நண்பர்களுக்கு, இனிய
காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத்
துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது – அன்னை தெரசா.
ஊரடங்கு – 1 – 22 ஜூன் 2020:
ஊரடங்கு, பொது முடக்கம்,
முழு முடக்கம் என்று தொடர்ந்து சொன்னாலும் நிலைமை கட்டுக்குள் வர மிகவும் சிரமமாகத்
தான் உள்ளது.. அங்கே, இங்கே என்று சொன்னது போய் இப்போது திருவரங்கத்திலும் தொற்று வந்துவிட்டது....:(
நம் அனைவரின் ஒத்துழைப்பும் இங்கு மிகவும் முக்கியம்..
முன்பு "நாங்க
ஹோட்டலுக்கெல்லாம் போவதில்லை! வருடத்துக்கொரு முறை சென்றால் பெரிது! ஷாப்பிங் என்ற
பெயரில் தேவையில்லாதப் பொருட்களை வாங்கி பணத்தை செலவிடுதலில் உடன்பாடில்லை! வீட்டு
வேலைக்கு ஆள் வைத்து பழக்கமில்லை..நானே செய்தால் தான் எனக்கு திருப்தி! " என்று
நான் சொன்ன போதெல்லாம் என்னை இளக்காரமாய் பார்த்தார்கள்..! இன்று கொரோனா என்னும் வைரஸால்
வாழ்க்கை முறையே மாறி விட்டது...
சர்வதேச யோகா தினம்!
இம்முறை மகளுக்கு
பள்ளியிலிருந்து வீட்டிலேயே குறிப்பிட்ட நேரத்தில் யோகா செய்து புகைப்படமெடுத்து அனுப்பி
வைக்கச் சொல்லியிருந்தார்கள்..பத்து வித ஆசனங்களை மகள் செய்ய நான் படம்பிடித்து ஆசிரியருக்கு
அனுப்பி வைத்தேன்..
ஆதியின் அடுக்களை
இற்றைகள்!
வாட்ஸப்பில் எப்போதுமே
எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை... சில நாட்கள் முன்பு வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைக்க மகள் தான்
கற்றுக் கொடுத்தாள்..என் சமையல் பகிர்வுகளை பகிர்ந்து கொண்ட போது தான் எத்தனை பேர்
பார்க்கிறார்கள் என்று தெரிகிறது...:) இங்கும் அப்படித்தான் இல்லையா?? டைம்லைனில் போடும்
பதிவுகளை பார்த்தாலும் சைலண்ட் ரீடர்ஸ் தான் அதிகம்...:)
வத்தல்கள்!
இந்த வருடம் போட்ட
வத்தல்/வடாம்களை பொரித்தே பார்க்கவில்லையே என்று சென்ற வாரத்தில் ஒருநாள் கறிவேப்பிலைக்
குழம்புடன் பொரித்து ருசித்தோம்..நன்றாகவே பொரிந்தன..
ப்ரெட் டோஸ்ட்!
சில நாட்கள் முன்பு
முதன்முறையாக ப்ரெட் செய்து பகிர்ந்திருந்தது நினைவிருக்கலாம்..மிகவும் சுவையாகவும்,
மிருதுவாகவும் இருந்தது..ஒருநாள் மாலை நேரத்தில் ஜாம் தடவி டோஸ்ட் செய்தும், மற்றொரு
நாள் உருளைக்கிழங்கு மசாலா வைத்தும் டோஸ்ட் செய்தும் சாப்பிட்டோம்..:) ஸ்டேட்டஸில்
போட்ட போது நிறைய பேர் மெசேஜ் செய்து பாராட்டினார்கள்..ரெசிபியும் கேட்டுத் தெரிந்து
கொண்டார்கள்..
கடலை பக்கோடா!
மாலைநேர நொறுக்குக்கு
ஏதேனும் செய்யலாம் என்று நினைத்த போது வீட்டில் உப்பு சேர்க்காத வறுத்த வேர்க்கடலை
மட்டும் தான் இருந்தது... அதனுடன் அரிசிமாவு, கடலைமாவு உப்பு, காரம் சேர்த்து 'மசாலாக்
கடலை' அல்லது கடலை பக்கோடா செய்து சுவைத்தோம்..கரகர மொறுமொறு!
ஊரடங்கு-2 - 25 ஜூன் 2020:
மகளின் கைவண்ணம்!
TN police art
contest க்காக வரைந்து அனுப்பி இரண்டு மாதங்களாகி விட்டது..ரிசல்ட் தெரியலை..:) சரி!
இன்று உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாமே என்று ரீலீஸ் செய்துட்டேன்..:) எப்படியிருக்கிறது
என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்..மகளும் வாசிப்பாள்!
மின் கட்டணம்!
இங்கே ஒரு சிலரின்
பதிவுகளைப் பார்த்ததிலிருந்தே நமக்கும் எவ்வளவு வருமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..:)
இங்கே எங்கள் வீட்டில் ஏஸியெல்லாம் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை..முடிந்தவரை சமாளிப்போமே!
என்று இதுவரை வாங்கிக் கொள்ளவில்லை..:) வாஷிங் மெஷிங் இருந்தாலும் என்றாவது ஒருநாள்
தான் பயன்படுத்துவேன்..:) கைகளில் துவைப்பதில் தான் எனக்கு திருப்தி..:) (பிழைக்கத் தெரியாத ஜீவன் இல்லையா! )
முதலில் நாலு மாதங்களுக்கான
யூனிட்டுகளை கணக்கிட்டு அதில் சென்ற முறை கட்டிய தொகையை கழித்துள்ளனர். சரியாகத் தான்
கணக்கிட்டுள்ளனர் என்பதை இங்கே பதிவிடுகிறேன்!
மின்னூல்!
அமேசான் தளத்தில்
வெளியிட்ட ”ஆதியின் அடுக்களையிலிருந்து”
மின்னூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமேசானில் அக்கவுண்ட்டும் kindle app டவுன்லோட்
செய்து கொண்டால் எளிதாக மின்னூல்களை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் என்பது கூடுதல்
தகவல்..
இணைப்பு இதோ - ஆதியின் அடுக்களையிலிருந்து
ஆதியின் அடுக்களையிலிருந்து – அவல் கட்லெட்
- 25 ஜூன் 2020:
நசநசவென்று தூறல்,
புழுக்கம் இல்லாத மாலை.
வழக்கம் போல் மாலைநேர
நொறுக்குத் தீனிக்காக தான் செய்தேன்..நல்ல க்ரிஸ்பியாகவும், சுவையாகவும் இருந்தது..ஒரு
கப் அவலும், வேகவைத்த இரண்டு உருளைக்கிழங்கும் இருந்தால் நிமிடத்தில் செய்யலாம்.
ஊறவைத்த அவலுடன் வெங்காயம்,
ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து
பிசைந்து மைதா கரைசலில் முக்கி பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் போட வேண்டியது தான்.
மைதாக் கரைசலில் முக்கி
எடுக்காமல் வடையாக தட்டிப் போட்டேன்..சரியாக வரவில்லை. பிரிந்து விடுகிறது அல்லது எண்ணெய்
குடிக்கிறது. அதனால் மைதா கரைசலும், ப்ரெட் தூளும் தேவைப்பட்டது.
ஊரடங்கு - 3 - 26 ஜூன் 2020:
அத்தியாவசியப் பொருட்கள்
வாங்க வெளியே சென்றிருந்தேன். இன்று 90% பேர் முகக்கவசம் அணிந்தே சென்றார்கள். திருச்சியிலும்
தான் தொற்று வந்துவிட்டதே. அதனால் பாதுகாப்புணர்வு கூடியுள்ளது என்று நினைக்கிறேன்.
டெட்டால் எங்கும்
ஸ்டாக் இல்லையாம். மருந்துக்கடையில் இருந்த விளம்பரம் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க vitamin c + vitamin D3 + Zinc சேர்த்த chewable மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். நான் கபசுர குடிநீரை வாங்கியதால் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ளவில்லை.
துணிக்கடைகளில் நிறுத்தி
வைத்திருந்த பொம்மைகள் கூட முகக்கவசம் அணிந்திருந்தன :) சாலையிலும் மக்கள் நடமாட்டம்
மிகவும் குறைவு தான்.
ஏ.டி.எம் இயந்திரத்தில்
பணம் எடுக்கச் சென்றால் இன்று கொஞ்சம் தகராறு செய்து விட்டது :) ஒரு இயந்திரத்தில்
பின் நம்பர் கொடுத்த பின் பணமும் வரலை, கார்டும் எடுக்க வரலை :) அதே வங்கி என்பதால்
அக்கவுண்ட்டிலிருந்து பணம் டெபிட் ஆகி உடனே க்ரெடிட்டும் ஆனது!
வேறு வங்கி ஏ.டி.எம்மில்
எடுக்க முயற்சித்ததில் ஒரு இயந்திரத்தில் குறிப்பிட்ட எண்ணை எத்தனை முறை அழுத்தினாலும்
பதிவாகவில்லை :) ஒருவழியாக அடுத்த இயந்திரம் ஒத்துழைத்தது :) இந்தக் களேபரத்தில்
வியர்வை ஆறு பெருகி உடைகள் தொப்பலாக நனைந்தன :)
வீடு திரும்பி குளித்து
எல்லாவற்றையும் துடைத்து எடுத்து வைப்பதற்குள் அப்பாடான்னு ஆச்சு :) முடிந்தவரை வீட்டிலேயே
இருப்போம்!
ஊரடங்கு – 4 - 6.0 - 30 ஜூன் 2020:
ஆன்லைன் வகுப்புகள்!
இந்த வாரத்திலிருந்து
மகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை நான்கு மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இடையில்
மதியம் இரண்டு மணிநேரம் போல் ஓய்வு! ஆசிரியர்கள் முடிந்த வரை பொறுமையாகத் தான் வகுப்பு
எடுக்கிறார்கள். சில மாணாக்கர்கள் டேட்டா தீர்ந்து விட்டது, சார்ஜ் தீர்ந்து விட்டது
என்றும் சொல்லி வகுப்பை தவிர்க்கின்றனர். இந்த வருடம் பாடங்களையும் குறைத்து இருப்பதாகவும்
சொல்கின்றனர்.
மெஹந்தி!
மகள் ரொம்ப நாளாகவே
தான் மெஹந்தி போட்டுக் கொள்ளப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாள்..சில நேரம் அவளுக்கு
ஜலதோஷம் பிடிக்கும் என்பதால் இப்போது வேண்டாமென தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன்..பிறகு
ஒருவழியாக சென்ற வாரம் போட்டுக் கொண்டாள் :)
முளைவிட்ட பயறு!
(Sprouts)
முளைவிடுவதால் சத்துக்கள்
மேம்படுகின்றன..சிலர் இந்த மாதிரி முளைவிட்ட பயறு வகைகளைக் கூட கடைகளில் வாங்குவார்கள்..ஆனால்
எளிதாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்..ஒரு இரவு நீரில் ஊறவைத்து, பின்பு நீரை வடித்து
விட்டு சுத்தமான துணி ஒன்றில் மூட்டை போல் கட்டி வைத்தால் 5 மணிநேரத்தில் முளை விட்டு
விடும்..
இதை எடுத்து வைத்துக்
கொண்டால் குழம்பில் போடலாம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சப்ஜியாக செய்யலாம், மாலைநேரத்தில்
சுண்டலாக செய்து தரலாம், அடைக்கு அரைக்கும் போது சேர்க்கலாம். முடிந்தவரை வீட்டிலேயே
தயாரித்துக் கொள்ளலாமே.
எடிட்டிங்!!
என்னுடைய சமையல் மின்னூலுக்கு
நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று சொன்னேன்.
கிட்டத்தட்ட 250 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். kindle
Unlimited app-இல் 1000 பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன.
என்னவரின் வேலையை
சற்றே குறைக்க அடுத்த மின்னூலுக்கு நானே எடிட்டிங் செய்து கொண்டு வருகிறேன். வலைப்பூ
நாட்களில் எழுதியது என்றாலும் நூலை பொதுவாக ஒருவர் வாசிக்கும் போது அதற்கேற்ற விதமாய்
சிலவற்றை சேர்த்தும், நீக்கியும் செய்ய வேண்டியுள்ளது :) விரைவில் வெளிவரலாம் (தற்போது வெளி வந்துவிட்டது!).
ஆதியின் அடுக்களையிலிருந்து - 1 ஜூலை 2020:
சிறுதானிய முருங்கை
பக்கோடா!!
கூகிளில் மாலை நாலு
மணிக்கு மழையை எதிர்பார்க்கலாம் என்று சொன்னாலும் அதிரடியாக இரண்டு முக்காலுக்கே மழை
பெய்து தன்னை யார் என்று நிரூபித்தது....:) சிறிது நேர மழையால் புழுக்கம் அதிகமாக இருக்கிறது..
ஏழெட்டு வருடங்களாகவே
'அடை' என்றால் சிறுதானியத்தில் தான் செய்கிறேன்.. அரிசியில் அடை செய்வதே இல்லை...:)
சிறுதானியத்துடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இதனுடன் ஏதாவது ஒரு பயறும் சேர்த்து
அரைப்பேன்..இம்முறை காராமணி சேர்த்து அரைத்தேன்..
மாலைநேர குட்டிப்பசிக்கு
அடைமாவு தான் கொஞ்சம் இருந்தது.. அதனுடன் முருங்கைக்கீரை சேர்த்து பக்கோடா செய்திருக்கிறேன்..
வெங்காயம் வேண்டுமானால் சேர்க்கலாம்..நான் சேர்க்கவில்லை. மாவு தளர்வாக இருந்தால்
சிறிதளவு ரவை சேர்த்துக் கொள்ளலாம்.
வெளியே மொறுமொறுப்பாகவும்
உள்ளே மிருதுவாகவும் ஜோராக இருந்தது..நீங்களும் செய்து பாருங்களேன்.
என்ன நண்பர்களே, இந்த
நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப்
பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்…
சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.