அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சங்கிலி எதற்கு - ஸ்ரீகண்ட் கைலாஷ் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பெரம்பலூர் பேருந்து நிலையம் சென்று எதிரே இருக்கும் அஸ்வின் ஸ்வீட்ஸ் உணவகத்தில் காலை உணவை உட்கொண்டோம் - இட்லி, வடை, இடியாப்பம் என நான் சாப்பிட, மகள் இட்லி, வடை மட்டுமே போதும் என்று சொல்லிவிட்டார். சுவை நன்றாகவே இருந்தது. மொத்த செலவு ரூபாய் 223/- மட்டும். பெரம்பலூரிலிருந்து நெய்வேலி அல்லது நெய்வேலி டவுன்ஷிப் செல்ல பஸ் கிடைக்குமா என்று பார்க்க, விருத்தாச்சலம் வரை தான் கிடைத்தது. அன்றைய நாள் சிதம்பரம் நகரில் தேர்த் திருவிழா மட்டுமல்லாது, நீட் தேர்வு நாள் என்பதால் பல பேருந்துகளை மாற்றி விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதனால் பெரம்பலூரிலிருந்து விருத்தாச்சலம், விருத்தாச்சலத்திலிருந்து நெய்வேலி (மந்தாரக்குப்பம்), பிறகு அங்கிருந்து நெய்வேலி டவுன்ஷிப் என்று மாற்றி மாற்றி திருச்சியிலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் செல்ல நான்கு பேருந்துகளில் மாறிச் செல்ல வேண்டியிருந்தது! கஷ்டம்! ஒரு வழியாக டவுன்ஷிப் தச்சர் சாலை அருகே இறங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கள் வீடு இருந்த பகுதிக்கு நடந்தே சென்றோம்.
வழியில் நான் படித்த 18-வது பிளாக்கில் இருந்த நடுநிலைப்பள்ளியை மகளுக்குக் காண்பித்தேன். சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பள்ளி மூடப்பட்டு, கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. ஆனால் இந்த முறை பார்த்தால், அந்தக் கட்டிடம் வேறொரு தனியார் பள்ளிக்குக் கொடுத்ததோடு, கூடுதலாக கட்டிடங்களும் கட்டி பன்னிரெண்டாவது வரை படிக்க வசதி இருக்கும் பள்ளியாக மாற்றி இருக்கிறார்களாம். அரசியல் செல்வாக்கு உடையவர் அந்தப் பள்ளியை நடத்துகிறார் என்று கேள்விப்பட்டேன். எப்படியோ, பள்ளியில் கல்வி கற்க மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்தால் சரி. பள்ளி அருகிலேயே இருந்த நாகலிங்க மரம் இன்னமும் இருக்கிறது - பூக்களுடன்! அருகே செல்லக்கூடாது என்று சொல்லிச் சொல்லி அனுப்புவார் அம்மா - பாம்பு இருக்கும் என்ற பயமுறுத்தலுடன்! அப்படியே நான் சுற்றித் திரிந்த இடங்களையெல்லாம் மகளுக்குக் காண்பித்தபடி நடந்து எங்கள் நீண்ட கால நண்பர்/உறவினர் வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம். அவர்களிடம் இரு சக்கர வாகனத்தினை வாங்கிக் கொண்டு நெய்வேலி நகரில் சில இடங்களை என் மகளுக்கும் காண்பித்து அழைத்து வந்தேன். அவளது சிறு வயதில் அங்கே வந்திருக்கிறாள் என்றாலும் பெரிதாக அந்த நினைவுகள் அவளுக்கு இல்லை என்பதால் ஒவ்வொரு இடமாகக் காண்பிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
ஊர் சுற்றி பார்த்த பிறகு நண்பர் வீட்டிற்கு வந்து சேர மதிய உணவு தயாராக இருந்தது - மாங்காய் சாதம், தொட்டுக்கொள்ள ஊறுகாய், சாதம், கூட்டு, தயிர், ஆவக்காய் ஊறுகாய் என மதிய உணவை முடித்துக் கொண்டு சற்றே ஓய்விற்குப் பிறகு அவர்களது வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில், புத்தகக் கண்காட்சி நடக்கும் Lignite Hall இருக்கிறது என்பதால் அங்கே சென்று சேர்ந்தோம். ஆளுக்கு பத்து ரூபாய் தான் நுழைவுக் கட்டணம். அதனைக் கொடுத்து உள்ளே செல்ல நுழைவாயில் அழகாக அமைத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அங்கே ஒரு படம் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். மதிய நேரம் என்பதால் அவ்வளவாகக் கூட்டம் இருக்கவில்லை. நிறைய பதிப்பகத்தினர் வந்திருந்தார்கள் என்றாலும் பெரிய பதிப்பகங்கள் - வானதி போன்ற பதிப்பகங்கள் ஏனோ வரவில்லை. ஒவ்வொரு பதிப்பகமாக உள்ளே நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எனக்கு பெரிதாக ஏதும் வாங்கத் தோன்றவில்லை. சுற்றிப் பார்த்ததில் அலுப்பு வருவதற்கான வாய்ப்பில்லை என்றாலும் கடுமையான சூடு அங்கே தெரிந்ததால் - மேலே Tin Sheet - விரைவில் அலுப்பும் வந்து விட்டது.
மகளும் கொஞ்சம் சோர்ந்து போனாள். நடுநடுவே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் சுற்றினோம். புத்தகங்களுக்கான ஸ்டால்களை விட, அங்கே இருந்த கூட்டத்தினை விட உணவு ஸ்டால்கள் இருந்த இடத்தில் தான் கூட்டம் அதிகம் இருந்தது என்று தோன்றியது - வழமை போலவே! தில்லி அப்பளம், உருளை ஸ்ப்ரிங் ரோல், பஞ்சு மிட்டாய், ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள் என என்னென்னமோ இருந்தது. சூடு அதிகம் இருந்ததால் எதையுமே பார்க்கவோ, சாப்பிடவோ தோன்றவில்லை. அவ்வப்போது ஓய்வு எடுக்க மட்டுமே அந்தப் பகுதியில் இருக்கும் மரத்தடிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். இரண்டு மூன்று சுற்று வந்து பிடித்த சில புத்தகங்களை மகள் வாங்கிக் கொண்டதோடு, அம்மாவிற்கும் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டாள். வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே…
The Full Moon Coffee Shop - Mai Mochizuki (Translated by Jesse Kirkwood).
Once Upon a Curfew - Srishti Chaudhary.
Days at the Torunka Cafe - Satoshi Yagisawa
ஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள் - R.S. பாலகுமார்.
ஆகாயம் காணாத நட்சத்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன்
சனிக்கிழமை விபத்து - இந்திரா சௌந்தர்ராஜன்
அதீத சூடு கண்காட்சிப் பகுதியில் இருந்ததால் சீக்கிரமாகவே சோர்ந்து விட, போதும் என்று வெளியே வந்து விட்டோம். நான் நெய்வேலி வருவது குறித்து முன்னரே தெரிவித்திருந்தாலும், சூழ்நிலை காரணமாக நண்பர்களால் புத்தகக் கண்காட்சிக்கு நாங்கள் இருந்த வரை வர இயலவில்லை. சில நண்பர்கள் அழைத்து அவர்களது இயலாமையைச் சொல்ல, இதற்காக வருந்த வேண்டாம் என்றும் அவர்களது வேலைகளைக் கவனிக்கும்படியும் சொல்லி விட்டேன். எல்லா நேரங்களிலும் இப்படி நண்பர்களை சந்திப்பது முடியாத விஷயம் தான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன் என்பதால் பார்க்க முடியாமல் போனதில் வருத்தமில்லை. மாலை ஐந்தரை மணிக்கு மேல் மதுரை வரை செல்லும் பேருந்து நெய்வேலி டவுன்ஷிப் பகுதியிலிருக்கும் Central Bus Stand - லிருந்து இருப்பது தெரிய ஒரு ஆட்டோ வரவழைத்து அங்கே சென்று காத்திருந்தோம். நல்லவேளையாக அந்தப் பேருந்து, வந்து சேர்ந்ததோடு, காலியாகவும் இருந்தது. வசதியாக அமர்ந்து கொள்ள ஆறு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பத்தரை மணி போல வீட்டிற்கு வந்து சேர முடிந்தது. வாங்கிய புத்தகங்கள் அதிகம் இல்லை என்றாலும், நெய்வேலி சென்று மகளுக்கு நான் படித்த பள்ளிகள், கல்லூரி, சுற்றித் திரிந்த இடங்கள் என்று பல விஷயங்களைக் காண்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
பதிவினை நிறைவு செய்யும் முன்னர் ஒரு தகவல் - மாலை நேரங்களில் தான் விழாக்கள், நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனாலும் அன்றைக்கே வீடு திரும்ப வேண்டியிருந்ததால் அது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ள முடியவில்லை. பகலில் எந்தப் பதிப்பகத்திலும் பிரபல எழுத்தாளர்கள் யாரையும் பார்க்கவும் முடியவில்லை. இப்போதெல்லாம் எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் தவறாமல் பார்க்கக் கிடைக்கும் ஒரு ஸ்டால் - மணி பேச்சு ஆனந்த் ஸ்ரீனிவாசன் - அவர்களின் ஸ்டால்! பணம் சம்பாதிப்பது குறித்தான அவரது புத்தகங்களுக்கும் பேச்சிற்கும் நிறைய வரவேற்பு இருக்கிறது போலும்! அவரது சில காணொளிகளைப் பார்த்திருந்தாலும் எனக்கென்னமோ அத்தனை ஈர்க்கவில்லை! திருச்சி புத்தகக் கண்காட்சியில் அவரது ஸ்டாலில் அவரே அமர்ந்திருந்தும் நான் அந்தப் பக்கமே செல்லவில்லை! எப்படியோ அந்த ஞாயிறில் மனதுக்குகந்த இடத்திற்குச் சென்று வர முடிந்ததில் மகிழ்ச்சி.
கூடவே இன்னுமொரு விஷயம் - வரும்போது நண்பர் வீட்டிலிருந்து ஒரு சிறு பலாவும் சில மாங்காய்களும் கிடைக்க அதனையும் பையில் போட்டு எடுத்து வந்தேன்! நீண்ட நாள் கழித்து நெய்வேலி பலாவும், மாவும் வீட்டிற்கு வந்திருக்கிறது. மாங்காய் தொக்காக மாறி இருக்கிறது - இன்னும் சுவைக்கவில்லை. பலா இப்போது தான் வாசம் வர ஆரம்பித்திருக்கிறது. இன்றோ, நாளையோ அதனை கபளீகரம் செய்ய வேண்டும்! இப்படியாக நெய்வேலி பயணம் குறித்து இங்கேயும் பகிர்ந்து கொண்டு விட்டேன்! மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்களைச் சந்திக்கிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
25 ஜூன் 2026














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....