இரயில் பயணங்களில் – 5
படம்: இணையத்திலிருந்து....
ரோம் நகரில் இப்படி படுத்தபடியே உணவு உண்ணும் வழக்கம் உண்டாம்!
மீண்டும் தமிழகம் நோக்கி ஒரு பயணம் – இம்முறையும் அதே ராஜ்தானி விரைவு வண்டி – விரைவு என்பது பல சமயங்களில் இந்திய ரயில்களில் இருப்பதே இல்லை என்பது வேறு விஷயம். கடந்த வெள்ளி அன்று தில்லியிலிருந்து புறப்பட்டு ஞாயிறு காலை திருவரங்கம் வந்து சேர்ந்தேன். ஒவ்வொரு இரயில் பயணத்திலும் பல சுவையான அனுபவங்கள் கிடைக்கின்றன. இம்முறை கிடைத்த சில அனுபவங்கள் இந்தப் பதிவில் பார்க்கலாமா! மே! என்று நீங்கள் சொல்வது கேட்கிறது – அதாங்க பார்க்கலா மே! என்று சொல்வது தான்!
இம்முறை இருந்த ஆறு பேரில் ஐவர் தெலுங்கர்கள் – நான் மட்டுமே மறத்தமிழன்! கணவன் – மனைவி என இருவரும், கணவன் – மனைவி மற்றும் ஒரு வயதான பெண்மணி [அந்தப் பெண்ணின் அம்மாவாக இருக்க வேண்டும், மாமியாராக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லும்படி இருந்தது நடவடிக்கைகள்] என இரு குடும்பங்கள்.
இதில் மூவர் குடும்பத்தினை முதலில் பார்க்கலாம்! தொந்தரவு அவர்களிடத்தில் தானே ஆரம்பித்தது!
சரியாக மூன்று ஐம்பத்து ஐந்திற்கு இரயில் புறப்பட்டது. சற்று நேரத்தில் ஒரு பாட்டில் தண்ணீரும், பிறகு தேநீர், சமோசா, மற்றும் சாண்ட்விச், ஒரு இனிப்பு எனக் கொண்டு வந்து தந்தார் சிப்பந்தி. அதை எல்லாம் உண்டு முடித்து பயணச் சீட்டு பரிசோதனை முடிந்த பிறகு மாலை ஐந்து மணி. அதற்குள்ளாகவே பயணம் அவர்களுக்கு அலுக்க ஆரம்பித்து விட்டது. குடும்பத்தில் இளையவர், படுக்க வேண்டும் என உட்கார்ந்திருந்தவர்களை எழுப்ப ஆரம்பித்தார். அதற்குள்ளா இரவிற்கு இன்னமும் அதிக நேரம் இருக்கிறதே என்று யோசிக்க, முணுமுணுவென தெலுங்கில் அனைவரையும் திட்ட ஆரம்பித்தார்.
”இதுக்குத் தான் ஃப்ளைட்-ல போகலாம்னு சொன்னேன்” என்று அவரது கணவருக்கும் திட்டு கிடைத்தது! கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஆரம்பித்தது அவரது கணைகள் – ஒரு வழியாக ஆறு மணிக்கெல்லாம் படுக்கைகளை விரித்து கீழ் படுக்கையில் படுத்துக் கொள்ள வேறு வழியில்லாது எனது படுக்கையான மேல் Berth-க்கு செல்ல வேண்டியதாயிற்று. எதிர்த்த மேல் Berth-ல் கால் வைத்து சற்றே சரிந்தபடி அமர்ந்து கொண்டேன் – என் உயரத்திற்கு மேல் Berth-ல் நேராக அமர்வது ரொம்பவே கடினம்.
தொடர்ந்து இப்படியே அமர்ந்து, கொண்டு வந்திருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் வழக்கம் போல கடினமான எலும்புத் துண்டு போன்ற உருவத்துடன் Soup Sticks, வெண்ணை மற்றும் மிளகுத் தூள் கொண்டு வந்து கொடுத்தார். சில நிமிடங்களில் ஒரு சிறிய கப்பில் சுடச் சுட Soup-ம் வந்தது. கீழே இறங்கி நேராக உட்கார்ந்து அதைக் குடிக்கலாம் என்று நினைத்தால், பெண்மணி இப்போதும் அனந்தசயனத்தில்!
சரி வேறு வழியில்லை என மேலேயே அமர்ந்து கொண்டு Soup-ஐ ஒரு வழியாக குடித்து முடித்தேன். உணவு உண்ணும் போது கண்டிப்பாக கீழே இறங்கி விட வேண்டியது தான் என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தேன். ஏழரை மணிக்கு உணவு வர, கீழே வரலாம் என்று பார்த்தால் கம்பளி போர்த்தியபடி அனந்த சயனத்தில் அந்தப் பெண். அவரது கணவன் எழுந்திரு, சாப்பிடலாம் என்று சொல்ல, நீங்க வேணா சாப்பிடுங்க, எனக்கு வேண்டாம் எனச் சொல்லி தொடர்ந்து கிடைநிலையிலேயே இருந்தார்.
”மத்தவங்க எல்லாம் சாப்பிடணும் எழுந்திரு” என்று சொல்ல, கண்களில் அப்படி ஒரு கோபக் கனல் – சிவபெருமான் மூன்றாவது கண்களைத் திறந்து எரித்து விடுவது போல பார்த்தார்.
”எழுந்திருக்க முடியாது, மத்தவங்களைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?” என்று ஒரு மிரட்டல். ஒரு வேளை இது நடந்தது வீடாக இருந்திருந்தால் பூரிக்கட்டை பறந்திருக்கும் என்று தோன்றியது. எங்கே பஸ்மமாகி விடுவோமோ என்று அவரும் பம்மினார். கண்களாலேயே என்னை நோக்கி “வேற வழியில்லை! நீங்க அங்கேயே சாப்பிட வேண்டியது தான்!” என்று சொல்வது போல இருந்தது.
”என்னடா இந்த வெங்கட்டுக்கு வந்த சோதனை” என்ற நினைவுடன், சாப்பாடு தட்டினைப் பார்த்தேன் – வழக்கம்போல பனீர் சாம்பார் [அதாங்க சப்ஜி!], தண்ணீர் அதிகமுள்ள ஒரு தால், ஓரங்களில் வேகாத சப்பாத்தி, ஊசி போன்ற கூர்மையான வேகாத பாஸ்மதி சாதம், தயிர், ஊறுகாய் பாக்கெட்டில் – சாப்பிட்ட படியே அந்த ஊறுகாய் பாக்கெட் பிரிப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்! எத்தனை காசு வாங்கினாலும் இப்படித் தான் இருக்கிறது இவர்கள் தரும் உணவு – அதைச் சமைப்பவர்களுக்கு ஒரு மாதம் முழுவதும் இது மட்டுமே சாப்பாடு, வேறு ஒன்றுமே தரமாட்டோம் என்ற தண்டனை தரவேண்டும் – இல்லையெனில் அன்னியன் படத்தில் வருவது போல கும்பிபாகம், கிருமி போஜனம் போன்ற ஏதாவது ஒரு தண்டனை தரவேண்டும்!
இப்படி இருந்த உணவினை சரிந்த நிலையிலேயே ஒரு மாதிரி சாப்பிட வேண்டியதாயிற்று. இப்படி படுத்துக் கொண்டு சாப்பிடுவது ஏதோ சர்க்கஸ் செய்வது போல இருந்தது எனக்கு. மேல் Berth-ல் இருந்து கொண்டு இப்படி சாப்பிடும்போது Watery உணவுகளை கீழே இருப்பவர்கள் மீது கொட்டாமல் சாப்பிட வேண்டுமே என்ற பயம் எனக்கு! ஆனாலும் இப்படி படுத்தும் அந்த பெண்மணியின் மேல் கொட்டியிருந்தாலும் நல்லது தான் என்று தோன்றுகிறது. சாப்பிட்டு முடித்த பிறகு தட்டினை சிப்பந்தியிடம் கொடுத்து விட்டு நாளை காலை எப்படியும் கீழே அமர்ந்து கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்ற முடிவோடு உறங்கினேன்.
மறுநாள் காலை கீழே வந்து அமர்ந்த பிறகு மேலே செல்லவே இல்லை. கொஞ்சம் நகர்ந்தாலும் உடனே படுக்கைகளை போட்டு படுத்துக் கொண்டு விடுகிறார்.
மதிய உணவு வரும்போதும் இப்படி படுத்து இருக்க, அவரைப் பார்த்து கண்டுகொள்ளாது இருந்தார். நேற்று நாகரீகம் கருதி பேசாது இருந்தேன். இன்று மீண்டும் படுத்துக் கொண்டே சாப்பிடும் எண்ணம் எனக்கில்லை என்பதால் நானே அவரிடம் சொல்லி விட்டேன் – “எழுந்து உட்காரும்மே! நான் சாப்பிடணும்!” எல்லாம் சாப்பிட்ட பிறகு படுத்துக்கிட்டே வந்துக்கோ!” என்று சொல்ல முணுமுணுத்தபடியே இருந்தார். அவரது கணவர் என்னிடம் ஒன்றும் சொல்லாததால் கணவருக்கும் திட்டு கிடைத்தது! நிச்சயம் வீடு சென்றதும் அவருக்கு மண்டகப்படி உண்டு!
இப்படி இரயிலில் பயணம் செய்யும் சிலருக்கு ஒரு எண்ணம் – Berth வசதியுடன் முன்பதிவு செய்துவிட்டால், படுத்துக் கொண்டே தான் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள் – அதான் காசு கொடுத்திருகோம்ல! படுத்துக்கிட்டே தான் வருவோம், அடுத்தவங்க பத்தி எனக்கு என்ன கவலை என்ற எண்ணம் – என்ன மனிதர்களோ – சென்னை வரை பயணச் சீட்டு வாங்கி இருந்தாலும் ஏனோ விஜயவாடாவிலேயே இறங்கினார்கள்.
விட்டது ஒரு தொல்லை என்ற எண்ணத்துடன் மீதிப் பயணத்தினைத் தொடர்ந்தேன்.
ஒரு தொல்லை இவர்கள் தந்தது – மற்ற தொல்லை – அது பற்றி பிரிதொரு பதிவில்! :)
என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து….