வலைச்சரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைச்சரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2019

கதம்பம் – சீனா ஐயா - உயிரின் மதிப்பு - பாவ் பாஜி –– இலை வடாம் - ஜீயர்புரம்

சீனா ஐயா – 16 மார்ச் 2019



வலைச்சரம் என்ற தளத்தில் பல பதிவர்களை ஆசிரியராக்கி சிறப்பித்தவர். என்னையும் மூன்று முறை ஆசிரியராக அமர்த்தியவர். வை.கோபாலகிருஷ்ணன் சார் ஒருமுறை ஐயாவைவும், அவரது துணைவியையும் எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்.

வியாழன், 20 நவம்பர், 2014

[G]கிரிராஜ் – சாலைக் காட்சிகள்




வலைச்சரத்தில் இன்று “[G]கோவர்த்[DH]தன் பரிக்ரமாஎனும் தலைப்பில் எழுதும்போது, அப்பாதையில் எடுத்த சில படங்களை இங்கே பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.  கடந்த மார்ச் மாதத்தில் கோவர்த்தன் சென்ற போது எடுத்த படங்கள் இவை. உங்கள் ரசனைக்காக!


 வண்டியை இழுத்துச் செல்லும் மிருகம் எது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!


இப்படியும் பயணிக்கலாம்!


கிரிராஜ் கோவில் முகப்பு


ஹோலி சமயம் என்பதால் சாலையில் நடனமாடும் சிறுவர்கள்


பரிக்ரமா செய்யும் பக்தர்கள்


இப்பெண்மணியின் கடையில் ஃபேன் விற்கிறார்கள் - ஃபேன் என்பது ஒரு தின்பண்டம்! - அடுப்புக்குப் பக்கத்தில் இருப்பது தான் ஃபேன்


தானத்திற்குச் சில்லறை விற்பனை!


வண்டியில் செல்வோரிடம் காசு கேட்கும் சிறுவன்!


அடுக்கி வைத்திருந்த தலைப்பாகை!


 ஊர்த் தலைக்கட்டு இவர் தானோ!

என்ன நண்பர்களே சாலைக் காட்சிகளை ரசித்தீர்களா?
 
மீண்டும் நாளை சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று: [G]கோவர்த்[DH]தன் பரிக்ரமா

புதன், 19 நவம்பர், 2014

கதையல்ல நிஜம்




தானம்



வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில இருக்கைகளையும் போட்டு இருந்தனர்.  ஊரில் உள்ள பல பேர் வருவதும் போவதுமாக இருந்தனர்.  தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வந்தவர்க்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு. 

சிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்.  வாங்கிக்கொண்டு சென்ற அனைவரும் அவரை வாயார வாழ்த்திக்கொண்டு இருந்தார்.  ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்னது மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது. 

அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள்.  ஒரு மாதமாகவே படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம்.  கடந்த இரு நாட்களாக பேச்சு இல்லை, உடம்பில் அசைவும் இல்லை.  உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.  மனது மட்டும் முழித்துக்கொண்டு இருக்கிறது. 

பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது.  எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ தெரியல?  வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல.

இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு.  காரியமெல்லாம் தடபுடலா செய்யணும். கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும்.  என்ன பண்றதுன்னு தெரியல.  ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்! என்று சொல்லிக்கொண்டு இருப்பது காதில் விழுந்து தொல்லைப்படுத்தியது. 

கிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து போயிற்று.  கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய பொறுப்பில் அமர்த்தி நல்ல நிலையில் வைக்க, தான் இழந்தது எத்தனை எத்தனை. 

வேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம் செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம் செய்ய வேலையாளை அனுப்புகிறான்.  வேணு, நான் செத்த பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன? அவை என்னுடைய தியாகங்களுக்கு ஈடாகுமா என்று கடைசியாக சொல்லிவிட்டு தலைசாய்த்தாள்.

கன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர்இந்த தானங்களை விட நீ உனது தாயார் முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம் என்று சொல்ல துக்கம் பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.


டிஸ்கி:  நெய்வேலி நகரில் இருந்தபோது நேரில் கண்ட ஒரு நிகழ்வு.  கதை என்ற பெயரில் எப்போதோ எழுதி வைத்தது.  இது கதை மாதிரி இல்லாததால் வெளியிடாமல் விட்டுவிட்டேன்! 

மீண்டும் சந்திப்போம்..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

இன்று வலைச்சரத்தில்: [DH]தண்டவத் பரிக்ரமா – படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!




செவ்வாய், 18 நவம்பர், 2014

அஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்!





இரண்டு நாட்களுக்கு முன்னர் தினசரி ஒன்றில் வந்திருந்த செய்தி படித்ததும், வலைப்பதிவர் நண்பர் மதுரைத் தமிழன் நமக்குச் சொல்லாமல் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து விட்டாரே என்று தோன்றியது.  என்னதான் எனது பல பதிவுகளில் கருத்துரை எழுதாவிட்டாலும், படித்துவிடுவாரே....  நல்ல நண்பராயிற்றே.... இந்தியா வந்ததை சொல்லாமல் விட்டுவிட்டாரே என்று எண்ணத்துடன் மேலே படித்தேன்!

அது என்ன செய்தி என்று ஆர்வத்துடன் கேட்கும் நண்பர்களுக்கு செய்தி இதுதான்!



நன்றி: இணையம்

சபர்மதி தீயணைப்பு நிலையத்தில் வேலை செய்யும் 40 வயது தீயணைப்பு வீரர் இரவு 10 மணிக்கு வீடு திரும்பி தனது மனைவியிடம் உணவு கேட்க, இரண்டே இரண்டு சப்பாத்திகளை, அதுவும் சின்னதாய் இருந்த இரண்டு சப்பாத்திகளைக் கொடுத்திருக்கிறார் மனைவி. இன்னும் வேண்டும் என்று கேட்க, இவ்வளவு தான் இருக்கு! வேணும்னா நீயே செஞ்சு சாப்பிடு!என்று சொல்ல, இவரும் விடாது இன்னும் சப்பாத்தி வேண்டும் என்று கேட்டாராம்!

கோபம் கொண்டு எழுந்த மனைவி பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து கணவனின் மண்டையில் போட்டாராம் ஒரு போடு! மண்டையை உடைத்ததோடு மட்டுமிலாது ஜன்னல் கண்ணாடிகள், வீட்டில் இருந்த கடிகாரம் போன்றவற்றையும் உடைத்ததாக பார்தத பக்கத்து வீட்டினர் சொல்லி இருக்கிறார்கள். மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த செய்தி முழுவதும் படித்த பிறகுதான் இது நம்ம மதுரைத் தமிழனாக இருக்க முடியாது என்று புரிந்து கொண்டேன் – ஒரு முறை கேட்டு, மனைவி சப்பாத்தி செய்து தரவில்லை எனில், தானாகவே செய்து சாப்பிட்டு இருப்பார் – பூரிக்கட்டையில் பல முறை அடி வாங்கிய அனுபவசாலியாயிற்றே மனிதர்!  அதான் அவரது வலைப்பூவில் பலமுறை சொல்லி இருக்கிறாரே என்று தெரிந்து கொண்டேன்! முதலில் நினைத்த மாதிரி மதுரைத் தமிழன் அஹமதாபாத் வரவில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்!

இது இப்படியே இருக்கட்டும் – அந்தச் செய்தி வெளியிட்ட பிறகு கூடுதலாக சில தகவல்களும் வெளிவந்தன – தவறு அந்த மனைவி மீது மட்டுமல்ல கணவனின் தொந்தரவினால் தான் வெகுண்டு எழுந்திருக்கிறார் மனைவி என்பதும் தெரிந்திருக்கிறது.  சம்பவ தினத்தன்று வீட்டிற்கு வந்த தீயணைப்பு வீரர், படுத்துக் கொண்டிருந்த தனது மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட தற்காப்பு முயற்சியாகத் தான் அவர் கல்லைக் கொண்டு கணவரைத் தாக்கி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. 

மனைவியின் தரப்பிலும் இப்போது காவல் நிலையத்தில் அவரது கணவர் மீது  புகார் கொடுத்திருக்கிறார்களாம்! 

ஆனாலும், சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம்! அது என்ன சந்தேகம்!

சமீபத்தில் குஜராத் – அஹமதாபாத் சென்று வந்த மதுரைத் தமிழனின் பூரிக்கட்டை சம்பவங்களை தொடர்ந்து படித்து வரும் வலைப்பதிவர் ஒருவர் தான் இப்படியும் செய்யலாம் என தீயணைப்பு வீரரின் மனைவிக்குச் சொல்லிக் கொடுத்திருப்பாரோ? சந்தேகத்தினை நிவர்த்தி செய்து கொள்ள வலைப்பதிவரை வலை வீசித் தேடி வருவதாகத் தகவல் – தெரிந்தவர்கள் போட்டுக் கொடுத்துவிட வேண்டாம் என்று அந்த வலைப்பதிவர் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறாராம்!

என்ன நண்பர்களே இன்றைய பதிவினை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

டிஸ்கி: இன்றைய வலைச்சரத்தில் - [B] ப்ரஜ் பரிக்ரமா - தெரிந்து கொள்ள உங்களை அழைக்கிறேன்!