திங்கள், 17 மே, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 11

என்னுடை இரண்டாவது இருப்பிடமான தலை நகர் "தில்லி"யைப் பற்றி இதுவரை பத்து பகுதிகள் பதிவிட்டுவிட்டேன் என்பதை நினைக்கும்போது எனக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. இத் தொடருக்கு வலைப்பூ வாசகர்கள் அளித்து வரும் நல் ஆதரவும் இதனைத் தொடர்வதற்கு ஒரு காரணம். பதிவிட்ட பத்து பதிவுகளுமே தமிலிஷ்-ல் முதல் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுவரை நல்லாதரவு தந்து வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவில் இன்னும் சில விஷயங்களை பார்க்கலாம்.



பார்க்க வேண்டிய இடம்: பிர்லா மந்திர் – தில்லியின் ”மந்திர் மார்க்” பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான கோவிலே பிர்லா மந்திர். பொதுவாக தமிழர்கள் சுற்றுலா வந்தால் தங்கும் கரோல்பாகின் அருகிலேயே இவ்விடம் இருக்கிறது. இக்கோவிலை “லக்ஷ்மி நாராயண் மந்திர்” என்றும் அழைக்கிறார்கள். வாரணாசியிலிருந்து சிற்பக்கலை நிபுணர்களை அழைத்து வந்து இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகரும், வலப்புறத்தில் ஆஞ்சனேயரும் இருக்கிறார்கள். உள்ளே லக்ஷ்மி நாராயணன் வீற்றிருக்கிறார். இருபுறமும், சிவனுக்கும், புத்தருக்கும் தனி கோவில்கள் உள்ளன. வேதங்களிலிருந்து சில காட்சிகளை இங்கே அழகாக செதுக்கி வைத்துள்ளனர். முற்றிலும் ஜெய்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள் கற்களால் ஆன சிற்பங்கள் இங்கு உள்ளன. அருகிலேயே பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்காக “கீதா பவன்” என்ற தனி கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே பரிசாக வந்த ஒரு பெரிய உலக உருண்டையை நீங்கள் பார்க்க முடியும். நான் சென்றிருந்த போது தமிழகத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பல பேரைக் காண முடிந்தது. கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்து வந்த எல்லோரிடமும் கோவில் வாசலில் இருந்த ”தில்லி போலீஸ்” காவல்காரர் ஒருவர் “கோவிலுக்கு வந்தீர்களா இல்லை கல்யாணத்துக்கு வந்தீர்களா? தில்லில நிறைய செயின் திருட்டு நடக்கும், ஜாக்கிரதை” என்று அன்பாக தமிழில் மிரட்டிக் கொண்டிருந்தார். கோவிலின் உள்ளே அலைபேசி, புகைப்படக்கருவி போன்ற எந்தப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோவிலின் வெளியே காலணிகள் வைக்கும் இடத்திலேயே இப்பொருட்களையும் வைக்க சிறு சிறு பெட்டகங்கள் உண்டு. அவற்றில் வைத்துப் பூட்டி அதன் சாவியையும் உங்களிடமே ஒப்படைத்து விடுகிறார்கள். இது ஒரு நல்ல ஏற்பாடு.

சாப்பிட வாங்க: ”தஹி-பல்லே பாப்டி”: வட இந்தியாவில் எந்த ஊருக்குச் சென்றாலும் கடைகளில் “தஹி பல்லே பாப்டி” என்ற ஒரு சிற்றுண்டி கிடைக்கும். தயிர், புளித்தண்ணீர், வெங்காயம், போன்ற பலபொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது. எப்படிச் செய்வது என்று கஷ்டப்படாமல் நேராக கடைக்குச் சென்று சாப்பிடுவது நலம். புளிப்பு, இனிப்பு கலந்த ஒருவித நல்ல சுவைக்கு “தஹி பல்லே பாப்டி – உத்திரவாதம். ஒரு தட்டில் அலங்காரமாக வைத்துக் கொடுக்கப்படும் இதன் குறைந்த பட்ச விலை 15 ரூபாய். UPSC அலுவலகம் அருகில் உள்ள ஒரு நடைபாதைக் கடை இவ்வுணவிற்கு மிகவும் பிரபலம்.

இந்த வார ஹிந்தி சொல்: சென்ற பகுதியில் பிளாஸ்டிக் பையை “பன்னி” என்று ஹிந்தியில் சொல்கிறார்கள் என எழுதி இருந்தேன். அப்ப ”பன்னி”யை எப்படி அழைப்பது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். பன்னியை ஹிந்தியில் “சுவர்” என்று அழைக்கிறார்கள். நாம் தமிழில் “சுவர்” என்று சொல்லும் சுவற்றை இங்கே “தீவார்” [Dheewaar] என்று அழைக்கின்றனர். இப்பெயரில் அமிதாப் பச்சன் நடித்து 1975-ஆம் வருடம் ஒரு ஹிந்தி சினிமா கூட வந்திருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்ததே.

இன்னும் வரும்….

9 கருத்துகள்:

  1. வாரம் ஒரு ஹிந்தி சொல் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த வாட்டி தில்லி வந்தா ஐயாவோட தான் சுத்திப்பார்க்கணும். தஹி-பல்லே-பாப்டீ வாங்கித்தருவீங்கல்லே? :-)

    பதிலளிநீக்கு
  3. தலைநகரை அழகாக சுற்றிக் காட்டுகிறீர்கள்.
    ஒரே ஒரு சந்தேகம். இந்த ”தஹி-பல்லே பாப்டி” - ஐ UPSC - இல் "Interview" அட்டென்ட் பண்ணுவதற்கு முன்னால் தைரியமாக சாப்பிடலாமா?

    பதிலளிநீக்கு
  4. அட.. தலைநகர் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு பார்த்து மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தகவல்கள் தாருங்கள்..

    பதிலளிநீக்கு
  5. இன்றொரு வார்த்தையை தேர்ந்தெடுக்க சொன்னீங்க பாருங்க காரணம் சூப்பர்..
    இப்படித்தான் பாருங்க நாம மூக்குன்னு சொல்றதை இவங்க நாக்குனு சொல்றாங்க.. :))

    பதிலளிநீக்கு
  6. டில்லியை அழகாக அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். நன்றி தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. பிர்லா மந்திரை நேரில் கண்டதுபோல் ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது என்றால் அதற்கு காரணம் தாங்கள் பதிவுசெய்திட்ட உயிரோட்டம் நிறைந்த புகைப்படமும் அதற்கு மகுடம் வைத்ததுபோல் நிகழ்வுகளை சுவைபட தாங்கள் அளித்திட்ட பாங்குமேயாகும். இந்த கோயிலில் குடியிருக்கும் சிலைகள் நமக்கு "எம்மதமும்/சமயமும் சமமே " என்ற உணர்வை நமக்கு அளிக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி வெங்கட் அவர்களே.

    மந்தவெளி நடராஜன்..

    பதிலளிநீக்கு
  8. nalla nadai. enna delhi vanthapa ungala meet panna mudiyala. next time meet pannalam

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....