வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஒரு கையெழுத்தின் மதிப்பு



"இப்படியா ஒருத்தன் ஏமாத்துவான்? இந்த மனுஷன் மூர்த்தி நல்ல ஆள்னு நம்பித் தானே தனி நபர் கடன் வாங்க உத்திரவாத கையெழுத்து போட்டேன், இப்ப வங்கியிலிருந்து பணத்தை கட்டச் சொல்லி எனக்கு ஓலை அனுப்பிட்டானே!” தனக்குள் பொருமிக் கொண்டிருந்தான் ரகு.

அவன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் பிளாட்டில் இருப்பவர்தான் மூர்த்தி. பழக மிகவும் நல்ல மனிதராக, பல விஷயங்கள் தெரியாத சாதுவாக இருந்தார். அவசரமாக பணம் தேவை என்று கையை பிசைந்து கொண்டு சோகமாக அலைந்ததை பார்த்ததால் வங்கியிலிருந்து கடன் வாங்க ரகுதான் உத்திரவாத கையெழுத்து போட்டிருந்தான்.

அவரும் மூன்று வருடங்கள் வரை ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஒழுங்காக பணத்தை வங்கியில் கட்டிக்கொண்டுதான் இருந்தார். அவனும் அவ்வப்போது விசாரித்து வந்தான். எல்லாம் சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது.

திடீரென்று வங்கியிலிருந்து இந்தக் கடிதம்! பதறிப் போனான். ஒன்பது மாதங்களாக மூர்த்தி மாதத்தவணை கட்டவில்லையென்றும் உத்திரவாதம் அளித்த ரகுவே வட்டியுடன் சேர்த்து கடனை பதினைந்து தினங்களுக்குள் கட்டத்தவறினால் மேற்க்கொண்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.

"போன மாதம் பேசிக் கொண்டிருந்தபோது கூட கடன் தவணைகளை ஒழுங்காக கட்டிக்கொண்டு இருப்பதாக கூறினாரே?". அலுவலகம் முடிந்து வந்ததும் சுடச்சுட அவரிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் வந்தது. கூடவே இனிமேல் யாருக்கும் உத்திரவாத கையெழுத்து போடவே கூடாது என்ற எண்ணமும் வலுத்தது.

நேற்று அவராகவே கூப்பிட்டு புதிதாக வாங்கிய டி.வி.டி ப்ளேயரைக் காட்டி அந்த சந்தோஷத்தில் அவனுக்கு பால்கோவா கொடுத்து சாப்பிடச் சொன்னது ஞாபகம் வந்தபோது இன்னும் அதிகமாக கோபம் வந்தது. "இதுக்கெல்லாம் காசு இருக்கு, ஆனா வாங்கின கடன திருப்பிக் கட்ட மட்டும் காசு இல்லையாமா இவருக்கு? வரட்டும், இன்னிக்கு நாக்க பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்கணும்" என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டான்.

மாலை மூர்த்தி வந்ததும் அவரிடம் ”என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கடனை திருப்பிக் கட்டலையா? இப்ப பாருங்க பேங்கிலிருந்து எனக்கு கடிதம் வந்திருக்கு!” ரகு கோபமாக கேட்கவும்...

“அவ்வளவு தானே, அதுக்கு ஏன் சார் இப்படிப் பதட்டப்படறீங்க? கொஞ்ச நாளா பண முடை. என்னால கட்ட முடியலே. அதான் என்னால கட்ட முடியாது போனா நீங்க கட்டிடறதா எனக்காக உத்திரவாத கையெழுத்து போட்டிருக்கும்போது நீங்களே அந்தக் கடனை திருப்பிக் கட்டிட மாட்டீங்களான்னுதான் கட்டாம விட்டுட்டேன்! அத்தனை நம்பிக்கை வெச்சு எனக்காக உத்தரவாதக் கையெழுத்து போட்டிருக்கீங்க. இதைக்கூட செய்ய மாட்டீங்களா?''

சர்வ சாதாரணமாக மூர்த்தி சொல்லவும் ரகு வாயடைத்துப் போய் நின்றிருந்தான்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் [தொடர் பதிவு]

நண்பர் மோகன்குமார் இந்த மாத ஆரம்பத்தில் ”வக்கீல் படிப்பும், வேலையும்” என்ற ஒரு பதிவில் தான் படித்த வக்கீல் படிப்பு பற்றியும் அதை படித்தவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றியும் எழுதி இருந்தார். பதிவின் முடிவில் தோழர்கள் அதிபிரதாபன், ஜெயமார்த்தாண்டன் மற்றும் என்னையும் அவரவர் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி எழுத அழைத்திருந்தார்.

மத்திய அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு என்ன கல்வி தகுதி தேவை, எந்த விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றி கீழே கொடுத்துள்ளேன். முதலில் “இந்திய அரசு பணி [IAS] என்று சொல்லப்படும் சிவில் சர்வீஸ் பற்றிப் பார்ப்போம்.

Union Public Service Commission [UPSC] என்ற அரசு தேர்வாணையத்தினால் நடத்தப்படும் தேர்வினை எழுதி, வெற்றி பெற்று பணியில் சேருகிறவர்களின் பதவியே IAS, IPS போன்றவை. இந்த தேர்வினை எழுத முக்கியமான தேவைகள் - கல்லூரி பட்டப் படிப்பு, வயது 21 பூர்த்தியாகி இருக்க வேண்டும். மூன்று நிலைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகள் – Preliminary Exam, Main Exam மற்றும் நேர்முகத் தேர்வு. ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் 1 – 15 தேதிகளில் எல்லா நாளிதழ்களிலும் வருகிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூபாய் இருபது மட்டுமே. பொதுவாக மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் General Studies மற்றும் ஒரு விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்கள் – Objective Type – மொத்த மதிப்பெண்கள் – 450. இந்தத் தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வரும்.

இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அடுத்தது Main Exam – இந்த தேர்வு அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடத்தப்படும். இந்தத் தேர்வில் ஒன்பது தாள்கள் – விரிவான கட்டுரை, ஜெனரல் ஸ்டடீஸ் I, II, நான்கு ஆப்ஷனல் பேப்பர்கள், தாய்மொழி மற்றும் ஆங்கிலம். இந்தத் தேர்விலும் வெற்றி பெற்றால் அடுத்த நிலை தில்லியில் நேர்காணல் – நேர்காணலுக்கான மதிப்பெண்கள் – 300. இந்த மூன்றாவது நிலையிலும் வெற்றி பெற்றால் நீங்கள் எடுத்த மதிப்பெண்களைப் பொருத்து உங்களுக்கு IAS, IPS போன்ற மணிமகுடம் சூட்டப்படும். சிலருக்கு Allied Service-ஆக பல அரசு துறைகளில் பதவி கொடுக்கப்படும். இந்த தேர்வுகளில் வெற்றி பெற உங்களுக்கு முக்கியமான ஒரு தேவை – லட்சியம், விடாமுயற்சி மற்றும் முறையான பயிற்சி.

UPSC-ஆல் இன்னும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு கொடுக்கும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவை பற்றிய விவரங்கள் இந்த சுட்டியில் கிடைக்கும்.

Staff Selection Commission [SSC] என்று அழைக்கப்படும் தேர்வு ஆணையமும் மத்திய அரசில் வேலை பெறுவதற்கான பலவிதமான தேர்வுகளை நடத்துகிறது. அவற்றில் முக்கியமான இரு தேர்வுகள் – Combined Matric Level Examination மற்றும் Combined Graduate Level Examination ஆகியவை.

Combined Matric Level Examination – இந்த தேர்வினை எழுத பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. கூடவே தட்டச்சு பயிற்சியும் அவசியம். இந்த தேர்வானது மூன்று பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. அவை முறையே – Lower Division Clerk, Stenographer Grade D மற்றும் Stenographer Grade C ஆகியவை. Stenographer பதவிக்கு சுருக்கெழுத்து பயிற்சியும் அவசியம். Objective Type தேர்வு இது. இந்த தேர்வினில் வெற்றி பெற்றவர்களுக்கு Skill Test உண்டு. இந்த இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்றபின் இந்திய அரசாங்கத்தில் உள்ள எந்த அமைச்சகத்திலும் அதைச் சார்ந்த துறைகளிலும் பணியில் அமர்த்தப் படுவார்கள். LDC பதவியில் சேரும் ஒரு பணியாளருக்கு முதல் மாதமே ரூபாய் 12900/- கிடைக்கும் [பிடித்தங்கள் இல்லாமல்].

Combined Graduate Level Examination: இந்த தேர்வினை எழுத குறைந்த பட்சம் இளங்கலை பட்டதாரியாக இருக்க வேண்டும். இந்த தேர்வும் இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது – Preliminary and Main Exam. இந்த தேர்வு ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பெரும் மதிப்பெண்களைப் பொருத்து – Assistants in Central Secretariat Service, Armed Forces Head Quarters, Ministry of External Affairs, Inspectors in Central Excise/Preventive Officers/Income Tax Assistants, Inspector in Department of Posts போன்ற பல அலுவலகங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள். UDC பதவியில் சேரும் ஒரு பணியாளருக்கு முதல் மாதமே ரூபாய் 17600/- கிடைக்கும் [பிடித்தங்கள் இல்லாமல்]. அது போல இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று Assistant-ஆக பதவி ஏற்கும் ஒரு நபருக்கு பிடித்தங்கள் இல்லாமல் முதல் மாத சம்பளமாக ரூபாய் 23250/- கிடைக்கும். Staff Selection Commission நடத்தும் பலவிதமான தேர்வுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

பொதுவாக மத்திய அரசில் வேலை வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கிறது. MNCs, மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் Pay Package-ஐக் காட்டிலும் மிகவும் குறைவாகக் கிடைக்கிறது. இது போன்ற பலவிதமான குறைபாடுகள் இருந்தாலும், சாதாரண இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இப்படிப்பட்ட வேலை வாய்ப்புகள் இருப்பது நல்ல ஒரு விஷயம்.

நண்பர் மோகன் இதனை ஒரு தொடர் பதிவாக தொடங்கியிருந்தார். அதற்கான சில விதிகளாக சிலவற்றைக் குறிப்பிட்டு இருந்தார். அவை:

1. உங்கள் படிப்பு பற்றியும் , அதற்கு எந்த கல்லூரிகள் சிறந்தவை (சென்னை மற்றும் இந்தியாவில்) என்றும் அவசியம் குறிப்பிடவும்.
2.இந்த படிப்பிற்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து விவரமாக எழுதவும்.
3. படிப்பு மற்றும் துறையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தொட்டு செல்லலாம்.
4. நீங்கள் 3 - 5 பேரை தொடர அழையுங்கள். தொடர்பவர்கள் வெவ்வேறு துறை சார்ந்தவர்களாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

இந்த தொடர் பதிவை தொடர நான் அழைப்போர்:

சந்திரமோகன்
விக்னேஸ்வரி
இராகவன் நைஜீரியா

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 3:

கடந்த இரு பதிவுகளில் [பகுதி 1 & பகுதி 2] தில்லியில் கிடைக்கும் சில உணவு வகைகள் பற்றி எழுதி இருந்தேன். இந்த வாரம் தில்லியில் குழந்தைகள் பார்க்க வேண்டிய இரு இடங்களைப் பற்றி எழுதி உள்ளேன்.



Shankar’s International Doll Museum: திரு கே. ஷங்கர் பிள்ளை [1902-1989] என்ற புகழ்பெற்ற அரசியல் கருத்துச்சித்திரம் வரைபவரால் உருவாக்கப்பட்ட இந்த அருட்பொருட்காட்சியகத்தில் “Costume Dolls” என்று சொல்லப்படும் அழகான பொம்மைகள் உள்ளன. உலகின் பல மூலைகளிலும் இருந்து ஷங்கர் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட பொம்மைகளை தில்லியில் உள்ள Children’s Book Trust-ன் கட்டிடத்தில் ஒரு மாடியில் 5200 சதுர அடி அரங்கில், 160 கண்ணாடி அறைகளில் அடுக்கி வைத்துள்ளார்கள். ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா, அரேபியா, ஆப்பிரிக்கா, சைனா, ஜப்பான், க்யூபா, ஸ்ரீலங்கா, ஹங்கேரி போன்ற பல நாடுகளில் இருந்து பெறப்பட்ட பொம்மைகள் இங்கு அழகாக வைக்கப்பட்டுள்ளன. இங்கே இருக்கும் பொம்மைகளில் முக்கியமான சில - ஜப்பானின் ”காபுகி மற்றும் சாமுராய்” பொம்மைகள், ஸ்பெயின் நாட்டின் ”ஃப்லேமென்கோ டான்சர்ஸ்” பொம்மைகள், இந்தியாவின் ”கதகளி” நாட்டிய பொம்மைகள் மற்றும் ”தஞ்சாவூர் தலையாட்டி” பொம்மைகள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் இருக்கும் கண்னாடிக் கூண்டின் உள்ளே மேல்புறம் தெரியாத வகையில் ஒரு மின்சார விசிறி இருப்பதால் இந்த பொம்மைகள் எப்போதும் தலையாட்டிக்கொண்டு இருக்கும் அழகே அழகு. திங்கள் தவிர வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் காலை 10.00 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை இந்த அரும்பொருட்காட்சியகம் திறந்திருக்கும். ஆனால் ஒரே ஒரு குறை – இங்கே புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. நுழைவு கட்டணம்: சிறுவர்களுக்கு ஐந்து ரூபாய், பெரியவர்களுக்கு 15 ரூபாய்.

National Bal Bhavan: இந்த இனிய இடத்தில் 16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எல்லா கலைகளிலும் அவரவர் திறமை, வயது ஆகியவற்றுக்கு தகுந்தவாறு பயிற்சிகள் தரப்படுகின்றன. குழந்தைகளின் கலைத்திறனை வளர்த்துக்கொள்ள நல்ல ஒரு வாய்ப்பினை மத்திய அரசாங்கத்தின் Human Resources Development அமைச்சகத்தின் கீழே இயங்கும் இந்த மையம் தருகிறது. இந்த இடம் மேலே குறிப்பிட்ட Doll Museum அருகிலேயே கோட்லா ரோடில் உள்ளது. ஞாயிறு, திங்கள் தவிர வாரத்தின் மற்ற ஐந்து நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 வரை திறந்திருக்கும். இங்கே சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், முயல்கள், புறா, வாத்து போன்ற பறவைகள், மீன் காட்சியகம், மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகள், அருங்காட்சியகம் போன்றவையும் உள்ளன. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூபாய் ஐந்து மட்டுமே.

இந்த இரண்டு இடங்களுமே குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களாலும் ரசிக்கப்படும் விதத்தில் அமைந்துள்ளன. என்ன அடுத்த தில்லி பயணத்தின் போது உங்களின் அருமை கண்மணிகளை இங்கெல்லாம் அழைத்துச் செல்வீர்கள் தானே?

இன்னும் வரும்…

திங்கள், 15 பிப்ரவரி, 2010

தலை நகரிலிருந்து... பகுதி 2

சென்ற வாரம் பதிவு செய்த "தலை நகரிலிருந்து..." நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. தமிலிஷ்-இல் ஓட்டு அளித்த நல்ல உள்ளங்களுக்கும் தங்களது மேலான கருத்துகளைப் பின்னூட்டமாக பதிவு செய்தவர்களுக்கும் எனது நன்றி.

என்னடா இது, நிறைய நல்ல விஷயங்கள், சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் எல்லாம்தில்லியில் இருக்கும்போது என்னவோ காது நோண்டுறவன், பல்லு புடுங்குறவன்னு எழுதி இருக்கியேன்னு நீங்க கேட்கறது புரியுது. அதையும் அடுத்தடுத்து எழுதுவோமுல்ல, அதுக்கு முன்னாடி இன்னும் சில சுவாரசியமான விஷயங்களை இந்த வாரம் பார்க்கலாமா?

பீகாரி ரிக்ஷாவாலா: தில்லியின் தெற்கு பகுதியைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் ஒரு வாகனம் தான் ரிக்ஷா. அதுவும் பழைய தில்லியில் ரிக்ஷா இல்லாமல் நீங்கள் எங்கும் செல்ல முடியாது. எல்லா சந்துகளிலும் புகுந்து விளையாட ஒரு ஆதர்ச வாகனம் அதுதான். பெரும்பாலும் இதை ஓட்டுபவர்கள் பீகார் மாநிலத்தவர்கள், அவர்களுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்திலிருந்து வருபவர்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது காவலர்களிடம் அடிவாங்கும் இந்த பாவப்பட்ட மனிதர்கள், ரிக்ஷாவை நாள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறார்கள். பெரும்பாலான ரிக்ஷா காவல்துறையில் பணிபுரியும் நண்பர்களுடையது[!] என்பது மேலும் வருத்தமான விஷயம். ஆனாலும் இவர்களுக்கு கவலையே இல்லையோ என்னமோ, தில்லி இரயில் நிலையம் வந்து இறங்கியதும் அவர்களில் பலர் வாங்கும் முதல் பொருள் ஒரு ரேடியோ. இப்போது அதிலிருந்து கொஞ்சம் முன்னேறி எப்.எம்.வசதியுடன் கூடிய அலைபேசியை வாங்குகிறார்கள்.



சோலே-குல்ச்சே வாலா: தள்ளு வண்டியில் ஒரு அடுப்பு, சிறிய காஸ் சிலிண்டர், மேலும் சிறிய கழுத்துள்ள ஒரு பெரிய பாத்திரம் [புகைப்படம் பார்க்கவும்] வைத்துக்கொண்டு வெங்காயம், தக்காளி, சோலே ஆகியவற்றை போட்டு ஒரு சைடு டிஷ், கெட்டியான ரொட்டி போன்ற ஒரு பதார்த்தம் தான் குல்ச்சே. சரியான தயாரிப்பு முறையை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தீங்கன்னா அவங்களிடமே கேட்டு அதைப் பற்றி ஒரு பதிவே போட்டுடறேன். ஆனா அவ்வளவு பெரிய பாத்திரத்தை அடுப்பில் நேராக வைக்கிறத விட்டுட்டு ஏன் சரிச்சு வைக்கிறாங்க என்பது இன்று வரையிலும் எனக்குள் ஒரு புரியாத புதிராவே இருந்து கொண்டிருக்கு. இரண்டு குல்ச்சே தொட்டுக்கொள்ள ஒரு தொன்னை சோலே, சலாட் மற்றும் சாப்பிடும் போது கடித்துக்கொள்ள ஒரு பச்சை மிளகாய் - இதுக்கு ரொம்ப அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை ஜென்டில்மேன் - இப்போதும் பத்து ரூபாய்தான். ஸ்பைசி உணவுக்கு அவர் உத்தரவாதம் தருவார் - உங்க உடம்புக்கு ஒத்துக்கும் என்றால் ஒரு கட்டு கட்ட வேண்டியதுதானே?



அப்பளம் விற்பவர்: தமிழ் நாட்டில் கண்காட்சிகளுக்கு செல்பவர்கள் அங்கே கண்டிப்பாக ஒரு கடையை பார்த்திருக்கலாம். அது பெரிய சைசில் கிடைக்கும் பாம்பே அப்பளம். அதைத்தவிர பொரித்த அப்பளம் விற்கும் கடைகளை எங்கேயும் எனக்கு தெரிந்து கண்டதில்லை. ஆனால் தில்லியில் பொரித்த அப்பளம் விற்பதையே தொழிலாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் ஒரு பெரிய மூங்கில் கூடை நிறைய அப்பளம் பொரித்துக் கொண்டுவரும் இவர்களிடம் வருவோர் போவோர் எல்லாம் வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு அப்பளம் மூன்று ரூபாய். காலையில் எடுத்து வரும் மொத்த அப்பளமும் மாலைக்குள் காலியாகிவிடும். ஒரு முக்கியமான விஷயம் - எந்த சாப்பிடும் பொருளாக இருந்தாலும் சரி, அதில் கொஞ்சம் மசாலா தூவி கொடுத்தால் போதும், அதை அமிர்தம் போல சாப்பிடுகிறார்கள் இங்கே. சாப்பிடும் பொருள் முக்கியமா இல்லை மசாலா முக்கியமா - மண்டைக்குழப்பம் தீர ஒரு முறை வாங்கி சாப்பிடப் போறேன். உங்களுக்கும் வேணுமா? ம்... அப்போ புறப்பட்டு தில்லிக்கு வாங்க.

... இன்னும் வரும்.

புதன், 10 பிப்ரவரி, 2010

தலை நகரிலிருந்து...

ஒவ்வொரு நகருக்கும் சில தனித்தன்மைகள் இருக்கும். அங்கே இருக்கும் கட்டிடமோ ஓடும் நதியோ, அல்லது அந்த நகரில் நடந்த புராதன நிகழ்ச்சியோ மிகவும் பிரசித்த பெற்றதாக இருக்கும். தில்லி நகருக்கும் அப்படி சில தனித்தன்மைகள் இருக்கின்றன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த செங்கோட்டை, குதுப்மினார் போன்ற இடங்கள் அவைகளில் சில.

தில்லி நகருக்கென்றே இருக்கும் சிலவற்றைப் பற்றி இங்கே ஒரு ஒரு தொடராக எழுத நினைத்துள்ளேன். முதலில்



காது அழுக்கு எடுப்பவர்கள்: தமிழகத்தில் நீங்கள் இதை பார்த்திருக்கமாட்டீர்கள். பழைய தில்லி பகுதிகளில் கக்கத்தில் ஒரு தோல் பையும், தலையில் ஒரு சிகப்பு துணியும் கட்டி, கையில் ஊசி, பஞ்சுடன் சிலர் சுற்றுவார்கள். அவர்களது தொழிலே மனிதர்களின் காது அழுக்கு எடுப்பதுதான். ஊசி முனையில் பஞ்ஜை சுற்றி காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வார்கள். காதை சுத்தம் செய்ய காட்டிக் கொண்டிருக்கும் ஆசாமியோ பயம் கலந்த சுகத்தில் உட்கார்ந்திருப்பார். உங்களுக்கு காது அழுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா? அவர்களிடம் தாரளமாக போங்க. ஆனா அதுக்கப்புறம் காது பஞ்சர் ஆகி செவிடானா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சரியா?



BKKKK சலூன்: தமிழகத்தில் சில கிராமங்களில் நாவிதர்கள் வீட்டுக்கு வந்து முடி வெட்டிவிட்டு போவதை பார்த்திருக்கிறோம். தில்லி போன்ற பெரு நகரங்களில் Modern Saloons நிறைய வந்துவிட்டன. அங்கே விதம் விதமாக கட்டிங், ஷேவிங் செய்யும் வசதிகள் உள்ளன. உங்கள் தலையை மட்டும் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தா போதும், மற்றதை அவர் பார்த்துக்கொள்வார். அவர்களோடு போயிற்றா? இங்கே ரோடு ஓரங்களில் கற்களை அடுக்கி வைத்துக் கொண்டு பக்கத்தில் கத்திரி, கண்ணாடி, சீப்புடன் சில நாவிதர்கள் உட்கார்ந்திருப்பார்கள். இவர்களிடம் முடி வெட்டிக்கொள்ள நீங்கள் சென்றால், உங்களை அந்த கல்லில் உட்கார வைத்து, கையில் கண்ணாடியை கொடுத்து அவர் பாட்டுக்கு தன் வேலையை ஆரம்பித்து விடுவார். ரொம்ப சீப் தான். கட்டிங் - 15 ரூபாய், ஷேவிங் - 5 ரூபாய். BKKKK சலூன் = Buttocks கீழே கல் கையில கண்ணாடி சலூன். என்ன சார் உங்க அடுத்த கட்டிங் அவரிடம்தானா?

பல்/கண் மருத்துவர்கள்: பழைய தில்லியின் சதர் பஜார் பகுதி. நிறைய நடைபாதை கடைகளும், பெரிய பெரிய பலசரக்குக் கடைகளும் நிறைந்த ஒரு வியாபார ஸ்தலம். போலி பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இங்கே நடைபாதையில் கடை விரித்துள்ளார்கள். அப்படியாகப்பட்ட ஒரு சர்தார் பல் மருத்துவரிடம் தன் பல்லைப் பிடுங்க சென்றார் தெரு சுத்தம் செய்யும் ஒரு பெண் தொழிலாளி. பிடுங்கும்போது, அந்த பெண்மணிக்கு வலித்துவிட, அவள் அந்த சர்தாரை ஓங்கி ஒரு அறை விட்டாள். சர்தாருக்கு வந்ததே கோபம். அவரும் அந்த பெண்மணியை ஒரு அறை விட்டார். பிறகு இருவரும் அழுத்திப் பிடித்து, கட்டிப்புரண்டு ஒரு பெரிய யுத்தமே நடத்தினார்கள். கடைசியில் சர்தார்தான் வெற்றி பெற்றார். கையில் பிடுங்கிய பல்லோடு அவர் ஒரு "பாங்க்ரா" நடனமே ஆடி முடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இது எப்படி இருக்கு?

....இன்னும் வரும்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இவரும் அவரும்



"என்னது, நம்ம கட்சி கொடிய ஒருத்தன் வெட்டி சாய்ச்சுட்டானா?, அவன சும்மாவா விட்டீங்க?" கோபமாக கேட்டார் ம.மு.க.மு கட்சியின் நகரத்தலைவர் பூபாளன்.

"இல்ல தலீவரே, ராத்திரி தூக்கம் வரல, சரி கட்சி போஸ்டர் ஊர் பூரா ஒட்டி இருக்கான்னு பார்க்க வெளிய வந்தா இவன் நம்ம கொடிய... அதான் ரெண்டு தட்டு தட்டி அவன உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன்," என்றான் எடுபிடி ஏகாம்பரம்.

விட்டத்தை வெறித்தபடி உட்கார்ந்திருந்தவனை பார்த்தார் பூபாளன். சவரம் செய்யப்படாத முகம், தாடிக்குள் புதைந்திருந்த உதடு கிழிந்து ரத்தம் காய்ந்து இருந்தது. காதின் மேல் பாதியில் அணைத்த பீடித்துண்டு. முகத்தில் ஒரு வித சலனமும் இல்லை.

"யாரடா நீ, எங்க கட்சி கொடியை சாய்க்கச் சொல்லி உன்னை யார் அனுப்பினா சொல்லு, எதிர்க்கட்சி சுந்தரேசனா?" என்றார் பூபாளன். அவனிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லை. "தலைவர் கேட்கிறார் இல்ல சொல்லுடா" திரும்பவும் அடிக்க போனான் ஏகாம்பரம். அவனை தடுத்த பூபாளன், "விடுடா, நாளைக்கி காலையில் பார்த்துக்கலாம்" என்று உள்ளே போனார். ஏகாம்பரம் போகுமுன் அவன் தலையில் கட்டையால் நாலு அடி அடித்துப் போனான்.

அதிகாலையிலே தெருவோரத்தில் அசைவின்றி கிடந்தான் அவன். விஷயம் ஊருக்குள் தீ போல பரவியது. தேர்தல் பத்து நாட்கள் இருக்கின்ற நிலையிலே கட்சி தோத்துடுமோ என்ற கவலையில் இருந்த சுந்தரேசன் யோசித்தார்.

உடனே கூட்டம் போட்டு "பாருங்க, ராத்திரியில் கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்த எங்க கட்சி உறுப்பினரை அடிச்சு கொன்னு இப்படி அனாதைப் பிணமாக போட்டுடாங்களே!, தேர்தல்ல ஜெயிக்கறதுக்கு இப்படியா பண்ணுவாங்க, எங்களை கேட்டிருந்தா நாங்களே விட்டுக் கொடுத்து இருப்போமே?"

ஊரெங்கும் இதே பேச்சு. பூபாளன் கட்சி ஆளுங்க சுந்தரேசன் கட்சி ஆளை கொன்னுட்டான், இவனுக்கு ஓட்டு போட்டா அவ்வளவு தான், ஒரே ரவுடி ராஜ்ஜியம் தான்.

சுந்தரேசன் கட்சி பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து இருந்தது.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தில்லி பதிவர் சந்திப்பு

தமிழ் நாட்டில் உள்ள பதிவர்கள் நட்புடன் கூடி சந்தித்து அளவளாவுவதைப் பற்றிய செய்திகளை படிக்கும் போதெல்லாம் என் மனதில் ஒரு சிறிய ஆசை எட்டிப்பார்க்கும். கூடவே தில்லி மற்றும் NCR பகுதியில் உள்ள பதிவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய ஒருவரும் முன்வருவதில்லையே என்ற ஆதங்கமும் இருந்தது.

ஆசை நிராசை ஆகாமல் இருக்கக் காரணமாக இருந்தது சென்ற வாரம் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். ஒரே வாரத்தில் எல்லோருக்கும் மின்னஞ்சல் செய்து 31.01.2010 அன்று மதியம் இரண்டு மணி அளவில் வடக்கு வாசல் மாத இதழின் அலுவலகத்தில் பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டார் சிறுமுயற்சி என்ற வலைப்பூவை எழுதி வரும் பதிவர் திருமதி முத்துலெட்சுமி.

பதிவர்கள் திருமதிகள் M.A. சுசீலா, விக்னேஸ்வரி, லாவண்யா சுந்தரராஜன், திரு மோகன்குமார் மற்றும் அடியேனும் கலந்து கொண்டோம்.

இது தில்லி பதிவர்களின் முதல் சந்திப்பாகையால், அவரவர் சுய அறிமுகத்துடன் கூட்டம் தொடங்கியது. பதிவுலகம் பற்றிய தகவல்கள், இன்றைய இலக்கிய உலகம் குறித்து மிகவும் ஆர்வத்துடன் விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் "வடக்கு வாசல்" மாத இதழின் ஆசிரியர் திரு யதார்தா கே. பென்னேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சக பதிவர்களுக்கு தனது அனுபவங்களை எடுத்துச் சொன்னார்.

பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள் மதுரை பாத்திமாக் கல்லூரியில் முப்பத்தி ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து, ஒய்வு பெற்ற பின் தில்லியில் வாழும் பதிவர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள், மற்றும் ஒரு மொழி பெயர்ப்பு நூலும் வெளியிட்டு உள்ளார். இவரது வலைப்பூ படிக்க இங்கே செல்லவும்.

திருமதி லாவண்யா சுந்தரராஜன் உயிரோடை என்ற வலைப்பூவில் எழுதிவருபவர். சமீபத்தில் "நீர்க்கோல வாழ்வை நச்சி" என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு உள்ளார்.

திருமதி விக்னேஸ்வரி தனது பெயரிலேயே ஒரு வலைப்பூவை எழுதி வருகிறார். தோழர் திரு K. மோகன் குமார் புகைப்படங்களாலே கவிதை புனையும் "World of Photography" ஒரு வலைப்பூவை வைத்திருப்பவர். அவரது Camera வழிப்பார்வை மிகவும் அழகாக உள்ளது.

இந்த பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த திருமதி முத்துலெட்சுமி அவர்களுக்கும், சந்திப்பதற்கு ஏதுவாக வடக்கு வாசல் அலுவலகத்தில் இடம் அளித்த திரு யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறாமல் இந்த பதிவை முடிப்பது அழகல்ல. அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சந்திப்பு, மேலும் பல நல்ல கருத்து பரிமாற்றத்துக்கும், இலக்கிய உரையாடல்களுக்கும் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்பதில் எல்லோருக்கும் சந்தோஷமே!