப்படம்....

காலை உணவும் தயாராக இருக்க, சப்பாத்தி, பராட்டா சாப்பிட்டு, தேநீர் அருந்தினோம். தங்குமிடச் சிப்பந்திகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுத்து, அறைக்கான கட்டணமும் கட்டிய பிறகு அறைக்குத் திரும்பி, எங்கள் உடமைகளை சரிபார்த்துக் கொண்டோம்.  முதல் நாள் எங்களை காசிரங்காவிலிருந்து அழைத்து வந்த ஓட்டுனர் டோர்ஜி, எங்களை சிங்ஷூவில் விட்ட பிறகு அவரது கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இன்று வரப் போகும் ஓட்டுனர் யார் என்று ஏற்பாடு செய்த நபரிடம் கேட்க, இதோ வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி வைக்கவும், வாகனம் வரவும் சரியாக இருந்தது. அடுத்த இரண்டு மூன்று நாட்கள் புதிய ஓட்டுனருடன் தான் பயணம்!


பயணம்... 
நாங்க ரெடி.... நீங்க ரெடியா?

தங்குமிடச் சிப்பந்திகள், மதிய உணவுக்கு சப்பாத்தி கட்டித் தருகிறோம் என்று மீண்டும் மீண்டும் சொல்ல, வழியில் பார்த்துக் கொள்கிறோம் என ஜம்பமாக சொல்லி விட்டோம். அது எவ்வளவு தவறான முடிவு என்பது பின்பு தான் புரிந்தது! அங்கே இருந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லி, அங்கிருந்து புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன்னர் அனைவரும் சேர்ந்து சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்ட பிறகு, சிங்ஷூவிலிருந்து தவாங் நோக்கிய பயணம் துவங்கியது....  பயணத்தில் சந்தித்த விஷயங்கள், பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்......

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஃப்ரூட் சாலட் 175 – மனைவியின் சடலத்துடன் நடை – ஹெல்மெட் – ரஜினிடா.....


இந்த வார செய்தி:

கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தனது வேலையை விட்டது மட்டுமல்லாது தனது சொந்த வீட்டையும் விற்ற ஒரு நாற்பது வயது மனிதர் பற்றிய செய்தி.....  இந்த வாரப் பூங்கொத்து திரு ப்ரஞ்சல் துபே அவர்களுக்கு.  செய்தி படிக்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

யார் கண்ணீரையும் நீ துடைக்க வேண்டாம். யாருடைய கண்ணீருக்கும் நீ காரணமாக இருந்து விடாதே.... அதுவே போதும்!

இந்த வார காணொளி:

செத்தாண்டா சேகரு! ஹெல்மெட் போடலை என்று கேட்ட போக்குவரத்து காவல் துறை ஆளின் முகத்தினைப் பாருங்கள்! ஹாஹா....


உசைன் போல்ட் Vs ரஜினிகாந்த்:

வேகம்டா...  வேகம்னா ரஜினிடா....






இந்த வார ஓவியம்:

எனது மகள் வரைந்த ஒரு கிருஷ்ணர் ஓவியம்.... 


இந்த வார சோகம்:



தனது மனைவியின் பூவுடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், பணம் வாங்காமல் கொண்டு செல்ல ஒருவரும் தயாரில்லை என்பதால் நடந்தே தனியொருவனாய் கொண்டு சென்ற காட்சி – ஒடிசாவில்....  சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த மனிதர்கள்...  காணொளியும், புகைப்படங்களும் எடுத்த மாக்கள்....  என்னவொரு சோகம்..... மரத்துப் போனது மனிதமும், இந்த மாக்களின் மனமும்... இந்த உணர்வினை படம் பிடித்துக் காட்டியது கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களின் இக்கவிதை....

மனையாள் மாண்டனள்
என்செய்வேன் நான் ?
மார்பு வெடித்து
மடிந்தழுகின்றேன்.

பாடை முடையவும்
தூக்கிச் சுமக்கவும்
நகரில் எனக்கென
யாரோ வருவார் ?

இறந்தோர் வீட்டு
அழுகை கூட
வாழ்வோர் செவிக்கு
இடையூறாகும்.

தனிப்பிணத்தோடு
தவித்தேன் அழுதேன்
பிணவூர்திக்குப்
பணிந்தேன் தொழுதேன்

கைகால் அன்றி
கைப்பொருள் இல்லேன்
காசில்லை எனில்
காணக் கூசுவர்.

பழந்துணிகொண்டு
பிணத்தைச் சுற்றி
தோளில் இருத்திச்
சுமந்து நடந்தனன்.

வாழ்வு சிறக்க
வாழ்கின்றவரே...
இன்றென் முறையெனில்
நாளை உம்முறை.

என் அழுகைக்கு
விலை வைத்தோரே...
நன்று செய்தீர்
நெஞ்சு நிறைந்தீர்

நானும் மகளும்
மனையாள் பிணமும்
நடந்த பாதை
நாட்டுக்கர்ப்பணம்.

இந்த வார குறுஞ்செய்தி:

நன்றாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் கத்திரிக்கோல் மாதிரி.... எதிரெதிரே இருப்பாங்க....  ஆனா அவங்களுக்கு நடுவே யார் வந்தாலும் காலி தான்!

படித்ததில் பிடித்தது:



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.