நாளிதழில் நான்… லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாளிதழில் நான்… லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூன், 2016

ப்யாஸ் நதியில் ராஃப்டிங்.....

ப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....

ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ நகர்.  குளிர் பிரதேசமான மணாலி என்று சொல்லும்போது குலூவையும் சேர்த்து, குலூ-மணாலி என்று தான் சொல்வார்கள். இரண்டுமே அருகருகே இருக்கும் இரு நகரங்கள்.  மணாலியில் பனிப்பொழிவும் பனிபடர்ந்த சிகரங்களும் பார்க்கலாம் என்றால் குலூவில் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யும் த்ரில் அனுபவம் பெறலாம்.  வாருங்கள் கூழாங்கற்கள் நிரம்பிய [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யலாம்.

ப்யாஸ் நதி....

குளிர் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் மட்டுமே இங்கே ராஃப்டிங் செய்ய முடியும். மார்ச் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை மற்றும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் இறுதி வரை ராஃப்டிங் செய்ய உகந்த மாதங்கள். [B]ப்யாஸ் நதிக்கரையில் நதியைப் பார்த்தபடியே பயணித்து பிர்டி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் அங்கே சின்னச்சின்ன தனியார் கடைகளைக் காணமுடியும். அவர்களிடம் இருக்கும் காற்றடைத்த ரப்பர் படகுகளில் தான் நாம் ராஃப்டிங் செய்ய வேண்டும். சில அரசு நிறுவனங்கள் உண்டென்றாலும், தனியார் படகுகள் தான் அதிகமான அளவில் இருக்கின்றன.

ப்யாஸ் நதியின் ஒரு பயணம்.....

Small, Medium, Large என மூன்றுவிதமான பயணங்கள் உண்டு – பிர்டியிலிருந்து தொடங்கி, ஜீரி எனும் இடம் வரை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நீங்கள் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்து கடக்க முடியும்.  14 கிலோமீட்டர் தொலைவும் ராஃப்டிங் செய்ய சில மணி நேரங்கள் ஆகலாம் – என்றாலும், ராஃப்டிங் செய்து பழக்கமில்லாதவர்களுக்காக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ராஃப்டிங் செய்யும் வசதிகள் இங்கே உண்டு.

ஏலேலோ ஐலேசா......

சீசனைப் பொறுத்து ராஃப்டிங் கட்டணங்கள் மாறுபடுகின்றன. நீங்கள் பயணிக்கும் தூரத்தினைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணங்கள் கொடுத்து ராஃப்டிங் செய்யலாம். முழு தொலைவும் பயணிக்க கட்டணம் இன்னும் அதிகம்.  பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு ரப்பர் படகில் அமர்ந்து கொள்ள, அனுபவம் பெற்ற படகோட்டி ஒருவர் ராஃப்டிங் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார்.

காற்றடைத்த ரப்பர் படகுகள்....

ராஃப்டிங் தொடங்குமுன்னரே, நமக்கு இந்த த்ரில் பயணத்தினை தாங்க முடியுமா? இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வர வேண்டாம் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். கூழாங்கற்கள் நிறைந்த [B]ப்யாஸ் நதிக்குள் பயணிக்கத் துவங்குகிறோம். சமவெளியாக இல்லாமல் பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த பகுதி என்பதால் படகு செலுத்துபவரின் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் தண்ணீரின் வேகம் மிக அதிகம் என்பதால் படகும் வேகமாக நகர்கிறது. 

ப்யாஸ் நதியின் ஓரத்தில் அமர்ந்து த்யானம் செய்யும் மூதாட்டி....

படகின் ஓரங்களிலும் நடுவிலும் இருக்கும் கயிறுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாம் அமர்ந்திருக்க, படகோட்டி மிக லாவகமாக படகைச் செலுத்துகிறார்.  பள்ளமான இடம் வரும்போது இப்போது நாம் கீழ்நோக்கி வேகமாகச் செல்லப்போகிறோம் என்பதையும் சொல்லி விடுவதால் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு வித சத்தத்தோடு படகு தண்ணீரில் கீழ் நோக்கி இறங்க, நாமும் தண்ணீரில் நனைகிறோம்.  நம்மை மீறி நம்மிடமிருந்தும் உற்சாகக் குரல் வெளிவருகிறது – சிலருக்கு பயத்தில் கூச்சலும்!

கயிற கெட்டியா புடிச்சுக்கோங்க.... பள்ளம் வரப் போது.....

சில இடங்களில் படகைச் சுற்றிச் சுற்றி ஓட்டியும் துடுப்பினால் தண்ணீரில் அடித்து தண்ணீர் திவலைகள் நம் மீது படும்படியும் செய்து மகிழ்விக்கிறார் படகோட்டி.  எங்களுக்கு அமைந்த படகோட்டி நேபாள் நாட்டைச் சேர்ந்த கர்மாஎனும் 23 வயது இளைஞர்.  எங்களுடன் சேர்ந்து “ஐலேசாபாட்டுப் பாடியதோடு நேபாளி மொழியிலும் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தார். குழுவாக பயணித்த நாங்களும் அவருடன் பயமின்றி உற்சாகமாக பயணிக்க, அவருக்கும் மகிழ்ச்சி. [B]ப்யாஸ் நதியில் இருக்கும் குறுகிய பாதைகளிலும், பெரிய பள்ளங்களிலும் படகைச் செலுத்தி எங்கள் அனைவரையும் நனைய வைத்தார்.

இதோ வந்துடுச்சு பள்ளம்....

எப்படியும் தண்ணீரில் நனைந்து விடுவோம் என்பதால், கரையிலேயே காமிரா, மொபைல், பர்ஸ் போன்றவற்றை நீங்கள் சென்ற வாகனத்தில் விட்டுவிடுவது நல்லது.  பயணிக்கும் போது செல்ஃபி எடுத்துக்கொள்ள காமிரா வைத்துக் கொண்டு அது முழுவதும் நனைந்து செயலிழப்பதையும் காணமுடிந்தது.  நீங்கள் ராஃப்டிங் செய்வதை படம்/காணொளியாக எடுத்துத் தரவும் இங்கே வசதிகள் உண்டு.  படகொன்றுக்கு 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆரம்பத்திலிருந்து முடியும் இடம் வரை உங்களைத் தொடர்ந்து சாலையோரமாக பைக்கில் வந்து ஆங்காங்கே நின்று வீடியோவும், புகைப்படமும் எடுக்கிறார்கள்.  நீங்கள் கரையேறிய பிறகு உங்களுக்கு அந்த படங்களையும் காணொளியையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து தருவார்கள்.

என்ன நனைஞ்சுட்டீங்களா....

உற்சாகமாக பயணித்து, நதியில் இருக்கும் நெளிவு சுளிவுகளைக் கடந்து கரையோரம் வருகிறோம். வாழ்க்கையில் ஒரு முறையாவது நிச்சயமாக அனுபவிக்க வேண்டிய விஷயம் இந்த ராஃப்டிங்.  இந்தியாவில் பல இடங்களில் இந்த ராஃப்டிங் வசதிகள் இருக்கிறது – ரிஷிகேஷ் [கங்கை நதி, உத்திராகண்ட் மாநிலம்], குலூ [[B]ப்யாஸ் நதி - ஹிமாச்சலப் பிரதேசம்], ஓர்ச்சா [[B]பேத்வா நதி - மத்தியப் பிரதேசம்] ஆகிய இடங்களில் ராஃப்டிங் வசதிகள் உண்டு.

ப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....

குலூ-மணாலி செல்வது எப்படி?

குலூ வருவதற்கு முக்கிய வழி சாலை வழி தான். தில்லி வரை விமானத்தில்/ரயிலில் வந்து அங்கிருந்து குலூ-மணாலி வரை செல்ல நிறைய வோல்வோ பேருந்துகளும், சாதாரண பேருந்துகளும் உண்டு.  பன்னிரெண்டு மணி முதல் பதினான்கு மணிநேர பயணத்தில் நீங்கள் குலூ சென்றடையலாம்.  ரயிலில் பயணிப்பதென்றால் சண்டிகர் வரை ரயிலில் பயணித்து, பிறகு தனியார் வாகனத்திலோ அல்லது பேருந்துகளிலோ செல்ல முடியும்.  நேரடி விமான சேவை இல்லையென்றாலும், சென்னையிலிருந்து தில்லி வரை வந்துவிட்டால், தில்லி-சண்டிகர் வரை விமானத்திலும், பிறகு சண்டிகரிலிருந்து 9 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்திலும் வரலாம். 

யாருப்பா அது எழுந்து நிக்கறது....

குலூ-மணாலி தங்குவது எங்கே?

குலூ-மணாலி இரண்டு இடங்களிலுமே தங்குமிடங்கள் நிறையவே இருக்கின்றன. சீசன் சமயங்களில் [ப்ரல்-ஜூன்] அறை வாடகை மிக அதிகமாக இருக்கும்.  மற்ற சமயங்களில் வசதிகள் பொறுத்து 1000 ரூபாய் முதல் தங்குமிடங்கள் கிடைக்கின்றன. குழுவாக பயணிப்பவர்கள் காட்டேஜ் எடுத்தும் தங்கலாம். நான்கு அறைகள், ஒரு ஹால், டைனிங், சமையல் அறை என மொத்தமாக இருக்கும் காட்டேஜ் 8000 முதல் 10000 வரை கிடைக்கிறது.

என்ன ராஃப்டிங் நல்லா இருந்துதா?....

நீங்களும் ஒரு முறை குலூ-மணாலி சென்று ராஃப்டிங் செய்து இந்த த்ரில் அனுபவத்தினை பெறுங்கள்.


-          வெங்கட் நாகராஜ்

ஜூன் மாத ஹாலிடே நியூஸ் இதழில் வெளிவந்த எனது கட்டுரை.  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.




ஞாயிறு, 22 மே, 2016

பதாய் நடனம் – ஹாலிடே நியூஸ் – பதிவர் சந்திப்பு



சென்ற மாதம் ஹாலிடே நியூஸ் மாத இதழ் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். இந்த மாதமும் [மே] ஹாலிடே நியூஸ் வெளிவந்து சில நாட்கள் ஆகின்றன என்றாலும், நேற்று தான் மே மாத ஹாலிடே நியூஸ்எனக்கு கிடைத்தது. ஆமாம் நேற்று பதிவர், நண்பர் செந்தில் குமார் அவர்கள் மதுரையிலிருந்து திருச்சி வர, அவரை திருச்சியின் மத்தியப் பேருந்து நிலையத்திற்குச் சென்று சந்தித்தேன்.  என்னைச் சந்திப்பதற்காகவே மதுரையிலிருந்து பயணித்து திருச்சி வந்திருந்த நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.



தமிழகத்திற்கு இம்முறை வந்த சில நாட்களாகவே அலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் சந்திக்கலாம் என நினைத்த தேதியும், இடமும் மாறிக் கொண்டே இருந்தது. அவருக்கு பணிச்சுமை, நானும் ஏதேதோ வேலைகள் என சந்திப்பு தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. நானே மதுரை சென்று வர நினைத்திருந்தாலும் என்னால் சென்று அங்கிருக்கும் பதிவுலக நண்பர்களை சந்திக்க இயலவில்லை.  நேற்று தனது பணிச்சுமைகளுக்கு இடையே மதுரையிலிருந்து திருச்சிக்குப் பயணித்து வந்தார் நண்பர் செந்தில் குமார்.



சந்திப்பின் போது இந்த மாத ஹாலிடே நியூஸ் இதழும், தினத்தந்தி வெளியிட்ட நண்பர் செந்தில்குமார் அவர்களின் நம்ப முடியாத உண்மைகள்புத்தகமும், தின வணிகம் மற்றும் அக்ரி டாக்டர் நாளிதழ்களின் இதழ்களில் ஒன்றும் எனக்குத் தந்தார்.  மத்தியப் பேருந்து நிலையத்தின் எதிரே இருந்த ஒரு உணவகத்தில் இரவு உணவினைச் சாப்பிட்டபடியே பயண அனுபவங்களையும் வலையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம். 

இம்முறை ஹாலிடே நியூஸ் இதழில் பல பதிவர்களின் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.  சென்ற இதழ் போலவே சிறப்பான வண்ணப் படங்கள், சிறப்பான கட்டுரைகள் என இதழ் அமர்க்களமாக வெளிவந்திருக்கிறது. 

நாம் இங்கே கோடையின் கொடுமையில் இருக்க, நடுங்க வைத்த லண்டன் குளிர் பற்றி எழுதி இருக்கிறார் பதிவர் ஞா. கலையரசி அவர்கள்.  எரிமலைக்கு மேலே நடந்து சென்று அங்கே கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் நண்பர் சுரேஷ்.  டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அலஹாபாத் நகரிலிருக்கும் ஆனந்த பவன் சென்று வந்த அனுபவத்தினைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

விண்கல் ஒன்று விழுந்ததால் உண்டாகிய லோனார் கிரேட்டர் லேக் எனும் ஏரி பற்றிய தகவல்கள், கண்ணாடி போன்ற தெளிந்த நீர் கொண்ட மலாவி ஏரி பற்றிய தகவல்கள், கண்ணாடிப் பல்லக்கில் சப்தஸ்தான திருவிழா, ஆயிரங்காலத்து அதிசயம் ஐஹோலே, அரிட்டாபட்டி கலைப் பொக்கிஷங்கள், வடகிழக்கு மாநில பயணத் தொடர் என மிகச் சிறப்பான கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்திருக்கின்றன. 



நான் எடுத்த புகைப்படங்களோடு, புந்தேல்கண்ட் பகுதியின் ‘பதாய்நடனம் பற்றிய சிறு கட்டுரையும் இந்த ஹாலிடே நியூஸ் இதழில் வெளிவந்திருக்கிறது.  நான் எடுத்த புகைப்படம் ஒன்றை முழுபக்க வண்ணப்படமாக ஒரு மாத இதழில் பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி.  தொடர்ந்து இரு மாதங்களாக என்னுடைய பகிர்வு இந்த மாத இதழில் வருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. 

50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மாத இதழை தபால் மூலம் பெற விரும்பும் வெளியூர் நண்பர்கள் ஒரு வருடத்திற்கான சந்தா தொகை [600 ரூபாய்] செலுத்தி உங்களது வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம். மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள 99430-19032 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  தமிழில் இப்படி சிறப்பான, வண்ணமயமான சுற்றுலா இதழ் தொடர்ந்து வரவேண்டும் என்பதால் உங்கள் ஆதரவினைத் தாருங்கள்.

நண்பர் செந்தில் குமார் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பின்னர் உணவகத்திலிருந்து பேருந்து நிலையம் நோக்கித் திரும்பினோம்.  இன்னும் சற்று நேரம் பேசிய பிறகு அவர் மதுரைக்குப் பேருந்தில் புறப்பட நான் திருவரங்கம் திரும்பினேன்.

எல்லா தமிழகப் பயணங்கள் போலவே இம்முறையும் ஒரு சில பதிவுலுக நண்பர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. இந்த முறை நான் சந்தித்த பதிவுலக நட்புகள் – திரு செந்தில் குமார், திரு ரிஷபன், திருமதி கீதா சாம்பசிவம், திருமதி கீதா, திரு கஸ்தூரி ரெங்கன், திரு செல்வகுமார் மற்றும் சில புதுக்கோட்டை நண்பர்கள்.  சந்திக்க இயலாதவர்கள் பலர்...  அவர்களை அடுத்த முறை சந்திக்க வேண்டும். 

நாளை தில்லியில் இருக்க வேண்டும். மூன்று வார விடுமுறைக்குப் பிறகு தில்லி திரும்புகிறேன். பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் இன்னும் சில தினங்களுக்கு இணையத்தில் அதிகம் உலவ இயலாது. முடிந்தபோது பதிவுகள் மூலம் சந்திக்கிறேன். நடுநடுவே ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிவுகள் Schedule செய்து வெளியிடப்படலாம்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

புதன், 6 ஏப்ரல், 2016

ஹாலிடே நியூஸ் – சுற்றுலாவின் புதிய தேடல்


தமிழில் மாத இதழ்கள் நிறையவே இருக்கின்றன. பெரும்பாலானவை சினிமாவிற்கே நேர்ந்து விடப்பட்ட நிலையை நம்மால் காண முடிகிறது. பெண்களுக்கு என்றே பல மாத/வார இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. புதிது புதிதாய் புத்தகங்கள் வந்தாலும் தொடர்ந்து வரும் புத்தகங்கள், மக்கள் மனதில் இடம் பிடித்த புத்தகங்கள் மிகக் குறைவே. சுற்றுலா, பயணம் போன்ற விஷயங்கள் மட்டுமே இடம் பெரும் மாத இதழ் இருந்தால், அதுவும் நம் தாய் மொழியாம் தமிழில்  இருந்தால் எப்படி இருக்கும் என நம்மில் பலரும், குறிப்பாக சுற்றுலாப்பிரியர்களாக இருக்கும் என்போன்றவர்களும் நினைப்பதுண்டு.

ஆங்கிலத்தில் National Geographic Traveller India, Lonely Planet Magazine India, Outlook Traveller என சுற்றுலா சம்பந்தப்பட்ட ஆங்கில மாத இதழ்கள் இருந்தாலும், தமிழில் இப்படிப்பட்ட இதழ்கள் இல்லவே இல்லை என ஒரு குறை எனக்குண்டு.  அந்தக் குறையை மதுரையில் இருக்கும் வளர்தமிழ் பப்ளிகேஷன்ஸ் போக்கியிருக்கிறது. 


படம்:  நண்பர் சுரேஷ் குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

இப்படி இருக்கையில் சுற்றுலாவுக்கென்றே ஒரு மாத இதழ், அதுவும் கண்களைக் கவரும் வண்ணப் படங்களுடன் பத்திரிகை வெளி வரும் பட்சத்தில், அதைப் படிப்பவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். ஹாலிடே நியூஸ் எனும் மாத இதழ் இப்பணியை கடந்த மூன்று வருடங்களாகச் செய்து வந்திருக்கிறது.  பெரிய பெரிய பத்திரிகைகளுக்கிடையே போட்டி போடுவது, ஏஜெண்டுகள் செய்யும் சதி போன்ற காரணங்களால் இதழினை நடத்த முடியாது போக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகை வெளி வருவது நின்றது.

இந்த மாத இதழ் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது/படித்தது நண்பர் “கடல் பயணங்கள்” சுரேஷ் அவர்களின் வலைப்பூவில் தான். அவரது பயணக் கட்டுரைகள் “ஹாலிடே நியூஸ்” மாத இதழில் அக்டோபர் 2014 இதழிலிருந்து துவங்கியது என்பதை அவரது பதிவில் படித்த போதிலிருந்தே இதழை படிக்க வேண்டுமென்ற ஆசை உண்டு.  தமிழகத்தினை விட்டு தொலைவில், தலைநகர் தில்லியில், இருப்பதில் இருக்கும் சில குறைபாடுகளில் தமிழ் புத்தகங்கள் வாங்குவதில், தொடர்ந்து கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களும் ஒன்று. ஹாலிடே நியூஸ் படிக்க ஆசை இருந்தும் படிக்க முடியவில்லை. 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

சமீபத்தில் “ஹாலிடே நியூஸ்” மாத இதழின் இணை ஆசிரியர் நண்பர் “கூட்டாஞ்சோறு” செந்தில்குமார் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.  “ஹாலிடே நியூஸ்” மாத இதழ் இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மீண்டும் புத்தம்புது பொலிவோடு வெளி வர இருக்கிறது என்பது தான் அந்த மின்னஞ்சல் சொன்ன செய்தி! அதைப் படித்த போது எனக்கு மகிழ்ச்சி.  இம்முறை எப்படியும் இந்தப் புத்தகத்தினை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

சென்ற வாரத்தில் எனது தில்லி முகவரிக்கு புத்தகம் வந்து சேர்ந்தது.  அனுப்பி வைத்த நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

அட்டை 2 அட்டை வண்ணப் படங்கள் புத்தகத்தினைப் படிக்கும் நம் கண்களைக் கவர்கின்றன.  ஒரு பக்கத்தில் குளு குளு மணாலிக்கு அழைத்துச் சென்றால், இன்னுமொரு பக்கத்தில் வட கிழக்கு மாநிலத்தின் ஷில்லாங் நகரின் சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உத்திராகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட், சின்ன பெங்குயின்களின் செல்ல நடை, பாபநாசம் – பாவம் போக்கும் தலங்கள், பட்டதக்கல் – பார்க்க திகட்டாத கலைக்கோவில்கள் என ஒவ்வொரு கட்டுரையும் மனதைக் கவரும் விதமாக எழுதப்பட்டிருக்கிறன. அவற்றுக்கான படங்களும் அற்புதமாக வந்திருக்கிறன.  இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள், கண்கவர் இடங்கள் பற்றிய தகவல்களும் உண்டு. 


 படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

ஹாலிடே நியூஸ் மாத இதழின் விலை ரூபாய் 50 மட்டுமே.  எப்படி இந்த இதழை உங்கள் இல்லம் தேடி வர வைப்பது, சந்தா உண்டா? போன்ற கேள்விகளுக்கு பதில் வேண்டுமெனில் 94435-71391 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.  உங்கள் பங்களிப்புகளையும் அனுப்பி வைக்கலாம்.  எனக்கு பயணக் கட்டுரை எழுதுவது முடியாத விஷயம், ஆனால் எங்கள் படங்களை மட்டும் அனுப்பி வைக்கிறோம் என்பவர்களும் அப்படங்களை myholidayphoto@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் புத்தகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு பக்கத்தில் வெளியிடப்படும்.


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...


தமிழில் இது மாதிரி சுற்றுலாவிற்கு என்றே ஒரு இதழ் வருவது மிகச் சிறப்பான விஷயம்.  தொடர்ந்து இந்த இதழ் வெளிவருவது வாசகர்களின் கையில்.  எனவே இந்த மாத இதழ் தொடர்ந்து வெளிவர நாமும் உதவுவோம்.  சுற்றுலா தகவல்களைப் படித்து மகிழ்வோம். 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

கடைசியாக ஒரு விஷயம் – அடியேனின் ஒரு கட்டுரையும் ஏப்ரல் மாத “ஹாலிடே நியூஸ்” இதழின் 54-55 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. என்னுடைய வலைப்பூவில் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய “முதுகுச் சுமையோடு ஒரு பயணம் கட்டுரை தான்!  வரும் மாத இதழ்களிலும் என்னுடைய கட்டுரை வெளி வரலாம்….  என்னுடைய கட்டுரையை வெளியிட்ட மாத இதழ் ஆசிரியர்களுக்கு, குறிப்பாக நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

மாத இதழ் வாங்கிப் படித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் நண்பர்களே!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

சனி, 11 ஜூன், 2011

வலைப்பூவில் எழுதும் தில்லி தமிழர்கள்

[தில்லியிலிருந்து வெளி வரத் தொடங்கியுள்ள தினமணி இதழில் நான் எழுதி வெளிவந்த அறிமுகம்]




உலகெங்கிலும் வாழும் தமிழர்களில் பலர் ப்ளாக் [Blog] என்று சொல்லப்படும் வலைப்பூக்களில் கதை, கவிதைகள், சுவையான நிகழ்வுகள் போன்ற பல தரப்பான விஷயங்களைப் பற்றி எழுதி வருகின்றனர். தில்லி வாழ் தமிழர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? தில்லியில் வசிக்கும் சில தமிழர்களின் வலைப்பூக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் சுசீலா, தற்போது தில்லியில் இருந்து கொண்டு http://www.masusila.com/ என்ற வலைத்தளத்தில் சங்க இலக்கியம், ஆன்மீகம், சமூகம் போன்ற தளங்களில் பல நல்ல கருத்துகளை எழுதி வெளியிடுகிறார். இதுவரை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் [பருவங்கள் மாறும், புதிய பிரவேசங்கள், தடை ஓட்டங்கள்], நான்கு கட்டுரை நூல்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவலும் [பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்] வெளிவந்துள்ளன. தற்போது இன்னுமொரு மொழிபெயர்ப்பு நாவலும் அச்சில் இருக்கிறது.

எல்லா பெரிய வெற்றியும் ஒரு சிறுமுயற்சி-யில் தானே தொடங்குகிறது. இதை உண்மையாக்கும் விதமாய் திருமதி கயல்விழி முத்துலெட்சுமி என்ற தில்லி பதிவர் நவம்பர் 2006 முதலாகவே தன்னுடைய படைப்புகளை http://www.sirumuyarchi.blogspot.com/ என்ற வலைப்பூவில் வெளியிட்டு வருகிறார். தில்லியில் இருந்து எழுதும் வலைப்பதிவர்களில் நீண்ட காலமாக எழுதி வருபவர். இந்த வலைப்பூவில் மட்டுமல்லாது வலைச்சரம், சாப்பிட வாங்க, தேன் கிண்ணம் போன்ற வேறு பல வலைப்பூக்களிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது.

“நீர்க்கோல வாழ்வை நச்சி” என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ள லாவண்யா சுந்தரராஜன் தில்லியிலிருந்து வலைபூவில் எழுதிக்கொண்டு இருக்கும் இன்னுமொருவர். இவரது வலைப்பூ முகவரி http://www.uyirodai.blogspot.com/. நல்ல தமிழில் கவிதைகள் பல எழுதி அதை தனது வலைப்பூவிலும், அகநாழிகை, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பினை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.

அனிமேஷன் துரையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துக் கொண்டு இருப்பவர் திரு சந்திரமோகன். இவரது பல ஓவியங்கள் வடக்கு வாசல், உயிர்மை போன்ற இதழ்களைச் சித்தரிக்கின்றன. மேலும் இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். இவர் தனது http://chandanaar.blogspot.com/ என்ற வலைப்பூவில் ஓவியங்கள், கதை, கவிதை, இசை பற்றிய இவரது கோணம் என்று பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

தனியார் துறையில் பணிபுரிந்து கொண்டே தனது பெயரிலேயே http://www.vigneshwari.blogspot.com/ என்ற வலைப்பூவில் சுவையான பல விஷயங்களைப் பற்றி எழுதி வருபவர் திருமதி விக்னேஷ்வரி. கவிதை, சினிமா விமர்சனம் என்ற பல தளங்களில் எழுதி வருபவர். இவர் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

கலாநேசன் என்ற புனைப் பெயரில் கருத்துமிக்க கவிதைகளை எழுதும் ஒரு தில்லி வாழ் தமிழர் திரு சரவணன். இவர் http://www.somayanam.blogspot.com/ என்ற வலைப்பூவில் நிறைய கவிதைகள் வெளியிட்டு வருகிறார். சில கதைகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது எழுதும் இவர் கவிஞர் வைரமுத்துவின் ரசிகர்.

வார்த்தைகளால் சித்திரம் வரைந்து கொண்டிருப்பவர் திருமதி ஜிஜி. தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வந்து தில்லியைப் பற்றியும் அவரது ஊர் பற்றியும் எழுதிக் கொண்டு இருப்பவர். இவர்து வலைப்பூ முகவரி http://www.vaarthaichithirangal.blogspot.com/. இவரது வலைப்பூவில் பயணக் கட்டுரைகள், மழலைப் பட்டாளம் பற்றிய அனுபவங்கள் என்று பல்வேறு சுவையான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை பெரிய மாற்றத்தினை உண்டாக்குகிறது? திருமணத்திற்கு முன் கோவையில் வசித்து வந்த ஆதி வெங்கட் என்ற பதிவர் திருமணத்தினால் தில்லிக்கு இடம் பெயர்ந்து விட தனது வலைப்பூவின் பெயரையே கோவை2தில்லி என வைத்துக் கொண்டு, சமையல் மற்றும் மருத்துவ குறிப்புகள், அனுபவங்கள், பயணக் கட்டுரைகள் போன்றவற்றை தனது வலைப்பூவான http://www.kovai2delhi.blogspot.com/ –ல் எழுதி வருகிறார்.

கடந்த 20 வருடங்களாக தில்லியில் வசித்து வரும் வெங்கட் நாகராஜ் என்பவர் தான் சந்தித்தவை மற்றும் சிந்தித்தவையாக http://www.venkatnagaraj.blogspot.com/ என்ற வலைப்பூவில் இதுவரை 140 பதிவுகளுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவரது ”தலைநகரிலிருந்து” என்ற தொடரில் இந்திய தலைநகராம் தில்லியில் பார்க்க வேண்டிய இடம், உணவு வகைகள், தெரிந்து கொள்ளவேண்டிய சில ஹிந்தி வார்த்தைகள் என்ற விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

தில்லியின் சுற்றுப் புறங்களில் இருக்கும் சிறு நகரங்களிலும் சில தமிழர்கள் வலைப்பூவில் எழுதி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது தில்லியிலும் தமிழர்கள் வலைப்பூக்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதற்கு இதை விட வேறு ஏது சாட்சி…

டிஸ்கி: இது நான் எழுதி அனுப்பியது. இதிலிருந்து நண்பர் சந்திரமோகன் மற்றும் என்னுடைய வலைப்பூ பற்றிய குறிப்புகள் தில்லி சிறப்பு மலர்-இல் ”காக்கா உஷ்” ஆகிவிட்டது.
 

சனி, 4 ஜூன், 2011

தில்லியிலிருந்து தினமணி நாளிதழ்



தலைநகர் தில்லியில் 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கென கட்சி சாரா தமிழ் நாளிதழ்கள் இல்லை. இந்தக் குறை தீர்க்க நேற்றிலிருந்து [03.06.2011] மகாகவி பாரதியின் 13-ஆம் நினைவு நாளான செப்டம்பர் 11, 1934 அன்றிலிருந்து தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தினமணி நாளிதழ் தனது 8-வது பதிப்பினை வெளியிடுகிறது.

ஆசிரியர் திரு வைத்தியலிங்கம் ”இனி தில்லியிலிருந்தும்…” என்ற தனது தலையங்கத்தில் தினமணி நாளிதழின் தில்லி பதிப்பு எதற்கு என்பதற்கு நான்கு காரணங்களை எழுதி இருக்கிறார். அதில் முதலாவது காரணமாய் கூறியிருப்பது தில்லி வாழ் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்மொழியாம் தமிழில் பேசுவதையே விட்டுவிட்ட தமிழ் குழந்தைகளுக்குத் தாய்தமிழை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு செல்வது என்பது தான்.

நேற்று மாலை தில்லியில் “Constitution Club” வளாகத்தில் மாலை 06.00 மணிக்கு, தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் தலைமையில் நடந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் எஸ்.ஒய். குரேஷி அவர்கள் வெளியிட, தில்லியின் மூத்த தமிழர் திரு எஸ். பட்டாபிராமன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

வெளியீட்டு விழாவில் நமது தமிழ் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையாவும் கலந்து சிறப்பித்தார். அவரது சிறப்பு பட்டிமன்றம் இன்று நடைபெறும்.

தில்லியில் வெளிவரும் தினமணி 32 பக்க சிறப்பு மலரும் வெளியிட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன், என்னுடைய வலைப்பூவில் தில்லி பற்றி நான் எழுதி இருந்த சில பகிர்வுகளையும் இந்த சிறப்பு மலரில் பதிவேற்றலாமா என்று கேட்டு இருந்தனர். தவிர தில்லியில் இருந்து வலைப்பூக்களில் எழுதும் மற்ற தமிழ் நண்பர்களைப் பற்றிய ஒரு அறிமுகமும் கேட்டு இருந்தனர்.

இந்த சிறப்பு மலரில் என்னுடைய வலைப்பூவில் இருந்து தேசிய ரயில் அருங்காட்சியகம், ஃபட்-ஃபட்டி போன்றவற்றையும் உபயோகித்து இருக்கிறார்கள். இது தவிர தில்லி தமிழ் வலைப்பூ நண்பர்கள் பற்றிய அறிமுகமும் வெளியிட்டு இருக்கிறார்கள். எனது சுய அறிமுகம் தேவையில்லை என நினைத்தார்களோ என்னமோ தெரியவில்லை, அந்த அறிமுகங்களிலிருந்து என்னுடைய பெயரையும், வலைப்பூ முகவரியையும் குறிக்காமல் விட்டுவிட்டார்கள். மேலும் நண்பர் சந்திரமோகன் அவர்களின் வலைப்பூ பற்றிய குறிப்பினையும் வெளியிடவில்லை.

இணையத்தில் இந்த சிறப்பு மலரை பார்க்க முடியாது என்பதால், நான் எழுதி அனுப்பிய அறிமுகக் குறிப்புகளை தனிப் பதிவாய் வெளியிடுகிறேன்.

சிறப்பு மலரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அவர்களின் “வைகையிலிருந்து யமுனைக்கு” என்ற கட்டுரையும், பதிவர் ஜிஜி அவர்களின் வலைப்பூவில் இருந்து ”மெட்ரோ ரயில்” பற்றிய பகிர்வும், பதிவர் விக்னேஷ்வரி அவர்களின் வலைப்பூவில் இருந்து ”புதிய விமான முனையம்” பற்றிய பகிர்வும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இன்று நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்கும் செல்லலாம் என இருக்கிறேன். சென்றால் அதைப் பற்றியும் பகிர்கிறேன்.

மீண்டும் சந்திக்கும்வரை…..

அன்புடன்

வெங்கட்.